October

October

மட்டக்களப்பு கல்முனையில் சட்டவிரோத ஆயுங்களை ஒப்படைக்க கால அவகாசம்.

Arms_Amnestyகிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பாதகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத அயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்போர் கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியற்றினூடாக அவற்றை ஒப்படைக்குமாறு பொலிஸாhரால் கோரப்பட்டுள்ளது.

Arms_Amnestyமுன்னர் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக சட்விரோத ஆயுத்ங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இதனால், இதன் கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கிளிநொச்சி கிராமப்புற மக்களே அதிகம் மனநோயாளிகள் ஆகியுள்ளனர்!

Psychologyகிளி நொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் உளநலன் பாதிக்கப்பட்ட மக்களில் 60 சதவீதமானவர்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என கிளிநொச்சி பொது மருத்துவமனை உளநல பொறுப்பதிகாரி மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட மனநோயாளிகளில் 40 வீதமானோர் கிளிநொச்சி நகரையண்டியுள்ள கிளிநொச்சி, கனகபுரம் பாரதிபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் முதலான இடங்களில் வாழ்கின்றனர். 60 வீதமானோர் வசதி குறைந்த கிராமங்களான பூனகரி, முழங்காவில், தருமபுரம், வட்டக்கச்சி, பளை ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள 200 பேருக்கும் மேல் கிளிநொச்சி மருத்தவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles:

அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் உண்டு நெருக்கடிகள்! விபரீதங்கள் ஏற்படுமுன் உதவியை நாடுங்கள்!!! உளவியலாளர் யோகா பேரின்பநாதன்

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்

உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் நெருக்கடிகளுண்டு

ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லை முகவரகமும் வெளிநாட்டு மாணவர்களும் : நிஸ்தார் மொகமட்

UKBAமாணவர் என்ற போர்வையில் இங்கிலாந்துக்குள் நுழைபவர்களின் தொகை வருடாவருடம் கூடிச் செல்வதுடன் 2004ம் ஆண்டில் அது என்றும் இல்லாதவாறு 186,000 என்ற எண்ணை எட்டியது. இதில் படிப்பபை வெற்றிகரமாக முடித்தோர், முடியாமல் பாதியில் முறித்தோர் எல்லாரையும் சேர்த்து பார்த்தல் அவர்களில் 1/5 பங்கினரே தம் நாட்டுக்கு திரும்பி போகிறார்களாம். மற்றவர் கதி என்ன? குடிவரவுத் திணைக்களத்தைப் பொறுத்தவரை இவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி விட்டனர். ஆனால் திரும்பவில்லை, இங்கேயே உள்ளார்கள், அதுவும் தலைமறைவாக (Underground) என்பது குடிவரவு திணைக்களத்துக்கு எதிரான மற்றோர்களின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் துணிச்சலாக underground (சுரங்கப்பாதை)யிலும் வெளிப்படையாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை இரகசியம். இதில் பலர் குடிவரவு சட்டத்தின் ஓட்டையை பாவித்தும், இங்கிலாந்து அரசாங்கம் வேண்டுமென்றே சட்டத்தை ஓட்டையாக்கி வைத்து அதனுள் புகுந்து விளையாடுங்கள் என்று அனுமதித்துள்ளதாலும் அதைபாவித்து தம்மை இங்கேயே நிரந்தர வதிவிடக்காரர்களாக்கி விடுகின்றனர் (indefinite leave to remain holders). ஆனால் எல்லாருக்கும் இந்த விளையாட்டில் நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்ய விரும்பமில்லை.

இப்படி மாணவர்கள் வருவதும், போவதுமாய் இருந்தாலும் இங்கிலாந்து அரசாங்கம் இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் புள்ளிகள் அடிப்படையிலான (Points Based System) குடிவரவு முறையொன்றை 2008ல் அறிமுகப்படுத்தி, அதை 1, 2, 3, 4, 5 என்று தட்டுகளாக(Tier) பிரித்து பொதுவாக இங்கிலாந்துக்குள் உள் நுழைவோரை கட்டுப்படுத்த முயற்சித்தது.

இந்த அடிப்படையில் இந்த மாணவர்களை கட்டுப்படுத்தும் முகமாக PBSசின் தட்டு 4 (Tier 4) என்ற புள்ளிகள் அடிப்படையிலான முறையை 31.03.2009ல் அரசாங்கம் அமுல்படுத்தியது. இந்த தட்டு 4 தொடர்பாக, இது திறமைமிக்க மாணவரை மாத்திரம் உள்வாங்கும் முறை, சரியான வடிகட்டல் முறை, நீதியான கட்டுப்படுத்தல் முறை, புதிய அறிமுகம் என்ற முன்னுரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாணவர் தொகை சத்தம் சந்தடி இன்றி கூடிச் சென்று விட்டதாம். 2010 ஜுன்னுக்கு முன்னான 12 மாத காலத்தில் மாத்திரம் இந்த மாணவர் தொகை 288,000தை எட்டியதாம். கற்பதில் என்னே ஆர்வம், புல்லரிக்கிறது. இந்த மாணவருடன் கூடவே வந்து தொல்லை கொடுப்போராக ஐக்கிய இராச்சிய எல்லை முகவர் நிலைய (United Kingdom Border Agency)த்தால் கருதப்படும் அவர்களில் தங்கி இருப்போரையும் சேர்த்தால் அதே காலப்பகுதியில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 320,000.

அட 60மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் இந்த மூன்று இலட்சத்தி இருபதினாயிரம் என்பது ஒரு சிறு தொகைதானே என்றால், அது சரி இதில் இரண்டு மடங்கு என்றாலும் எமக்கு பரவாயில்லை, ஆனால் இங்கு வந்தால் படித்தோமா, இல்லை படித்து கிழித்தோமா அலுவல் முடிய நடையை கட்டிவிட வேண்டும், அதுதான் எமது எதிர்பார்ப்பு என்று ஆளும் அரசாங்கம் முதல், சாதாரண பிரசைவரை எல்லாரும் ஒருமித்து குரல் எழுப்புகிறார்கள். அவுஸ்திரேலிய PSB முறையை கடைபிடிக்கும் இங்கிலாந்து அங்கு நடந்த வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவரை தீயிட்டும், வெட்டியும், அடித்தும் கொன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொள்ளாதவரை சந்தோசம்.

ஒப்பிட்டு ரீதியில் இங்கிலாந்தில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்கள், அதாவது வெளிநாட்டாரின், அதிலும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கரின் நிறுவாகங்களில் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சிறந்த(?) கல்வி வழங்களை விட ஒரு வகையில் குடிவரவை ஊக்குவிக்கும் நிறுவனங்களாகவே செயற்படுகின்றன. இந்த நாட்டில் கல்விசேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை சிந்தனை/கண்டுபிடிப்புக்கள், பல்கலைக் கழகங்கள், திறமைகளுக்கான திணைக்கள (Department for Innovation, Universities and Skils) சுருக்கமாக DIUS, த்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த திணைக்களம் இந்த நிறுவனங்களை A,B என்ற தரவரிசைபடுத்தி, காலத்துக்கு காலம் அவர்களின் தரத்தையும், நற் போக்குகளையும் கணக்கிட்டு(Appraisal) ஒரு கல்வி நிறுவனம் தொடந்தும் இந்த DIUS சின் பதிவில் இருப்பது நிச்சயிக்கப்படும். இப்படி இதில் இருந்து நீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தெரியாமல் காசை கட்டி, விஸாவும் இல்லாமல், கட்டிய காசும் இல்லாமல் அல்லலுறும் மாணவர் ஆயிரமாயிரம். இப்படிபட்டோரில் கோயில்களின் அன்னதானம் விடயம் அறிந்தவர்கள் ஒரு நேரபசியை போக்கிக் கொள்வதற்கு அங்கே தஞ்சமடைவதையும் அனேகர் கண்டிருப்பீர்கள்.

