March

March

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் 2008இல் வீழ்ச்சி; பால்நிலைசார் அமைப்பு தகவல்

thinking.jpgபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளதாக பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக தனமல்வில பிரதேசத்தில் காணப்பட்டதோடு, 2007 இல் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் “மதட்ட தித்த’ செயற்திட்டத்தின் மூலமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை மட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த வன்முறைகள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ், பெண்கள் பங்கு கொள்ளும் தேசிய மட்டக் குழுவினால் நடத்தப்பட்ட மிதிப்பீட்டில், பால் நிலைசார் அமைப்புக்கு கடந்த வருடத்தில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக 103 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வீட்டு வன்முறை தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளில், மிக மோசமாக இடம்பெற்ற வெவ்வேறு தரத்திலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2008 டிசம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பால் நிலை சார் அமைப்புக்கு மொத்தமாக 328 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனை அடுத்து ஆகக் கூடுதலாக, விவாகரத்து மற்றும் தாபரிப்பு தொடர்பாக 58 முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளன. மேலும் பாலியல் தொந்தரவுக்குள்ளானமை தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, இதே காலப்பகுதியில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பால் நிலைசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலை, மற்றும் காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, தொழில்வாய்ப்பு மற்றும் பதவிஉயர்வு தொடர்பாக மேலும் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பாலியல் வல்லுறவு தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மு.கா. தலைவரின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் துணைபோகக் கூடாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard-badi.jpgமுஸ்லிம் சமூகம் தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரானவர்கள். இதன் மூலம் இச்சமூகம் எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதை அங்கீகரிக்க முடியாது என மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜும் ஆப் பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷேய்க் பீ. நிஹ்மத்துல்லா தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில்; முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் தமது நேர்த்தியான சிந்தனையினாலும், அரசியல் ஞானத்தினாலும் இக்கட்சியின் பலத்தைக் கொண்டு ஆட்சியாளர்களையும் அரசாங்கங்களையும் தீர்மானிக்கும் வலிமையைக் கொண்டிருந்தார்.

பதவியே வாழ்க்கையென எண்ணி மமதையுடன் வாழும் மனிதர்களின் வரலாறுகளைக் காண சமூகம் அங்கீகரித்ததில்லை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகத்தினை படுகுழியில் தள்ளிவிடும் துயர்மிகு செயற்பாட்டை செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மிடமுள்ளது.

எனது அரசியல் பிரவேசமானது பாதிக்கப்பட்டு நலிவுற்று காணப்படும் மக்களின் ஈடேற்றமும் விமோசனத்திற்காகவுமே ஆகும். இக்குறுகிய காலத்துக்குள் எனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி முடியுமான பணிகளை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். எம். அபூபக்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மோசமான இடிமின்னல் அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

climate.jpgநாட்டில் கடுமையான வரட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ள இதே வேளை இடி, மின்னல் அபாயம் மிக மோசமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாது காப்புபெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரட்சியின் பின்னர் நாடெங்கிலும் மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரியான சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இதே நேரம் தென் கிழக்கு கடலில் உருவான தாழமுக்கம் இன்று வட கிழக்கு கடல் பரப்பின் ஊடாக இந்நாட்டின் கடற்பரப்பை விட்டு தூரமாகிச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தாழ முக்கம் காரணமாகவே யாழ்ப்பாணம், திருமலை, மட்டக்களப்பு உட்பட நாடெங்கிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாழமுக்க நிலை இன்று இந்நாட்டை விட்டு அகன்று விடும் என்றாலும் மாலை வேளையிலும், இரவிலும் அடுத்து சில தினங்களுக்கு இடி மின்னலுடன் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்த நாட்களில் இடி, மின்னல் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவென மக்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது மிக அவசியம்.

