யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ‘உத்துறு மித்துறு’ (வடக்கு நட்பு) என்ற இந்த ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய செயலகமொன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைகளுக்கமைய யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கவென தேசிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுமித்சந்தன வீரசிங்க தெரிவித்தார்.
ரயில் பாதையை மீளமைப்பதற்கு நிதி உதவி வழங்க ஈரானிய அரசு முன்வந்துள்ளது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதையை அமைப்பதற்காக தண்டவாளத்திற்கும், சிலிப்பர் கட்டைகளுக்குமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் அதேநேரம், வடக்கின் கலாசாரப் பிணைப்பையும், வாழ்வியல் பண்புகளையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த யாழ்தேவி ரயில்சேவை திட்டத்திற்கு மூவின மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுமித் வீரசிங்க தெரிவித்தார்.
இதற்கிணங்க ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களின் உடல் உழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணியை அம்பாந்தோட்டை மாவட்டம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் வீரசிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம், கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் புனரமைக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறினார்.
இவ்வாறு ஓமந்தையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வரை உள்ள 9 பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 நிலையங்களைப் புனரமைப்புச் செய்ய மாவட்ட ரீதியில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் ஒருங்கிணைப்பார்கள். ஆளணிப் பங்களிப்பைத் தவிரவும், பொதுமக்கள் சிலிப்பர் கட்டைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிப்பர் கட்டைக்கான செலவு 12,500 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க முடியாதவர்களுக்காக மாற்றுத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதாவது, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில் அனுமதிச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமும் வடக்கு நட்பு ரயில் சேவை திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த ரயில் அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இந்த அனுமதிச்சீட்டை வைத்திருந்து, யாழ்தேவி பயணத்தைத் தொடங்கியதும் அதில் யாழ்ப்பாணம் சென்றுவர முடியும் எனவும் சுமித் சந்தன வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி ரயிலை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரை கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்த நாளான 1956 ஏப்ரல் 23 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில், இந்தத் திகதியில் அதன் பயணத்தை வவுனியாவுக்கும் அப்பால் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டதாக சுமித் மேலும் தெரிவித்தார்.
