17

17

இலங்கை இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறுபவர்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும்: ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்து வெளியே செல்லும் மக்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் வலுக்கட்டாயத்தின் பேரில் வெளியே கொண்டுசெல்லப்படுதல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவற்றைத் தடுக்க இப்படியான பதிவுகள் தேவை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் நாளொன்றுக்கு முப்பது பேர் என்ற அளவில் அறிவிக்கப்படாத இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை மேற்கோள் காட்டி ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்காக எவரும் கொண்டுசெல்லப்படும்போது அது பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

சானியா மிர்சா 78 வது இடத்துக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஉலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் 98 வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா 20 இடங்கள் முன்னேறி 78 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பர்மிங்காமில் நடந்த டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் சானியா தர வரிசையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார். ரஷிய வீராங்கனை தினரா சபீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் 132 வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 154 வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற லியாண்டர் பெயஸ் 5 வது இடத்தில் உள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான “சற்’ வெட்டுப்புள்ளிகள் விரைவில்

பல்கலைக் கழகங்களுக்கு 2008/2009 கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான “சற்’ வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார்.
மீளத்திருத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காத்திருக்கிறது.

பரீட்சை பெறுபேறுகளை மீள மதிப்பிடும் பணியை பரீட்சைகள் திணைக்களம் பூர்த்தி செய்யவுள்ளது. 10 நாட்களுக்குள் “சற்’ வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக மதிப்பீடு செய்ய முடியும் என்று பேராசிரியர் காமினி சமரநாயக்கா கூறியுள்ளார்.

இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக 48 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடம் 20,600 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக்கழகங்களின் வசதிகளுக்கு அமைய மாணவர்கள் அனுமதித் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு திட்டமிடுவதாகவும் பேராசிரியர் சமரநாயக்கா கூறியுள்ளார்.

அதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடம் புத்தளவில் இருந்து பெலிஹுபில் ஓயாவிலுள்ள அதன் பிரதான வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தளவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விசேட அலகொன்றை ஏற்படுத்தவுள்ளோம். யாழ்ப்பாண, கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இந்த விசேட அலகு ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு தயங்கும் மாணவர்களின் பிரச்சினையை புத்தள வளாகம் தீர்த்துவைக்கும் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீள் மதிப்பீடு செய்யப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை சில நாட்களுக்குள் பரீட்சைத் திணைக்களம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க கூறியுள்ளார். சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் தமது பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.