சில வேளைகளில் சரியான கல்வி நிறுவனத்தில்தான் சேர்ந்துள்ளோம் எமக்கு பயமில்லை என்றிருக்கும் மாணவர்களும் வேறுவிதமாக மாட்டிக்கொள்வதும் கண்கூடு. இந்த தட்டு 4 முறையின் கீழ், மேலதிக வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் மீதமாக இருக்கும் கற்கைநெறி பணம் (Course fee), மற்றும் தங்களை பராமரித்துக் கொள்வதற்கான பணமாக லண்டனும், லண்டனை சூழவுள்ள பகுதிகளில் கற்போராயின் மாதமொன்றுக்கு 800 பவுண்டுகளும், லண்டனுக்கு வெளியேயாயின் 600 பவுண்டுகளுமாக ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கான பணம் தொடர்சியாக UK வங்கிக் கணக்கில் வைப்பில் இருக்க வேண்டும் என இந்த விடயத்தை கையாளும் உள்நாட்டு விவகார அமைச்சின் (Department for Home Affairs) குடிவரவு விதிகள் (Immigration Rules) கூறுகிறது. இந்த இடத்தில்தான் பங்கீனாவின் பார்வை உள்நாட்டு திணைக்களத்தின் மேல் மெல்ல படத்தொடங்கியது.

UK யின் குடிவரவு விவகாரமானது எப்போதுமே ஒரு சூடான பேசு பொருளா(hot topic)கவே காணப்படுகின்றது. உதாரணமாக, UK வெளிநாட்டவரால் நிறைந்து விட்டது, இனி வழிவதுதான் தாமதம் அதற்கு முன்னால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், இந்த வெளிநாட்டார் உள்நாட்டாரின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் அபகரித்து விடுகின்றனர் எனவே மக்கள் வெகுண்டெழுந்து எசக்கு பிசகாக ஏதாவது நடந்தேற முன் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கடும் போக்காளர் கூக்குரலிடுகின்றனர். இல்லை வெளி நாட்டாரின், குறிப்பாக வெளிநாட்டு மாணவரின் வருகை குறைந்தால் உயர்கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரும் என்று கல்வி(விற்பனை) நிலையங்கள் எச்சரிக்கின்றன. வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் இங்கிலாந்து வருடமொன்றுக்கு சுமார் 3.5 முதல் 8 பில்லியன் பவுண்ட்ஸ் வரை சம்பாதிக்கிறது எனவே அவர்களின் வருகையை கவனமாக கையாள வேண்டும் என்ற பொருளாதர ரீதியிலான நியாயங்கள் வேறு. இப்படி மாணவர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க சத்தம் சந்தடி இல்லாமல் 2007ம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம்(Labour government) சட்டவிரோதமாக இங்கு இருப்போரில் சுமார் 500,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Indefinite leave to remain)கொடுத்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான(?) முற்பட்டது. இந்த முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டாலும், கடந்த பொது தேர்தலின்போது இது தொடர்பாக, முன்னை நாள் பிரதமர் Gordon Brown னும், இன்றைய பிரதமர் David Cameron னும், இன்றைய உதவி பிரதமர் Nick Clegg கும் வெளிப்படையாக ஆடிய நாடகத்தை நீங்கள் மறந்திருக்க நியாயமில்லை.

இன்றைய உதவி பிரதமர் UKயில் சட்டவிரோதமாக அதிககாலம் இருப்போருக்கு அனுமதி வழங்கி அவர்களை சட்டரீதியானவர்களாகுவதன் மூலம் அவர்களை இன் நாட்டின் பொருளாதரத்துக்கு தோள் கொடுக்க செய்யலாம் ஆகவே அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து (public amnesty) வெளியே கொண்டு வாருங்கள் என கடந்த பொது தேர்தலின் கட்சி தலைவர்களுக்கான மூன்று கட்ட விவாதத்திலும் தம் Liberal Democratic கட்சி சார்பாக அதை மீண்டும் மீண்டும் வழியுறுத்தினார். அதேநேரம் எமது முன்னை நாள் பிரதமர் அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், உமது பிந்திய ஞானம் எமக்கு தேவையில்லை என்று சொல்லாமல் அந்த கதையை மழுப்பிக் கொண்டே சென்றார். ஆனால் இன்றைய பிரதமர் அப்படி அனுமதிப்பது கூடாது. அது மற்றோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும், எனவே உள்வந்தவர் வெளியேறவே மாட்டார்கள். ஆகவே இவர்களை கட்டுப்படுத்த ஒரு கடினமான முறை தேவை என்றார். இப்படி தேர்தல் விவாதம் நடக்கும்போதே 250,000 வதிவிட அனுமதி வழங்கப்பட்டது (அதில் பலன்பெற்ற நம்ம ஆட்கள் நாடு சென்று, விடுமுறையையும் கழித்து, பலதும் பத்தும் அறிந்து, வெள்ளை வேனின் கண்பட்டாமல் வெற்றிகரமாக நாடு(UK) திரும்பியுள்ள விவகாரம் வேறு) மிகுதி 250,000 பேருக்கான வதிவிட அனுமதி கொடுபட்டுக் கொண்டிருக்கிறது. 2011 ஜூலையுடன் இதன் காலஎல்லை முற்றுப் பெறுகிறது.

இப்படி இந்த குடிவரவு விவகாரம் பிரச்சினைக்குறிய விடயம் என்பதாலும், இதற்கெதிரான கடும்போக்கை எடுக்காவிட்டால் BNP(British National Party), EDF( English Defence Front) போன்ற இனவாத கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், அதே நேரம் வெளிநாட்டு மாணவர்களுக்கான எதிர்பை வெளிப்படையாக காட்டினால், வெளிநாட்டாரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதாலும், இங்கிலாந்தின் பெயர் சர்வதேச ரீதியில் கெட்டுப் போகும் என்பதாலும் செய்வதறியாது தவிக்கும் இன்றைய Con-Dem கூட்டு அரசாங்கம் மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மேலதிக வதிவிட அனுமதி கோரும் மாணவர்களுகான குடிவரவு விதிகளுடன் சேர்ந்து UKBAயின் குடிவரவு கொள்கை(Immigration policy) காலத்துக்கு காலம் மாற்றம் பெறுகிறது. இந்த அடிப்படையில் மாணவர் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் கற்கை நெறிக்கான அனுமதி உறுதிபத்திரம்(Confirmation of Acceptance of Study), சுருக்கமாக CAS உடன், (இது குறிப்பிட்ட மாணவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும்) இரண்டு மாதங்களுக்கான பராபரிப்பு பணம் வைப்பில் உள்ளது என்பதற்கான வங்கி கணக்கு அறிக்கையும்(bank statement) அனுப்ப வேண்டும். CAS க்கு 30 புள்ளிகளும், வங்கி அறிக்கைக்கு 10 புள்ளிகளுமாக ஒரு மாணவர் 40 மொத்த புள்ளிகள் UKBA மூலம் பெற வேண்டும். இது கிடைத்தால் மேலதிக அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால், UKBA கழுத்தை பிடித்து தள்ள முன் குறிபிட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது, … அது அந்த சம்பந்தப்பட்டவர் விருப்பம். நாம் புத்தி சொல்ல முடியாது. அது எமது தலைக்கு ஆபத்தாக முடியும்.

இப்படி இந்த பராமரிப்பு பணம் தொடர்பான இறுக்கமான கட்டுப்பாட்டால் ஆயிரக் கணக்கான மாணவர் பாதிக்கபட, யார் செய்த புண்ணியமோ, இந்த பராமரிப்பு பணம் இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்ட அதேநேரம் அந்த பணம் விண்ணப்ப நாளுக்கு 28 நாட்களுக்கு முன்பிருந்து வங்கிக் கணக்கில் இருந்து வருகிறது என்று ஆதாரத்துடன் காட்டினால் போதும் என்று சென்று கொள்கை சற்று தளர்த்தப்பட்டது. அப்பாடா இந்த இரண்டு மாத தொல்லை தொலைந்தது என்று மாணவர் பலர் சந்தோசப்பட்டனர். பல மாணவர்களும் தெய்வம் நின்று கொள்ளும் என்று சும்மாவா சொன்னார்கள் என்ற திருப்தியில் தமது வதிவிட அனுமதிகளை பெற்றுக் கொண்டனர்.

