வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருக்கையில், குறிப்பிட்ட சில நாட்களில் மரணமடைந்த 66 பேரது சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இதில் ஆறு சிசுக்களது சடலங்களும் அடங்கும்.
செட்டிகுளம் முகாம்களில் தங்கியிருக்கும் முதியோரின் மரணவீதம் அதிகரித்து வருகிறது. தினமும் ஐந்து முதல் எட்டு வரையிலான முதியவர்கள் இங்கு மரணமடைகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட 66 சடலங்களில் மிகப் பெரும்பாலானவை வயோதிபர்களுடையவை.
உறவினர்களால் பொறுப்பேற்கப்படாததும் அடையாளம் காணப்படாத சடலங்களே இவையாகும். வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
முதியவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் இல்லையேல் இவர்களை வயோதிபர் இல்லங்களில் சேர்த்து விடுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.