27

27

“மக்கள் ஆணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன்’ – ரணில்

ranil-wickramasinghe.jpgஜனநாயக வழியின் மூலம் மக்களாணையுடன் விரைவில் ஆட்சிக்கு வருவேன் என தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்று படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கையின் இன்றைய நிலைமை பெரும் கவலையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் வேதனையை வெளியிட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது 60 ஆவது பிறந்த தினத்தையொட்டி கொழும்பு ஹீணுப்பிட்டிய கங்காராம விகாரையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரோ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜை வழி பாட்டில் ரணில் விக்கிரம சிங்கவுடன், அவரது பாரியார் மைத்திரி விக்கிரம சிங்கவும் கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்றனர்.

கங்காராம விகாராதிபதியுடன் கோட்டே ரஜமகாவிகாராதிபதி கலாநிதி மாதுளுவாவே சோபித தேரோ, காணி மகாவிகாராதிபதி பேராசிரியர் மகிந்த சங்க ரக்கித்த தேரோ ஆகியோர் ரணிலுக்கு நல்லாசிகளை வழங்கியதோடு விஷேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

இறுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

60 வருடங்கள் என்பது வாழ்க்கைப் பயணத்தில் நீண்டதொரு தூரமாகும். இப்பயணத்தில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதோடு, பல சவால்களையும் எதிர் கொண்டுள்ளேன். அந்த அனுபவங்களும், சவால்களும் தான் தொடர்ந்து பயணிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளதாகவே உணர்கின்றேன். சுதந்திர இலங்கையில் பிறந்த நான் மாதுளுவாவே சோபித தேரோ குறிப்பிட்டது போன்று எனது கல்வியை “குமாரரொதய’, “நவமக’ ஆகிய பாடப்புத்தகங்களினூடாகவே ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே சவால்கள் நெருக்கடிகள் என்பன பற்றி புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க ஆகியோருடன் இணைந்து செயற்பட்டதால் எனது அரசியல் வாழ்க்கையில் நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றி தோல்வி இரண்டுக்கும் முகம்கொடுக்கக்கூடிய தைரியம் சுயமாகவே வந்தது. அவர்கள் காட்டிய பாதையிலிருந்து இன்று வரையில் நான் விலகிச் செயற்படவில்லை. எதிர்காலத்திலும் அந்த அடிச்சுவட்டிலேயே பயணிப்பேன்.

எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் போது அந்த தலைவர்களிடமும் எனது தாய், தந்தையாரும், கட்சி ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புகளை இன்று நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதைப் பற்றி நான் தம்ம பதத்தை படித்து தெரிந்துகொண்டேன்.

நான் ஜனநாயகத்தின் மீது முழுமையான நம்பிக்கைகொண்டவன். ஜனநாயக வழிக்கு அப்பால் நின்று அரசியல் அதிகாரங்களைப் பெற ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன். எதிர்காலத்திலும் ஜனநாயக வழியிலேயே மக்களாணையைப் பெற்று ஆட்சிக்கு வந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன். இதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக திகழ்ந்த எமது நாட்டின் இன்றைய நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டும். அதற்காக தேசத்தை நேசிக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும். நான் பெற்ற அனுபவங்கள், சவால்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நிவாரணங்களைத் தேடிக்கொடுத்து சுதந்திரமான ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது இலட்சியமாகும்.

‘ புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே ஷெல் வீச்சுக்களில் 20 பேர் பலி”

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.

புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.

மேலும் 485 பொதுமக்கள் புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டனர்

navy_rescue_civil.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவடத்தில் போர் நடக்கும் பகுதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கிய சுமார் 485 பொதுமக்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கக் கப்பல் மூலம் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை தற்காலிக மருத்துவ முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் என்றும் பிறர் அவர்களுக்குத் துணையாக வந்த குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வந்தவர்கள் கடலிலிருந்து படகுகள் மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ உதவி, புல்மோடையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ முகாமில் அளிக்கப்பட்டது.

“லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தியப் படையினர் பாவனையில் உள்ளவை’

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர் பயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின் “டோன்’ (ஈச்தீண) பத்திரிகை புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 4 ரொக்கட் லோஞ்சர்களும் 9 வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் இவை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியப் படைகளால் உபயோகிக்கப்பட்டவை என்று “டோன்’ பத்திரிகை கூறியுள்ளது.

