Multiple Page/Post

மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 17 இலட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி

ballot-box.jpgஎதிர் வரும் மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்காக 17 இலட்சத்து 46 ஆயிரத்து 449 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். இதில் கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் 10 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 456 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளர்களின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் போனஸாக 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 22 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி 2 உறுப்பினர்களுமாக 58 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? – ஐ.தே.க. தலைவர் ரணில் கேள்வி

ranil-2912.jpgமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத மகிந்த அரசு யுத்தத்தின் பின்னாள் ஒளிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார். கம்பளை நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு வினவிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

வடக்கு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எமது படையினர் பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்றதாக கூறும் அரசு ஏன் மத்திய மாகாண சபையின் ஆட்சியை மக்களிடம் கோருகின்றது. மத்திய மாகாண சபைக்கும் யுத்தத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றாலும் இல்லாவிட்டாலும் யுத்தம் தொடரும். எனவே, அரசு யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு அரசியல் நடத்த முற்படக்கூடாது.

மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க சரத் ஏக்கநாயக்கவுடன் அல்ல, ஜனாதிபதியுடன் தான் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி டி.பி. விஜேதுங்கவை மலையக பிரஜை என்ற போதிலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. அதேபோல் ஹங்குராங்கெத்தவை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக்குவோம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணமில்லை என்கின்றனர். ஆனால், மிஹின் எயார் விமான சேவைக்கு 600 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனினும், ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு மாதத்தினுள் அமுல் செய்யக்கூடிய வகையில் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால், இலங்கை அரசிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை.

மத்திய மாகாண சபை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட எந்தவொரு பொதுப்பணியையும் மக்களுக்கு செய்யவில்லை. சர்வதேச சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளது. ஆனால், அரசு பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி 8 சதவீத வரி வருமானத்தைப் பெற முயற்சிக்கின்றது. பால்மா உற்பத்தியை நீண்டகாலத்தில் மட்டுமே அதிகரிக்க முடியும். எமது பால் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமேயாகும். இதனை உடனடியாக 40 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசு அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு இலட்சம் ரூபாவால் வீட்டு வாடகை என்ற பேரில் வழங்குகின்றது. இது மக்களின் பணமாகும். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாப் பத்திரத்தைக் கூட சரியாக தயாரிக்கத் தெரியாத அரசு எப்படி கல்வித்துறையை முன்னேற்ற முடியும். மத்திய மாகாணத்தின் அபிவிருத்தியை ஐக்கிய தேசிய கட்சியினூடாக மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.

இதுவரை 700 புலிகள் சரண்; எஞ்சியோரும் சரணடைந்து விடுவர் – அமைச்சர் கெஹெலிய

kkhaliya.jpgபடையி னரை எதிர்கொள்ள முடியாமல் புலி உறுப்பினர்கள் சரணடைந்து விடுவார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரை, 700 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகக் கூறிய அவர், சரணடைவதற்கான பொறி முறையொன்றை அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியாது என்றும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எந்த நேரமும் புலிகள் சரணடையலாம் என்றும் தெரிவித்தார். ஆயுதங்களின்றி சரணடைவோருக்கு எந்நேரமும் மன்னிப்பு உண்டு என்று கூறிய அமைச்சர், புலிகளின் தலைவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார். படையினரால் மீட்பதற்கு எஞ்சியுள்ள மொத்தப் பிரதேசத்தில் நாற்பது வீதம் மோதல் தவிர்ப்புப் பிரதேசம் என்று தெரிவித்த அவர், அறுபது வீதமான பகுதியிலேயே எஞ்சிய பொதுமக்களும் புலிகளால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை ஓரிருநாளில் படையினரால் மீட்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர், இயன்ற அளவு சிவிலியன்கள் பாதிப்படைவதை தவிர்த்தவாறு படையினர் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேறாத காரணத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க கோரிக்கை

wanni.jpgமீளக் குடியேற மறுப்பு தெரிவித்துள்ள 332 குடும்பங்களையும் , அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தனியாக சமர்ப்பிக்குமாறு மீளகுடியேற்ற அமைச்சின் திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ,செங்கலடி மற்றும் கிரான் பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த இக் குடும்பங்கள் மீண்டும் அப்பகுதிகளில் குடியேற மறுப்பு தெரிவித்ததை அடுத்தே அதற்கான காரணத்தை செங்கலடி கிரான் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதும் மிகுதியான 332 குடும்பங்கள் மீள்குடியேற மறுத்துவருகின்றனர். இவர்கள் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தும் இவர்கள் மறுக்கின்ற காரணத்தால் இவ்விரு பிரதேசங்களிலும் பூரணமாக மீள்குடியேற்ற முடியாமல் உள்ளதாக திட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

ருவென்ரி 20′ போட்டி மஹேல, சங்ககார இல்லை

srilanka-india.jpgஇந்தியா வுக்கு எதிரான “ருவென்ரி20′ போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து கப்டன் மஹேல ஜெயவர்தன, சங்ககாரா நீக்கப்பட்டுள்ளனர். புதிய கப்டனாக திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரு “ருவென்ரி20′ போட்டி 10 ஆம் திகதி நடக்கவிருக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கப்டன் மஹேல ஜெயவர்தன, துணைக்கப்டன் சங்ககாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. புதிய கப்டனாக டில்ஷானும், கப்புகெதர துணைக் கப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முழங்கால் காயத்தால் கடந்த ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வந்த லசித்த மலிங்கா மீண்டும் “ருவென்ரி20′ அணியில் இடம்பெற்றுள்ளார்.

