April

April

புலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgபுலிகளோடு பேச்சு நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளே அவசியமாகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்ந்தும் சர்வதேச அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டியது சகலரதும் கடமையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியா – பிழையா என்பதை சர்வதேசத்துக்கும் உணர்த்துவதாக மேல்மாகாண சபைத் தேர்தல் அமைவதால் தாய்நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி மனிதாபிமான நடவடிக்கை மூலம் பாதுகாப்பு வலயம் ஐந்து கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றராக மாறியுள்ளது. கடந்த மூன்று தினங்களிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர். அம்மக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கிடையிலான வித்தியாசத்தை தப்பிவந்த மக்கள் மட்டுமன்றி தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற புலிகளின் தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.

தமது உணவுப் பொட்டலங்களையும் அப்பாவிப் பொது மக்களுக்குப் பகிர்ந்தளித்து அம்மக்களைப் பராமரிக்கும் படையினருக்கு நாட்டு மக்கள் அனைவரினதும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.

புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை. மாறாக பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிவந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் பேச்சுவார்த்தையே அவசியமாகிறது.

இங்கிலாந்து பிரதமர், அவுஸ்திரேலியப் பிரதமர் மற் றும் ஐக்கிய நாடுகள் சபை விசேட பிரதிநிதிகளும் தொலைபேசி மூலம் என்னோடு தொடர்புகொண்டு பேசினர். அவர்களுடனும் நான் இதுபற்றியே கலந்துரையாடினேன்  எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கிர்கிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை மூட தீர்மானம் – ஆகஸ்ட் 18 வரை அமெரிக்காவுக்கு காலக்கெடு

கிர்கிஸ்தானிலுள்ள மனாஸ் இராணுவ த்தளம் மூடப்பட்டு மக்கள் பாவனை க்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. அந் நாட்டின் பாதுகாப்புச் சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்ற திங்கட்கிழமை இந்த அறி வித்தலை அவர் வெளியிட்டார். 2001ம் ஆண்டு அட்சரனிஸ்தானுக்கு இராணுவ த்தை அனுப்பிய அமெரிக்கா மனாஸ் விமானத் தளத்தை இராணுவத் தளமாகப் பாவித்து வந்தது.

விமான வீரர்களை ஏற்றிச் செல்லல், உணவு உபகரணங்களைக் கொண்டு செல் வதற்கும் இந்த தளத்தை அமெரிக்கா பாவித்தது.

ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய கிர்கிஸ்தான் பாதுகாப்புச் சபையின் செயலாளர் கூறியதாவது,

2008ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க இராணுவம் மனாஸ் தளத்தி லிருந்து வாபஸ்பெறவுள்ளது. முற்றாக வாபஸ் பெறப்பட்ட பின்னர் இது மக்களின் பாவனைக்காகத் திறக்கப்படும். பயணிகள், சரக்கு விமான சேவைகளும் நடத்தப்படவுள்ளது.

அமெரிக்கா இங்குள்ள தனது இராணு வத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது.

இது நிகழ்ந்த பின்னர் இனிமேல் வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எந்த நாட்டிற்கும் இராணுவத் தேவைக்காக இத்தளம் பாவிக்கப்படமாட்டா எனத் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் வரை காலம் தருமாறு கோரியுள்ளது.

இதற்கு மேல் கால எல்லையை விஸ்தரிக்கும்படி கேட்டபோதும் அதற்கான அனுமதியை கிர்கிஸ்தான் மறுத்துள்ளது. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளின் வற்புறுத்தலுக்கமைய கிர்கிஸ்தான் இந்த இராணுவத்தளத்தை மூட முன்வந்துள்ளதாகச் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

காலை உணவு உட்கொண்ட 28 மாணவிகள் திடீர் சுகயீனம் – வாழைச்சேனையில் சம்பவம்

vaalai-hospital.jpg வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்றுக்காலை உணவு உட்கொண்ட பாடசாலை மாணவிகளில் 28 மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையிலுள்ள மூன்றாம் வகுப்பு ‘டி’ பிரிவில் கல்விகற்கும் மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ் வகுப்பிலுள்ள 35 மாணவிகளில் 28 மாணவிகள் திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டதால் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இப்பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். பரீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பாடசாலை மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் காலை உணவு உட்கொண்டதில் அவ்வுணவு பழுதடைந்து இருந்ததால் அதில் நஞ்சுத் தன்மை ஏற்பட்டதினாலேயே மாணவர்களுக்கு திடீர் வயிற்று நோவு, வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் மைதிலி யோகநாதன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனைப் பிரசேதம் அல்லோல கல்லோலமாகக் காணப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் சென்று தமது பிள்ளைகளின் நிலைவரம் குறித்து கேட்டறிந்து கொண்டனர். இச்சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ஜவாஹீர் சாலி உட்பட பிரமுகர்கள் பாடசாலைக்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொதுச் சுகாதார அலுவலகம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.இம்மாணவிகளுக்கு காலை உணவாக இடியப்பம், பருப்புக்கறி என்பன வழங்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பாடசாலை நேற்று கால வரையறையின்றி மூடப்பட்டது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். – விமல்

vimal-veera000.jpgபுலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மனோ கணேசன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலிகளுக்கு ஆதரவாக தென் பகுதிகளில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களையும் அமைப்புக்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி அர்த்தம் இல்லாது போய்விடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர்மாநாடு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளது

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் 20 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து இன்று (23.04.2009) தாண்டிக்குளம் வரை செல்லவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். இந்த சேவையானது இன்று தொடக்கம் அமுலுக்கு வரும.; யாழ் ரயில் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் மிகவேகமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். என அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தொகையான மக்களுக்கு விநியோகிக்கவென ஆயிரக்கணக்கான உலர் உணவுப் பொதிகளையும், சமைத்த உணவுப் பொதிகளையும் விமானப் படை விமானங்கள் எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக விமானப் படைப்பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படையினர் நேற்று முன்தினம் 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளையும், நேற்றைய தினம் காலை ஆறாயிரம் சமைத்த உணவுப் பொதிகளையும் கிளிநொச்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரை நோக்கி பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து, அதனை தடுக்கும் வகையில் புலிகளால் மூன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 238 பொது மக்கள் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவசரமாக அநுராதபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி.+ சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு அரசு இணக்கம் – ரணில் தெரிவிப்பு; போகொல்லாகம நிராகரிப்பு

sri-lanka-parliament.jpgஆடைத் தொழிற்துறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ளவென ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அந்த கூற்றை முற்றாக நிராகரித்துவிட்டார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கேள்வி நேரத்தின் போது முன்னதாக ஒரு கட்டத்தில் பேசிய ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் ஜனாதிபதி லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் மூலம் நாட்டுக்கு பல உதவிகள் கிட்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகப் போகிறதென்றும் எதிர்க்கட்சியினர் கூறினார். எனினும், அப்படியான எதுவும் நடக்கவில்லை’ என்றார்.

இதன் தொடர்ச்சியானதொரு சந்தர்ப்பத்தில் பேசும்போதே, ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கைத்தொழிற்சாலைகளை திறந்த வேகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கைத்தொழிற்சாலைகளை மூடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம;

“எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்கும் இணங்கவில்லை. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஐரோப்பிய ஆணைக்குழுவுடனும் பேசி வருகிறது என்று கூறினார்.

யானைகளால் மக்கள் பலியாவதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானைகளின் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்து வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீளக் குடியேறிய மக்கள் ஆர்ப்பாட்டம மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் யானைகள் தாக்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 219 குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தெரிவித்தார். அரசாங்கமும் அதிகாரிகளும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லையெனத் தமிழ்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சர்வதேச டிஜிட்டல் நூலகம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

images.jpgஉலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அரிய தகவல்களை தேடி பெற்றுக் கொள்ள வசதி செய்வதற்காக, பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் யுனெஸ்கோ அமைப்பு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.  பழமையான புத்தகங்கள் வரைபடங்கள் சினிமா ஒலி வடிவங்கள் புகைப்படங்ள் உள்ளிட்ட தகவல்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடுவதுடன் அவற்றினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விலை மதிப்பற்ற பழங்கால சீன பெர்ஷிய புத்தகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரிய புகைப்படங்களை இங்கு காண முடியும் என இணையத்தள வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் புக் சேர்ச் மற்றும் ஈரோப்பியானியா போன்றவற்றுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரதான டிஜிட்டல் நூலகத்தின் முகவரி www.wdl.org   என்பதாகும். உலகின் பல்வேறு நூலகங்களில் இருந்து இதற்கு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் தகவல் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அராபிக் சீனா ஆங்கிலம் பிரெஞ்சு போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் ஸ்பெனிஷ் ஆகிய ஏழு மொழிகளில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த தளத்தில் வாசிக்க முடியும்.   பிரேசில் பிரிட்டன் சீனா எகிப்து பிரான்ஸ் ஜப்பான் ரஷ்யா சவுதி அரேபியா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் பில்லிங்டனின் யோசனையில் உருவாக்கப்பட்டது. எதிர்வரும் 2010ம் ஆண்டுக்குள் ஒரு கோடி புத்தகங்களை இந்த இணையத்தளத்துடன் இணைக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கும் படி 60க்கும் மேற்பட்ட நாடுகளிடம் யுனெஸ்கோ வேண்டியுள்ளது.

கொழும்பில் அதிகாலையில் திடீர் மழை; இடி, மின்னலால் நகரம் அதிர்வு: 164.8 மி. மீ. மழை வீழ்ச்சி: தாழ் பகுதிகளில் வெள்ளம்

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று (22) அதிகாலை திடீரெனப் பெய்த கடும் மழையின் காரணமாக தாழ்ந்த பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கின.

அதிகாலை இரண்டு மணியிலிருந்து கடும் இடி, மின்னல் ஆரம்பித்ததுடன் மூன்று மணியிலிருந்து காலை 7.30 மணி வரை கடும்மழை பெய்தது. இதனால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன.

இடி, மின்னல் காரணமாக வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மின் உபகரணங்களும் செயலிழந்துபோயின. அதிகாலை இரண்டு மணிக்கு இடி, மின்னல் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தால் வெகுண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை 7.30 மணி வரை தொடர்ச்சியாக 164.8 மில்லி மீற்றர் மழை பெய்ததாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது. பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் 137.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாகவும் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தாழ்ந்த பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

இதேவேளை, நாடு முழு வதும் மாலை நேரங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இந்தச் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் காலை வேளையில் மழை பெய்யு மென்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.