April

April

பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வந்த புதுமாத்தளன் வைத்தியசாலை செயலிழந்ததாக அதிகாரிகள் தகவல்

puthu.jpgமுல்லைத் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் புதுமாத்தளன் வைத்தி்யசாலையை அண்மித்த பகுதியி்ல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து. அந்த வைத்தியசாலை செயலிழந்துள்ளதாக அங்குள்ள வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான கடும் மோதல்களையடுத்து, வைத்தியசாலையும் பாதிக்கப்பட்டதாகவும், இதனால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடியதுடன், அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளே சென்றுள்ள அதேவேளை, பலர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் சேர்ந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் பணியாற்றி வந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவுகள் அமைந்துள்ள நிலையங்களுக்குச் சென்று, அங்கு பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலண்டன் நாடாளுமன்றம் முன்பு இலங்கைத் தமிழர்கள் சாலை மறியல் போராட்டம்

londonprotest20012009.jpgஇலங் கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடக்கும் இடத்தில்,பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் நுழைந்துவிட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, நடைபாதையை விட்டு நகர்ந்து நாடாளுமன்ற வீதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் அமர்ந்து விட்டார்கள்.

இந்த இடத்தில் கடந்த 15 நாட்களாக இலங்கை இளைஞர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்கள் மாத்திரமல்லாமல், இலங்கையில் இந்திய இராணுவம் இருப்பதாக குற்றஞ்சாட்டும் அவர்கள், இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கோஷமிட்டார்கள். தவிர இலங்கை நிகழ்வுகள் குறித்தும் தமது போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் சரியாக செய்தி வழங்கவில்லை என்று அவர்கள் குறைபட்டார்கள். குறிப்பாக பிபிசிக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையே லண்டன் பெருநகரப் பொலிஸார் இந்த வீதிமறியல் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வீதிமறியலில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக அவர்களுடன் தாம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக கூறியுள்ளனர்.

நேற்று சுமார் 2000 பேர் வரை நாடாளுமன்றத்தை சுற்றவரவுள்ள வீதிகளில் கூடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பெண் நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை

வவுனி்யா பொது வைத்தியசாலையி்ன் பெண் நோயியல் நிபுணராகிய (வீஓஜி) டாக்டர் மீரா மொகிதீன் நேற்று மாலை 7 மணி்யளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மிஹின் லங்கா விமான சேவை சாத்தியமானதாக முன்னெடுப்பு – அமைச்சர் சரத் குணரத்ன

sri-lanka-parliament.jpgமிஹின் லங்கா விமான சேவை தற்போது சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவதுபோல் அச்சேவையில் எவ்வித பின்னடைவுமில்லையென அமைச்சர் சரத் குணரத்ன தெரிவித்தார்.அரசியல் இலாபங்களுக்காக தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினர் மிஹின் லங்கா விமான சேவையை குறைகூறி வருகின்றனர். அச்சேவை சாத்தியமானதாகத் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது மிஹின் எயார் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவுவென்பதைக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் குணரத்ன :-

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தகைய பிரச்சினைகளைக் கிளப்புகிறது. எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி முகவரியில்லாமல் போகப் போகிறது எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளையும் தமிழ் மக்களையும் வேறுபிரித்து பார்க்கும் சக்தி அரசிற்கு உண்டு -பிரதமர் தெரிவிப்பு

pm-srilanka.jpgபயங்கர வாதத்துக்கு அரசாங்கம் எப்போதுமே எதிரானது என்பதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் ஆனால், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் எதிரானது இல்லை என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாதிகளையும் தமிழ் மக்களையும் வேறுபிரித்துப் பார்க்கும் சக்தி அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். ஹெரனையில் ஞாயிற்றுக்கிழமை ஹெரனை தேர்தல் தொகுதியில் உள்ள பெருந்தோட்ட பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இலங்கையில் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பரந்தளவிலான கூட்டணியொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் 21 கட்சிகள் இருக்கின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வதற்காகவே சகலரும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சரி எந்த மதத்தவராக இருந்தாலும் சரி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களே. இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பயங்கரவாதத்தை நாம் எப்போதும் எதிர்க்கிறோம். அதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளவேண்டாம். எனினும் நாம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களல்ல. தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளையும் வேறுபடுத்தியறியும் சக்தி எமக்கு இருக்கிறது.

