இலங்கையில் நடைபெறுவது ஓர் விடுதலைப் போராட்டம், அங்கு தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று கூறிய எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் அமையும் தமிழ் ஈழம் நாடு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம், ஒரு காலத்தில் இலங்கை நாடு, இந்தியாவுடன் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுனாமி தாக்குதல்கள் காரணமாக பின்னர் அது தனித்தீவாக பிரிந்தது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான வடமொழிகளை பேசுபவர்கள் இலங்கைக்கு வந்து, அங்குள்ள பெண்களை மணந்துக்கொண்டு சிங்களர்களாக மாறிவிட்டனர் என்பது வரலாறு.
இந்தியாவை அமெரிக்கர்கள் ஆண்டகாலத்தில், அவர்கள் இலங்கைக்கும் வந்தனர். அப்போது இலங்கையை யாழ்ப்பாணம் ராஜ்யம், கண்டி ராஜ்யம், வன்னிராஜ்யம் என்ற 3 ராஜ்யங்களாக பிரித்து தமிழ் மன்னர்கள் ஆண்டுவந்தனர். இந்த தமிழ் மன்னர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராகவும் போராடி உயிர் இழந்துள்ளனர். இதை அமெரிக்க வரலாறு தெரிவிக்கிறது.
தமிழ் ஈழப் புலிகளின் போராட்டத்தை வந்தேறிகளின் போராட்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இலங்கையில் வந்தேறிகளாக இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல; சிங்களர்கள் தான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசிக்கும் தமிழர்களை சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங்களர்கள் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
400 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த உரிமையை பெறுவதற்கு தான் தமிழர்கள் இப்போது போராடிக்கொண்டிருக்கிறார்கள், எனவே, இது பயங்கரவாத போராட்டம் அல்ல; இதுவும் ஓர் விடுதலைப் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்டம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோதுதான், இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. அப்போது, தனிநாடு வேண்டும் என ஜின்னா கேட்டதால் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. ஆனால், நாங்கள் இந்தியாவை நம்பினோம். ஜின்னாவை போல, நாங்களும் தனிநாடு வேண்டும் என்று அன்றே கேட்டிருந்தால் இன்று இந்த போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினை, வங்க பிரிவினை போன்றவை நடந்தபோது எங்கே போனது உங்கள் இறையாண்மை?. கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை அதிபராக ராஜபக்சே பொறுப்பேற்றதிலிருந்துதான் படிப்படியாக போரை தீவிரப்படுத்தி வருகிறார்,. இதுவரை அங்கு 20 ஆயிரம் முறை குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்டதை விட மிக வலுவாக 44 லட்சம் கிலோ எடை கொண்ட கொடிய குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நடந்த 2வது உலகப் போரில்கூட இதுபோன்ற கொடூரங்கள் நடைபெறவில்லை.
இதனால், இதுவரை லட்சக்கணக்கான அப்பாவி மக்களும், பல்லாயிரக் கணக்கான புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு, 40 குழாய்களை கொண்ட பீரங்களை வழங்கியது. இப்போது 70 குழாய்கள் கொண்ட நவீன பீரங்களை வழங்கி, இலங்கை தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இந்திய அரசு, இன்று இலங்கை தமிழருக்கு எதிராக நடந்தாலும் எதிர்காலத்திலாவது எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்திய அரசை நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். எனவே ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக் நாங்கள் செயல்பட மாட்டோம். இலங்கையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும். தமிழ் ஈழம் என்ற அந்த புதிய நாடு, இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்றார்.