இதேநேரம் இந்நாட்டின் கடற்பரப்பிலும் இடியுடன் கூடிய மழை அடிக்கடி பெய்ய முடியும். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் வடகிழக்காகவும், ஏனைய கடற்பரப்பில் வட மேற்காகவும் காற்று வீசும், இப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்கும். ஆனால் வட பகுதி கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும். கடலில் சாதாரண கொந்தளிப்பு நிலை காணப்படும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர த்தில் திருமலையில் 65.5 மி.மீ. மட்டக்களப்பில் 42.7 மி.மீ, மிஹிந்தலையில் 63.5 மி.மீ, களுத்துறையில் 58.5 மி.மீ, நீரேந்து பிரதேசங்களான போவத்தனவில்35.3 மி.மீ, லக்ஷபானவில் 13.8 மி.மீ, சமனலவெவவில் 12.6 ம.மி.மீ. உட் பட நாடு பூராவும் மழை பெய்துள்ளது என்றார்.

கப்பம், ஆட்கடத்தல், மிரட்டல் தொடர்பாக பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

sri-lanka-police.jpgவவுனி யாவில் மீண்டும் ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், மிரட்டல் தொடர்பான சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதால் அவை தொடர்பான புகார்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என வவுனியா பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் சனிக்கிழமை அறிவித்தனர். வவுனியா பகுதி எங்கும் பொலிஸார் வாகனத்தின் மூலம் ஒலிபெருக்கியில் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் வங்கி அதிகாரியும் ஊழியரும் கடத்தப்பட்டு கப்பம் கேட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால், வங்கிகளின் வேலைகளும் தடைப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

வவுனியாவில் சட்டம், ஒழுங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். யாருக்கும் கப்பம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கப்பம் தருமாறு எவரும் மிரட்டினால் அது குறித்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவாருங்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. வவுனியாவில் மக்கள் பாதுகாப்புக் குழுக்களை நியமிக்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வவுனியாவில் கப்பம் கடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

‘மியா கணக்கில் வீக்’ முத்தின் ஆய்வு! : சேனன்

MIAMuttukrishna Sarvananthanமுத்துகிருஸ்ணா சர்வானந்தன் என்ற ‘பொருளாதார நிபுணர்’ சென்ற வருடம் லண்டன் வந்திருந்த பொழுது வித்துவான் அவதாரத்தில் உலக – இலங்கை பொருளாதாரம் பற்றி எமக்கெல்லாம் மிருதங்கம் வாசித்துபோன கதை பலருக்கும் தெரியும். உலக பொருளாதாரம் சரியாது. மேற்குலக அதிகாரம் எல்லாத்தையும் சிம்பிளா வெண்டு போடும். இதனால் இலங்கைக்கு பாதிப்புவராது என்று அவர் பினாத்திக் கொண்டிருந்த பொழுது தடுத்தாண்ட கேள்விகளை நோக்கி நெற்றிக்கண் திறக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டதும் எமக்கு தெரியும்.

இந்த முட்டாள்தனத்தை சுட்டிக்காட்ட வெளிக்கிட்ட த.ஜெயபாலனுக்கு படிப்பறிவு கிடையாது என்ற கண்டு பிடிப்பை செய்து இவர்கள் யாழ்ப்பான -வெள்ளாள மத்தியதர வர்க்க மேலாண்மையை நிலைநாட்ட முயன்றதும் எமக்குத் தெரியும். ‘பொருளாதார சரிவு தொடர்ந்தும் நீடிக்காது’ என்ற அடிப்படையிலேயே வித்துவான் விளாசினார் என்று எமக்கு விளக்கங்கள் தரப்பட்டது. இதுகளை பொருளாதார விரிவுரையாளர் புதியவன் ‘மென்மையாக’ கண்டித்திருந்ததும் அறிவோம். அவரது பழைய கதைகள் கிடக்க. மீண்டும்  வித்துவான் மிருதங்கம் எடுத்துள்ள கதைக்கு வருவோம்.

தெற்கில் சனம் செக்பொயின்றுகளுக்குள் சிக்கி விழுந்தெழம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஜனநாயக சூரியன் மக்களின் முள்ளந்தண்டுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வடக்கு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இதுகிடக்க, எங்கள் அன்பு வித்துவான் – பொருளாதார புலிக்கு பொங்கிக்கொண்டு வருகிறது பாருங்கள் கோபம்! கோபம்! இலங்கை ராணுவம், கருணா, பிள்ளையான், சங்கரி முதலானவர்கள் மேல் என்று அவசரப்பட்டு கதறிப்போய்  விடாதீர்கள். “பிள்ளையின்” கோபம் மியா என்ற இசை கலைஞர் மேல். மியா கணக்கு வழக்குகளில் பிழைவிட்டு கதைத்து விட்டதாகக் கோபம்.

