July

July

மியான்மார் – இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு உதவியதற்காக நான்கு இராணுவ வீரர்களுக்கு தூக்குதண்டனை!

பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர்.

பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்சில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு – மூவர் பலி !

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணைக் கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கறுப்பு ஜுலை நினைவு தினத்தையொட்டி ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை !

கையெழுத்தானது உக்ரைன் – ரஷ்யா இடையேயான ‘கண்ணாடி’ ஒப்பந்தம் !

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

இந்த நிலையில், உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், ரஷ்யாவுடன் நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இரு தரப்பினரும் இஸ்தான்புல்லில் நடந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால் ஒரே மேசையில் அமரவில்லை.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு முதலில் ரஷ்யாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதைத் தொடர்ந்து உக்ரைனிய உட்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் உக்ரைனின் ஒத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் அடைய இரண்டு மாதங்கள் எடுத்தது. இது 120 நாட்களுக்கு நீடிக்கும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால் புதுப்பிக்க முடியும்.

இதற்காக, இஸ்தான்புல்லில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு மையம் நிறுவப்பட உள்ளது, ஐ.நா., துருக்கிய, ரஷ்ய மற்றும் உக்ரைனிய அதிகாரிகளால் இது இயக்கப்படும்.

பொருளாதார நெருக்கடி – பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் !

இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இத்தாலியின் பிரதமராக மரியோ ட்ராகி பதவியேற்றார்.

அதன் பின்னர் அந்நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வருகின்றன. இதனால் கடும் நெருக்கடிக்கு ட்ராகி உள்ளானார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அப்போது பதவி விலக தயார் என ட்ராகி அறிவித்தார்.

அவர் அறிவித்த ஒரு வாரம் கழித்து, தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனது ராஜினாமாவை அளித்துள்ளார். அதனை இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி என தனது ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில் மரியோ ட்ராகி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய விவகாரங்களைக் கையாள்வதற்காக தனது அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று ஜனாதிபதி மேட்டரெல்லா கூறியுள்ளார். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று சரியாக அவர் கூறவில்லை.

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன, ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் செப்டம்பர் நடுப்பகுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் பழங்குடியின பெண் – யார் இந்த திரௌபதி முர்மு ..?

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, திரெளபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யார் இவர்..?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றிய இவர், அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் திரௌபதி முர்மு பதவி வகித்து இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் திரௌபதி முர்மு. வரும் 25 ஆம் தேதி இவர் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் ஊசிக்கலாச்சாரம் – அடுத்தடுத்து உயிரிழக்கும் இளைஞர்கள் !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர்தரம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் பலரிடமும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதை அண்மைய கால செய்திகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

ஐஸ் போதைப்பொருள்ள பாவித்த இளைஞன் மரணம் என்ற தகவல்கள் இலங்கையின் வேறு எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்ட நிலை மாறி  இப்போது அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பல இளைஞர்கள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

30வருட யுத்தத்தை முடித்தோம் என மார்தட்டும் இந்த இராணுவத்தினதும் – கடற்படையினதும்  கட்டுக்காவல்களையெல்லாம் மீறி ஏதொவொருவகையில் வடக்கு இலங்கையினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வண்ணமே உள்ளன. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் யாழ். பொலிஸார் பெரிதாக சிரத்தை காட்டுவதாக தெரியவில்லை. பாடசாலைகளிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பறுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் சமூகம் வடக்கில் சுயநல மனப்பாங்குடன் செயற்பட ஆரம்பித்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண்  மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுத்தி பின்பு அவர்களை  பயன்படுத்தி மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு. இந்த நிலையில் இது தொடர்பாக பெரிதாக வடக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் எங்கே இந்த பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடை செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியே மீதமாகவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான நகர்ப்புற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படட்தாக தகவல்கள் வெளியான போது யாழ். சமூக கல்விமான்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து விட்டு  அடங்கிவிட்டனர்.

போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அவர்கள் ஏதேனும் களச்செயற்பாடுகளை மேற்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது யாழ்ப்பாண சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் இன்னமும் எந்த செயற்பாடும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவில்லை என்பதே கவலையான உண்மை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் நமது தமிழர் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை இன்னுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத்துறையில் கடந்த  20ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது இங்கு இன்னமும் வேதனையான விடயம். இளைஞர்கள் குழுவாக இருந்து ஹெரோயின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு தைரியமான ஒரு சூழல் நமது பகுதிகளில்  உருவாகியுள்ளது இன்னமும் வேதனையளிக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாடசாலை ஆசிரியர்களும் தங்களுடைய மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெற்றோர் தங்களுடைய வீட்டு இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை அவர்களின் காட்டுக்கூச்சலுக்கு அஞ்சாது கண்டிக்க வேண்டியதுடன் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமையான பக்கங்களை புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மட்டுமே கவனம் வந்த யாழ் சமூகமானது இன்று வெளிநாட்டு மோகத்திலும் – சுயநல மனோநிலையிலும்  சிக்குண்டு தனது கல்வி அடைவு மட்டத்தை தொலைந்துவிட்டது. கல்வியின் மீதான யாழ் சமூக மாணவர்களின் – இளைஞர்களின் நாட்டம் குறைவடைந்தது இன்று ஆவா வாள்வெட்டு  போன்ற குழுக்களின் தோற்றத்தையும் – போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளது.

யாழ் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் விரைந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து நமது சமூகத்தை மீட்க – நமது இளைஞர்களை மீட்க இயங்க வேண்டும். நாம் சுதாகரித்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஆரோக்கியமற்ற இளைஞர் தலைமுறை ஒன்று உருவாவதற்கு நாமும் காரணமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நாம் சமூகத்தை திருத்த கூட களமிறங்க  தேவையில்லை. அவரவர் தத்தமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடம் இது தொடர்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது. சிறுதுளி பெருவெள்ளம் போல ஆகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்..!

ஜனாதிபதியாக ரணிலின் பதவியேற்பும் – வெளியாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் அறிவிப்பும் !

 

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இன்று ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் சில அறிவிப்புக்கள் அடுத்தடுத்து மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

இலங்கை மக்கள் தாங்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிவாரணத் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் எனவும் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நிவாரணப் திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களின் பெறுபேறுகளின்படி, வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தமது பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இத்தனை நாளும் இழுத்தடிப்பு செய்து வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை ஊடகங்கள் பலவும் கொண்டாடி வருகின்றன.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்தவரை  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் இது சரியாகி நாடு மீள பல வருடங்களாகும் எனவும்  இதுவரை கூறி வந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  இன்னும் 5 மாதங்களில் இலங்கையின் பொருளாதார சரிவை மீட்க முடியும் என திடீர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே மேற்கூறியது போல கதைகளிலும் கற்பனைகளிலும் வருவது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும்  திடீரென அதிசயமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ரணிலின் ஜனாதிபதி தெரிவும் – IMFஇன் இந்த அறிவிப்பும் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்தும் ஒரு சேர ஒரு  விதமான சந்தேககண்ணோட்டத்தை ஏற்படுத்துவது போலவும் ஏற்கனவே இருந்த சில சந்தேகங்களை உறுதிப்படுத்துவது போலவும்  அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

 

இலங்கை மக்களின் 69லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்.

போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிய கட்சிகளின் உந்துதலே காணப்பட்டது என ஒரு தரப்பு  அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இன்னுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் ரணிலுக்கு ஆதரவான மேற்கு உலக சக்திகளே இந்த போராட்டத்தை கொண்டு நடத்தின என அழுத்ததிருத்தமாக கூறி வந்த நிலையில் பல விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டமை, ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை , பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவின் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்டமை என பல விடயங்களில் சந்தேகமான தன்மையை காண முடிந்தது.

ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் இலங்கையின் போக்கு மேற்குலக நாடுகளில் இருந்து முற்றிலும் விலகி சீனாவுடன் மிக நெருங்கியதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இது இலங்கையின் மீதானதம் இந்துசமுத்திர பரப்பு மீதானதும் அமெரிக்க – இந்திய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான அரசியல் மாற்றங்களும் – புரட்சிகளும்  அடுத்தடுத்து அரங்கேறின. அடுத்த இருபது வருடத்துக்கு ராஜபக்சக்கள் ஆட்சி தான் என்ற கருத்து உடைத்து வீசப்பட்டது.

இவற்றின் பின்னணியில் இந்தியாவினதும் அதுசார்ந்த அமெரிக்க – மேற்குலக சக்திகளினதும்  அதிதீவிர நகர்வுகளை இங்கு நடந்த பேராட்டங்களில் காண முடிந்ததாக பல அரசியல் விமர்சகர்களும்  குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை நாளும் இலங்கைக்கான கடன் வழங்குவது தொடர்பில் காலந்தாழ்த்தி வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று இல்ஙகைக்கான உதவி தொடர்பில் அறிவித்துள்ளமையானது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இயல்பாகவே மேற்குலக நாடுகளின் முகவர் என்ற தோற்றத்தை கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு இலங்கை மீதான சீனாவின் ஆதிக்க நிறுவுகையினையும் – சீனாவின் பொருளாதார லாப ஈட்டத்தினையும் கட்டுப்படுத்த இந்தியாவும் – அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியாகவே இலங்கையின்  திடீர் அரசியல் மாற்றங்களை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடன் வலைக்குள் சிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டவை என பல தரப்பினரும் எச்சரித்து வந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த கடன் திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடக்கி விட்டிருந்தார். அத்துடன் அண்மையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நலிவுக்கு காரணம் என அண்மையில் சாடியிருந்தது கூட ரணில் விக்கிரமசிங்க தன்னை அமெரிக்க சார்புவாதி என்பதை காட்டும் தோரணையிலேயே அமைந்திருந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும்; ரணில் அமெரிக்க தோலை போர்த்திய நரியா அல்லது இலங்கையை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள அரசியல் தலைவரா என்று…!

 

“இலங்கைக்கு இந்தியா போல வேறு யாரும் உதவவில்லை.” – இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இலங்கை கடந்த பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்தைக் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து டெல்லியில் இன்று இலங்கை நிலைமை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்திய மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம். மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாநில வாரியாக, வருவாய் ஒப்பீடு, வளர்ச்சி விகிதம், கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவை குறித்த மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது !

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீ மதி ( 17 ) . இவர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் , பள்ளி விடுதியில் மர்மமான முறையில் ஜூலை 13 – ம் தேதி உயிரிழந்தார்.

 

மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டம் , நேற்று கலவரமாக மாறியது . இதனிடையே , மதியின் பெற்றோர் ராமலிங்கம் , செல்வி ஆகியோர் நேற்று காலை நெஞ்சுவலியால் , வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . பின்னர் , பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் , கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் செல்வி கூறியது : எனது மகள் ஸ்ரீமதி உயிரிழந்து 5 நாட்களாகிறது . கடந்த 4 நாள்களாக அமைதியான முறையில் நீதிகேட்டும் எந்தவித பதிலும் இல்லை . மாணவர்கள் சங்கம் சார்பில் நீதிகேட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை , பள்ளி நிர்வாகம் அடியாட்கள் மூலம் தாக்கியதுடன் , பள்ளிக் கட்டிடம் மற்றும் வாகனங்களை எரித்து , கல்வீசி கலவரத்தை ஏற்படுத்தி , தற்போது மாணவர்கள் மீது பழிசுமத்துகின்றனர் .

 

பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் பள்ளி நிர்வாகம் மீது சின்னசேலம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலை , இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் . கொலையைத் தற்கொலையாக மாற்றியுள்ளனர் . திட்டமிட்டு கொலை செய்தவர்களைத் தூக்கிலிட வேண்டும் . எனது மகள் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார் .

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.அந்த கடிதத்தில், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் ரொம்ப பிரஷர் பண்ணறாங்க. என்னால முடியல என குறிப்பிட்டுள்ளதாக தகவல். மேலும் தான் நன்றாக படிப்பதாகவும், ஆனால் கணிதம் மற்றும் வேதியியல் துறை ஆசிரியைகள் படிக்கவில்லை என துன்புறுத்தியதாகவும் தகவல். டாடி, மம்மி மற்றும் தம்பியிடம் சாரி சொல்லி கடிதத்தை முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரம் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த பள்ளி தரப்பு நிர்வாகிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி தரப்பில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆசிரியைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐந்து பேரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்பொழுது ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.