May

May

பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி – இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனதும் அவரது மகன் சாள்ஸ் அன்டனியினதும் இரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய இராணுவ வைத்தியர் பிரிவின் விஷேட குழுவினரும் கொழும்பிலுள்ள தடய அறிவியல் துறை அதிகாரிகளும் இதனை இன்று உறுதிசெய்தனர் என்றும் அவர் கூறினார். 

அகதிகள் முகாமில் பிரபாகரன் பெற்றோர்: இலங்கை இராணுவம்

prabhs_parent.jpg விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓர் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், பிரபாகரனின் பெற்றோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்ட முகாமில் இருப்பது புதன்கிழமை மாலைதான் தங்களின் கவனத்துக்கு வந்ததாகக் கூறினார்

பிரபாகரனின் பெற்றோர்கள் காயங்கள் ஏதும் இன்றி நலமாக இருப்பதாகக் கூறிய அவர், படையினர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்று தாம் கருதுவதாகவும், ஆனால் அவர்கள் எப்போது வந்தார்கள் என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

கடல் ஆர்ப்பரித்து வந்ததற்கு சுனாமி தாக்கம் காரணமல்ல

sea.jpgகிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடலலைகள் திடீர் திடீரென ஆர்ப்பரித்து நிலப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தமைக்கு சுனாமி தாக்கம் காரணமல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவா தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பின் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காணப்படுகின்ற கடற்காற்று, திடீர் திடீரென 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பதன் விளைவாகவே கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கின் சில பிரதேசங்களில் நேற்று காலையில் திடீர் திடீரென ஆர்ப்பரித்து கடலலைகள் நிலப்பகுதிக்குள் பிரவேசித்தன. இதனையடுத்து பிரதேசவாசிகள் மத்தியில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது. இது சுனாமித் தாக்கம் என்ற ஐயமும் மக்கள் மத்தியில் பரவியது. இந்நிலைமை தொடர்பாக வானிலை அவதான நிலைய வானிலையாளரான தமயந்தி இந்திஹெட்டி ஹேவாவுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேல் பருவ பெயர்ச்சிக் காலநிலை காரணமாக மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணக் கடற்பரப்புகளில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தென்மேல் கடற்பரப்பு ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் கடற்காற்றின் வேகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பும் பெரிதும் உதவியுள்ளது.

இதே காலநிலை இன்றும் நிலவக்கூடிய வானிலையே காணப்படுகின்றது என்றார்.

காங்கிரஸ் அமைச்சர்களுக்கு சோனியா எச்சரிக்கை

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ” சிறப்பாக செயல்பட வேண்டும் அல்லது பதவியை விட்டுப் போய்விட வேண்டும் ” என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 59 அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சோனியா.  அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது,” தற்போது அமைச்சரவைக்குள் வந்துள்ளவர்களில் சிலர், மற்றவர்கள் உள்ளே வர வழிவிடவும் வாய்ப்புள்ளது ” என்று பதிலளித்தார்.

அதாவது காங்கிரஸ் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் அமைச்சர் பதவியை விட்டுப் போய்விட வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.  பதவியேற்ற 59 அமைச்சர்களையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஐ தொட்டுள்ளது.

அரசியல் சாசன விதிப்படி தற்போதைய அமைச்சரவையில் மொத்தம் 82 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இன்னும் 3 அமைச்சர்களை மட்டுமே அமைச்சரவையில் மேலும் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதியோரை உறவினர்களுடன் அனுப்பும் பணி – மனிக்பாமில் பொலிஸ் அதிகாரிகளுடன் அரச அதிபர் கலந்துரையாடல்

நலன்புரி முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ள முதியவர்களை அவற்றுக்கு வெளியில் உள்ள அவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைப்பது தொடர் பில் அரச அதிகாரிகள் மட்டத்தில் நேற்று (28) ஆராயப்பட்டுள்ளது.

முதியவர்களை விடுவிப்பது தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு மதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரி களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியு ள்ளார். மனிக்பாமில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே மூவாயிரம் பேரை விடுவித்துள்ளதாகக் கூறிய அவர், புதி தாகக் கிடைத்துள்ள 1500 பேர் தொடர்பான விபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முகாம்களிலும், நிவாரண கிராமங்களி லும் தங்கியுள்ளவர்களை விடுவித்துக் கொள்வதில் அவர்களின் உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொண்டு விபரங்களை வழங்க முடியுமென்றும் திருமதி சார்ள்ஸ் தெரிவி த்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுள் 10 வீதமானவர்கள் முதியவர்க ளென்று அரச அதிபர் தெரிவித்தார். இதேவேளை, முகாம்களில் கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு ள்ளதால் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் கிடையாது. எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதே சமயம், பூந்தோட்டம் மற்றும் மத்திய மாகாண வித்தியாலயம் ஆகிய நலன்புரி நிலையங்களில் இருந்த மக்களுள் நேற்று ஒரு தொகுதியினர் ஐந்தாவது வலய நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் கூறினார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

maninda-with-us-delication.jpgஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்தித்து உரையாடினர். இச்சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கும் அமெரிக்கா உதவத்தயார் என ஜனாதிபதியிடம் தூதுக் குழுவினர் இச்சந்திப்பின்போது உறுதியளித்தனர்.

வடபகுதி நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்த இத்தூதுக் குழுவினர் இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் கண்டறிந்தனர். சர்வதேச ஊடகங்கள் கூறியவாறு பாரிய குறைபாடுகள் இந்த நிவாரணக் கிராமங்களில் காணப்படவில்லை என்றும் தூதுக் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

படைவீரர்களுக்கு முன்னுரிமை வழங்க பணிப்பு

தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கு வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக் கோன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பணித்துள்ளார். இது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி உள்ளூராட்சிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள், நகர, மாநகர சபைகள் பிரதேச சபைக் காரியாலயங்களுக்கு அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்கவும், அவர்களது தேவையை விரைவாக நிறைவேற்றவும் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுமானால் அது பற்றி அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன் அவர்கள் குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் மாகாண பிரதம செயலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்படவுள்ளது.

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

ஈரான் உதவியுடன் 1000 கிராமங்களுக்கு மின்சாரம்

wdj-senavi.jpgஈரான் உதவியுடன் 8 ஆவது கிராமிய மின்சார அபிவிருத்தித் திடத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை மின் சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ.ஜே. செனவிரத்ன முன்வைத்திருந்தார்.

இத்திட்டத்துக்கு 106.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1000 கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்படும். அத்துடன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் புதிய பபவனையாளர்கள் உள்வாங்கப்படுவர்.

முகாம்களில் மரணமான 66 பேரின் சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருக்கையில், குறிப்பிட்ட சில நாட்களில் மரணமடைந்த 66 பேரது சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.  இதில் ஆறு சிசுக்களது சடலங்களும் அடங்கும்.

செட்டிகுளம் முகாம்களில் தங்கியிருக்கும் முதியோரின் மரணவீதம் அதிகரித்து வருகிறது. தினமும் ஐந்து முதல் எட்டு வரையிலான முதியவர்கள் இங்கு மரணமடைகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட 66 சடலங்களில் மிகப் பெரும்பாலானவை வயோதிபர்களுடையவை.

உறவினர்களால் பொறுப்பேற்கப்படாததும் அடையாளம் காணப்படாத சடலங்களே இவையாகும். வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

முதியவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் இல்லையேல் இவர்களை வயோதிபர் இல்லங்களில் சேர்த்து விடுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.