முதல் அடி என்னவாக இருக்கும் என்பது நீங்கள் ஊகிக்கக்கூடியது. ஜெனொசைட் என்ற சொல்லை பாவிக்கக் கூடிய அளவுக்கு மியாவுக்கு படிப்பறிவு இல்லை என்பதே அந்த அடி. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? என்று சந்தேகித்து கிழே படிக்க அடுத்த அடி விழுகிறது எங்கே எப்படி 3,00,000 தமிழர்கள் யுத்த பிரதேசத்துக்குள் மாட்டியுள்ளார்கள் என்று மியா கவனமாக எண்ணினார்? என்ற கெட்டிக்காரத்தனமான கேள்வி. 30,000 அல்ல 3,00,000 என்ற எண்ணிக்கையை எப்படி செய்தார் என்ற தொனியுடன் கேட்கப்படுகிறது கேள்வி. பின்பு தன் படிப்பறிவாள் வந்த கெட்டிக்காரத்தனத்தை கொட்டி பின்வருமாறு அவர் விளக்குகிறார்.

“2003 சுனாமிக்கு பின்பம் 2005 ஐ.நா.வுக்காக புலிகளின் கட்டுப்பாடு பகுதிகளில் வேலை செய்தவன் என்ற முறையிலும் யுத்தப் பிரதேசத்தில் 1,00,000 இருந்து 1,50,000 வரையிலான மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதே என்னால் அடித்துக்கூற முடியும்.” அற்புதம் என்று கூரை அதிர நாம் சிலாகித்தோம். உலகம் முழுக்க ‘அகதி’யாக திரிவதால் மீயாதான் கற்பனை செய்த தாயகத்தில் நடப்பது பற்றி தெரியாதவர் என்றொரு அடிவேறு.

ஐயோ பாவம் மியா, அந்த பாடகி செய்த தவறென்ன? சனத்தொகை மற்றும் ராணுவத்தின் எண்ணிக்கை முதலான எண்களை அதிகப்படுத்தி கூறியதுதான் அவர்செய்த தவறு.

அந்த தவறை திருத்த நமது பொருளாதார புலிக்கு உரிமை உண்டு. உண்டே உண்டு ஐயா! 1,00,000ல் இருந்து 1,50,000 என்ற கணிப்பீட்டை கரெக்டா எப்படி மேதை கணிப்பிட்டார் என்ற விபரம் எமது மூளைக்கு எட்டவில்லை. தவிர இந்த நம்பர் விளையாட்டு உங்களுக்குத்தான் தேவை. நமக்கல்ல. உணர்ச்சிவசப்படும் கலைஞர்களுக்கு தேவையில்லை. பாதிக்கப்படும் மக்கள் மூன்று லட்சமாக இருந்தால் என்ன முப்பதினாயிரமாக இருந்தால் என்ன? உரத்து குரல் கொடுக்க ஒருத்தி முன்வருவது பிழையா? 70,000 மக்கள்தான் அகப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு கத்துகிறதே அது பற்றி ஏன் கோபம் வரவில்லை? மீயா செவ்வி வழங்கிய அதே காலப்பகுதியில் வெளியான இங்கிலாந்து கார்டியன் பத்திரிக்கையில் 4 1/2 லட்சம் மக்கள் அகப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை? இதுகள் பற்றி உங்கள் மண்ணாங்கட்டி கோபம் ஏன் மௌனம் கொண்டிருக்கிறது?

‘மியா கணக்கில் வீக்’ என்று கண்டுபிடித்து காட்ட இக்கட்டுரை எழுதியாதாக நம்ப முடியவில்லை? உங்கள் பிரச்சினை மியா புலி ஆதரவு தொனியில் பேசியதுதான். அதை நேரடியாக சொல்லி வெளிப்படையாக பேசாமல் குத்தி முறிகிறீர்கள்.