அட சரி 28 நாட்களுக்கு பணம் வைப்பில் உள்ள மாணவர் தப்பிக் கொள்வர். அப்படி இல்லாத மாணவர் என்ன செய்வர்? ஒருவன் விரும்பிய இடத்தில் படிக்க வேண்டுமென்பது அவனது அடிப்படை உரிமையல்லவா? படிப்பை தொடர பணம் இருந்தால் சரிதானே அதற்கென்ன 28, 82 நாள் என்ற கணக்கு. நாங்கள் வெளி நாட்டார் எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு, ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி காரியத்தில் இறங்கும் பழக்கமெல்லாம் எம்மிடமில்லை. படிக்க பணம் கட்டினால் சரிதானே, மற்றும்படி நான் சாப்பிட்டல் என்ன, சாப்பிடாவிட்டால் உனக்கென்ன? எனக்கு அனுமதியை தா என்பது மாணவரின் கோசம்.

இந்த நேரத்தில்தான் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து ஒரு பிரேசில் நாட்டு மாணவியும் தனது மேலதிக வதிவிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்தாள். வழமை போலவே தொடர்சியாக 28 நாட்களுக்கு பணவைப்பை உறுதிபடுத்தாத மாணவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நாட்டு சட்டத்தின்படி அரச நிறுவனங்கள் ஏதாவது விண்ணப்பமொன்றை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் சொல்ல வேண்டுமென்பது சட்டம். அப்படியே உள்நாட்டு அமைச்சு சார்பாக இந்த UKBA தமது நிராகரிப்பு காரணமாக “மாணவர்களே நீங்கள் குடிவரவு விதிகளுக்கமைய பராமரிப்பு தொகையொன்றை குறிப்பிட்ட கால அளவுக்கு வைப்பில் வைத்திருப்பதற்கான ஆதாரங்களை காட்டவிலை, ஆகவே நீங்கள் பொது நிதியத்தின் உதவியின்றி (recourse to public funds) உங்களால் உங்களை பராமரிக்க முடியாது. எனவே நீங்கள் என்மை உங்கள் பணம் சம்பந்தமாக விடயத்தில் திருப்திபடுத்தவில்லை. எனவே உங்கள் விண்ணப்பம் பிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எமது முடிவை மேன்முறையீடு செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு என்று அறிவித்துவிட்டார்கள்.

என்ன ஆட்கள் அப்பா இந்த UKBA உத்தியோகத்தர்கள். இந்த நாட்டில் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதவர் எப்படி பொது நிதியத்தின் உதவி பெறமுடியும்? அரசாங்க உதவி பெற முதல் தகைமை நிரந்தர வதிவிட உரிமை அல்லவா? இந்த அடிப்படை விடயம் தெரியாமல் ஏன் அங்கு வேலை செய்கிறிர்கள் என்று கேட்டால் பதிலா தரப்போகிறார்கள்? தொடர்ந்தும் தங்கள் பழைய புராணத்தையே பாடுவார்கள், அதாவது இது நேர்மையான ஒரு முறை, அது, இதுவென்று கூக்குரல் செய்வர். எனவே இந்த பாதிக்கபட்ட மாணவர்களில் ஒருவர் தமது மேல் முறை ஈட்டு உரிமையை சரியாக பாவித்து முதல்நிலை குடிவரவு நீதி மன்றில் (First-tier Tribunal) மேன் முறை ஈடு செய்து வெற்றி கிட்டியது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தோல்வியை தழுவிக் கொண்டது. பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதை நம் எல்லாருக்கும் பழக்கப்பட்டதுதானே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தீர்ப்புக்கெதிராக இரண்டாம் நிலை குடிவரவு நீதிமன்றில் (Upper Tribunal) மேன் முறை ஈடு செய்ய அனுமதி கோரி அந்த அனுமதி வழங்கப்பட்டு இறுதியில் வெற்றியும் கண்டனர். மாணவருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்ட்டது.

தோல்வியடைந்த மாணவி இந்த தீர்ப்பினால் சளைத்து விடவில்லை. அவர் எல்லா வழக்குகளுக்குமான மேல் நீதிமன்றில் (Court of Appeal) மேன் முறைஈடு செய்தார். இந்த மேன் முறைஈட்டு காரணங்களோடு சம்பந்தப்ப்ட்ட (Like cases) மேலும் 5 வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க மேன் முறைஈட்டு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையும் என்றாலும், அரசாங்கம், அதன் நிறுவனங்கள் சார்பாக வழக்காடும் திறைசோரி வக்கீல்கள்(Treasury solicitors) சும்மா இருப்பார்களா? அரசாங்க பணம் தானே கொஞ்சம் கை, கால் நீட்டி உழைத்தால் என்ன என்ற “உழைப்பு கோட்பாடு”க் கேற்ப சமாதானதுக் கொல்லாம் தயாரில்லை, நீதிமன்றம் வாருங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். இதில் என்ன பரிதாபம் என்றால் ஒரு மாதகாலத்துக்கு மாணவர் ஒருவரின் பராமரிப்புக்கு போதுமானதாக கருதப்படும் 800 பவுண்ட்ஸ் இந்த திறைசோரி வழக்கறிஞரின் சுமார் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம். என்ன விதமான சுரண்டல். இது மூளையால் செய்யும் வேலை, மூளையின் களைப்படையும் தன்மைக் கேற்ப கூலி அமையவேண்டும் ஆகவே இது சரி என்று வாதாடுவோரும் நம்மில் இருக்கத்தான் செய்வர். என்ன செய்ய நாம் மாடாய் உழைத்து கட்டிய வரிப்பணம் தேவையில்லாத வழக்கிற்காக தேவையில்லாதவன் கையில் போய் கிடைக்கிறது. இந்த கூத்துகளுக்கு மத்தியில் வழக்கின் முடிவு வெளியாகிவிட்டது.

மேலுள்ளது Pankina v. Secretary of State for Home Department என்ற Court of Appeal வழக்கு. இதை விசாரித்த நீதிபதி பிரபு செட்லீ (Lord Justice Sedley), நீதிபதி பிரபு ரிமெர்(Lord Justice Rimer), நீதிபதி பிரபு சலிவன் (Lord Justice Sullivan) கீழ்வரும் தீர்ப்பை வழங்கினர், ” குடிவரவு கொள்கை (policy) என்பது, நிச்சயமாக குடிவரவு விதி(Rules)யாகாது. கொள்கை என்பது சட்டங்கள் அல்லது சட்டங்களின் பகுதியான விதிகளின் கடும்போக்கை கொண்டிருக்க முடியாது. கொள்கைகள் சட்ட அந்தஸ்து பெற வேண்டின் அது பாராளுமன்றத்தின் முன் சமர்பித்து அது ஒன்றில் சட்டமொன்றின் விதியாக அல்லது முழு சடமாக வந்த பின்பே அதை நடைமுறைபடுத்த வேண்டியது அரச நிறுவனங்களின் கடமை. அதை நிலை நிறுத்துவது நீதிமன்றங்களின் கடமை. தேவையான அளவு பணம் வைப்பில் இருக்க வேண்டும் என்பது விதியின் பால்பட்டது. அது இரண்டு மாதம் என்பது கொள்கையாக பின்னால் புகுத்தப்பட்டது. எனவே இந்த கொள்கை விதியின், அல்லது சட்டத்தின் உறுதி தன்மையில் இருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் ஒருவரை பராமரிக்க தேவையான இரண்டு மாதப் பணம் 28 நாட்களுக்கு வைப்பில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. அந்தளவு பணம் 28 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இருந்தால் போதுமானது. குறிப்பாக விண்ணப்பிக்கும் அந்த நாளில் இருந்ததற்கான அத்தாட்சி காட்டினாலே போதும்.” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களே உடனடியாக காரியத்தில் இறங்குங்கள். ஏனெனில் இந்த கொள்கையை பாராளுமன்றில் சமர்பித்து இதற்கு விதி(Rule)வடிவம் கொடுத்தால் எல்லாரும் மீண்டும் மாட்டிக் கொள்வீர்கள். எனவே குடிவரவு முறையில் புதிய விதிகள் புகுத்தப்படமுன் அல்லது புதிய சட்டங்கள் மீண்டும் கடினமாக வரமுன் உங்கள் சட்டத்தரணிகளை பாருங்கள். மேலே சொன்னவை ஒரு சுருக்கமே, இதில் இன்னும் சட்டசிக்கல்கள் வர நிறையவே வாய்ப்புகள் இருப்பதால் DIY( do it yourself) முறையை கைவிட்டு விட்டு துறைசார்ந்தோரை நாடுங்கள். என்ன இருந்தலும் படிக்க வேண்டும் அதிலும் London னில் படித்து, பட்டம் பெற வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ஒரு சின்ன யோசனை சொன்னேன் அவ்வளவுதான். இலங்கை படிப்பு UK படிப்புக்கு குறைந்தல்ல என்பதையும், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாட்டின் படிப்புகளும் UK படிப்பைவிட மிக சிறந்தது என்பதையும் எனது தனிப்பட்ட அனுபவத்தின் முலம் உறுதி கூறலாம் அதையும் சற்று கவனத்தில் கொள்ளுதல் நலம்.

