27

27

பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் – சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpg சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கைத் தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் நடைபெற்று வரும் போரில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 17 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 35 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்திய உயர்நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இலங்கை சென்று திரும்பியது. அக்குழு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை. குழு திரும்பி சென்றவுடன் 22 தடவை விமான குண்டு வீச்சுகளும், பீரங்கி தாக்குதல்களும், முப்படைத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து இனி இலங்கைத் தமிழர்களால் ஒரே நாட்டில் வாழ முடியாது. தமிழ் ஈழம்தான் இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என ஜெயலலிதா கூறியதற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு உலகம் முழுதும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் கடிதங்கள், மின்னஞ்சல் உள்ளிட்டவை மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதாவின் இந்த முடிவு இலங்கை அரசு பேரதிர்ச்சி கொடுக்கும். இந்திய அரசு தவறான வெளிநாட்டு கொள்கைகளால் உலக அரங்கில் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

டயலொக் ஊடாக துரித குறுந்தகவல் சேவை – அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை

breaking_news-from-dialog.jpgஅரசாங்க தகவல் திணைக்களம் டயலொக் டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து துரித குறுந்தகவல் சேவையொன்றை வழங்கவுள்ளது. இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் நேற்று முன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இச்சேவை தொடர்பான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இவ்வைபவத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷசன யாப்பா,அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட மற்றும் டயலொக் டெலிகொம் நிறுவனதின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரி நுசாட் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த துரித குறுந்தகவல் சேவையை, இன்போ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 678 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் திடீர் உண்ணாவிரதம்: தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பாம்?- உண்ணாவிரதத்தை பகலில் முடித்துக் கொண்டார் கருணாநிதி- ஏகாந்தி

27-karuna-fast.jpgஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந்நாடு உறுதிமொழி தந்துள்ளதாம். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியதாகவும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்ததாகவும். இதையடுத்து இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்ததாகவும் இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது முதல்வர் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார். முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால்,  கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கருணாநிதியி்ன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயகுமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்: வைகோ

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக அயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களிர்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினரிற்கு அறிவுறுத்தியுல்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் சரண் – பாதுகாப்பு அமைச்சு

Wanni_War_Welfare_Campபடையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் வைத்து பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சரணடைந்தவர்களுள் யுத்தப் பயிற்சி பெற்றுள்ள 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 23 பேர் அடங்கியுள்ளனர். இதுதவிர புலிகளால் அண்மையில் தமது சிறுவர் படைக்கு பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இக்குழுவில் காணப்படுகின்றனர்.

இராணுவத்தினர் தம்மைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் சரணடைந்ததாகவும்,  தமது பெற்றோரைத் தேடித் தருமாறும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். தம்மைப்போல இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு புலிப்பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நுற்றுக்கணக்கானோர் விருப்பம்கொண்டுள்ளதாகவும் சரணடைந்தோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள புலிகளின் இறுதி பதுங்கிடமான வெள்ள முள்ளிவாய்க்கலிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலேயே வலைஞர்மடம் அமைந்துள்ளது. இராணுவத்தின் 58ஆம் படைப் பிரிவினரே இப்பிரதேசத்தை நேற்று முன்தினம் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். வலைஞர்மடம் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அங்கு தமது நிலைகளைப் பலப்படுத்திய படையினர் அன்றைய தினமே அங்கிருந்த 500 சிவிலியன்களை உடனடியாக விடுவித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் – பிரியங்கா

23-priyanka.jpgஎனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..

எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.

தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.

அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.

வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் இரு தரப்பினருக்கிடையில் கடும் மோதல் கடற்புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 12 பேர் பலி

navy.jpgமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் கடும் சமர் இடம்பெற்றது எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் கடற்பகுதியூடாக புலிகளின் படகுகள் வருவதை அவதானித்த கடற்படையினர் நடத்திய தாக்குதல் சில மணிநேரம் நீடித்திருந்தது என்றும் படைத் தரப்பில் கூறப்பட்டது.இத்தாக்குலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கடற்புலிகள் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

எனினும் இந்த மோதல்களில் கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை

வன்னிப் நிலைமை குறித்து ஆராய பிரிட்டன், பிரான்ஸ், சுவீடனின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே நாளில் கொழும்பு வருவர்!

British_French_Foreign_Ministers வன்னியில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கைக்கு திடீர்  முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கொஷ்னர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ஹாம் பில்ட் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgசர்வதேச சமூகம் தமது அரசிடம் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதை விட்டு, விடுதலைப் புலிகளை சரணடையச் சொல்லுமாறு செய்ய வேண்டும் என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டை நிலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடி வரும் தமது அரசு அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாது என்பதனை தெளிவு படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தாம் தடுக்கவில்லை என்றும், மாறாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்தினருக்கு அவ்வாறான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்த 1,65,000 எனும் கணக்கீடு தவறானது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளவை பொய் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கோட்டபைய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

ஏப்ரல் 27ஆம் திகதி. சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) – புன்னியாமீன்

world-graphic-design-day.jpgஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day  சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து வரைபட அலங்காரத்திற்கான உலக அமைப்பு இத்தினத்தை ஏப்ரல் 27ஆம் திகதி கொண்டாடி வருகின்றது.

ஆரம்ப காலங்களில் வரைபடக் கலையென்பது தற்போதைய காலகட்டத்தில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக Graphic Design  வளர்ச்சியானது அண்மைக்காலத்திலேயே மிகவும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. Graphic Design  எனும்போது இது ஒரு கலை. நவீன தொலைதொடர்பு சாதன வளர்ச்சியுடன் இக்கலையானது வேறு கோணத்தில் வளர்ச்சியடைந்து இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கணனித்துறையில் இணைந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆரம்ப கட்டங்களில் Graphic என்பது வரைபடத்துடன் சுருங்கிக் காணப்பட்டாலும்கூட, எதிர்காலத்தில் இத்துறையானது ஒரு இன்றியமையாத் துறையாக விளங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

Graphic தினம் எனும்போது இத்துறையில் ஈடுபடக்கூடியவர்களில் கௌரவித்து, மதிப்பளிக்கும் அதேநேரத்தில் இத்துறையின் தொழில் ரீதியான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தினத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதைப்போல இலங்கை இந்திய போன்ற வளர்முக நாடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதில்லை. 1990களில் இணையத்தள அறிமுகத்துடன் Graphic  என்பது ஒரு அத்தியாவசியமான துறையாக பரிணமித்துள்ளது. குறிப்பாக இணையத்தள வடிவமைப்புகள் வெப் பேஜ் வடிவமைப்புகள் Graphic உடன் இணைந்தவை. இத்தினத்தின் முக்கியத்துவதை உணர்ந்து இத்தினத்தை அனுஸ்டித்துக் கொண்டாடுமிடத்து Graphic வடிவமைப்புத்துறையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் உணர்த்தப்படக் கூடியதாக அமையலாம். குறிப்பாக இத்தினத்தன்று Graphic   வடிவமைப்பு தொடர்பான பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மேலும் போட்டி நிகழ்ச்சிகள் ஈடுபட்டோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்துறையின் முக்கியத்துவத்தினூடாக இத்தினம் பற்றிய கெண்டாட்டங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கலாம்.

pmpuniyameen@yahoo.com