மிஹின் லங்கா விமான சேவை தற்போது சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவதுபோல் அச்சேவையில் எவ்வித பின்னடைவுமில்லையென அமைச்சர் சரத் குணரத்ன தெரிவித்தார்.அரசியல் இலாபங்களுக்காக தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினர் மிஹின் லங்கா விமான சேவையை குறைகூறி வருகின்றனர். அச்சேவை சாத்தியமானதாகத் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது மிஹின் எயார் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவுவென்பதைக் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் குணரத்ன :-
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தகைய பிரச்சினைகளைக் கிளப்புகிறது. எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சி முகவரியில்லாமல் போகப் போகிறது எனவும் தெரிவித்தார்.