இதேநேரம் சிலர் இலங்கை பற்றி தவறான தகவல்களையும் கருத்துகளையும் உலகுக்குப் பரப்புகின்றனர். தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்கான மனித வளம் குறைந்து வருகிறது. நான் இதைக் கூறுவது தோட்டப்புறத்திலுள்ள மக்கள் அப்படியே அங்கேயே இருக்கவேண்டுமென்று அர்த்தமில்லை. மாற்றுவழி தேவையென்றே கூறுகின்றேன். இது தொடர்பாக ஆராய்ந்து ஏற்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஏனெனில் உலக மாற்றத்துக்கு ஏற்ப மக்களின் மாற்றத்தையும் நிறுத்திவிட முடியாது. குறுகிய நோக்கங்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் விலகி உலக அபிவிருத்திக்கும் தொழிநுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப நாமும் செயலாற்ற வேண்டும் என்றார்.

பொலிஸ் பதிவு இல்லை 5,000 ரூபா அபராதம்

பொலிஸ் பதிவின்றி நான்கு தமிழ் இளைஞர்களை தனது கடையில் வேலைக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதன் உரிமையாளரான டபிள்யூ.பீ.பெர்னாண்டோ என்பவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார். கட்டுநாயக்கப் பகுதியில் பொலிஸாரும், படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவரின் கடையில் நான்கு மலையகத் தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்த தெரியவந்தது.

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் சந்தேக நபருக்குத் தெரிந்தும் அதனை செயற்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடை உரிமையாளரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவே நீதிவான் மேற்படி அபராதத்தை விதித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

21042009.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழு அமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மின்சக்தி எரிபொருள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்தபாலசூரிய,  மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எட்வின் குணதிலக, சங்கர், மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணை யாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும், கிராமங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான சிவில் பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.

புலிகள் வெளியேறுவது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தையில் நோர்வே சம்பந்தப்படவில்லை – நிராகரிக்கிறார் தூதுவர்

விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது தொடர்பான இரகசியப் பேச்சுவார்த்தையில் நோர்வே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ரோரி காட்ற்ரெம் நிராகரித்துள்ளார்.

இது முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானது என்று ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கூறியுள்ளார். இந்த மாதிரியான பேச்சுகளில் நான் அறிந்தவரை நோர்வேயோ அல்லது ஏனையவர்களோ சம்பந்தப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றியதாகவே கடந்த பலமாதங்களாக நோர்வே கவனத்தை செலுத்தியிருந்தது என்று காட்ற்ரெம் கூறியிருக்கிறார்.

“மோதல் சூன்யப் பகுதியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்குப் பதிலாக புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய புலிகளின் உறுப்பினர்களையும் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு நோர்வே பேச்சுவார்த்தை நடத்துகின்றதா என்பது பற்றி இந்த ஆங்கிலப் பத்திரிகை எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே நோர்வேத் தூதுவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருக்கிறார்.

பிரிட்டனின் “இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் அன்ட் ரூபன் கோம்பேயின் செய்தியில், இலங்கை அரசாங்கம் புலிகளுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்பதாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பிச் செல்வதன் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தேச உடன்பாடு சாத்தியமா என்பது தொடர்பாக கருத்தறிய இலங்கை முற்பட்டதாக அறியவருவதாகவும் இன்டி பென்டன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

தூங்குபவனை எழுப்பலாம்… : சுமதி ரூபன்

Canadian_Protest_13Mar09கனேடியத் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன்படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காகத் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது.

சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலக நாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்தது என்று அறிய முடிந்தது.

கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது.

ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது.

ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையான விடையம்.

.-.-.-.-.-.

எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம்.

கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

.-.-.-.-.-.

எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா?

.-.-.-.-.-.

அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமன்ற உறுப்பினர்களை கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.
 
வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டுக் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 முன்னைய கட்டுரை:

அந்தோ.. : சுமதி ரூபன்

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யூஎன் இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக் கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக் கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?

விடுதலைப் புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து (அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ – எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக் கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக் கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?

வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.

அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளை இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிகளுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.

முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப் புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் களியாட்ட வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.

மின்தளங்களில் சிங்கள மக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.

இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.

தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாக உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக் கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னால் நடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை.  சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், யூஎன் ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.

இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும்படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்று முழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தது என்ன?

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.