நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தையும் நல்லாட்சியையும் வழங்கக்கூடிய ஒரே கட்சி ஜே.வி.பி. மட்டுமேயாகும். இன்னும் சிறிது காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இருக்கும் இடம் தெரியாது மக்களே செய்து விடுவார்கள் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா ஜே.வி.பி.க்கே உரித்தானது. அதனைக் கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லை பன்னிப்பிட்டிய வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. கட்சியின் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வைபவத்தில் கலந்து கொண்டு பிரதான உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.