April

April

லசந்தவுக்கு யுனெஸ்கோ விருது

lasantha.jpgபடுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான”யுனெஸ்கோ’ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை வழங்கவுள்ளது. அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையை பேசியதால் இவ்விருதுக்கான தேர்வாளர்களால் இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அவர் எழுதி வெளியிட்ட ஆசிரிய தலையங்கத்தின் பின்னரான மூன்று நாட்களுக்குப் பின்னரே ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஊடக சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்ததுடன் இதன் அடிப்படையே கொலைக்கான ஆரம்பமாக இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இவ்விருது மே மாதம் மூன்றாம் திகதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் வழங்கப்படவுள்ளது.

வருண்காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கவேண்டும்: லாலு

laluprasat.jpgநான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்து இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வருண் காந்தியை ரோடு ரோலருக்கு அடியில் போட்டு நசுக்கி இருப்பேன் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆவேசமாக பேசினார். பீகாரில் உள்ள கிஷன்கன்ஞ்சில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் பேசுகையில்,

கடந்த தேர்தலின்போது ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜ. மதவாதத்தை தூண்டி விட்டது. சோனியா வெளிநாட்டில் பிறந்தவர் என்ற பிரச்னையை கையில் எடுத்தனர். பா.ஜ.வின் இந்த சூழ்ச்சியை ஆர்.ஜே.டி. கட்சியும் நானும் தோற்கடித்து ஏமாற்றம் அடைய வைத்தோம். பாபர் மசூதியை இடித்ததில் நேரடியாக தொடர்பு உடைய அத்வானியின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.

ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்

pc-shoe.jpgமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.

1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார். அவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை. இருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.மேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.

ஜர்னைல் சிங்கை சிதம்பரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அருகே உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.பாக்தாதில் முன்னாள் அமெரிக்க அதிபர் மீது நிருபர் ஷூ வீசியது பரபரப்பானது. இப்போது அதே பாணியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

ஜனாதிபதி லிபியா பயணம்

mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை லிபியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதற்தடவையாக லிபியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.

லிபியா அரசாங்கத்தால் கடந்த வருடம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்த இது வழிவகுக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்

லண்டனில் தமிழர்கள் பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் 5வது நாளாகவும் போராட்டம்.

london-today123.jpgஇலங் கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.

(1வது இணைப்பு)

பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறத்தக் கோரி 6 ஆயிரம் தமிழர்கள மறியல்ப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று 6ம் நாள் ஏப்ரல் 2009 பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீடித்த இந்தப் போராட்ம் இரவு லண்டன் பொலீசார் தமிழ்மக்களை பாராளுமன்ற முன்றலிருந்து வெளியேறும்படி கேட்டும் சில வன்மைத்தனமான முயற்ச்சிகளையும் செய்துள்ளனர், தமிழ் மக்கள் எல்லாவித முயற்ச்சிகளையும் சாமாளித்து இன்று பகல் வரையில் தொடர்ந்து இந்த மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதே வேளை லண்டனில் உள்ள மற்றைய மக்ளையும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர்; நேற்று இரவு ஜரோப்பாவின் இதர பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் இப் போராட்டத்திற்கு பங்கு பற்ற பஸ்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.

இந்த பாராளுமன்ற முன்றலில் குழந்தைகள், முதியவர்கள், பாடாசாலை மாணவர்கள் என கிட்டத்தட்ட 6ஆயிரம் பேர்கள்வரையில் பங்கு பற்றியுள்ளனர். இப்போராட்ட ஏற்ப்பாட்டாளர்கள் இந்த போராட்டம் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களின் இன அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

(2வது இணைப்பு)

பிரித்தானிய பாராளுமன்ற முன்றல் ஆர்ப்பாட்டத்தில் மோதல்.
london-parliment-meeting2.jpgஇலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடிகள் மற்றும் சில பொருட்கள் வீசப்பட்டமையால் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் சற்று நேரம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(3வது இணைப்பு)

பிரித்தானியாவில் இருவர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
 
இலங்கையில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

1) இலங்கையில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்

2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்துத் தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்துப் பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்,

3) வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்,

4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,

5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் –

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி இரு இளைஞர்களும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ள இந்த சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் தமிழர்களின் எழுச்சி ஒரு கொந்தளிப்பு மிக்க நிலையை எட்டியிருப்பதாக இணையதள செய்தி ஒன்று கூறுகின்றது. 