Related News & Articles:

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக் கூறி யாழில் மோசடி!

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

மக்கள் வழங்கிய பெயர்ப்பட்டியல் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிப்பு

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வாரகாலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடியதையும் தெரிவித்தார். இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்க மறியல்

ranjan1.jpgஇரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ள ஐ. தே. க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டை விட்டு செல்வதற்கு தடை விதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் வேண்டினர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பத்து இலட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப் பாடு செய்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு

சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு,  சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

லண்டன் தமிழர் தகவல் நடுவம் யாருக்குத் தகவல்கள்’ கொடுக்கின்றது? : ஆர்.வி. குமார்

tic_logoதகவல் நடுவங்கள் என்பது, மக்களுக்கான பல தகவல்களை, அரசியல் சார்பன்றி, சாதி, சமய, பிராந்திய வேறுபாடுகளுக்கும் கட்சிக் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து கொடுப்பதாகும். இந்தத் தகவல் நடுவங்கள் பொது மக்களின் கல்வி கலாச்சார வளர்ச்சிகளுக்கும் கேந்திரமாகவும் செயற்படுவதுண்டு. அத்தோடு இந்த நடுவங்கள், தங்கள் மக்களின் வாழ்க்கை வழிமுறைகள், பண்பாடு கலாச்சாரங்கள், சமுதாயத்தில் நடக்கும் பொருளாதார விருத்தி வேலைகள், மக்களால் முன்னெடுக்கப்படும் சமய விழாக்கள், நெறிகள் போன்று பற்பல விடயங்களை மற்ற இனத்தார் வந்து அறிவதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஆவணங்களைப் பராமரிக்கும் முக்கிய கேந்திரமாகவும் பணிபுரிய எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழர் தகவல் நடுவம், தமிழர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியன விதத்திற் கொடுக்காமல், வேறு விடயங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தன்னை ஒரு இரகசிய ஸ்தாபனமாக்கிக் கொண்டு வருவதாக எண்ணத் தோண்றுகிறது. இங்கு நடக்கும் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்டவர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் வந்திருக்கிறது. தமிழர் தகவல் நடுவம் என்பது பல்தரப்பட்ட தமிழர்களின் பங்களிப்பையும் ஒன்று கூடல்களையும் உதாசீனம் செய்தால் இந்தத் தகவல் நடுவம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யாரின் இலாபத்திற்காகப் பணி புரிகிறது என்பதைக் கேட்கத் தமிழர்களுக்கு உரிமையுண்டு.

ஓருகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் மத்திய கேந்திரமாக இயங்கிய இந்த ஸ்தாபனம், 2009ம் ஆண்டு முடிந்த போரின் பின் ஏற்பட்ட புலிகளின் பிரிவுகளின் எதிரொலியாக இன்று மிகவும் தூரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்பேரவை, நாடு கடந்த ஈழத்தினர் அவர்களின் பிரதமர் என்போர் லண்டன் தமிழர் தகவல் நடுவத்தைக் கணக்கெடுப்பதில்லை என்றே தெரிகின்றது. புலிகளின் ஒருபிரிவு, ஏதோ ஒரு குழப்பத்தை (பேராட்டம்?) இலங்கையில் உண்டாக்கி அதனால் தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் விடயங்களைக் காய்நகர்த்துவது பலருக்குத் தெரியும். புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து போருக்காக அவர்கள் சேர்த்த தொகையின் ஒருசிறு பகுதியை இலங்கையில் வாழும் ஏழைத் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயாரில்லை. அப்படியிருக்கம் போது, பிரிந்த புலிகளின் லண்டன் ‘கோஷ்டியின்’ குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கின்றது. (இலங்கையில் இன்னுமொரு ஆயதப்போராட்டம் எப்போது வரும் என்ற கேள்வி அன்று கேட்கப்பட்டது).

ஜனநாயக (???) முறையில் கடல் கடந்த தமிழர்களின் பிரதமரானவர்களைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமும், எப்படியும் ஏதோ ஒரு மோசடி செய்து, தாங்கள் வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இன்னொரு புலிக் கூட்டமும் எங்கெங்கே பயணிக்கிறது? இலங்கைத் தமிழரின் எதிர்கால அழிவுக்கு யார் யாருடன் தொடர்புகளை (மேற்கத்திய அழிவு சக்திகள்) ஏற்படுத்துகிறது? அதில் தமிழர் தகவல் நடுவத்தின் பங்கென்ன என்பதை ஆராய்வது தவிர்க்க முடியாத முக்கிய விடயமாகும்.

இலங்கை ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகளின் பயணம், உருத்திரகுமாரின் தமிழ்ப் பிரதமர் பிரகடனம், தகவல் நடுவத்தின் இரகசிய கூட்டங்கள் என்பன தற்செயலாக நடப்பவையா? அல்லது ‘ஏதோ ஒரு சக்தி’ செய்யும் மாய விளையாட்டுக்களா? இந்த இரு புலிக் கோஷ்டியும் போராற் துயர்படும் தமிழ் மக்களுக்கு ஒருநேர உணவோ ஒரு முழுத் துணியோ இதுவரை கொடுக்கவில்லை. தமிழரின் பெயரில் பல மகாநாடுகளை ஒழுங்கு செய்த தகவல் நடுவம், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்க ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் புரிந்ததாக அறிய முடியவில்லை. அந்த நிலையில், போராற் துன்புறம் மக்களின் மீள்வாழ்வுக்குப் புலம் பெயர்ந்த மக்களின் பங்கு என்ற வெற்று வார்த்தைகளைத் தமிழர் தகவல் நடுவம் அள்ளிக்கொட்டுவதே வெட்கம்.

தமிழர் தகவல் நடுவத்தில், இலங்கையிலிருந்து அவ்வப்போது லண்டனுக்கு வரும், கல்வி கலாச்சாரப் பிரமுகர்களை வைத்துச்சில கருத்தரங்கங்கள் நடப்பதுண்டு. தகவல் நடுவத்திற்குப் பேச்சாளராக வரும் அத்தனைபேரும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர வெளிநாட்டாரின் ‘உதவியை’ நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்கள். இங்கு வந்த எந்தப் பிரமுகர்களும் ஒரு நாட்டுக்குள்ளே எவ்வாறு வேலை செய்து எங்கள் மக்களுக்கு உதவ முடியும் என்பது பற்றி ஆராய்வதில்லை. தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசை வசைபாடி புலிகளைக் காப்பாற்றுவதிலேயே கடந்த முப்பது வருடங்களைச் செலவளித்திருக்கிறதே தவிர, சாதாரண தமிழ் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் செய்தது கிடையாது.