இவற்றுடன் 40 கிரனேட்டுகள் , 10 எஸ்.எம்.ஜி., 5 பிஸ்ரல்கள், இவற்றுடன் 577 எஸ்.எம்.ஜி. யின் ரவைகள், 160 ரவைகள் என்பனவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அன்றைய தினம் 312 சன்னங்களை சுட்டு வெளியேற்றியிருந்ததுடன் 2 ரொக்கட்டுகளை ஏவியும் 2 குண்டுகளை வெடிக்க வைத்தும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தற்கொலை அங்கி எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான நோக்கத்தடன் அவர்கள் அங்கு வரவில்லையெனத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகள் ரஷ்ய, ஜேர்மன் மற்றும் சீனத் தயாரிப்புகளாகும் என்று விசாரணையாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை டோனுக்கு தெரிவித்துள்ளார்.

லாகூரில் மார்ச் 3 இல் இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் 6 பொலிஸாரும் ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அரச முகவரமைப்பொன்றின் உதவியின்றி நாட்டிலுள்ள எந்தவொரு போராளி அமைப்புகளாலும் இத்தாக்குதலை நடத்தக் கூடிய ஆற்றல் இல்லையென்ற அபிப்பிராயத்தை விசாரணையாளர்கள் கொண்டுள்ளனர்.

“ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் வலைப்பின்னல் என்பவையே தாங்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்றும் அதாவது அரச முகவரமைப்பொன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது’ என்று விசாரணையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவொரு பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சகல பயங்கரவாதிகளும் பழங்குடியினர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பொலிஸாரின் தாமதமான செயற்பாட்டால் அவர்கள் தப்பிவிட்டனர் என்றும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் இப்போது உறுதியான விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு விளையாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானுக்கு வருவதை நிறுத்துவது, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்வது, தனது அரச முகவரமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யிலும் பார்க்க ஆற்றல் உடையது என்று பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்துவது என்பனவே தாக்குதலின் முக்கிய நோக்கங்கள் என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மேலதிக பொலிஸ்மா அதிபர் சலாகுடீன் கான் நியாஸி தலைமையில் 4 உறுப்பினர்கள் அடங்கிய பொலிஸ் குழுவும் சமஷ்டி விசாரணை முகவர் நிலையம் , ஐ.எஸ்.ஐ. புலனாய்வு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைப் பிரிவும் லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றன.

அம்பாறையில் சொக்லேட் உண்ட 13 மாணவர்கள் திடீர் சுகவீனம்

t-mala-stu.pngஅம்பாறை காமினி வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டு மாணவிகள் 13 பேர் சொக்லேட் உண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தின் 6 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சொக்லேட் பகிர்த்துள்ளார். சொக்லேட் உண்ட சிறுது நேரத்தில் மாணவிகள் மயக்கமடைந்ததுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டனர். பாடசாலை அதிபர், மாணவர்களை உடனடியாக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

பிறந்த தினத்தை முன்னிட்டு எனக்கு தந்த சொக்லேட்டை நான் உண்டேன். சவர்க்கார மணம் வீசியதுடன் சவர்க்கார சுவையாகவும் இருந்தது. எனக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது. அவசர அவசரமாக வெளியே ஓடினேன்.

அப்போது ஏனைய மாணவர்களும் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தனர் என மாணவன் ஒருவன் தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறினர். சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் இழப்பு குறித்து சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது கொழும்பிலுள்ள ஐ.நா.பிரதிநிதி கூறியதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை

வன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதியிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட இணைப்பாளரும் மனிதநேய இணைப்பாளருமான நெய்ல் புனே தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே நெய்ல் புனே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் நடைபெறும் மோதல்களின் இழப்புகள் தொடர்பாக ஐ.நா.வால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2,683 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,241 பேர் காயமடைந்துமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமை எதுவித நம்பகத் தன்மையானதோ, சுயாதீனமான தகவல்களைக் கொண்டோ வெளியிடப்படவில்லையென அமைச்சர் ரோஹித போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுமக்களின் இழப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையும் முழுப்பொய்யென அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதிவரை 4,120 காயமடைந்த பொதுமக்களும் 1,485 பராமரிப்பாளர்களும் கப்பல் மூலம் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனரெனவும் வெளிவிவகார அமைச்சின் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 17 ஆம் திகதி ஐ.சி.ஆர்.சி.யினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அன்றைய திகதியில் காயமடைந்திருந்த அனைவரும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 7,241 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுவது நம்பத்தகுந்ததல்ல என்ற காரணத்தினாலலேயே அந்த அறிக்கையை அரசு நிராகரித்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிக்கை, வெளிநாட்டு உதவி அமைப்புகளின் கருத்தின் அடிப்படையிலேயே தனது அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அதிலுள்ள பொதுமக்களின் இழப்புகள் குறித்த தொகை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் நெய்ல் புனேதெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிகந்தயில் புலிகள் சூடு: நான்கு சிவிலியன்கள் பலி

