கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று (22) அதிகாலை திடீரெனப் பெய்த கடும் மழையின் காரணமாக தாழ்ந்த பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கின.
அதிகாலை இரண்டு மணியிலிருந்து கடும் இடி, மின்னல் ஆரம்பித்ததுடன் மூன்று மணியிலிருந்து காலை 7.30 மணி வரை கடும்மழை பெய்தது. இதனால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன.
இடி, மின்னல் காரணமாக வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மின் உபகரணங்களும் செயலிழந்துபோயின. அதிகாலை இரண்டு மணிக்கு இடி, மின்னல் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தால் வெகுண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை 7.30 மணி வரை தொடர்ச்சியாக 164.8 மில்லி மீற்றர் மழை பெய்ததாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது. பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் 137.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாகவும் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தாழ்ந்த பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
இதேவேளை, நாடு முழு வதும் மாலை நேரங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இந்தச் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் காலை வேளையில் மழை பெய்யு மென்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.