21

21

பிரதமர் பதவியேற்பு விழா: கலைஞர் புறக்கணிப்பு?

karunanithi.jpg மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார்.  அவர் மேலும்,  ‘’நாளை சென்னையில் திமுக செயற்குழு கூடுகிறது’’ என்று தெரிவித்தார்.

டெல்லியில் நாளை மன்மோகன்சிங் பிரதமாரக பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் சென்னையில் திமுக செயற்குழு கூடுவதால் முதல்வர் கருணாநிதி பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று பேசப்படுகிறது.

பிரபாகரன் இருந்தாலும் மறைந்தாலும் விடுதலை போரை வழிநடத்துவார்: திருமாவளவன்

Pirabakaran_Vஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது என்றும் இருந்தாலும் மறைந்தாலும் பிரபாகரன் விடுதலை போரை வழிநடத்துவார் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ எமது ஈழத் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.

உச்சக்கட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் படுகொலையானாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடி மறைப்பதற்காகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்த கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாக உள்ளது.

ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும், ஈழ விடுதலைப்போரை அழிக்க முடியாது.

இருந்தாலும், மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்.

திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது:காங்கிரஸ்

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,  ’’அமைச்சரவையில் திமுகவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானது.  அதனால், திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

காங். போக்கால் அதிருப்தி – வெளியிலிருந்து ஆதரவு தர திமுக முடிவு

karunanithi.jpg கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.

தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது

தீவிரவாதம் இனி தலைதூக்க முடியாதவாறு மூல வித்தை நாம் அழித்துள்ளோம் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anurapriyadarsanayapa.jpgதீவிரவாதத்தின் மூலவித்தை நாம் அழித்துள்ளோம். எனவே எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் அறவே இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபேதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகார தலைவர் கே.பத்மநாபன் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாம் அலட்சியம் செய்கிறோம். அவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளுடன் இலங்கையும் கையொப்பம் இட்டுள்ளது. எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக இலங்ககை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்பதிவு ஆரம்பம்

muslim-society.jpgவடக்கு மாகாணத்தில் இருந்து 1990ம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்தநிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பானது இன்று (21.05.2009) ஆரம்பிக்கப்பட்டு நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட வேலைகள் முந்தல் பிரதேச செயலர் எம் ஆர் எம் அலி தலைமையில் குறித்த பிரதேசசபையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஏனைய பிரதேச சபைகளில் உள்ளவர்களும் கணக்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் இலங்கைக்கான உதவித் தூதரகம்

rohithaogollagama.bmpசீனாவின் செந்து பிரதேசத்தில் இலங்கைக்கான உதவித் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்திருந்தார்.

இதற்காக இவ்வருடம் 193,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேவைப்படும் நிதி திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை அரசுக்கு ரஷ்யா வாழ்த்து

russian-flag.jpgவிடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தோற்கடித்து வெற்றிபெற்றமை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யும் பொருட்டு  பிரிவினை வாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ரஷ்யா உதவிகளை வழங்குகிறது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மோதல்கள் முடிவு பெற்றிருப்பதானது இலங்கையில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் கொண்டு வருமென நம்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கண்டி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கு 20 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

a9-road.jpg யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக இருபது லொறிகளில் பொருட்கள் எடுத்துவரப்படுவதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த லொறிகளில் மருந்துப் பொருட்கள் சீமெந்து, அஸ்பெய்டஸ் சீற், இரும்புக் கம்பிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கம்பளி உற்பத்திப் பொருட்கள் ஆகியன எடுத்துவரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேருமென எதிர்பார்க்கப்பட்டபோதும் வந்து சேரவில்லை. பொருட்களை ஏற்றிவரும் லொறிகளில் யாழ்.மாவட்ட விளை பொருட்களான வெங்காயம், புகையிலை, பீற்ட், பனை உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்வுள்ளன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் பேசுவதற்கு தேவையில்லை – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவத்தினர் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேசுவதற்கான தேவையில்லையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைப் பிரிப்பதற்குத் திட்டமிட்ட சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான பிரபாகரன் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தமது இலக்கை மாற்று வழிகளில் முன்னெடுக்க முயல்வார்கள் என்றும் இந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று புதன்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அதன் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் கூறியதாவது;

நாட்டைப் பிரிப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் தமது நன்மைக்காகச் செயற்படுகின்றனர். இவர்களின் கைக் கூலியாகச் செயற்பட்ட பிரபாகரன் பிரிவினை கோரி போராட்டத்தை நடத்திய நிலையில் எமது படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், இவ்விலக்கை அடைவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வேறு மார்க்கங்களை நாடுவர். இவர்களது இலக்கை முறியடிப்பதற்கான சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையிலான யுத்தத்தில் தற்போது வெற்றி கொள்வதற்கு எமக்கு ரஷ்யாவும் சீனாவும் உதவியுள்ளன. இதற்கு எமது நன்றிகள்.

தற்போது தீர்வு குறித்து பேசப்படுகின்றது. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு படையினர் தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ள நிலையிலேயே இது பேசப்படுகின்றது. இது அவசியமற்றது. வடக்கை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு அமைப்புகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது.