July

July

அச்சுறுத்தலாகிக்கொண்டிருக்கும் சீனாவின் ஆணுவாயுதக்கிடங்குகள் – அமெரிக்கா கவலை !

வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சமீபத்திய காலங்களில் மோசமடைந்துள்ளன. அது மட்டுமன்றி சீனாவின் வேகமான வளர்ச்சி ஏனைய உலக வல்லரசுகளை கதிகலங்க வைத்துள்ளது என்பதே உண்மை. அண்மையில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் கூட இது தொடர்பான கலந்துரையாடல்கள் அதி முக்கியம் பெற்றிருந்தது.

இந்நிலையில் சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றமையானது  கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் இதழில் அண்மையில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,

‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’ என கூறினார்.

சீனாவின் மேற்கு பாலைவனப் பகுதியில் ஏவுகணைக் கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சீனாவில் சுமார் 100 ஏவுகணைகள் இருந்தன. ஆனால் வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இது ஒருபுறமிருக்க கொமினியூஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசியிருந்த சீன அதிபர் சீனாவை சீண்டினால் சீனப்பெருஞ்சுவரில் அடித்துக்கொள்வோம் என்பது போன்ற தொனியிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை சர்வதேச அளவில் மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் 65,000பேர்!

தஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போது 65,000பேர் காத்திருப்பு வரிசையில் உள்ளதாக அகதிகள் சபையில் பெற்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் சபையில் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் உட்துறை அலுவலகத்திலிருந்து புள்ளிவிபரங்கள் பெறப்பட்டது.

2020ஆம் ஆண்டில் ஒரு காலாண்டில் அதிகரித்த ஒரு பின்னடைவுக்கு தொற்றுநோய் பங்களித்திருப்பதாக நிறுவனத்தின் பகுப்பாய்வு காட்டுகிறது. எனினும், உடைந்த புகலிடம் முறையை சரிசெய்ய ஒரு திட்டம் இருப்பதாக உட்துறை அலுவலகம் கூறியுள்ளது.

மீட்கப்பட்ட பழங்குடியின பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் – நீதி கேட்டு விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு !

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தமையானது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது கடுமையான  அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
கனடாவில் உள்ள பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
பழங்குடியினர்பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர். இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன.
போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

கனடாவில் அதிகரித்துள்ள அதியுச்ச வெப்பம் – உருகும் தார் சாலைகள் – 400க்கும் அதிகமானோர் பலி !

வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வரலாறு காணாத இந்த வெப்பத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சாதனை

இங்கிலாந்து அணியுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய சாதனை ஒன்றை இலங்கை அணி படைத்துள்ளது.

இதன்படி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை அணி இடம்பிடித்துள்ளது.

1975ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கை அணி 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் 390 ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி 428 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்படி இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணி சந்தித்த தொடர்களில் 62 சதவீதமானவற்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதேவேளை இந்திய கிரிக்கெட் அணி 427 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் தோல்வியடைந்துள்ளதுடன் பாகிஸ்தான் அணி 414 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி

உயர்கல்வி மற்றும் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முற்பதிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இன்று (02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்துக்குப் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவைத் தொடர்ந்து இரு நாள்களில் உரிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தி மூலம் உரிய திகதி மற்றும் இடம் தொடர்பான விடயங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இனிமேல் டெல்டாவே ஆதிக்கம் செலுத்தப்போகின்றது.” – எச்சரிக்கின்றது உலக சுகாதார அமைப்பு !

உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும். இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் இப்போது உலகமெங்கும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு, தனது கொரோனா வாராந்திர தொற்றுநோய் புதுப்பிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 டெல்டா வைரஸ் பாதிப்பினை 96 நாட்கள் தெரிவித்துள்ளன. இதன் மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசை முறை திறன்கள் குறைவாக இருப்பதால், இது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த நோய்த் தொற்று, பல நாடுகளில் தொற்று பரவல் அதிகரிப்புக்கும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரிப்புக்கும் காரணம் ஆகும்.
இந்த வைரஸ் பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக  டெல்டா வைரஸ் மற்ற வகைகளுடன் போட்டியிட்டு, இனி வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், தனிநபர் இடைவெளி பராமரிப்பு, சமூக அளவிலான கட்டுப்பாடுகள், தொற்று தொடக்கம் முதல் இருந்து வரும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் உள்ளிட்ட கவலைக்குரிய வகைகளுக்கு எதிராக வலுவாக செயல்படும்.
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு சூழலில், மேற்கூறிய பிற நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம்.” – சீன அதிபர் முழக்கம் !

“சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.” என சீன அதிபர் ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

latest tamil news

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று (01.07.2021)  கொண்டாடப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி கடந்த 1921-ம் ஆண்டு ஜூலை 1-ந் திகதி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு அக்கட்சி 72 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி இன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

சீன மக்களின் தேசிய இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க கொண்டுள்ள பெரும் தீர்மானத்தையும், வலுவான விருப்பத்தையும், அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எங்கள் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.

சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

சீன மக்கள் ஒரு போதும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் தங்களை ஒடுக்கவோ அல்லது அடிபணியவோ அனுமதிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரும் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சீன மக்களால் உருவாக்கப்பட்ட பெருஞ் சுவரில் மோத வைக்கப்படுவார்கள்.

தைவானை சீன நிலப்பரப்புடன் ஒருங்கிணைப்பது ஆளும் கட்சியின் வரலாற்று பணியாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூச்சுக்காற்றை பரிசோதித்தே கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு புதிய பல  பரிசோதனைகளை உலகின் பல  ஆராய்ச்சி நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. பல முறைகள் வெற்றியளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனாவுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட முகக்கவசம் மூலமே மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.

அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.

சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.