படையினரால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வலைஞர்மடம் பகுதியில் வைத்து பாடசாலைச் சிறார்கள் உட்பட 52 புலி உறுப்பினர்கள் நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சரணடைந்தவர்களுள் யுத்தப் பயிற்சி பெற்றுள்ள 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 23 பேர் அடங்கியுள்ளனர். இதுதவிர புலிகளால் அண்மையில் தமது சிறுவர் படைக்கு பலவந்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 சிறுவர்களும் இக்குழுவில் காணப்படுகின்றனர்.
இராணுவத்தினர் தம்மைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே தாங்கள் சரணடைந்ததாகவும், தமது பெற்றோரைத் தேடித் தருமாறும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். தம்மைப்போல இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு புலிப்பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நுற்றுக்கணக்கானோர் விருப்பம்கொண்டுள்ளதாகவும் சரணடைந்தோர் மேலும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் உள்ள புலிகளின் இறுதி பதுங்கிடமான வெள்ள முள்ளிவாய்க்கலிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலேயே வலைஞர்மடம் அமைந்துள்ளது. இராணுவத்தின் 58ஆம் படைப் பிரிவினரே இப்பிரதேசத்தை நேற்று முன்தினம் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். வலைஞர்மடம் பிரதேசம் கைப்பற்றப்பட்டதும் அங்கு தமது நிலைகளைப் பலப்படுத்திய படையினர் அன்றைய தினமே அங்கிருந்த 500 சிவிலியன்களை உடனடியாக விடுவித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.