விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது தொடர்பான இரகசியப் பேச்சுவார்த்தையில் நோர்வே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ரோரி காட்ற்ரெம் நிராகரித்துள்ளார்.
இது முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானது என்று ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கூறியுள்ளார். இந்த மாதிரியான பேச்சுகளில் நான் அறிந்தவரை நோர்வேயோ அல்லது ஏனையவர்களோ சம்பந்தப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றியதாகவே கடந்த பலமாதங்களாக நோர்வே கவனத்தை செலுத்தியிருந்தது என்று காட்ற்ரெம் கூறியிருக்கிறார்.
“மோதல் சூன்யப் பகுதியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்குப் பதிலாக புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய புலிகளின் உறுப்பினர்களையும் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு நோர்வே பேச்சுவார்த்தை நடத்துகின்றதா என்பது பற்றி இந்த ஆங்கிலப் பத்திரிகை எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே நோர்வேத் தூதுவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருக்கிறார்.
பிரிட்டனின் “இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் அன்ட் ரூபன் கோம்பேயின் செய்தியில், இலங்கை அரசாங்கம் புலிகளுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்பதாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பிச் செல்வதன் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தேச உடன்பாடு சாத்தியமா என்பது தொடர்பாக கருத்தறிய இலங்கை முற்பட்டதாக அறியவருவதாகவும் இன்டி பென்டன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.