(4வது இணைப்பு)

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானிய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் இடம்பெறும் போரினை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான தமிழர்களின் இப்போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 400 பேர்வரை தொடர்ந்தும் போராட்டத்தினை மேற்கொள்வதாக பிபிசி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.

போராட்டத்தின் போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்வாழ் தமிழர்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரைக் கைது செய்யாது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்களுடன் செவ்வாய்க்கிழமை தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக மெற்றோபொலிடன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இம்முயற்சி பலனளிக்காது இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்களின் இப்போராட்டம் தொடர்கிறது.

அதேவேளை விடுதலை புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகையால் ஆர்ப்பாட்டத்தின் போது அதன் கொடிகள், இலச்சினைகளைப் பயன்படுத்த வேண்டாமென பொலிஸார் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(5வது இணைப்பு)

london-today123.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த இங்கிலாந்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 6ஆம் தேதி மதியம் துவங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும், பகலும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

(6வது இணைப்பு)

இலங் கையில் உடனடியானதும்இ நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஇ பிரித்தானியா நேரப்படி இன்று 11th April 2009 பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

ceasefire.jpg

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழ்ர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்
வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்
A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை முழுமையாக மீட்டு அதனை முழுமையாகப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குண்டு. இலங்கையை துண்டாடப்பட்ட நாடாக எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் தாய் நாடாகும். இந்நாட்டின் மீதான உரிமை சகலருக்கும் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பல ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திர இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாக தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

புலிகள் இன்று யுத்த பாதுகாப்புப் பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையொன்றிலேயே காணி உறுதி வழங்கும் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. நாட்டை நேசிக்கும் அரசாங்கங்கள் போலவே நாட்டை நேசிக்காத அரசாங்கங்களும் இந்த நாட்டை ஆண்டுள்ளன. இதனால் காணிப் பிரச்சினைகளில் நாம் எதிர்பார்த்த இலக்கை அடைந்து விட்டோமா என்பது சந்தேகமே. மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு உறுதியைப் பெற முடியாத நிலையும் காணிகளுக்கான நட்டஈட்டைக் கூட பெறமுடியாத நிலையே கடந்த காலங்களில் இருந்துள்ளன. நிறுவனங்களுக்கு அரச காணியை விற்றவர்கள், குறிப்பாக சில நிறுவனங்களுக்கு 20,000 ஹெக்டயர் காணிகளை வழங்கியவர்களும் உள்ளனர். தற்போது அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் அமைச்சரவை உப குழு அமைத்து ஆராயப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதென உறுதியளித்த போதும் தற்போது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு அவர்களுக்கான காணி உறுதியை வழங்குவதுடன் நாட்டை முழுமையாகப் பாதுகாக்கவும் எமக்கு பொறுப்பு உள்ளது. இன்று தாய் நாட்டைப் பாதுகாக்க தம்முயிரைப் பணயம் வைத்துச் செயற்படும் படையினரில் பெரும்பாலானோருக்கு ஒரு அங்குலம் காணி கூட சொந்தமாக இல்லாதுள்ளது. படையினர் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் இந்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் படையினருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

துண்டாடப்பட்ட நாட்டை நாம் இன்று மீட்டுள்ளோம். மீண்டும் இந்த நாடு துண்டாட இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் இந்த நாடு துண்டாடப்பட்டு உடன்படிக்கை செய்து கொடுக்கப்பட்டது. அதனை வைத்துக்கொண்டே புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். சர்வதேசத்திற்குச் சென்று தமது பலத்தைக் காட்டி தனிநாடு கோரவும் புலிகளுக்கு அது உறுதுணையானது. உலகைப் பொறுத்தவரை முப்படைகளையும் விமானங்களையும் பாரிய ஆயுதங்கள் பெருந்தொகையைக் கொண்ட அமைப்பென புலிகளையே கூற முடியும்.

அண்மைக் காலங்களில் நாம் தொலைக்காட்சியைப் பார்த்தால் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி அறியலாம். இது வடக்கு, கிழக்கை பாதுகாக்கவென வைத்திருந்த ஆயுதமல்ல. நீர்கொழும்பிலிருந்து பதுளை வரை நாட்டைத் துண்டாடும் நோக்கம் கொண்டவை என்பதை சகலரும் உணர வேண்டும்.

