Multiple Page/Post

லண்டனில் ரயில்கள் வேலை நிறுத்தம்:பல லட்சம் மக்கள் அவதி

tube-train_pa.jpgலண்டன் பாதாள ரயில் ஊழியர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதன் காரணமாக பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தினந்தோரும் பாதாள ரயிலை பயன்படுத்தும் 35 லட்சம் பயணிகளின் தேவைக்காக கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு, வேலையிடங்கள் குறைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைக்க புதிய கட்டிடம் – 15ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

sumeda_jayasena.jpgகிளி நொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 349 இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்ல கட்டிடம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் சுமார் 50 ஆயிரம் சிறுவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த சுமார் 850 சிறுவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அவர்களின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலன்புரி முகாம்களிலுள்ள பெண்களை சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரி பிரேத அறையில்

வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும்.

இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள்.

நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் இவர்கள் இறந்த விபரங்களும் குடும்பத்தவர்களுக்கு தெரியாதுள்ளது.

இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறு நூற்றுக்கணக்கான வயோதிபர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிசுக்கள் யாவும் பிறப்பின்போது மரணித்தவையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆஸ்பத்திரி சவச்சாலையில் இடவசதியின்மை காரணமாக இந்த சடலங்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வட பகுதி மக்கள் நலன்பேண மியன்மார் 5.5 மில்லியன் ரூபா அன்பளிப்பு

donation_myanmar.jpgவட பகுதி மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமானப் பணிகளுக்கு மியன்மார் அரசு 5.5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்தப் பணத்தை மியன்மார் வெளிநாட்டமைச்சர் நயன்வின் தனது அமைச்சில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் நிவ்டன் குணரத்னவிடம் இன்று கையளித்தார்.

இந்தப் பணம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஓ.ஸீ. நிறுவன உடன்படிக்கையில் திருத்தம் – பாராளுமன்றத்தில் அமைச்சர் பௌசி

fawzi_minister.jpgஇந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.ஸீ நிறுவனத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய உடன்படிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் எரிபொருள் நிறப்பும் நிலையம் ஒன்றை திறந்தால் ஐ.ஓ.ஸீ. நிறுவனத்துக்கும் நிலையம் ஒன்றைத் திறப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனம் இதுவரை 300 எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதற்கான அனுமதியை வழங்காமல் இருக்கவே உத்தேசிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்ட வட பகுதியிலும் எரிபொருள் நிறப்பும் நிலையங்களைத் திறப்பதற்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள்-பிரதேசவாசிகள் மோதல்

university-of-kelaniya.jpgகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலின் போது வீதியில் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பிரதான வீதி வழியான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் சம்பவத்தையடுத்து, களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவ பீடம் வழமைபோல் இயங்குமென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன

வடக்கில் விவசாயத்துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவ வேண்டும் – பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

mahi-suwamy.jpgஎல்.ரீ.ரீ.ஈ. யுடனான மோதலின்போது சின்னாபின்னமாக்கப்பட்ட வட பகுதியின் விவசாயத்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென இந்திய பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனக் கருதப்படும் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வட பகுதியில் விவசாயத்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையிலான புதிய உந்து சக்தியொன்று அவசியமென பேராசிரியர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  புலிகளுடனான மோதல்கள் காரணமாக சீர்குலைக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீளவும் கட்டியெழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் மிகவும் துயரங்களுக்குள்ளான வடக்கு வாழ் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகுமெனக் கூறிய ஜனாதிபதி,  வடக்கில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அவர்களது வாழ்வாதார தொழிலான விவசாயத்துறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளை திட்ட வரைபாக சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்

அனைத்துக் கட்சிக்குழு முகாம்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் – சபையில் ஜயலத் எம்.பி.கோரிக்கை

parliament-of-sri-lanka.jpgபாராளு மன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டுமென ஐ.தே.க. எம்.பி.ஜயலத் ஜயவர்த்தனா கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசின் அழைப்பிற்கிணங்கவே இலங்கையில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் மனிதாபிமானப் பணிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதும் ஒன்று.

ஆனால், வவுனியா அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் பல உறவினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களைக் கண்டு பிடித்துக் கொடுக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சர்வதேசத்திற்கு அரசு இவ்வாறு தடை விதித்திருப்பது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் காணாமல் போனால் நாம் எப்படித் துடிப்போம் அதே நிலைதான் தமிழ் மக்களுக்கும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.

வவுனியா அகதி முகாம்களில் குடிநீர், போஷாக்கு, மருத்துவம் உணவு விடயங்கள் தொடர்பில் நாம் திருப்திப்படமுடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த முகாம்களில் தினமும் 10 முதல் 15 வரையான முதியவர்களும், சிறுவர்களும் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர். இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த முகாம்களில் 3500 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். இவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் மீண்டும் அந்த முகாம்களுக்கே அனுப்பப்படுகின்றனர். அங்குள்ள நிலைமையில் அந்தக் குழந்தையை பராமரிக்கவோ, அரவணைக்கவோ முடியாது.

அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நான் பல முறை முயன்றும் எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அகதிமுகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட அரசு அனுமதி வழங்க வேண்டும்.

சப்ரகமுவ மாகாண ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் – ஜனாதிபதியுடனான பேச்சையடுத்து ஆறுமுகன் உறுதி

arumugam-thondaman.jpgஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் எவரும் மீண்டும் பாடசாலைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் வழமைபோல் தமது இரு வருட உள்ளக பயிற்சியை தொடர முடியுமென்று இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைக்கு நியமனம் பெற்ற மலையக ஆசிரியர்களில் சிலர் இரு வருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்ய ப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சப்ரகமுவ மாகாண சபை இரு வருட விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்ததுடன் மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து தமது கடமையை பொறுப்பேற்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக வலயக் கல்விப் பணிமனையினூடாக கடிதம் மூலம் அறிவித்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து அவரது கவனத்தில் கொண்டு வந்தனர்.

உடனடியாக செயற்பட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடி உரிய பணிப்புரையை விடுத்துள்ளார். இதன்படி ஆசிரியர் கல்லூரிக்கு சென்று பதிவு செய்யப் பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் தொடர் ந்து இருவருட உள்ளக பயிற்சியை தொடர முடியும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழறுபடிகள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு இப்பகுதி தமிழ் அதிகாரிகள் தான் பிரதான காரணம். தமிழ் மக்களுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் தமது கடமையை சரிவர செய்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்றும் கூறினார்.

வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி சேவைகள் ஆரம்பம் – கொக்காவிலில் 150 மீட்டர் உயரமான கோபுரம் அமைக்கப்படும்

வடக்கின் ‘வசந்தம் தொலைக்காட்சி’ மற் றும் ‘வசந்தம் வானொலி’ சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமை ச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (10) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கில் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுயாதீன தொலைக்காட்சி சேவையின் கீழ் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலி என்பன வடக்கு பகுதிமக்களுக்காக அங்கு ஆரம்பிக்க உள்ளோம்.

இதற்காக 150 மீட்டர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரமொன்று கொக்காவில் பகுதியில் அமைக்கப்படும். இதற்காக ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.