udaya_nanayakkara_brigediars.jpgவெலிகந்த, மெனிக்தெனிய பிரதேசத்திலுள்ள விவசாயிகளை இலக்குவைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10.00 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. அறுவடையில் ஈடுபட்டிருந்த அப்பாவி விவசாயிகளை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் தகவல் தருகையில்:- வெலிகந்தை பூனானை வீதிக்கு தெற்காக அமைந்துள்ள மெனிக்தெனிய என்ற கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரங்களையும், கனரக வாகனங்களையும் பயன்படுத்தி அறுவடை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவிய இனந்தெரியாத ஆயுததாரிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் எல்லைப் புறங்களின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாமஸிகள் திடீர் முற்றுகை; தரக்குறைவான மருந்துகள் கண்டுபிடிப்பு

நாடெங் கிலுமுள்ள பாமஸிகளின் (மருந்தகங்களின்) தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திடீர் சோதனைகளை நடாத்துவதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு தீர்மானித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, கொஹுவல மற்றும் பொரல்லஸ்கமுவ பிரதேசங்களிலுள்ள 15 பாமஸிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

*  காலம் கடந்த மருந்துகள்

* பாவனையில் நீக்கப்பட்ட மருந்துகள்
* பதிவு செய்யப்படாத மருந்துகள்
* பெப். 30உடன் காலம் முடிவதாக குறிப்பிட்ட மருந்துகள்

இவற்றில் 14 பாமஸிகள், பாமஸிக்குரிய தரத்தைக் கொண்டிராதது இத்திடீர் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பாமஸிகளில், காலம் கடந்த மருந்துகள், இந்நாட்டின் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மருந்துகள், அந்நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகள், பெப்ரவரி 30ம் திகதியுடன் காலம் முடிவதாக குறிப்பிடப்பட்ட மருந்துகள் போன்றவாறானவை விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த 14 பாமஸிகளில் சில பாமஸியாகளே பதிவு செய்யப்படாதவை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அத்தோடு சில பாமஸிகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து மருந்துப் பொருட்களும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாமஸிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட விருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடெங்கிலுமுள்ள சகல பாமஸிகளிலும் திடீர் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை – நெசபி பிரபு

nasabi.jpgபுலிகள் எந்தவொரு பிரிவினரையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்றக்குழுத் தலைவர் நெசபி பிரபு தெரிவித்துள்ளார்.

நெசபி பிரபு அவர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 பாதை திறக்கப்பட்டுள்ளது. புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்து அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு சுமார் 2,50,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் பேர்வரையிலேயே அப்பிரதேசங்களில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்வரை புலிகளது கட்டுப்பாடுகளையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது வெளியேறியுள்ளனர்.

இந்த மக்களை விடுவிக்குமாறு ஐ.நா. சபை இணைத்தலைமை நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றன விடுத்துவரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை எல்லாம் புலிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது புலிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சனநாயக வழிமுறைக்கு திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பல கொலைகளுக்குக் காரணமான புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் தமது மூடக் கொள்கையிலேயே இருந்து வந்தார்.

இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை தனக்குக்கீழ் வைத்திருந்த கருணா அம்மான் அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார். ஈழம் என்பது சாத்தியப்படாததொன்று என்பதை அறிந்த கருணா தனது போராளிகள் சகிதம் அரசாங்கத்தரப்பிற்கு மாறினார். அத்தோடு புலிகளது நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.

புலிகள் சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டும். புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அங்கு உண்மையான சமாதானம் ஏற்படும் என்பதோடு அப்பிரதேசம் சர்வதேச சமூகத்தின் உதவிகளோடு மீளக்கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட், சாராயத்தின் விலைகள் அதிகரிப்பு

இரண்டு வகையான சிகரெட்டுகள் மற்றும் சாராயத்தின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.

கோல்ட்லீஃப் சிகரட் 2 ரூபாவாலும் பிரிஸ்டல் ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள் ளன. சாராயம் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.