தற்போது நடப்பது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல. புலிகளிடம் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் இது. மக்களையும் நிலங்களையும் மீட்பதே இதன் நோக்கம். நாம் மேற்கொண்ட திட்டமிட்ட செயற்பாடுகளே பயங்கரவாத யுத்தத்தையும் பொருளாதார யுத்தத்தையும் எதிர்கொள்ள வழி சமைத்துள்ளது. யுத்தத்தை காரணம் காட்டி எத்தகைய அபிவிருத்தியையோ மக்களுக்கான நிவாரணங்களையோ அரசாங்கம் நிறுத்தவில்லை.நாட்டையோ அரச வளங்களையோ விற்று அல்லது ஈடு வைத்து நாம் ஆட்சி நடத்தவில்லை. ரணில் விக்கிரமசிங்க தமது ஆட்சிக் காலத்தில் நாட்டை ஈடு வைத்தே கடன் பெற்றார்.

நாம் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே சர்வதேசத்தில் கடன் பெறவுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஈ.எல்பி. ஹுருள்ளே காலமானார்

சிரேஷ்ட அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஈ.எல்.பி. ஹுருள்ளே நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 90 ஆகும். மாலினி கலகொட ஹுருள்ளே (86)யின் கணவரான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை யாவார்.

ஹொரவப்பத்தானை தேர்தல் தொகுதியிலிருந்து 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், 1970ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

1965 இல் போக்குவரத்து அமைச்சராகவும் 1977 இல் கலாசார அமைச்சராகவும் ஈ.எல்.பி. ஹுருள்ளே இருந்துள்ளார். 1988 இல் மத்திய மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றிருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் சில வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார்.

சுகவீனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் ரேய்மண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (8ம் திகதி) மாலை 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும்.

பாகிஸ்தான் சாரதி கலீலுக்கு லேக்ஹவுஸில் நேற்று கெளரவம்

mohamed-kaleel.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீலுக்கு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமாரவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ள கலீல், நேற்று பிற்பகல் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தார்.

பிற்பகல் நான்கு மணியளவில் வருகை தந்த அவரை அதிகாரிகளும் ஊழியர்களும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வரவேற்பு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் கலீல் கெளரவிக்கப்பட்டார்.

கலீல் தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோருடன் வருகை தந்திருந்தார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து டெயிலிநியூஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறப்புப் பக்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் கலீலுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பத்திரிகையின் வாசகர் ஒருவரால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா பெறுமதியான காசோலை பத்திரிகை ஆசிரியரால் கலீலிடம் கையளிக்கப்பட்டது. ‘சிட்டி சைக்கிள்’ நிறுவனம் சார்பாக ஷிஹான் என்பவர் சர்வதேச தரம் வாய்ந்த சைக்கிள் ஒன்றை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

கலீலும் குடும்பத்தாரும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் தேவையான காப்புறுதியினை ஏசியன் எலைன்ஸ் காப்புறுதி நிறுவனம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமால் ஜயசிங்க வழங்கினார். கலீலும் தான் கொண்டு வந்திருந்த அன்பளிப்புக்களை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டார். நிறுவனத்தின் பல பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலீல், இலங்கையில் இருக்கின்றபோதும் பாகிஸ்தானில் இருப்பது போன்றே உணர்கிறேன் என்றார். கலீல் என்னை இலங்கைக்கு அழைத்தமைக்காக லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நன்றி கூறுகின்றேன். ஒரு இரவில் என்னை ஹீரோவாக்கினீர்கள். இதை நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு நான் இறைவனுக்கே நன்றி கூறவேண்டும். நான் இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீண்டும் பாகிஸ்தான் வந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பமாகும்.

