April

April

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்

thiruma_8-4.jpgமக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று, ஈழத் தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர்,

சிதம்பரம் தொகுதியில் நான் 3வது முறையாக போட்டியிடுகிறேன். ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றேன். எனவே, மக்கள் வெற்றிவாய்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையிலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையிலும் மீண்டும் 3வது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக, இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் தற்போது அரசியல் அதிகாரம் இல்லை. எனவே, இலங்கை தமிழர் பிரச்சனையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, நாடாளுமன்றம் செல்வோம். அங்கு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து வலியுறுத்துவோம்.

அரசியலமைப்பு பேரவையை அமைப்பதில் இழுபறி நிலை – ரணிலுக்கு பிரதமர் விளக்கம்

parliament.jpg அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சபையை நியமிப்பதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பெயர்களை சிபார்சு செய்திருப்பதால் மட்டுமே அரசியலமைப்பு சபை நியமித்துவிட முடியாதென்றும் அந்தப் பெயர்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

இதேநேரம், சிறிய கட்சிகள் சார்பாக அரசியலமைப்பு சபைக்கு பெயர்களை சிபார்சு செய்யும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா இதன்போது சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையை அடுத்து ஏற்பட்ட வாத பிரதிவாதங்களில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டன.

இன்று ஜே.வி.பி. கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jvp-0804.jpgமக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:

“மேல் மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எமது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்கிரமடைந்து எமது கட்சி ஆதரவாளர் ஒருவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களாகியும், பொலிஸார் ஒரு சந்தேகநபரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை. தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறியின் வாகனத்தில் வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அனைத்து சாட்சியங்களுடன் இதனை நாம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம்.

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பொலிஸார் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எமது கட்சியை அழிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் சரியான பாடம் புகட்டுவோம்”. இவ்வாறு அவர் கூறினார். 

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

பெருந்தொகையான ஆயுதங்கள் புதுக்குடியிருப்பில் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு

puthukuduirruppu_.pngபுதுக் குடியிருப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் நேற்றும் நேற்று முன்தினமும்  மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள புதுக்குடியிருப்பில் படையினர் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேடுதலின் போது நம்பமுடியாதளவு பெரும் எண்ணிக்கையான புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது படையினர் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களின் ஒருதொகுதியான 72 சடலங்களை படையினர் இப்பிரதேசங்களிலிருந்து மீட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார் 

பாதுகாப்பு வலயத்தில் பாரிய வெடிச்சப்தம்!

map_pudumathalan.jpgபுலிகளின் பிடியிலுள்ள பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களை விடுவிக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்தபின்னரே இந்த பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அரசின் நிவாரண உதவிகளிலேயே பிரபாகரன் தங்கி வாழ்கிறார்.- அமைச்சர் டளஸ் அழகப்பெரும

dalas_alahapperuma.jpgஅப்பாவித் தமிழ் மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். தேவையேற்படின் எல்.ரீ.ரீ.ஈ. களை 4 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகள் ஒழிந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை.

புலிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை முடக்கி விட்டால் அவர்கள் இயற்கை மரணத்தை எய்துவார்கள். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது.

பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் வந்துள்ளனர் – அமைச்சர் மஹிந்த

pr-con-02042009.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் தப்பி வந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் மற்றம் ஏனைய வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 7556 பொது மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 3488 பேர் நோயாளர்களாவர். ஏனைய 4068 பேரும் நோயாளர்களின் உறவினர்களாவர்.

இடம்பெயந்தேர் தங்கியுள்ள 15  இடைத்தங்கல் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புது வருடத்துக்கு முன்னர் சகல இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களைச் சந்திக்கும் விசேட அறைகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். புலிகளுக்கு கடைசி அறிவிப்பு.

thalai.jpgபிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதான்  கடைசி அறிவிப்பு. என யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் படையினர் ஒலிபெருக்கிகளில் மூலம் இன்று அறிவிப்பு விடுத்துள்ளதாக சில சிங்கள இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிவதே கொல்லப்பட்டோருக்கு நாம் செலுத்தும் கெளரவம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து ஐக்கிய இலங்கையில் பல்லின மக்களையும் ஒற்றுமையாய் வாழும் சூழலை ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட தலைவர்களுக்குச் செய்யும் உயர்ந்த கெளரவமாகும். அதற்கெதிரான எத்தகைய அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்ட ஒரு வருட காலத்திற்குள் அதற்குக் காரணமான பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடிந்துள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ஜெயராஜ் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வெற்றிகளைக் கண்டு பெருமிதமடைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சிரார்த்த தினத்தையொட்டி அன்னாரின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய தொகுப்பு நாலும் ஞாபகார்த்த முத்திரைவெளியீடும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. சபாநாயகர் உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை அரசியல் ரீதியாகவன்றி எனது சகோதரனாகவே பார்க்கின்றேன். அரசியல் ரீதியான போராட்டங்களிலும் என்னோடு நெருங்கி செயற்பட்டவர் என அவரைக் குறிப்பிட முடியும். அவர் இல்லாத இத்தகைய நிகழ்வொன்றில் நான் உரையாற்றுவேன் என நான் எதிர்பார்த்ததேயில்லை. இது எமது துரதிர்ஷ்டம்.

அவர் இல்லாத போதுதான் அவர் பற்றிய இழப்பு எமக்கு புலப்படுகிறது. நாடு மீளக்கட்டியெழுப்பப்படும் நிலை யில் அவரின் வெற்றிடம் உணரப்படுகிறது. சட்டக் கல்லூரியில் அவருடனான நெருக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் எமது ஊருக்கு வருவார். நாம் யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் சென்றது ஞாபகத்துக்கு வருகிறது.

மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ள அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சவாலுக்கு முகங்கொடுக்கக் கூடிய துணிவு, ஆளுமையுள்ள குரல் ஆகியவற்றின் மொத்த உருவமாக அவர் திகழ்ந்தார். பாராளுமன்றத்தில் அனைவரோடும் நெருக்கமும் மிகுந்த அன்பும் கொண்டி ருந்த அவர் 2007 வரவு செலவுத் திட்டத் தின் போது பாராளுமன்றத்தில் மேற் கொண்ட நடவடிக்கை அபாரம். சிலர் கட்சிதாவ முயற்சித்த வேளை சிறந்த தலை வராகவிருந்து செயற்பட்டதை என்னால் நினைவு கூரமுடியும்.

அரசியலில் தீர்மானமெடுக்கும் துணிவு மிக முக்கியமானது. அந்த வகையில் அவ ரது பங்களிப்பு முக்கியமானது. அரசியலில் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சமூக சேவை அளப்பரியது. அவ ரது மரணத்தில் கண்ணீர் செறிந்த ஆயிர மாயிரம் மக்கள் அதற்குச் சான்று. அவர் விட்டுச் சென்ற பணியை அவரது தொகுதி மக்களுக்கு அவரது மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தொடருவார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.