நாடெங் கிலுமுள்ள பாமஸிகளின் (மருந்தகங்களின்) தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திடீர் சோதனைகளை நடாத்துவதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு தீர்மானித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, கொஹுவல மற்றும் பொரல்லஸ்கமுவ பிரதேசங்களிலுள்ள 15 பாமஸிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
* காலம் கடந்த மருந்துகள்
* பாவனையில் நீக்கப்பட்ட மருந்துகள்
* பதிவு செய்யப்படாத மருந்துகள்
* பெப். 30உடன் காலம் முடிவதாக குறிப்பிட்ட மருந்துகள்
இவற்றில் 14 பாமஸிகள், பாமஸிக்குரிய தரத்தைக் கொண்டிராதது இத்திடீர் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த பாமஸிகளில், காலம் கடந்த மருந்துகள், இந்நாட்டின் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட மருந்துகள், அந்நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகள், பெப்ரவரி 30ம் திகதியுடன் காலம் முடிவதாக குறிப்பிடப்பட்ட மருந்துகள் போன்றவாறானவை விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இந்த 14 பாமஸிகளில் சில பாமஸியாகளே பதிவு செய்யப்படாதவை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அத்தோடு சில பாமஸிகளில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து மருந்துப் பொருட்களும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாமஸிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட விருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடெங்கிலுமுள்ள சகல பாமஸிகளிலும் திடீர் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் அவர் கூறினார்.