அதுபோல் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும். சம்பவம் இடம்பெற்றபோது எனது தாயை நினைத்தேன். எனக்குள் புதிதாய் ஒரு வேகம் பிறந்தது. கிரிக்கெட் அணியினரை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்து விட்டேன் என்றார்.பாகிஸ்தான் சாரதி கலீலுடன் அவரது மனைவி மற்றும் மைத்துனரும் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபய அமரதாஸ உரையாற்றும்போது, கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்ததும் எமது நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார, கராச்சியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எயார்மார்ஷல் ஜயலத் வீரகொடியுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தான் சாரதியை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதென கூறினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளருமான பிரேமசார எப்பாசிங்க உரையாற்றுகையில், கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டையே காப்பாற்றியுள்ளார் எனக் கூறினார். இஸ்லாமியர்களின் புனித குர்ஆன், ஹதீஸில் ஒருவருக்கு நன்றிக் கடன் செலுத்துவது இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக நினைத்தே இன்று நாம் கலீலை கெளரவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு. பலத்த காற்றால் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்

lighting.jpgஇலங்கையில் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்று வரும் இடியுடன் கூடியமழை மற்றும் கடும் காற்று காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதோடு மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு கடும் காற்றும் விசிவருகிறது.

மழையுடன் பலத்த காற்று வீசி வருவதையடுத்து களுத்துறை, நுவரெலியா, பிபிலை உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன. இவற்றில் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. நுவரெலியா, அம்பகமுவ கோரள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காசல்ரி, நோட்டன் பிறிஜ் பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 21 வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் 3 வீடுகளுக்கு கூடுதல் சேதம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள கோனபொலவில் வீசிய மினி சூறாவளியின் காரணமாக 110 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஓலபொடுவ, கும்புக்க திப்பத்த ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் இவ்வாறு சேதம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமுற்றுள்ளனர்.

பலன்நருவவில் 39 வீடுகளும் ஓலபொடுவையில் 25 வீடுகளும், கும்புக்கவில் 36 வீடுகளும், கும்புக்க கிழக்கில் 5 வீடுகளும், ஓலபொடுவ வடக்கில் 4 வீடுகளும், வவுலகலவில் ஒரு வீடும் சேதமுற்றுள்ளதாக பிரதேச செயலாளர் நிசான் ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை பிபிலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 2 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூவர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை (5) இடம்பெற்றது. இடியுடன் கூடிய மழையையும் பொருட்படுத்தாது இவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் மின்னல் தாக்கியதில் மூவரும் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.  கடந்த 3 மாதத்தில் 8 பேர் இடி மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.

புலிகளின் மேலும் 4 படையணிகளின் நான்கு தலைவர்களும் உயிரிழப்பு

puthukku-05-04.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் மேலும் நான்கு படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

சிலம்பரசன், கோபால், மோகனா மற்றும் கீர்த்தி ஆகிய நான்கு தலைவர்களே கொல்லப்பட்டுள்ளதுடன் அன்பு மற்றும் அஸ்மி ஆகிய இரு தலைவர்களே படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நடத்திய தேடுதல்களில் மாத்திரம் கொல்லப்பட்ட புலிகளின் 284 சடலங்களையும், பெருந் தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகளின் பிடியிலிருந்த சுமார் 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை படையினர் முற்றாக விடுவித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ள 20 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட பிரதேசம் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். புலிகளின் மேலும் நான்கு முக்கிய படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும், மற்றுமிரு தலைவர்கள் படுகாயமடைந்துள்ளமையும் நேற்றைய தினம் படைத்தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வரில் புலிகளின் ‘ராதா’ படையணியின் தலைவர் சிலம்பரசன், புலிகளின் பீரங்கி படைப்பிரிவின் தலைவர் கோபால், புலிகளின் ‘சோதியா’ படைப்பிரிவின் சிரேஷ்ட தலைவர் மோகனா மற்றும் புலிகளின் ‘ஜயந்தன’ படையணியின் தலைவர் கீர்த்தி ஆகியோர் அடங்குவர்.

இதுதவிர புலிகளின் ‘ராதா’ படையணியின் பிரதித் தலைவர் அன்பு மற்றும் கண்ணிவெடி பிரிவின் பொறுப்பாளர் அஸ்மி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

படையினரின் வெற்றிகரமான படை நடவடிக்கைகளின் மூலம் நாளுக்கு நாள் தமது முழுக் கட்டுப்பாடுகளையும் இழந்த புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்பொழுது தமது முக்கிய தலைவர்களையும் இழந்து வருவதாக தெரிவித்தார். இது அவர்களது தோல்வியை எடுத்துக் காட்டுவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திக் கொண்டு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய புலிகள் அங்குள்ள அப்பாவி பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவரும் நிலையில் புலிகளின் பிடியிலிருந்து சிவிலியன்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முற்றாகப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.