02.10.2010 அன்று தமிழர் தகவல் நடுவத்தில் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும் மீள நம்பிக்கையூட்டுதலிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் தகவல் நடுவக் கூட்டங்களுக்கு வழக்கமாக வரும் பலருக்கு அழைப்புக் கொடுபடவில்லை. வழமைபோல் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபடுத்தும் பலரும் அதனுடன் உடன்படாத சிலரும் வந்திருந்தனர்.

நேற்று, இன்று, நாளைக்கு என்று எப்படிப் பார்த்தாலும் எப்போதும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்களான சிங்களவர்ளாற் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். சிறுபான்மையான நாங்கள் இதை உணர்ந்து கொண்டு எங்கள் உரிமையை ஜனநாயக வழியில்பெற முயற்சிக்க வேண்டும். என்றும் இல்லாத அளவுக்கு, இன்று பல வாழ்க்கைத் தேவைகளை எதிர்பார்த்து எங்கள் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு, லண்டனில் முன்னெடுக்கப்படும் நாடுகடந்த, கடல்கடந்த தமிழீத்தினாலும் முரண்பாட்டு அரசியல் மகாநாடுகளால் ஒரு பிரயோசனமும் கிடையாது. லண்டனில் வாழத்தேவையான  ஊதியத்தைத் தமிழரின் சோகத்தை வைத்து முகாரிபாடிச் சேர்த்தவர்கள் பலநூறாகும். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்க்கப் படிப்புத் தேவைப்படுபவர்கள் பெரும்பாலோனோர். தங்கள் சொந்த இனத்தையே முதலீடாக்கியவர்கள் நாங்கள். இப்படியாக உழைப்பில் பலவடிவங்கள் பரிணமிக்கும். அதில் ஒன்றுதான் இந்த தமிழர் தகவல் நடுவத்தின் ஒன்று கூடல்கள் என்றால் அதனை மறுத்துரைப்பதும் கடினமானதே.

முதலைக் கண்ணீர்!

அன்று (02.10.10) தமிழர் தகவல் நடுவக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தத் தமிழத் தகவல் நடுவ முதல்வர் திரு வரதகுமார் அவர்கள் தன் ஆரம்பவுரையில், ‘இன்று இலங்கையில் இருக்கும் பொதுமக்கள் சபைகள் – சிட்டிசன் கொமிட்டிஸ் – அங்கிருக்கும் அரசியல் நிலையால் பெரும்பாலும் செயலிழந்திருக்கின்றன. சிவில் சொசைய்ட்டிகள் மக்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண முடியாது.

நாங்கள்  இலங்கையிலிருந்து சில மூத்த அறிஞர்களை இவ்விடயம் பற்றிப் பேச அழைத்திருக்கிருந்தோம். கடந்த சில நாட்களாக அவர்கள் பலர் சேர்ந்து பல ஆய்வுகளை நடத்தி, அவர்கள் அங்கு மக்களின் வாழ்க்கையை முன்னேறாமல் தடுக்கும் சில விடயங்களை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்யச் சில சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்த இந்த அறிஞர்களும் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் சந்தித்துக் கொள்ளக்கூடிய கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்திருந்தோம்’ என்று சொன்னாhர்.

வரதகுமார் குறிப்பிட்ட ‘ஆய்வுக் கூட்டங்கள்’ பற்றிய விடயம் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கோ இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கோ அவர்களின் தலைவர்களுக்கோ எதுவும் தெரியாது என்பதும் இது பற்றி எதுவுமே அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.

தமிழ் மக்களுக்கான தலைவர்களுடன் இரகசிய கூட்டத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் நடத்தியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் இன்னுமொரு கூட்டம் வைப்பது தமிழ்த் தலைவர்களுக்குக் குழி பறிப்பதற்கா என்ற கேள்வியை இலங்கையிலுள்ள அத்தலைவர்களே விசாரித்தும் வருகின்றனர்.

கூட்டத்துக்குத் தரப்பட்டிருந்த தலையங்கத்துக்கும் அதுவரை அங்கு இரகசியமாக நடைபெற்று முடிந்த ஆய்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது போலிருந்தது. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புக்களை வலிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்ய இலங்கை அறிஞர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு லண்டனுக்கு வரவேண்டும் இரகசியமாகக் கலந்துரையாடல்களை வைக்க வேண்டும் என்பது புரியாத விடயமாகும்.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்படியான உதவிகளை இலங்கையில் வாடும் தமிழருக்குச் செய்யலாம் என்று கலந்துரையாட கூடியிருப்பதற்கும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘இரகசிய’ கலந்துரையாடலுக்கும் பெரிய தொடர்பில்லை. ஏதோ ஒரு சாட்டுக்கு இந்தக் கூட்டத்தை வைத்து மழுப்பப் பார்க்கிறார் என்பது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மூலம் தெரியவந்தது. புலம்பெயர்ந்த மக்கள் என்ற வார்த்தையைப் பாவித்து அவர்களுக்கு உசுப்பேத்த எடுத்த முயற்சி சுவிஸில் சரிவரவில்லை.

அத்துடன், அனுதாபத்துடன் புலம்பெயர் தமிழர் நாட்டில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்ன திரு வரதகுமர் அவர்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பல நாடுகளிருந்தும் பல தடவைகள் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நல்லிணக்கக் குழு’க்களாகப் போயிருந்தது தெரியும். ஆனால் இதுவரையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நல்லிணக்கக் குழுக்கள் செய்யும் பணிகள் பற்றிய தகவல்களைச் சொல்ல தகவல் நிலையத்தில் ஒரு கருத்தரங்கு வைக்கச் சொல்லிப் பல தடவைகள் கேட்டும் கேளாச் செவியனாக இருந்துள்ளார். அண்மையில் இணையத் தளங்களில் இதுபற்றி எழுதப்பட்டுமிருக்கிறது. அவர்களுடன் சம்பந்தப் பட்டவர்களால் தொடங்கப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்கள் நபர்கள் பற்றியும் இவருக்குத் தெரியும். இருந்தும் அங்கு தமிழருக்கு உதவி செய்ய யாருமே முன்வராத பாணியில் தகவல் நடுவம் ஒரு அபிப்பிராயத்தைத் தொடந்து செய்து கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு காலத்தில் புலியின் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்தவர்கள்கூட இன்று இலங்கையில் அல்லற்படும் தமிழர்களுக்கப் பல வித்தில் உதவுகிறார்கள் இவர்களையழைத்து, இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஒரு கருத்தரங்கம் வைத்ததே கிடையாது.

பெரும்பாலான தமிழர்களுக்கு அறிவிக்காமல், நடந்த இரகசியக் கருத்தரங்குக்கு அழைத்த பிரமுர்களில் சந்திரகாசன் (தமிழத் தேசியத்தின் தலைவர் செல்வநாயத்தின் தனயன்), மனித உரிமைவாதி சரவணமுத்து பாக்கியசோதி (கொழும்பு), ராஜன் பிலிப்(கனடா) என்போர் 2ம் திகதி தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்புக்கு முன்னரே பயணமாகிவிட்டார்கள்.

2ம் திகதி கூட்டத்திற்கு வந்திருந்தோர்  பேராசிரியர் சீலன் கதிர்காமர், பேராசிரியர் சித்தம்பலம், முக்கியமான (பழைய) தமிழ்த்  தேசியவாதி (அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளிநாட்டுத் தூதுவர் நிருபமாவிடம் கேள்விகேட்டதால் பிரமுகரானவர்), பேராசிரியர் கணேஸ், பேராசிசியர் மூக்கையா (மலைநாட்டின் பிரச்சினைகளை முன்வைத்தார்.)