மாகாண சபைகளையும் குடும்ப மயப்படுத்த அரசு திட்டம்: மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பசில் நியமிக்கப்படுவார் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

wijitha_herath_jvp.jpgமாகாண சபைகளையும் குடும்பமயப்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டு செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி. அதற்காகவே மேல்மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. வியாழக்கிழமை கோட்டேயிலுள்ள சோலிஸ் மண்டபத்தில் அக்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் கடந்த இரு மாகாண சபைகளில் தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்து தனதாக்கிக் கொண்டது. வரவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளிலும் அமைச்சர்கள் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல்மாகாண சபையை திடீரென அரசு கலைத்துள்ளது. இதன் முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷவை நியமிக்கவுள்ளது. இவ்வாறு மாகாண சபைகளை முழுவதுமாக கலைக்காது பகுதிபகுதியாகக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு காரணம் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நியமிப்பதற்கேயாகும்.

இவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு இராணுவ வீரர்களின் வெற்றியை பயன்படுத்துவதுடன் அரச சொத்துகள் உட்பட அரச அதிகாரிகளையும் பயன்படுத்துகின்றது. இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்கள் கட்டிடங்களும் பாவிக்கப்படுகின்றது. இது சட்டத்திற்கு முரணானது.

ஒரு பக்கம் பகுதிபகுதியாகத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் நாசமாவதுடன் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாலும் மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இவ்வாறு மாகாண சபைகளில் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கே தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று பட வேண்டும். இந்நிலையில் மக்களுடன் மக்களாக அவர்களுக் பணிசெய்ய காத்திருக்கும் ஜே.வி.பி.க்கு உங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்கின்றேன்.

மிருசுவிலில் தங்கவைக்கப்பட்ட அகதிகளை யாழ். ஆயர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவிப்பு

thomas-sawndaranayakam.jpgஉணவு நிவாரணப் பொருட்களும் விநியோகம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இருந்து யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மிருசுவில் றோ.க.பாடசாலை , மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மடம், புனித நீக்கிலார் ஆலய வளாகம் என்பவற்றில் தங்கியுள்ள 333குடும்பங்களைச் சேர்ந்த 1313 பேரையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அதி. வண தோமஸ் சவுந்தர்நாயகம் மற்றும் குருமார் சந்தித்து ஆறுதல் கூறினர். யாழ். ஆயர் இல்ல நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உடுபுடைவைகள் , சமையல் பாத்திரங்கள் , உணவுப் பண்டங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதேபோல யாழ். ஆயர் இல்லத்தை சூழவுள்ள பங்குகளைச் சேர்ந்த மக்கள் சமைத்து வழங்கிய உணவுப்பொதிகளும் எடுத்துவரப்பட்டு இந்த அகதிகளிடம் கையளிக்கப்பட்டன. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தாங்கள் அனுபவித்து வந்த துன்பமான நிகழ்வுகளை கண்ணீர் மல்க ஆயரிடம் கூறினார்கள்.

இவர்களுக்கு தம்மால் இயன்றவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயர் கூறினார். குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் தருவதாகவும் ஆயர் கூறினார். ஆயர் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன் சிறு வழிபாடும் இடம்பெற்றது. மிருசுவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு 15 மைல் தூரத்தில் இருந்து தாம் கால் நடையாகவே இங்கு வந்ததாக தெரிவித்தனர

அமைச்சரவை நியமனத்தில் தவறு: ஒப்புக்கொண்டார் பராக் ஒபாமா

obama-2001.jpgஅமைச் சர்கள் நியமனத்தில் தவறு நடந்துவிட்டது உண்மையே. இனி இதுபோல் நடக்காது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு வாரமாகிறது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேசஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நான்சி சில்லிபெர், தங்களின் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர். இந்த விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “டாம் டேசஸ் மற்றும் நான்சி சில்லிபெர் நியமனத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு விட்டேன். செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். சாதாரண மக்களுக்கு ஒரு விதி, பிரபலமானவர்களுக்கு ஒரு விதி என்ற இரு விதமான விதிமுறைகளை எனது நிர்வாகம் கடைபிடிப்பது போன்ற தவறான செய்தி மக்களை சென்றடைய நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

தேர்தல் வன்முறைகள் குறித்து பொய் முறைப்பாடு தெரிவித்தால் கடும் நடவடிக்கை

vote.jpgதேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொய்யான முறைப்பாடுகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் செயலகம் பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் சில பொய்யானவை என தெரிய வந்துள்ளதையடுத்து தேர்தல் செயலகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதேசமயம், சில கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் விசேட சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலி முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் தெரிவித்து வருவதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நவரட்ண தெரிவித்தார். சிலர் அற்பமான விடயங்களை பெரிதுபடுத்த முயல்கின்றனர். சில வேட்பாளர்கள் தமக்கு எதிரான கட்சிகள் தொடர்பாக பிரச்சினையான சூழலை தோற்றுவிக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சில பொலிஸ் நிலையங்களில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்த சமயம், இந்த முறைப்பாடுகள் பொய்யானவை என்பது தெரியவந்துள்ளதை அடுத்து அது பற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பொய்யானவை என்பது இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் 5,000 பொதுமக்கள் வருகை

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் அதிகளவிலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்றைய தினம் (06) மட்டும் சுமார் 5,500 பேர் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பாக பிரிகேடியா சவேந்திர சில்வா தகவல் தருகையில் இன்றும் (07) அதிக எண்ணிக்கையான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.