April

April

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் – இந்தியா

mugarsjee_piranap.jpg இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. வியாழன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில், இலங்கை அரசிடம் இந்தியாவின் கரிசனைகளை தெரிவிப்பதற்காக இரண்டு விசேட தூதுவர்கள் இலங்கை செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர இலங்கை நிலவரம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மட்டும் தீர்வாகிவிட முடியாது. அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்படவே வேண்டும் என்பதை இலங்கையிடம் இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளிடமிருந்து தப்பி வருவோர் நிலை – உச்ச அளவில் வசதிகளை வழங்க ஜனாதிபதி பணிப்பு

Wanni_War_Boat_Refugeesபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு உச்ச அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென சுகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு கவுன்ஸில் நேற்று கூடி ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து தப்பிவரும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக 300 க்கும் அதிகமான மருத்துவர்களும் 550க்கும் அதிகமான தாதிமார்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது- வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சகல வசதிகளும் அளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வன்னியிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலில் விளக்கமளித்தேன். 300 டாக்டர்களுக்கு மேலதிகமாக வதிவிட மருத்துவர்கள் 200 பேரும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்கள் அங்கு அனுப்பப்படுவர்.

நோய்வாய்ப்பட்டு வரும் மக்களில் மேலதிக சிகிச்சை தேவையானவர்களை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென வேறு ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் கட்டில்களை ஒதுக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கட்டில்கள் கொண்ட இரண்டு நடமாடும் ஆஸ்பத்திரிகளை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி வழங்க முன்வந்துள்ளது.

தப்பி வரும் மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளை பெற்று அந்த மக்களுக்கு உதவ அரசு ஆவன செய்து வருகிறது.

வன்னியில் இருந்து வரும் மக்களை அழைத்து வருவதற்கென 150 க்கும் அதிகமான பஸ்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் பஸ்கள் தேவைப்படுமானால் மேலதிக பஸ்கள் அங்கு அனுப்பப்படுமெனவும் அமைச்சர் கூறினார். ஏற்கனவே 50 க்கும் அதிகமான பஸ்கள் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் சகோதரர்களுக்கு உதவுங்கள் ……….

anura.jpgவன்னியிலிருந்து ஆயிரக் கணக்காக இடம்பெயர்ந்து வவுனியாவுக்குள் வரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவும் நோக்குடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

அந்த மக்களுக்கு உதவ விரும்பும் நலன்விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள், வர்த்தகர்கள், அமைப்புகள் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து உலர் உணவுப் பொருட்கள், திரவப்பால், குழந்தைகள் பால் மா, குளுக்கோஸ், பிஸ்கட் வகைகள், சமபோஷ, அரிசி, சீனி, மா உட்பட பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள் போன்றவற்றை சேகரித்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கோ, அல்லது தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ, உதவி பிரதேச செயலகத்திற்கோ, மாவட்ட செயலகத்திற்கோ ஒப்படைக்கலாம்.

புலிகளின் பிடியிலிருந்து சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் படையினரின் பாதுகாப்பைத் தேடி வருகின்றனர், வந்துள்ளனர், வந்துகொண்டிருக்கின்றனர்.

மனித நேயமுள்ள மக்கள் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என ஊட கத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக விசேட கூட்டமொன்று அமைச்சரின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவன பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் – எம்.பி.சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpg இலங்கையில் நடைபெறுவது ஓர் விடுதலைப் போராட்டம், அங்கு தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று கூறிய எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் அமையும் தமிழ் ஈழம் நாடு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம், ஒரு காலத்தில் இலங்கை நாடு, இந்தியாவுடன் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுனாமி தாக்குதல்கள் காரணமாக பின்னர் அது தனித்தீவாக பிரிந்தது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான வடமொழிகளை பேசுபவர்கள் இலங்கைக்கு வந்து, அங்குள்ள பெண்களை மணந்துக்கொண்டு சிங்களர்களாக மாறிவிட்டனர் என்பது வரலாறு.