அன்று நடந்த கூட்டத்தில், பேராசிரியர் சீலன் கதிர்காமர், தமிழர் தகவல் நடுவம் பல அறிஞர்களுடன் நடத்திய ஆய்வுகளின் (இரகசியமாக) சாராம்சத்தைக் கருத்தரங்கில் முன்வைத்தார். போராசிரியர் சீலன் கதிர்காமர் அவர்கள், தங்களின் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட, இலங்கைத் தமிழ் மக்களுக்காகச் செய்ய வேண்டிய முக்கியமான பத்து அம்சங்களை விளக்கினார். இந்தப் பத்து விடயங்களும் பல தடவை இலங்கையில் பல தூதுக் குழுக்களாலும் இந்திய, பிரிட்டிஷ்  அரச தரப்புக்களாலும் இலங்கை அரச தரப்புக்கு எடுத்தச் சொல்லப்பட்ட விடயங்கள் என்பது தகவல் நடுவ முதல்வருக்கு நன்றாகத் தெரியும். முப்பது வருடப் போரால் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த இலங்கை அரசால், இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்த 300,000 மேற்பட்ட தமிழர்களின் மீள் குடியேற்றத்தைச் செய்ய பல காலம் எடுக்கும் என்று தெரிந்தவர்கள், தென்னிந்திய முதல்வாரின் மகளும் இலங்கைத் தமிழரின் துயரைத் துடைக்க மிகவும் அக்கறை கொண்டவருமான கனிமொழியின் மூலம் இந்திய அரசின் உதவியை நாடியதும் தெரியும். அதன்பின் போராற் துன்பப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்ற விடயங்களில் நடக்கும் மாற்றங்களையும் அந்த நடவடிக்கைகளில் இந்தியா உட்படப் பலநாடுகளின் ஈடுபாடும், திரு வரதகுமார் தெரியாமலில்லை.

போரசிரியர் கதிர்காமரோ அல்லது வந்திருந்த மற்ற அறிஞர்களோ, போரால் அல்லலுறும் மக்களின் விடயத்தில் இதுவரை எந்த வித்திலும் ஈடுபட்டதாக எந்த தடையமும் கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் படித்த பேராசிரியர்களாக இருந்திருக்கலாம் ஆனால், இன்று சட்டென்று பொதுவேலைகளில் ‘குதிக்கும்’ வயது வலிமையோ அல்லது அரசியல் வலிமையோ அற்றவர்கள்.

திரு கதிர்காமர் அவர்கள் பேசும்போது, லண்டனில் 1998ல் நடந்த கூட்டத்தின்பின் எந்த மகாநாடுகளிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றார். பொதுவுடமைவாதியும் புலிகளின் பிரசார பீரங்கியுமாயிருந்த டாக்டர் விக்கிரமசிங்கவின் நண்பர் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் தனது பேச்சில்  தமிழர்கள் தங்கள்  பிரச்சினைக்கு ஆசிய நாடுகளின் உதவியை நாட வேண்டும், முக்கியமாகச் சீனாவின் உதவியை நாடவேண்டும் என்று சொன்னார். தங்களின் ஆய்வில் இலங்கைக்குத் தேவையான 5-6 வருடத் திட்டத்தை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், (முடிந்தவரை அவரினுரை தரப்பட்டிருக்கிறது);

”18வது சீர்திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் நன்மையில்லை, எங்களது ஆய்வின் முதலாவது விடயமாக, நிலப் பிரச்சினையயைப் பார்க்கிறோம். அதிலும் அகதிகளாக இருப்பவர்களின் நிலையும் இத்தோடு சம்பந்தப்படுகிறது. 2014 – 15 க்கிடையில் பெரிய மாற்றங்களை உண்டாக்க வேண்டும், எங்கள் ஆய்வில் தமிழ் மக்களின் விழிப்புணர்வை முன்னெடுக்கும் விடயங்கள் பற்றியும் முக்கியமாகக் கலந்துரையாடினோம். எங்களின் பிரச்சினைகளைச் சிங்கள மக்கள் பாராளுமன்றவாதிகள், முக்கியமாக ஜேவிபியுடன் பேசவேண்டும் வெளிநாட்டு அரசாங்ககங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்த் தகவல் நடுவத்துடன் சேர்ந்து இந்தியாவை நாட வேண்டும்.

கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தங்கள் திறமைகளை எங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும், அவசரகால சட்டத்தை எடுக்க வேண்டும், பலகாலமாகச் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், மிக மிக முக்கியமாக சிறையிலிருப்பவர்களின் பெயர் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மலையகப் பேராசிரியரான மூக்கையா அவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ்ப் பாராளுமன்றவாதிகளின் உதவியுடன் பிராஜாவுரிமையை இழந்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் பல சட்டதிட்டங்களாலும் பாதிக்கப்படுவதை விளக்கிக் கூறினார்.

புலம்பெயர்ந்த அரசியற் தலைமை!

வந்திருந்த பேராசிரியர்களில், பேராசிரியர் சித்தம்பலம்;, ‘இலங்கையில், தமிழ்ப் பகுத்களில் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் விடயங்கள் பேசப்படுகின்றன, ஆனால் தமிழர்களுக்கான அரசியலுரிமை பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. தமிழ்பேசும் மக்கள் அத்தனைபேரும் ஒன்றுபட்டு எங்கள் உரிமைக்குப் போராட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். ‘இதுவரை பல முறைகள் பல தலைவர்களால் அரசியல்த் தீர்வுகள் வைக்கப்பட்டன. இன்று நாங்கள் இருக்கும் நிலையில் வடக்கு கிழக்கை இணைத்துக் கேட்க முடியாது ஆனால் பிராந்திய ஆட்சி பற்றிப் பேசினால் சிங்களத் தலைவர்களே ஆதரவு தருவார்கள். இன்று அங்கு நடைபெறும் அரசியலில் தமிழரின் பங்கு ஒன்றுமில்லை. அங்கிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் வலிமையற்றவை. அரசியலுக்குத் தேவையான அறிவோ அனுபவமோ அற்றவர்கள் பதவிகளில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழருக்கான ஒரு நல்ல தலைமை உருவாக வேண்டும்’ என்பதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தார்.

பேராசிரியர். கணேஸ் பேசும்போது ‘ராஜபக்சா அரசு தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை தமிழ்பேசும் மக்கள் தங்கள் போராட்டத்தை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்’ என்றார். (சீனா புலிகளுக்கு நிறைய ஆயதங்களை விற்ற அதே காலகட்டத்தில் சிங்கள அரசுக்கும் பெருவாரியான உதவிகளைச் செய்வதும் இவர்களுக்குத் தெரியும்.)

இந்தியா, இலங்கைத் தமிழருக்குத் தூக்கிக்கொடுத்த ஈழத்தைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழரின் பரமவைரியாகத் தமிழத் தேசியத்தால் கருதப்படும் சிங்களவருடன் சேர்ந்து இந்தியரைத் துரத்திய பெருமையையும் ரஜிவ் காந்தியைப் புலிகள் கொலைசெய்ததால் இனி ஒருநாளும் இந்திய மத்திய அரசின் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது என்பதையும் ஏன் இந்தப் பேராசிரியர்கள் உள்வாங்க மறுக்கிறார்கள்?

இதுவரை இலங்கையில் நடந்த போராட்டங்கள் பற்றி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியாதா? இவர்கள் என்ன கருத்தைப் பின்னணியாக வைத்தக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்கு அவர்கள் பல நாட்கள் இரகசியமாக நடத்திய ஆய்வுகளின் உரையாடல்கள் காரணிகளாக இருக்கலாம். மூன்றாவது நாடொன்றின்  ஈடுபாட்டையும் சிலர் உறுத்திச் சொன்னார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்கள் இதுபற்றி, தமிழருக்கு உதவும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசியதாக திரு வரதகுமார் கூட்டத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். இவர்கள் யாரைச் சந்தித்தார்கள் என்பது சொல்லப்படவில்லை – இரகசியம். அதுவரை நடந்த ஆய்வுகள் பற்றித் தகவல் நடுவத்தின் அறிக்கையும் வரவில்லை. அறிக்கையை உடனடியாக எழுத யாருமில்லை என்றும் சொல்லப்படலாம்

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து இயங்கும் இந்த ஸ்தாபனத்தில் தகவல் நடுவ முகவரைத் தவிர யாரும் முழு நேர ஊழியராக நியமிக்கப்படவில்லை. இலங்கையில் பல வருடங்களாகத் தனது பதவியாளரை வைத்திருக்கும் தகவல் நடுவத்திற்கு ஏன் லண்டனில் ஒரு காரியதரிசியை நியமிக்கத் தயக்கமாக இருக்கிறது என்பது புரியாத பல விடயங்களில் ஒன்றாகும்.

வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான மானியத்தை பல ஸ்தாபனங்களிலிருந்த பெற்று மகாநாடுகளை தகவல் நடுவம் நடத்துகிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என்று எந்த ஆவணங்களும் பிரசுரிக்கப்படவில்லை. அடிக்கடி பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களை அழைத்து ஒன்று கூடல் வைப்பது என்பதன் காரணம், உலகறிந்த என்ஜிஓ நபரான பாக்கியசோதியின் பெயரைப் பயன்படுத்தி தகவல் நிலையம் பெறும் வருடாவருட மானியத்தை உயர்த்திக்கொள்ளவா என்பதும் தொடரும் கேள்விகளில் ஒன்று.

இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு சிலர் லண்டன் தகவல் நடுவம் சார்பில் வெளிநாட்டார் உதவியுடன் இலங்கையிலிருந்து வெளிநாடுவர உதவி செய்யப்படுகிறது என்றும் அதனால் சிலர் நன்றிக்கடனுக்காக தகவல் நிலையம் பற்றித் தெரிந்தும் தெரியாமலிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
முப்பது வருடங்களாகத் தகவல் நடுவத்தில் ஒரு நிரந்தர காரியதரிசி இல்லாததால் அவ்வப்போது சில ‘இளம்தலைமுறை'(?)யினர் ‘வாலண்ட்டியஸாக’ வந்து ஏதோ செய்வார்கள். பொது மக்கள் நெருங்க முடியாத ‘தகவல்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ அங்கு என்ன நடக்கிறது என்பது ஒரு துப்பறியும் கதை மாதியே இருக்கிறது. அங்கு வேலை செய்வோர் ஓருத்தருக்கு ஒருத்தர் விசுவாசமான – இரகசியமான ஒரு ‘குடும்பம்’ மாதிரியான சூழ்நிலையில் தகவல் நடுவம் இயங்குவது புலிகளின் புலனாய்வுத்துறை என்ற பாணியிலேயே.

தகவல் நடுவத்திற்கு உதவிக்குச் செல்பவர்கள் இந்தத் தகவல் நடுவம் தமிழரின் முன்னேற்றத்துக்காக உழைப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? யாருக்காக நடக்கிறது இதுவரை நடந்த விடயங்களால் என்ன பிரயோசனம் வந்தது  போன்ற தகவல்களைத் தகவல் நடுவ முகவர்  தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டுள்ளது.

அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த அறிஞர்களும் தகவல் நடுவ முகவரும் தங்களின் முக்கிய கோரிக்கைகளாகத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களின் பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளிவர வேண்டும் என்பவையாகும். இவை அத்தனையும் நல்ல கோரிக்கைகள்தான், அரசாங்கமும் அடிக்கடி கொஞ்சப்பேரை விடுதலை செய்கிறது. ஆனாலும்;;;;; தகவல் நடுவத்தார், உள்ளிருக்கம் பேராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும் ஏன் இப்படிப் பதறுகிறார்கள் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இராணுவத்தை அகற்றிவிட்டு, போராளிகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிட்டு இன்னுமொரு பயங்கரவாதத்தை முன்னெடுக்கப் போகிறார்களா? கடந்த ஆண்டு போர் முடிய முதல் ஐக்கிய நாடுகள் படையை இலங்கையில் இறக்க வேண்டும் என்று தகவல் நடுவம் பிரச்சாரம் செய்தது. அப்படி ஒரு படைபோனால் சிங்களவர்கள் ஆயதமெடுப்பார்கள் என்று தெரியும். இப்போது, பட்டினியான அகதிகளுக்குச் சாப்பாடு போடாமல், தற்கொலைதாரிகளாகப் போராட்டத்தில் பயிற்சி பெற்ற  போராளிகளை வெளிக்கொண்டுவரக் கோருகிறார்கள். ஏன்?

தங்களுக்குப் பிடிக்காத அரசுகளுக்கத் தலையிடி கொடுக்க அந்த நாடுகளில் பிரச்சினைகளை உண்டாக்குவது மேற்கு நாடுகளின் ஒரு பெரிய ‘ஜனநாயகப் பணியாகும்’. இதனால் மேற்கு நாடுகளின் முக்கிய விற்பனையான ஆயத விற்பனையைக் கூட்டுவார்கள். ஓரு கட்டத்தில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ‘விடுதலைப் போராளிகள்’ என்று போற்றி மேற்கு நாட்டில் ஒரு மாயையை உண்டாக்குவார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை முன்னெடுக்க அமெரிக்கா செய்த பணிகள் இதற்கு உதாரணம்!

மேற்கு நாடுகளின் இந்த மனித உரிமை விடயத்தை ஆழமாகத் தெரிந்து கொள்ளாத, பாதிக்கப்பட்ட நாடுகளின் பொது மக்கள், ஸ்தாபனங்கள், இவர்களின் ‘மனித உரிமைக்குரலின் இரக்கத்தை’ உண்மையென்று நம்புவார்கள். ஆயதத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் வியாபாரிகளை ‘’மனித உரிமைவாதிகள்’ என்ற பெயரில் பாதிக்கப்படும் நாடுகளுக்குப் பல போர்வைகளிற் செல்வார்கள். ஏன்.ஜி.ஓ. என்ற பெயரில், தங்களுக்குக் குழல் ஊதும் ஒரு கோஷ்டியை உருவாக்குவார்கள். அவர்கள் பல நாடுகளுக்குச் செல்லவும் மகாநாடுகளிற் பங்கு பற்றவும், தங்களின் நாட்டைப் பற்றித் திட்டித் தீர்க்கவும் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். அந்தச் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்க உண்மையாகக் குரல் கொடுப்பவர்களைத் தங்களின் ஊது குழல்களால் தாக்கித் தள்ளுவார்கள் (புலிகளிடம் வாங்கிக் கட்டியவர்களுக்கு இது புரியும்)

ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக ஒன்றமில்லாமல் பணம் படைக்கத் தங்கள்  நவீன ஆயதத்தையே நம்பியிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் போர் முடிவு பெற்றது பெரிய ஒரு அடியாகும். எப்படியும் ஒரு பிரச்சினையை உண்டாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். சரத் பொன்சேகாவை ஆதரித்தால் சிங்களவர் தங்களுக்குள் அடிபடுவார்கள் என்று புத்தியுள்ள தமிழர்கள் சொன்னார்கள். பொன்சேகாவை ஆதரித்தவர்கள் நினைத்தார்கள். சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். 1971, 89ம் ஆண்டுகளில் ஜேவிபி யின் ஆயுதப் புரட்சியை மனதில் வைத்துக்கொண்டு, சரத் பொன்சேகாவின் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை வைத்து, ஆயுதம் விற்கலாம் என்று போட்ட கணக்கும் பிழைத்து விட்டது. அதற்கான முற்கட்டமாக சுவிட்சர்லாந்தில்’ இரகசியமாக’ நடந்த கூட்டத்தில் தமிழ்த் தலைவர்களுக்கு, மேற்கு நாட்டு எஜமான்கள்  சொன்னபடி அவர்கள் நடந்தும் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை.

இப்படியான இரகசியக் கூட்டங்களுக்குப் பின்னாலிருக்கும் பாரதூரமான விளைவுகளைத் தமிழர்கள் உணர வேண்டும். ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்வாழ்க்கை…..’ என்ற பெரிய வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் பயங்கரங்களைத் தமிழ்பேசம் மக்களுக்குத் தெரியப்படுத்த புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும். இந்தக் கூட்டங்களுக்குத் தொடர்ந்தும் பொருளாதார உதவி செய்யும் ஸ்தாபனங்களின் உள்ளுணர்வை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் துன்பத்தில் இலாபம் காணும் நாடுகளை அடையாளம் காண வேண்டும். அமெரிக்கப் படைகள் 133 நாடுகளில் தளங்களை வைத்திருக்கிறது. அவர்களின் ஆயுதங்களை வாங்கப் பல நாடுகளை ‘வியாபார’ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுவதுண்டாம். இன்று பொருளாதாரத்தில் பின்னடையும் மேற்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனை உடனடியாகத் தேவைப்படுகிறது. அதற்குப் பலியாவது அப்பாவி இலங்கை மக்களா?

