இலங்கையில் தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உலகின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றது. ஏப்ரல் 8 இந்திய அரசின் யுத்த ஒத்துழைப்பிற்கு எதிரான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்போராட்டங்களை ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ என்ற போராட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தங்களது அரசின் இந்த யுத்த ஒத்தழைப்பிற்கு எதிராக இந்திய மக்களும் சென்னையிலும் பெங்களுரிலும் புதுடில்லியிலும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். மான்ஹட்டன், லண்டன், ரெல்அவிவ், சுவீடன் ஆகிய நகரங்களில் ஒன்றினைக்கப்பட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
லண்டனில் இந்தியா ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ‘தமிழர்கள் படுகொலை செய்வதை நிறுத்து’ போராட்ட அமைப்பின் லண்டன் கிளை ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் அதன் சர்வதேச இணைப்பாளர் சேனன் இலங்கை யுத்தத்தில் இந்திய அரசின் ஒத்துழைப்புப் பற்றி விளக்கினார். இப்பொராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பலரும் தங்கள் கருத்தக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 4:00 மணிமுதல் 5:30 வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா ஹவுஸ் அமைந்திருந்த சதுக்கத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பிய வண்ணம் சுற்றி வந்தனர்.
அப்போது பிபிசி செய்தி நிறுவனம் அமைந்திருந்த புஸ் ஹவுஸை ஆர்ப்பாட்ட அணி அண்மித்த போது ‘பிபிசி நீங்கள் எங்கே போனீர்கள்’ என உரக்கக் கோசம் எழுப்பப்பட்டது.
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்து! இந்திய அரசே! உன் கைகளிலும் இரத்தம்!! மகிந்த அரசுக்கு ஒரு ரூபாயையோ ஒரு குண்டையோ வழங்காதே!!! போன்ற கோசங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டது.
புலி ஆதரவு அமைப்புகள் தமிழ் மக்களை மையப்படுத்தி போராட்டங்களை புலிகளது நலன் சார்ந்து மட்டும் முன்னெடுக்கையில் மக்கள் நலன்களையும் முன்னிலைப்படுத்தி சிறிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லண்டனிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் Committe for Workers International அமைப்பினரும் பாரிஸில் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) தமிழ் மக்களுக்கு அப்பால் பெரும்பான்மைச் சமூகங்களை இணைத்து போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டங்களில் பல இளவயதினர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவற்றுடன் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெறு போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.
பிரிட்டன், அமெரிக்காவில் 7 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதே நேரம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும்,இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாகவுள்ள அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாமின்றி உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட, நீராகாரமின்றிய இநத உண்ணா விரதப் போராட்டம் மாலை 5 மணிவரை நடத்தப்பட்டது.
இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு இந்தியா துணை போகாது ஈழத்தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தி அமைதியான போராட்டத்தினை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபை வரை கொண்டு வந்ததற்காக மெக்சிக்கோ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.