இந்தியாவை அமெரிக்கர்கள் ஆண்டகாலத்தில், அவர்கள் இலங்கைக்கும் வந்தனர். அப்போது இலங்கையை யாழ்ப்பாணம் ராஜ்யம், கண்டி ராஜ்யம், வன்னிராஜ்யம் என்ற 3 ராஜ்யங்களாக பிரித்து தமிழ் மன்னர்கள் ஆண்டுவந்தனர். இந்த தமிழ் மன்னர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராகவும் போராடி உயிர் இழந்துள்ளனர். இதை அமெரிக்க வரலாறு தெரிவிக்கிறது.

தமிழ் ஈழப் புலிகளின் போராட்டத்தை வந்தேறிகளின் போராட்டம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இலங்கையில் வந்தேறிகளாக இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல; சிங்களர்கள் தான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசிக்கும் தமிழர்களை சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிங்களர்கள் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்? 

400 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த உரிமையை பெறுவதற்கு தான் தமிழர்கள் இப்போது போராடிக்கொண்டிருக்கிறார்கள், எனவே, இது பயங்கரவாத போராட்டம் அல்ல; இதுவும் ஓர் விடுதலைப் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்டம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோதுதான், இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. அப்போது, தனிநாடு வேண்டும் என ஜின்னா கேட்டதால் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. ஆனால், நாங்கள் இந்தியாவை நம்பினோம். ஜின்னாவை போல, நாங்களும் தனிநாடு வேண்டும் என்று அன்றே கேட்டிருந்தால் இன்று இந்த போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினை, வங்க பிரிவினை போன்றவை நடந்தபோது எங்கே போனது உங்கள் இறையாண்மை?. கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை அதிபராக ராஜபக்சே பொறுப்பேற்றதிலிருந்துதான் படிப்படியாக போரை தீவிரப்படுத்தி வருகிறார்,. இதுவரை அங்கு 20 ஆயிரம் முறை குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்டதை விட மிக வலுவாக 44 லட்சம் கிலோ எடை கொண்ட கொடிய குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நடந்த 2வது உலகப் போரில்கூட இதுபோன்ற கொடூரங்கள் நடைபெறவில்லை.

இதனால், இதுவரை லட்சக்கணக்கான அப்பாவி மக்களும், பல்லாயிரக் கணக்கான புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு, 40 குழாய்களை கொண்ட பீரங்களை வழங்கியது. இப்போது 70 குழாய்கள் கொண்ட நவீன பீரங்களை வழங்கி, இலங்கை தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

இந்திய அரசு, இன்று இலங்கை தமிழருக்கு எதிராக நடந்தாலும் எதிர்காலத்திலாவது எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்திய அரசை நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். எனவே ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக் நாங்கள் செயல்பட மாட்டோம். இலங்கையில் தமிழ் ஈழம் நிச்சயமாக அமையும். தமிழ் ஈழம் என்ற அந்த புதிய நாடு, இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்றார்.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கொடையாளிகளிடம் ஐ.நா கோரிக்கை

Wanni_War_Welfare_Campஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மோதல்களற்ற பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு நாட்களாக வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தடைந்தடைந்திருக்கும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சிவிலியன்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அவசியமான நிதியுதவியை வழங்கும்படி சர்வதேச கொடையாளிகளை ஐக்கிய நாடுகள் சபை கோரியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கைக்கான பிரதிநிதி நீல் பூன், வியாழனன்று வவுனியா சென்று அங்கு வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பார்வையிட்ட பின்னர் இந்தக்கோரிக்கையை கொழும்பில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தடைந்திருக்கும் சுமார் 80,000ற்கும் அதிகமான சிவிலியன்களை தான் கண்ணுற்றதாகவும், அங்கு பல சிறுவர்களும் பெண்களும் நோய்வாய்ப்பட்டவர்களாக, போசாக்கின்றி காணப்படுவதாகவும், ஆண்கள் உடல்காயங்களுடன் கிழிந்த ஆடைகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்து வரும் இவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள், உடை, குடிநீர், சுகாதார மற்றும் வசதிகளை வழங்குவதற்கு நிதி தேவைப்படுவதாகவும், இங்குள்ள சிறுவர்களிற்கான பாடசாலைக் கல்வி வசதியினைச் செய்து கொடுத்து அவர்கள் மத்தியில் சுமூகமான மனநிலையொன்றினைத் தோற்றுவிப்பது மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிக்கு மனிதநேய குழு ஒன்றை தாம் அனுப்புவதாக அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வருகை

cvili.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கென இந்தியா அனுப்பி வைத்திருக்கும் அவசரகால உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவென வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் பிடிலியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