தமிழருக்கு உதவி செய்யும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் வந்திருந்த அறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அந்த ‘நல்ல’ மனிதர்கள் பற்றிய விடயங்கள் என் இரகசியமாகவிருக்க வேண்டும்? உருரத்திர குமார் கூட்டத்தால் ஓரம் கட்டப்பட்ட வரதகுமார் இன்ற யாருடன் துணை சேர்ந்திருக்கிறார். ஐரிவி இல் பேட்டி கொடுத்த பிரமுகர்களுக்கு ஐரிவி யாரால் நடத்தப்படுகிறது என்று தெரியாதா?

இதுபற்றிய – அதாவது லண்டன் தமிழர் தகவல் நடுவத்தால் தொடரப்படும் இரகசியக் கலந்துரையாடல்களைப் பற்றிய சில கேள்விகளை முதலில் வைக்க வேண்டும், தமிழர்களுக்குத் தகவல்கள் தருவதற்காக இயங்குவதாகச் சொல்லப்படும் ஒரு ஸ்தாபனம் ஏன் பல விடயங்களை இரகசியமாக நடத்துகிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்காச் சேவை செய்வதாகச் சொல்லும் அமைப்புக்கள் மக்களை இருட்டில் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு தமிழர் தகவல் நடுவகம் பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை நாணய மதிப்பின்படி ஒரு சில கோடிகள் செலவழித்து சுவிட்சர்லாந்தில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் அழைக்கப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிய விடயம் இரகசியமாக கசிந்தபோது, இலங்கையிலுள்ள பலர் தமிழ்த் தலைவர்களைத் தொடர்பு கொண்டார்கள். இராஜபக்சா சகோதரர்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிய, வெளிநாட்டுச் சக்திகள் பணம் கொடுத்துத் தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்கள் சரத் பொன்சோகவுக்கு வாக்களிக்கச் செய்யப் பண்ணப்போவதாக வதந்திகள் உலவின.

பிரித்தானிய அரசியற் துப்பறியும் கதைகளில் மிகவும் பிரசித்தகான கதைகளின் பின்னணியில் வெளியாகும் ஜேம்ஸ் படங்களில் அதி வீரனான ஜேம்ஸ் பொண்ட், பிரிட்டனுக்குப் பிடிக்காத நாடுகளின் தலைவர்களை மாற்றப் பல சாகசங்கள் செய்வார். சாகசங்ளின் மகிமையால் வெல்வார். திரு வரதகுமார் ஜேம்ஸ்பொண்டாக மாறி இலங்கை அரசைத்  தூக்கியெறிய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது சொஞ்சம் கஷ்டமான விடயமே. குழந்தைகளுக்குத்தான் ஜேம்ஸ் பொண்ட் படம் சரியானது, யதார்த்த விடயங்களுக்கல்ல.

கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களை அழைத்து வைக்கப்படவிருந்த கூட்டம்  பற்றிய நிகழ்ச்சிநிரல்கூட, கூட்டத்திற்கு, இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தமிழ்த் தலைர்கள் மேற்கு நாட்டு மேடைக்கு வந்தபோது, ஓரு வெள்ளையினத்தவர் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவிருந்ததைக் கண்டார்கள். ”கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் எங்கே?, தமிழ்த் தலைவர்களுடன் பேசுவதற்கு ஏன் ஒரு அன்னியன் தலைமை தாங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா கேள்விகள் கேட்டதும், அந்தக் கேள்வியின் ஆத்திரத் தொனியில் அல்லாடிப்போன தகவல் நடுவ முகவர் வரத குமார் ஏதோ ஒரு வகையில் கூட்டத்தை நடத்தியதும் வெளிவந்தது. கூட்டத்திற்குச் சமுகம் தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் சம்பந்தர் பட்டாளம் இலங்கையில நடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் இனத்தின் பகைவனாக, ‘தமிழர்கள் இலங்கை மண்ணின் மைந்தர்கள் அல்லர் அவர்கள் இந்நாட்டுக்கு வந்தேறு குடிகள், அவர்கள் தங்களுக்கு என்று எதையும் கேட்க உரிமை கிடையாது, சிங்களவர் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று கிண்டலடித்த சரத் பொன்சேகாவுக்காக வாக்குக் கேட்டது.
 
அப்படியான சிங்களத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் தமிழர் தகவல் நடுவம் அண்மையில் தங்கள் ‘மீட்சி’ பத்திரிகையில் இதுவரை தமிழர்களுக்குத் துரோகம் செய்த அரசியலைக் கண்டித்து எழுதியிருந்தது. அதே துரோகத்தை யார் தொடர்கிறார்கள் என்பதை உணராமற் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது மிகவும் தான்தோன்றித் தனமாகும். நேரத்துக்கு நேரம் தனது கொள்கைகளையும் கணிப்புகளையும் மாற்றிக்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் யாருக்காக வேலைசெய்கிறது என்ற கேள்வி கேட்கப்படுவது தவிர்க்க முடியாதது.

தகவல் நடத்தும் பல கூட்டங்களின் தொடர்பாக எதிர்வரும் 23ம் திகதி, ‘போருக்குப் பின் இலங்கையில், பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்’ என்ற பெயரில் இன்னுமொரு கருத்தரங்கு நடக்கிறது. இக்கூட்டத்திற்கு அகில உலக என்.ஜி.ஓ ஸ்தானங்களின் உதவியுடன் இலங்கையிலிருந்து யார் பேச்சாளராக வரப்போகிறார்கள் என்பதும் இதுவரை இரகசியமாகவே இருக்கிறது.

Related Articles:

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

சிலி சுரங்கத்தினுள் சிக்கிய 33 பேரும் வெற்றிகரமாக மீட்பு – 33 எண் அதிர்ஷ்டமென அறிவிப்பு

13.jpgசிலியில் 69 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றுக்காலை ஆறுமணிக்கு சுரங்கத்திலிருந்து 33 வது நபரும் வெளியே மீட்கப்பட்டார். சுரங்க வேலைகளிலீடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டதையடுத்து இந்த 33 பேரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். எழுநூறு மீற்றர் ஆழத்தில் 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்துக்குள் கிடந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய துளையிட்டு உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ஒளி ஒலி கருவிகள் அனுப்பப்பட்டு உறவினர்கள் தொடர்பினை ஏற்படுத்தினர். இந்த முயற்சியும் வெற்றி பெறவே இவர்களை வெளியே எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மணித்தியாலத்திற்கு ஒருவரென ஒருவர் பின் ஒருவராக 33 பேரும் மீட்கப்பட்டனர். இந்த 33 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண் என சிலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 33 பேரையும் மீட்க 33 நாட்கள் கடுமையான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. வெளியே எடுப்பதற்கென துளையிடப்பட்டவிட்டம் 66 செ. மீற்றர். இது 33ன் இருமடங்கு. வெளியேற்றும் நடவடிக்கை முடிந்த திகதி 2010.10.13. இதன் கூட்டுத்தொகையும் 33. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வயதும் 33. எனவே 33 ஒரு அதிஷ்ட எண் என மீட்புப் பணியிலீடுபட்ட கம்பனியின் அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் 33 பேரும் உயிருடன் உள்ளோம் என எழுதி அனுப்பப்பட்ட இலத்தீன் எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் 33 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். 33 என்ற இலக்கத்தை சிலி அரசாங்கம் அதிஷ்ட எண்ணாக அறிவித்துள்ளது.

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது

haturusinha.jpgயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார். 1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு

ranjan1.jpgஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.