ஆடைத் தொழிற்துறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ளவென ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அந்த கூற்றை முற்றாக நிராகரித்துவிட்டார்.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கேள்வி நேரத்தின் போது முன்னதாக ஒரு கட்டத்தில் பேசிய ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் ஜனாதிபதி லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் மூலம் நாட்டுக்கு பல உதவிகள் கிட்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகப் போகிறதென்றும் எதிர்க்கட்சியினர் கூறினார். எனினும், அப்படியான எதுவும் நடக்கவில்லை’ என்றார்.
இதன் தொடர்ச்சியானதொரு சந்தர்ப்பத்தில் பேசும்போதே, ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கைத்தொழிற்சாலைகளை திறந்த வேகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கைத்தொழிற்சாலைகளை மூடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம;
“எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்கும் இணங்கவில்லை. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஐரோப்பிய ஆணைக்குழுவுடனும் பேசி வருகிறது என்று கூறினார்.