பின்பு ‘புலி புள்ள புடிக்குது’ என்ற பழைய பல்லவியை பாடி நெத்தியில் அடிக்கிறமாதிரி ஒரு கேள்வி கேட்கிறார் அவர். தமிழ் பிள்ளைகளை புலிகள் காவு கொள்வது ஜெனோசைட் இல்லையா என்ற அக்கேள்வி சபாஸ் சரியான கேள்வி என்று நிர்மலா குதிக்கலாம். ஆனால் எமது கழுத்துக்கு மேல் இருக்கும் மூளை சொந்தமாக சிந்திப்பதால் கோபம் கிளறுகிறது. இலங்கை ராணுவம் செய்வது ஜெனோசைட் கிடையாது என்று வாதிடும் நீர் புலி செய்வது ஜெனோசைட் இல்லையா என்று கிண்டல் அடிப்பது உமது உயர்வர்க்க மொக்கத்தனத்தை படம் போட்டு காட்டுகிறது. இன்றிருக்கும் சூழலில் இதைவிட கோரமான அயோக்கியத்தனத்தை கோத்தபாய ராஜபக்சேவிடம் தான் நாங்கள் பார்க்க முடியும். அடுத்த “சிங்கள ரத்தினா”  உங்களுக்கு தான் முத்து!

இந்த போக்கிரி பார்வையுடன் அவர் சொல்கிறார் இரண்டு பக்கமும் மக்களை கொன்று கொண்டிருப்பது தமக்கு ‘concern’ ஆக இருக்கிறதாம். ஐயா உங்களைப் போல் மீயாவுக்கு ‘concern’ வரவில்லை. ஒரு கலைஞராக அவருக்கு கொதிப்பு வந்திருக்கிறது. நான் ஒரு அகதி என்று நெஞ்சை நிமிர்த்தி கூறும் ஒரு கலைஞரை ஒரு அகதியான நான் பெருமையுடன் பார்க்கிறேன்.

புலிகள் முஸ்லீம்களை கொல்வது தெரியாதா? சிங்கள கிராமங்களில் வேட்டையாடியது தெரியாதா? மூஸ்லீம்கள் வேட்டையாடப்பட்டது தெரியாதா? என்று வரிசை படுத்திய உமது கேள்விகள் பலமானவை. கேட்கப்பட வேண்டிய கேள்விகளே. ஆனால் இந்த கேள்விகளை நாம் கேட்பதற்கும் நீர் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீர் அதிகாரம் சார்ந்து கேட்கிறீர் நாம் மக்கள் சார்ந்து கேட்கிறோம்.

மக்கள் பிரதிநிதித்துவம் செய்ய உமக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று மீயாவை கேட்டு பீற்றும் உமக்கு மக்களை பற்றிப் பேச யார் அதிகாரம் வழங்கினார்கள்? லாபத்துக்கு மக்களை விற்கும் நீர் உயர் மட்டங்களில் குசுகுசுப்பதோடு நிறுத்திக்கொள்ளும். 84ல் அகதியாக போனவர் 25 வருடமாக இலங்கை வராதவர் மற்றும் அவர் இலங்கை தமிழரா என்பதே சந்தேகம் போன்ற அம்புகளை மியா நோக்கி எறியும் நீர் ஒரு கணம் சிந்தித்து பாரும்.

உமக்கு வெளி நாடுகளில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் எப்போது அகதியாகின? லண்டனில் உம்மை அழைத்துக் கூட்டம் போட்ட கோஸ்டிகள் எல்லாம் இப்ப தான் வன்னியில் இருந்து வந்தவை என்று நினைப்பா? குண்டு சத்தமென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா? யுத்தத்தில் வாழ்தல் தெரியுமா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் தமிழரை நோக்கி ஒரு அகதியான மியா நீட்டும் கரங்களை தட்டிவிட்டு உனக்கு தகுதி இல்லை என்று ராஜபக்ச கூரையில் நின்று கூவும் நீர் கொழும்பில் நிம்மதியாக வாழலாம். உம்மை அதிகாரம் காப்பாற்றும் உமது பணி அவர்களுக்கு தேவை. “நான் உயிர்தப்பியிருப்பது அதிர்ஷ்டவசமானது” போன்ற ஜோக்குகளை அடிக்காதயும்.

போக்குவரத்து விதிகள் ஒரு சொட்டுமற்ற சென்னை தெருக்களை அடிக்கடி கடக்கும் நான் உயிர் பிழைத்துக் கொண்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம் தான். அப்படியானதே உமதும்!

