சீனி மற்றும் பருப்பு உட்பட முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படவுள்ளதாக வர்த்தக, சந்தை அபிவிருத்தி, கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
புது வருட உற்சவ காலத்தில் மோசடி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 2003 இலக்கம் 9-20/5 ஷரத்துக்கு அமைய கட்டுப்பாட்டு விலைகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.
இதன்படி வெள்ளைச் சீனி ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 73 ரூபா, சகல விதமான பருப்பு வகைகளுக்கும் ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 175 ரூபா, பட்டானா பருப்பு ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை ரூபா 98.50, என புதிய வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி ஒரு கிலோ 70 ரூபா, பச்சை மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ 60 ரூபா, பால்மா ஒரு கிலோ 637 ரூபா, 400 கிறாம் பால்மா 260 ரூபா, கோழி இறைச்சி ஒரு கிலோ 320 ரூபா, 50 கிலோ சிமெந்தி பேக் ஒன்று 785 ரூபா, எனவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் பற்றி 0112399146 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கோ பொது மக்கள் அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.