March

March

நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – ஐ.தே.க

ravi-karunanayaka.jpg இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் முதனிலை நிறுவனங்களாகக் கருதப்படும் 41 நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து 182 பில்லியன் மேலதிகப் பற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போகொல்லாகம வியட்நாம் பயணம்

rohitha-sir-john.jpgவெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழனன்று போய்ச் சேர்ந்த அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, பிரதிப் பிரதமர் பாம் கிய கியாம் வரவேற்கிறார்.

2003 ஆம் ஆண்டு வியட்நாமில் இலங்கைத் தூதரகம் திறந்ததன் பின்பு வெளிவிவகார அமைச்சரின் முதலாவது விஜயம் இதுவாகும்.
 
 

புதுமாத்தளன் பகுதியில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் புலிகள் திட்டமிட்ட செயற்பாடு

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளே திட்டமிட்டு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனூடாக பட்டினிச் சாவை மக்கள் எதிர் கொள்வதாகக் கூறி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சிக்கின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

இதுவரை இப்பகுதிக்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியிலும் கப்பல் மூலமாக 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை நாம் அனுப்பிவைத்துள்ளோம். இன்றும் சுமார் 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கடல்மார்க்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. திருமலை துறைமுகத்திலிருந்து இது புறப்படும்.

இவ்வாறு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் புலிகளேதான். நாம் அனுப்பும் உணவுப் பொருட்களில் 50 வீதத்தை புலிகளே எடுக்கின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். புலிகளுக்கு எதிராக போர் புரிந்து கொண்டு புலிகளுக்கும் சேர்த்த உணவு அனுப்பும் ஒரே அரசாங்கம் எமது அரசுதான்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக முன்பு அனுப்பிய உணவுப் பொருட்கள் கூட இப்போதும் போதுமானதாக இருக்கக் கூடியவாறுதான் அனுப்பினோம். உணவு லொறிகள் மேல் தாக்குதல் நடத்தியதாலேயே தரை மார்க்கமாகவும் அனுப்ப இயலாமல் போனது.

மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையோடு சிரமங்களுக்கு மத்தியிலும் கடல்மார்க்கமாக உணவை அனுப்புகிறோம். இந்நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்களென சர்வதேசத்துக்குக் காட்டி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில்தான் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

உணவின்றி மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் சில ஊடகங்கள் ஏன் மக்களுக்கு அனுப்பும் உணவை புலிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கூற முன்வருவதில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

2010இல் பல்கலைக்கழக மாணவர்களில் 60 முதல் 70 வீதமானோருக்கு விடுதி வசதி – பேராசிரியர் விஸ்வவர்ணபால

vishva-warnapala.jpg பல்கலைக் கழக மாணவர்களில் 45 வீதமானோருக்குத் தற்போது விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால 2010 ஆம் ஆண்டளவில் 60 முதல் 70 வீதமான மாணவருக்கு விடுதி வசதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் 5,500 மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் 584 பேருக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால கொழும்பு பல்கலைக்கழத்தில் விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 1200 ரூபாவை செலுத்த வேண்டிய அதேவேளை, யாழ். பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 200 ரூபாவை செலுத்த வேண்டுமென்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. ரவிகருணா நாயக்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தனது கேள்வியில், இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகத்தின் உலகதரங்கள், விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு பெறப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பலவற்றை கேட்டார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்;

மொரட்டுவ பல்கலைக்கழகம் 16 ஆவது இடத்திலும் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே 18, 29, 65, 89, 95, 99, ஆவது தரங்களில் உள்ளன என்றார். விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் விபரங்களை அவர் வெளியிடுகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3,177, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 5500, ஸ்ரீ ஜெயவர்த்தன புரபல்கலைக்கழகத்தில் 3,505, களனி பல்கலைக்கழகத்தில் 3,152, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1,036, யாழ். பல்கலைக்கழகத்தில் 584, றுகுணு பல்கலைக்கழகத்தில் 2,032, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 543, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 743, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் 2,193 மாணவர்கள் விடுதி வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

விடுதிகளுக்கு மாணவர் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக கூறுகையில்;

கொழும்பு பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 1,200 ரூபா, பேராதனைப் பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 750 ரூபா, களனி பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 350 ரூபா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 650 ரூபா, யாழ். பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 200 ரூபா, கிழக்கு பல்கலைக்கழத்தில் மாதமொன்றுக்கு 60 ரூபா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமர்வொன்றுக்கு 300 ரூபா, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 600 ரூபா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 500 ரூபா, வயம்ப பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 550 ரூபா, திறந்த பல்கலைக்கழகத்தில் நாளொன்றுக்கு 25 ரூபாவும் அறவிடப்படும் என்றார்.

சிவிலியன்கள் வந்த படகுகள் மீது புலிகள் தாக்குதல்; மூன்று பேர் பலி

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆறு படகு கள் மூலம் தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஆறு படகுகள் மூலம் தப்பிவந்த பொதுமக்கள் மீது பின் தொடர்ந்து சென்றே தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து ஆறு படகுகளில் சென்ற போது மக்கள் மிகவும் அச்சத்துடன் தட்டுத்தடுமாறியுள்ளனர்.