பாவம் மியா, நீர் ஒரு பொருளாதார புலி அல்லவா. மீயாவை விட்டுவிட்டு உம்மிட எடியுகேசனுக்கு ஏத்த மாதிரி ஒரு ஆள பிடிச்சி மோதும்.

இந்திய மருத்துவர்கள் குழுவுடன் மருந்துப் பொருட்களும் இலங்கை வந்துள்ளது

india-dr.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர்களின் குழு ஒன்று மருந்துப் பொருட்களுடன் இன்று இலங்கைக்கு வந்துள்ளது  இந்திய மருத்துவர்களும் மருந்துகளும் மருத்துவ பணியாளர்களையும் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் 8 வைத்தியர்களும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் புல்மோட்டையில் 50 படுக்கை வைத்தியசாலை ஒன்றை அமைக்கவுள்ளதாக இன்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது. – விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகள் வழங்க.  இந்தியா ஏற்கனவே 2 முறை மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது.

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் ஐஎல் 76 விமானத்தில் 25 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்ஆகியவற்றுடன் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவும், இலங்கைக்கு நேற்று சென்றது.

இதேபோல், மருந்து மற்றும் மருத்துவக் குழுவுடன் மற்றொரு விமானம் இன்று, கொழும்பு செல்கிறது. இது மட்டுமின்றி, மேலும் 2 விமானங்களில் மருந்துகள் அனுப்பப்படும்  என்றும் விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி தெரிவித்தார். இந்த மருந்து பொருட்கள் ஐ.நா. குழு மற்றும் செஞ்சிலுவைசங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

ஏ 9 வீதியூடாக அனுப்பப்பட்ட உணவு லொறிகள் நாளை யாழ் குடாநாட்டை வந்தடையும்- யாழ் அரச அதிபர்

lorries.jpgயாழ்குடா நாட்டிற்கு ஏ 9 வீதியூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய லொறிகள் நாளைய தினம் யாழ் குடாநாட்டிற்கு வந்து சேருமென யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை இவ் லொறிகள் கொழும்பிலிருந்து சென்றுள்ளதாகவும், அவை நாளைய தினம் யாழ் குடாநாட்டை வந்தடையுமெனவும் அவர் தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் ஏ9 வீதியூடாக இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இன்று கருணா அம்மான் அமைச்சரானார்.

karuna_minister_.jpgபாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) இன்று தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்தற்ற) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி : ஜெ. அறிவிப்பு

jayalalitha.jpgஇலங்கை யில் ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அங்கு வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியும், அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் ஜெயலலிதா இதனை வெளியிட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். மாலை 5 மணியளவில், உண்ணாவிரத முடிவில் பேசிய ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதிக்கு அதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் மேலும் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று கூறினார். தவிர மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியினர் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள நிதி சென்னை வந்து சேர்ந்ததும், மொத்தமாகச் சேர்த்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

மேடையில் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்ற பள்ளிக்குழந்தைகள் இருவர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவிற்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 

இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம்: ஜெ

jayalalitha.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களையும், தளவாடங் களையும் இந்திய அரசு அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதனை மத்திய அரசு மறுக்கவில்லை. பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை திமுக எதிர்க்கவும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும்போது கருணாநிதி வாய்மூடி மவுனியாக மாறி விடுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களது சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும். அதே வேளையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறக்க காரணமான திசை மாறிப் போன ஆயுதமேந்திய போராட்டத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இவை இரண்டையும் ஒன்று சேர்த்து கருணாநிதி பிரச்சனையை குழப்ப முயற்சி செய்கிறார். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சண்டையில் அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்து உணவு, உடை, மருந்து எதுவுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உணவு, உடை மற்றும் மருந்துகளை ஏன் அனுப்பவில்லை.

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசும் மாபெரும் தோல்வி அடைந்து விட்டன. தமிழ் மக்கள் மேல் மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் உண்மையான அக்கறையே இல்லை. நாம் இங்கு உண்ணாவிரதம் இருப்பதால் பசியால் வாடும் இலங்கை தமிழர்களின் வயிறு நிரம்ப போவதில்லை. இது ஒரு அடையாளமே. இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்திருக்கிறார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்த போராட்டம் என்றார்.