இலங்கையில் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்று வரும் இடியுடன் கூடியமழை மற்றும் கடும் காற்று காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதோடு மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு கடும் காற்றும் விசிவருகிறது.
மழையுடன் பலத்த காற்று வீசி வருவதையடுத்து களுத்துறை, நுவரெலியா, பிபிலை உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன. இவற்றில் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. நுவரெலியா, அம்பகமுவ கோரள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காசல்ரி, நோட்டன் பிறிஜ் பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 21 வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் 3 வீடுகளுக்கு கூடுதல் சேதம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள கோனபொலவில் வீசிய மினி சூறாவளியின் காரணமாக 110 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஓலபொடுவ, கும்புக்க திப்பத்த ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் இவ்வாறு சேதம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமுற்றுள்ளனர்.
பலன்நருவவில் 39 வீடுகளும் ஓலபொடுவையில் 25 வீடுகளும், கும்புக்கவில் 36 வீடுகளும், கும்புக்க கிழக்கில் 5 வீடுகளும், ஓலபொடுவ வடக்கில் 4 வீடுகளும், வவுலகலவில் ஒரு வீடும் சேதமுற்றுள்ளதாக பிரதேச செயலாளர் நிசான் ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை பிபிலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 2 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூவர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை (5) இடம்பெற்றது. இடியுடன் கூடிய மழையையும் பொருட்படுத்தாது இவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் மின்னல் தாக்கியதில் மூவரும் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. கடந்த 3 மாதத்தில் 8 பேர் இடி மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.