ஆறு படகுகளில் இரண்டு படகுகள் கெவில் மற்றும் சுண்டிக்குளம் கரையை சென்றடைந்துள்ளது. இவர்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.ஏனைய, நான்கு படகுகளும் கடற்படையினரின் உதவியுடன் முனை பிரதேசத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்றார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி நேற்று 200 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களை இலக்கு வைத்து புலிகள் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள படையினரை இலக்கு வைத்து புலிகள் 130 மி. மீ. ரக மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகளை பயன்படுத்தி நேற்றும், நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தினர். புலிகள் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது படையினரின் ராடார் கருவிகளில் தெளிவாக பதிந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பில் அங்கவீனர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானம்

athauda-senavi.jpgஅங்க வீனரான நிலையில் இருப்போருக்கு 3 வீதமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைத் தளங்களில் அங்கவீனராகவுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இணங்கியுள்ளதுடன் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளை இவர்களுக்கு வழங்குவதற்கும் நிறுவனங்கள் சம்மாதம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்கவீனர்கள் தமது கடமையின் போது கூடுதலான அக்கறையுடன் பணியாற்றுவதோடு அதிக பயனுள்ள வகையிலும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். மேலும், அங்கவீனர்களைக் கடமைக்காகச் சேர்த்துக் கொள்ளும் போது தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தொழில் வாய்ப்புக்காக 500 அங்கவீனர்கள் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ள இருப்பதோடு அனைத்து அங்கவீனர்களையும் இந்த தொழில் சந்தைக்குள் பங்குக் கொள்ளச் செய்ய முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அனைத்து அங்கவீனர்களையும் இந்தத் தொழிற் சந்தைக்குள் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் அதற்குள் பொருத்தமான வேலைகளை அவர்கள் தெரிவு செய்ய முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்

பொலிஸ் நிலையத்தில் முறையிடுங்கள்

ஆள் கடத்தல், கப்பம், மிரட்டல் தொடர்பாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியுமென வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியாவில் சட்டம் நீதி,

ஒழுங்கு அமைதியை நிலைநாட்ட பொலிஸார் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். யாருக்கும் கப்பம் வழங்க வேண்டாம்.

அவ்வாறு கப்பம் கோரி மிரட்டப்பட்டால் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை பகிரங்கமாக அறிவித்தனர்.

வன்னியில் எறிகணைத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் : வீ.ஆனந்தசங்கரி

ananda-sangari.jpgவன்னியில் நடத்தப்பட்டு வரும் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளாதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் 300,000இற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாகவும், குறித்த மக்கள் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்றி அல்லலுறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த முன்னெடுப்புக்கள் பெரும் துன்பத்தையே தருகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வன்னிப் பிரதேச மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் ஜனநாயக அரசு என்ற ரீதியில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில கட்சிகள் வலியுறுத்துவதைப் போன்று அவசரமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் பொதுமக்கள் பாரிய அழிவை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்த இணையத்தளச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வக்கீல்களின் கலகமே மோதலுக்கு காரணம்- ஸ்ரீகிருஷ்ணா

hc-clash.jpgசென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலகத்தி்ல் ஈடுபட்டதே, உயர்நீதிமன்ற மோதலுக்குக் காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் வன்முறை மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். பல நூறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அவரிடம் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதேபோல காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டெல்லி திரும்பினார். இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

சர்வதேச உதவிகள் இனிமேல் அரசின் வழிகாட்டலிலேயே செலவிடப்படும் – கெஹெலிய ரம்புக்வெல

keheliya_hulugalla_.jpgஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் இனிமேல் அரசாங்கத்தின் வழிகாட்டலிலேயே செலவிடப்படவேண்டும். முன்பு போல் அரசசார்பற்ற நிறுவனங்களில் நிகழ்ச்சி நிரலின்படி செலவிடமுடியாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். சிவிலியன்கள் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்படும் இது போன்ற முகாம் உலகில் எங்கும் காணமுடியாதென ஐ நாவின் இரண்டாம் நிலைத் தவைர் ஜோன் ஹோம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும்  தனித்தனி வீடுகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் அங்கு இயங்குகின்றன. இதனையடுத்து இலங்கையில் இடம்பெயர்நதவர்களுக்கு உதவ ஐ.நா நிறுவனமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அதற்காக நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால் அவ்வாறான உதவிகள் அனைத்தும் இறைமையுள்ள எமது அரசாங்கம் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின் அடிப்படையில்தான் பயன்படுத்தப்ட வேண்டும். அவர்கள் வகுத்த திட்டத்தில் செயற்பட எமது அரசாங்கம் இடமளிக்காது. கடந்த காலங்களில் இலங்கையில் செயற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவிகள் வடக்கிலுள்ள தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. புலிகளுக்காக சுகபோக நீச்சல் தடாகம் அமைக்கவும் அதிநவீன தொலைத் தொடர்பு நிலையங்கள் மற்றும் உலகின் முதல்தர அச்சகங்களை அமைக்கவுமே பயன்பட்டன என்பது இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இலங்கைக்கெனச் செலவிடும் பணத்தில் 70 சதவீதம் அந்த நாடுகளின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கென அந்த நாடுகளுக்கே மீண்டும் சென்றடைகின்றன. ஆனால் அரசாங்கம் வகுக்கும் திட்டங்களில் உள்ளுர்ப் பணியாளர்களின் சேவையே பெற்றுக்கொள்ளப்படும். சகல செலவினங்களுக்கும் அரசாங்கமே வழி காட்டும். இவ்வாறான கருத்துக்களை முன்னர் கூறமுடியாதவொரு அச்ச நிலை இருந்தது. ஆனால் இன்று எமது அரசு எழுப்பிய சந்தேகங்கள் உண்மைப்படுத்தப்ட்டுள்ளதால் இன்று அவற்றை துணிந்து கூறக்கூடியதொரு நிலை ஏற்பட்டுள்ளது  என்றும் அமைச்சர் கூறினார்.