March

March

புதுமாத்தளனில் புயல் காற்றால் பெரும் சேதம் : இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு

flod-wanni.jpgமுல்லைத் தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 9, 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவர்கள் போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன், தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தமது அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார். 

யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் : ஷிவ்சங்கர் மேனன்

shiv-sankar-menon.jpgஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இன முறுகலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் யதார்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

உக்கிர யுத்தம் நடைபெற்று வரும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. சிறுபான்மை தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது முதன்மையானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்கம் சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இலங்கை விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்ததாக ஷிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்ஷுக்கு காலணி வீசிய செய்தியாளருக்கு மூன்று வருட சிறை

120309.jpgஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது. .

வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள். அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்கிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்

eu.jpg இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது..

அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் பயமுறுத்திவருவதாக கண்டனம் செய்துள்ளது.

நிவாரண நிறுவனங்களும், ஊடகத்தினரும் போர் பகுதிக்கும், முகாம்களுக்கும் தங்குதடையின்றி சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டிருக்கிறது

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினரின் கட்டுப்பாட்டில்

puthu-hos.jpgபுலிகளின் பிடியிலிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நேற்றுக் காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிய பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேணல் ரவிப்பிரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அரசாங்க வைத்தியசாலையை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டமை வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் இருந்த உபகரணங்களையும் புலிகள் வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்திலும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 37 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடிவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை இந்த வைத்தியசாலையிலிருந்த கட்டில்களிலிருந்து அகற்றி காயமடைந்த புலிகளை அங்கு வைத்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலையை புலிகள் பயன்படுத்தி வந்தனர். புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த படியால் அந்த வைத்தியசாலையை இராணுவத்தினர் கைப்பற்றாமல் இருப்பதற்காக படையினரை இலக்கு வைத்து இங்கிருந்து கடுமையான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இராணுவத்தினர் தாக்கியதாக புலிகளும், அவர்களுடன் தொடர்புடைய சில அமைப்புகள் சர்வதேச கவனத்தை திசை திரும்பும் வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களாக தாக்குதல் நடத்திய படையினர் வைத்தியசாலைக்கு எதுவித பாரிய சேதம் ஏற்படாத வண்ணமே கைப்பற்றியுள்ளனர் என்று இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வடக்கு பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றர் பரப்பை நோக்கி முன்னேறிய 58வது படைப்பிரிவினர் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு மதில்களையும் தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக படையினர் நடத்திவந்த கடுமையான தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

puthu-hos.jpg

ஐ.தே.க, த.தே.கூ, ஜேவியி சர்வகட்சிக்குழுவில் இணையத்தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும் – திஸ்ஸவிதாரண

this_vitharana_.jpgசர்வ கட்சிக்குழுவின் அழைப்பையேற்று ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி, த.தே.கூ ஆகியன தமது தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கவேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் ஏற்கனவே குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளிக்கும் என சர்வ கட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிக்குழுவின் தற்போதய செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிக்குழு தீர்வுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு இதுவரையில் 107 தடைவைகள் கூடி ஆராய்ந்துள்ளன. இதில் 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது தீர்வுத்திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு வெளியிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றோம். அவை தம்மை இதில் இணைத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உள்விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுளைக்கக்கூடாது – அனுரகுமார திசாநாயக்க

anurakumara_jvp.jpgவடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் எமது நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுளைக்கக்கூடாது என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இந்திய மருத்துவர்கள் குழு வந்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையில் இந்தியா வேண்டுமானால் மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருக்கலாம் அதனைவிடுத்து இந்திய மருத்துவர்கள் குழு புல்மோட்டையில் தளம் அமைத்துச் செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

நிவாரணக் கிராமங்களில் மாணவர் குறை நிறைகளை கண்டறிய கல்வி அபிவிருத்திக் குழு

school-sri-lanka.jpgவவுனியா மாவட்ட பாடசாலைகள் உட்பட நிவாரணக் கிராமங்கள் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி பயிலும் சுமார் 30,000 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறைவின்றி வழங்கப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கும் குறைநிறைகளை நிவர்த்திக்கும் நோக்குடனும் கல்வி அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமங்கள் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் சென்று கல்வி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே மேற்படி குழுவின் பிரதான நோக்கம் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களுக்குரிய பெப்ரவரி மாத கொடுப்பனவுகளையும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் வழங்கியுள்ளது.

நிவாரணக் கிராமத்தில் 1147 மாணவர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 7964 மாணவர்களும், வவுனியா மாவட்ட மாணவர்கள் 20,000 பேரும் கல்வி பயில்கின்றனர்.

எல்லாவற்றையும் இழந்த நிலையில் வந்துள்ள மக்கள் கல்விச் செல்வத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் 379 இடம்பெயர்ந்துவந்துள்ள ஆசிரியர்களின் உதவியுடன் கற்பித்தல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக பிரதம லிகிதர் எஸ். எம். ஜவாத் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக உபயோகிக்கப்பட்டு வருவதால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 20,000 மாணவர் கள் கல்வி பயிலும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவிலுள்ள பொதுக் கட்டடங்கள் பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், காலை முதல் மாலை வரை மூன்று பிரிவுகளாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆரம்ப பிரிவு வகுப்புகளும், காலை 11.30 முதல் பிற்பகல் 2.00 மணிவரை இடைப் பிரிவு வகுப்புகளும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 4.00 மணி வரை உயர்தர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய மருந்துவ குழுவின் பணிகள் இன்று ஆரம்பம்

indian_dr.jpgஇலங்கை யின் வடக்கே வன்னியிலிருந்து திருகோணமலைக்கு இடம்பெயர்ந்து வரும் நோயாளர்களுக்கு புல்மோட்டையில் சிகிச்சை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று புல்மோட்டைக்கு வருகைதந்துள்ளது.

இம்மருத்துவ நிபுணத்துவ குழுவினர் இன்று தமது மருத்துவ சிகிச்சை பணியினை ஆரம்பிக்கின்றனர்.

இந்தியா இல்லாமலேயே ஈரானிலிருந்து குழாய் வழி எரிவாயு – பாகிஸ்தான்

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியாவை விட்டுவிட்டு மேற் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக முன்னர் முடிவு செய்யப்பட்டது.

7500 கோடி டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய்ப் பாதை திட்டம் (ஐ.பி.ஐ) என பெயரிடப்பட்டது. மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் ஆஸிப் அலி ஜர்தாரி, முதல் முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் புறப்படுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கு இந்தியா ஒத்து ழைக்கவில்லை எனில் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார், சுமார் 2600 கி.மீ தொலைவு குழாய்வழி எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 1994 ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டது.

ஆனால் மூன்று நாடுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், எரி வாயு விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாதது. எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண நிர்ணயம் (டிரான்ஸிட் ஃபீஸ்) உள்ளிட்டவை காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவது காலதாமதமானது.

தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அத்தகைய உறுதியையும் ஈரான் அளிக்கவில்லை இதனாலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தனது பயணத்தின் போது இத்திட்டத்தை நிறைவேற் றுவது குறித்து ஈரான் அதிகாரிகளுடன் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்துடன் பேசுவதோடு இரு நாடுகளிடையேயான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் போவ தாகக் கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதாக குறிப்பிட்ட அவர் ஈரானில் நடைபெறும் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ப போவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் பலதரப்பு விஷயங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் விவாதிக்கப் போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார். இம் மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச் சூழல் மாநாடும் நடைபெறும்.

இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை அடுத்து நடைபெறும் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படும். இம் மாநாட்டில் அஜர்பெய்ஜான், தஜகிஸ்தான், துருக்கி அதிபர்கள் மட்டுமன்றி இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.