பாகிஸ்தான் சாரதி கலீலுக்கு லேக்ஹவுஸில் நேற்று கெளரவம்

mohamed-kaleel.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீலுக்கு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமாரவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ள கலீல், நேற்று பிற்பகல் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தார்.

பிற்பகல் நான்கு மணியளவில் வருகை தந்த அவரை அதிகாரிகளும் ஊழியர்களும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வரவேற்பு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் கலீல் கெளரவிக்கப்பட்டார்.

கலீல் தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோருடன் வருகை தந்திருந்தார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து டெயிலிநியூஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறப்புப் பக்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் கலீலுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பத்திரிகையின் வாசகர் ஒருவரால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா பெறுமதியான காசோலை பத்திரிகை ஆசிரியரால் கலீலிடம் கையளிக்கப்பட்டது. ‘சிட்டி சைக்கிள்’ நிறுவனம் சார்பாக ஷிஹான் என்பவர் சர்வதேச தரம் வாய்ந்த சைக்கிள் ஒன்றை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

கலீலும் குடும்பத்தாரும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் தேவையான காப்புறுதியினை ஏசியன் எலைன்ஸ் காப்புறுதி நிறுவனம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமால் ஜயசிங்க வழங்கினார். கலீலும் தான் கொண்டு வந்திருந்த அன்பளிப்புக்களை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டார். நிறுவனத்தின் பல பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலீல், இலங்கையில் இருக்கின்றபோதும் பாகிஸ்தானில் இருப்பது போன்றே உணர்கிறேன் என்றார். கலீல் என்னை இலங்கைக்கு அழைத்தமைக்காக லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நன்றி கூறுகின்றேன். ஒரு இரவில் என்னை ஹீரோவாக்கினீர்கள். இதை நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு நான் இறைவனுக்கே நன்றி கூறவேண்டும். நான் இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீண்டும் பாகிஸ்தான் வந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பமாகும்.

அதுபோல் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும். சம்பவம் இடம்பெற்றபோது எனது தாயை நினைத்தேன். எனக்குள் புதிதாய் ஒரு வேகம் பிறந்தது. கிரிக்கெட் அணியினரை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்து விட்டேன் என்றார்.பாகிஸ்தான் சாரதி கலீலுடன் அவரது மனைவி மற்றும் மைத்துனரும் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபய அமரதாஸ உரையாற்றும்போது, கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்ததும் எமது நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார, கராச்சியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எயார்மார்ஷல் ஜயலத் வீரகொடியுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தான் சாரதியை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதென கூறினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளருமான பிரேமசார எப்பாசிங்க உரையாற்றுகையில், கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டையே காப்பாற்றியுள்ளார் எனக் கூறினார். இஸ்லாமியர்களின் புனித குர்ஆன், ஹதீஸில் ஒருவருக்கு நன்றிக் கடன் செலுத்துவது இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக நினைத்தே இன்று நாம் கலீலை கெளரவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *