15

15

700 கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க மாற்று நடவடிக்கை

பேஸ்லைன் வீதியின் மூன்றாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 700 கட்டடங்களை அகற்றவேண்டியுள்ளதால்; அதனைத்தவிர்ப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாற்று நடவடிக்கையாக கொழும்பு ஹொரனை வீதி அடங்கலாக  ஹைலெவல் வீதியில் கிருலப்பனை முதல் காலி வீதியின் இரத்மலானை வரையிலான பகுதி மறுசீரமைக்கப்படவுள்ளது. இதேவேளை இத்திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படவுள்ளன.

பிரதமர் ரத்ணசிறி – கென்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை

premier_with_unkn.jpgகென்யா வுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க அந்நாட்டு ஜனாதிபதி எம்வய் கிபகியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கென்ய ஜனாதிபதியின் அழைப்பையேற்று அங்கு சென்றுள்ள பிரதமருக்கும் கென்ய ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அந்நாட்டின் தலைநகரான நைரோபியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐந்து நாடுகளைக் கொண்ட கிழக்கு ஆபிரிக்க சமூகத்தில் கென்யா மிக முக்கியமான ஒரு நாடாகும். பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கையும் கென்யாவும் 1970ஆம் ஆண்டிலிருந்தே இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேசியப்பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

susilpremjayanth.jpgதேசியப் பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி 86 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் விதி முறைகளுக்கு ஏற்பவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

வாழைச்சேனையில் த.ம.வி.பு. உறுப்பினர் சுட்டுக்கொலை

gun.jpgவாழைச் சேனை பிரதேசத்தில் இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மதன் எனப்படும் சண்முகநாதன் வசந்தன் (வயது 29) என இந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருங்காலிச் சோலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த வேளை, எதிர்கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இவர் சுடப்பட்டார்.

ஐ.நா. தூதுவர் வி.ஜே.நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்: மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க பான் கீ மூன் முயற்சி

model-of-united-nations.jpgஇலங்கையில் மக்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் தனது மூத்த அலுவலர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். தலைமைச் செயலர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்.

மோதலில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து அச்சங்கள் அதிகரித்துவரும் நிலையில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை அரசுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

ஒரு மாதம் முன்னர், நம்பியார் அவர்கள் இலங்கை வந்து ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்து திரும்பிய பின்னர், யுத்தப் பிரதேசத்திற்குள் ஐ.நா.செயலணிக் குழு செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் – கருணாநிதி

karunanithi.jpgதேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

வவுனியா முகாம்களில் தற்போது தொற்றுநோய் பரவல் இல்லை- அரசாங்க அதிபர்

chals_.jpgவவுனியாவில் உள்ள முகாம்களிலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களிலும், உள் நாட்டில் இடம்பெயர்ந்த இரண்டு லட்சம் பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதுமான வசதிகளின்றி இருப்பதாகவும், மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதாக வரும் செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களிடம் கேட்டபோது, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்றார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதற்கு முன் கடும் வெயில் காரணமாக கொப்பளிப்பான் எனப்படும் சிக்கன் பாக்ஸ் நோய் பரவியதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அது பற்றி தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் தலைமையகம் ஜே.வி.பி.க்கு உரித்தானது – சோமவன்ச

somavamsaa.jpgநாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தையும் நல்லாட்சியையும் வழங்கக்கூடிய ஒரே கட்சி ஜே.வி.பி. மட்டுமேயாகும். இன்னும் சிறிது காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இருக்கும் இடம் தெரியாது மக்களே செய்து விடுவார்கள் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா ஜே.வி.பி.க்கே உரித்தானது. அதனைக் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லை பன்னிப்பிட்டிய வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. கட்சியின் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் கலந்து கொண்டு பிரதான உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

mullivaikaal-01.jpgஎஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தப்பிவரும் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 14ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் இறுதியாக அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து நேற்றுக்காலை பெருந்தொகையான பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததாகவும் இவர்களை இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணம் உள்ளதாக பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கரையாமுள்ளி வாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தை உள்ளடக்கிய மிகவும் குறுகிய பிரதேசத்திற்கு படை நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் எஞ்சியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டுவாக்கல் பிரதேசத்தின் ஊடாக கடந்த இரு தினங்களாக புலிகளின் பாரிய மண் அணைகளை தகர்த்த வண்ணமும், கைப்பற்றிய வண்ணமும் வேகமாக முன்னேறிச் சென்ற 59வது படைப் பிரிவினர் பொதுமக்கள் சிக்குண்ட பிரதேசத்தை அண்மித்திருந்தனர்.

நேற்றுக் காலை தொடக்கம் குறித்த சில மணிநேரத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து புலிகள் தப்பிவரும் சிவிலியன்களை தடுக்கும் வகையில் கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.புலிகளின் கடும் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் வர ஆரம்பித்ததை அடுத்து இராணுவத்தினர் புலிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அந்த மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் அதனை அண்மித்த பிரதேசத்திற்குள்ளும் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளை நோக்கி பொதுமக்கள் வருகைதந்த வண்ணம் உள்ளதாகவும் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை பாதுகாத்து சிகிச்சை அளிக்கும் வகையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

முள்ளியாவளை பிரதேசத்திற்கு அவசர அவசரமாக விரைந்த ஹெலிகள் அநுராதபுரத்தை நோக்கி காயமடைந்தவர்களை அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் விமானப்படை ஹெலிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இதுவரை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்துள்ளனர்.

இலங்கையில் மனிதப்பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று பெரும் பேரணி

இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்து வரும் மனிதப் பேரவலத்தை கண்டித்து மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.  இது தொடர்பாக மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உலகின் எந்த மூலையிலும் நடந்திராத அளவிற்கு மிகக்கொடுமையான மனித பேரவலத்தைச் சந்தித்து நிற்கின்றது வன்னிப்பெரு நிலம். வன்னி நிலம் எங்கும் ஓடி ஓடி ஒதுங்கி கடைசியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்படுவதுடன், அனைத்துவிதமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் கொண்டு இப்படுகொலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் அப்பாவி மக்களை அச்சுறுத்தி அவர்களை ஆண், பெண், வயது முதிர்ந்தோர், நோயாளர்கள், குழந்தைகள் வேறுபாடின்றி கொன்று குவித்து உளவியல் ரீதியாகவும் உணவு, மருந்து தடைகள் மூலம் அவர்களைத் துன்புறுத்தி வருகின்றது. நூறு, இருநூறு என்றிருந்த கொல்லப்படுவோரின் எண்ணிக்கை இன்று ஆயிரம், இரண்டாயிரம் என உயர்ந்து நிற்கின்றது.

இத்தனை இன்னல்கள் அனுபவிக்கும் அந்த மக்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். உலகு எங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உறவுகள். புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர்.

வீதி தோறும் முக்கிய அலுவலகங்கள் தோறும் தூதரங்கள் தோறும் பேரணியாய் அணிதிரண்டு நிற்கின்றனர். உணவு துறந்து, வீடு வாசல்கள் துறந்து வீதியே வாழ்வு என முழங்கி முழங்கி போராடுகின்றனர்.  நாமும் தமிழர்கள் தான். நாம் என்ன செய்கிறோம்? அங்கு சாகின்ற அந்த உறவுகளுக்கு தமிழர்கள் என்ற முறையிலும் மனித நேயம் மிக்கவர்கள் என்ற முறையிலும் என்ன செய்யப் போகிறோம்?

நமது தொடர் முயற்சியாக நாளை (இன்று) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் இலங்கைத் தூதரகத்திற்கு முன் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு இந்த பேரணி நடைபெறவில்லை. சாவின் விளிம்பில் இரத்தக் களரியில் செத்துக்கொண்டும் உறவுகளைக் காப்பதற்கு கூடுகின்ற பேரணி இது.

இன்றைய இக்கட்டான நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல் மிகத் தேவையானதாய் இருக்கின்றன. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இம்மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதம் இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.  தமிழர்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நமது உறவுகள் கொன்று குவிக்கப்படுவதை எதிர்த்து பேரணியாய் வீதியில் அணிதிரள வேண்டும்.

மனிதக் கேடயங்களாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு எமது கூடியபட்ச கண்டனத்தை வெளிப்படுத்த வரலாறு காணாத பேரணியாய் ஒன்றிணைவோம் என ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.