Multiple Page/Post

ஏ-9 பாதையை திறப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி- அமைச்சர் பீ.பீ.ஏக்கநாயக்க

a9-road.jpgயாழ். கண்டி ஏ9 வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். பாதையைத் திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி இருப்பதாகவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். அமைச்சர் பீ. பீ. ஏக்கநாயக்க மேலும் தெரிவித்ததாவது, ஏ ஒன்பது நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு விட்டது. தற்போது இராணுவ வாகனங்களும் உணவு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகளும் இப்பாதை வழியாக பயணிக்கின்றன.

யாழ். குடாநாட்டு மக்கள், இப்பாதை மூடப்பட்டிருப்பதால் கடந்த பல வருடங்களாக பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக தென்பகுதிக்கு வருவோர் கப்பலையும் விமானத்தையும் நம்பி பல நாட்கள் காத்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உள்ளது.  இம் மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பாதையை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதை புனரமைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு கிடைத்தவுடன் பாதை திறக்கப்படும் எனத் தெரிவித்தார். 

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும் – வீரகேசரி வாரவெளியீடு

idps200_1.jpgஇலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் “ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, “இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.

“”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்” என்று நோர்வே கூறியுள்ளது. “”இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது.

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்

varatharaja.gifஇலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.

யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் சரி இல்லாததால் தோற்று விட்டோம்: டோனி

ipl-2009-01.jpgஐ.பி.எல். 2 வது அரை இறுதி போட்டி சனிக்கிழமை ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
 
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக் கெட்டு இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றது.
 
தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:   நாங்கள் 160 ரன்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் 15 ல் இருந்து 20 ரன்கள் வரை குறைந்து விட்டது. இந்த கூடுதல் ரன்களை எடுத்து இருந்தால் பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம்.
 
ஆடுகளமும் சரியாக இல்லை. மந்தமான ஆடுகளமாக இருந்தால் எங்கள் பேட்டிங்கை பாதித்தது. அதே போல எங்கள் பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சை சரியாக செய்யவில்லை. இவற்றால்தான் தோல்வியை சந்தித்தோம் என்றார்.

மன்மோகனுடன் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து – தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

pm-manmogan.jpg2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

எங்களது அமைதி சரணடைவதற்கு அல்ல – விடுதலைப் புலிகள்

எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுதியில் தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கையை புலிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து யாழ் குடா பகுதிக்கான புலிகள் படைப் பிரிவின் தளபதியான வெற்றிக்குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.

எங்களது இயக்கப் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள். ராணுவம் இன்று பெரும் உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதகாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று அவர் கூறியுள்ளார்.

திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

டாக்டர்கள் மூவரையும் ஐ.சி.ஆர்.சியின் அதிகாரி வியாழன் சந்தித்துப் பேசினார்

varatharaja.gifவன்னியில், போரின் மத்தியிலும் கடைசி வரை பணிபுரிந்த அரச டாக்டர்கள் மூவரையும் சந்தித்துப்பேசி அவர்களின் நிலைமையை  செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு (ஐ.சி.ஆர்.சி.)அதிகாரிகள் கேட்டறிந்தனர். அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதாக செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் சரசி விஜேரத்னா தெரிவித்தார்.

ஐ.சி.ஆர்.சி. வியாழக்கிழமை மூன்று டாக்டர்களையும் நேரில் கண்டு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியது  என்று கூறிய அவர் வேறு விவரம் எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.

கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் அவர்கள் தொடர்பாக முதற் கிடைத்த தகவல் இது. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கருத்துக்  கூறுவது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் கொள்கையல்ல என்று ஐ. சி. ஆர்.சியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். முல்லைத்தீவு, மக்கள் பாதுகாப்பு வல யத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி வெளியேறிய பின்னர் டாக்டர் தி.சத்திய மூர்த்தி, து.வரதராஜா, எஸ்.சண்முகராஜா ஆகியோர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தமை தெரிந்ததே.         

ஐ.பி.எல்: ஐதராபாத்-பெங்களூர் அணிகள் மோதல்

ipl-2009-01.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18 ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த 2 வது அரை இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கும்பிளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி இடமும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 வது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதனின் பூதவுடல் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில்..

kpatmanathan.jpg காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் தற்போது காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு மதுரையில் காலமான அன்னாரின் பூதவுடல் நேற்று முன்தினமிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு நேற்று மாலை வரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது சொந்தக் கிராமமான காரைதீவிலுள்ள அவரது இல்லத்திற்கு நேற்று நள்ளிரவு எடுத்துவரப்பட்டது.

இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பூதவுடல், பின்னர் அங்கிருந்து தம்பிலுவில் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அன்றைய தினம் மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.