அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சபையை நியமிப்பதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பெயர்களை சிபார்சு செய்திருப்பதால் மட்டுமே அரசியலமைப்பு சபை நியமித்துவிட முடியாதென்றும் அந்தப் பெயர்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதேநேரம், சிறிய கட்சிகள் சார்பாக அரசியலமைப்பு சபைக்கு பெயர்களை சிபார்சு செய்யும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா இதன்போது சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையை அடுத்து ஏற்பட்ட வாத பிரதிவாதங்களில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டன.