இச்சமயம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு இராஜ தந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரோகித போகொல்லாகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகளின் பிடியிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி வந்துள்ளனர். இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை இம்மக்களின் தேவைகளையும் நாம் இனம் கண்டுள்ளோம். குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தற்காலிக மற்றும் இடைத்தங்கல் வசதிகள் என்பனவே அத்தேவைகளாகும். இது தொடர்பாக இராஜ தந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கிய அமெரிக்கா நடமாடும் வைத்தியசாலையொன்றை வழங்கவும் முன்வந்துள்ளது. ஐ. நா. நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.

புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்மக்களின் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்லாமல் கனடா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று முன்தினமிரவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு நேற்றும் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவேன் என்றார்.

கிருஸ்ணா அம்பலவாணரின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம் அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் அவர்களின் உண்ணா நோன்பு 11 நாட்களின் பின் வியாழக்கிழமை 11.30 அளவில் முடிவுக்கு வந்தது.

தங்கபாலு, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு வாக்களிக்கக் கூடாது: தமிழ் திரையுலகம்

bharathi-raja.jpg இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Wanni_War_Boat_Refugeesவவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், அவற்றை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பரோபகாரிகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக புத்தாடைகள், உலருணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல், பிஸ்கட், பால் மா, தேயிலை, பற்பசை பற் தூரிகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் சேகரித்து வருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவற்றை அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் லொறிகள் மூலம் இலவசமாக வவுனியாவுக்குக் கொண்டு சென்று வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்க முடியுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0112431590 மற்றும் 0112431579 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளரையோ அல் லது 0112395513 என்ற இலக்கத்துடன் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹலால்தீனையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணத்திற்காக படையினர் இழப்பை வெளியிட முடியாது -ஐ.தே.க. எம்.பி.யின் கேள்விக்கு அரசு பதில்

dinesh_gunawardena.jpgயுத்த நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை விபரங்களை பாதுகாப்புக் காரணமாக வெளியிட முடியாதென அரசாங்கம் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிஹார மற்றும் ரேணுகா ஹேரத் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுந் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த மறுப்பை வெளியிட்டார்.

2007 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2008 ஆண்டு ஜனவரி மாதங்களில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களுக்கிணங்க வடக்கு, கிழக்கு யுத்த நடவடிக்கைகளின் போது அந்தந்தக் கால எல்லைகளுக்குள் ஒவ்வொரு திகதியிலும் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை சபைக்கு அறிவிக்குமாறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதில் ரஞ்சித் அலுவிஹார எம்.பி.யின் கேள்விகளுக்கு முதலில் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன , உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரினது பெயர், விலாசம் விபரங்களை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென கூறினார்.

இதேநேரம், எண்ணிக்கையை மட்டுமாவது கூறமுடியாதாவென ரஞ்சித் அலுவிஹார கேள்வி எழுப்பியபோது; எண்ணிக்கையையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது. விசேடமாக ஏதேனும் விபரங்கள் தேவையாயின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். இப்போது பகிரங்கமாக எதனையும் கூற முடியாது என்று தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.

அத்துடன் ரேணுகா ஹேரத்தின் கேள்விக்கும் இம்மாதிரியான பதிலே இருப்பதாக அமைச்சர் குணவர்தன தெரிவிக்கவே ரேணுகா ஹேரத் மேலதிக கேள்வி எதுவும் கேட்க முற்படவில்லை.