May

May

மட்டு. மாவட்ட பாடசாலைகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கும் பணி

sri-lankan-schools.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வியலுவலகங்களும், பொலிஸாரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய நான்கு வலயக் கல்வியலுவலகங்களின் மேற்பார்வையுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையுடன் இப்பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுடன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.

பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுவில் பாடசாலை அதிபர், பெற்றோர், பொலிஸார் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒரு சிலர் அங்கம் வகிக்கவுள்ளனர். இப்பாதுகாப்புக் குழுக்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயற்படுவதுடன் பாடசாலை நேரங்களிலும் பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலையை விட்டு வீடு திரும்பும் போதும் கூடிய கவனம் செலுத்தவுள்ளனர்.

அக்கினி நட்சத்திரம் பூமி – சூரியன் நேர் கோட்டில்; 28 வரை உஷ்ணம் உச்சத்தில்

தற்போது நாட்டில் நிலவி வரும் உஷ்ணமான காலநிலை எதிர்வரும் 28ஆம் திகதி வரை சற்று அதிகரித்தே காணப்படும். மே மாதம் நேற்று எட்டாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த அதிகரித்த உஷ்ணமான காலநிலை நிலவும். குறிப்பாக மே 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாலேயே இந்த உஷ்ண நிலை சற்று அதிகரிப்பதற்கு ஏதுவாகிறது.

சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை சோதிட வல்லுநர்கள் அக்னி நட்சத்திர காலம் என கூறுவர்.

தற்போது இலங்கையில் 33, 34 செல்ஷியல் வெப்ப நிலை இருக்கின்ற போதும் குறிப்பிட்ட அக்னி நட்சத்திர காலப் பகுதிக்குள் சுமார் 36, 37 செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். இக்காலப் பகுதியில் இந்தியாவில் கூடுதலான வெப்ப தாக்க மரணங்களும் (Sun strok) ஏற்படலாம். இதுவரை அங்கு சுமார் 10 மரணங்கள் வரை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான வெப்பதாக்க மரணங்கள் இலங்கையில் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன. குறிப்பாக இலங்கையில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு நிகழ்வதில்லை. இருப்பினும், தற்போது காலநிலை மாற்றத்தால் கடலின் உஷ்ண நிலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் அதிக வியர்வை, புழுக்கம் ஏற்படும். இந்த நிலை மாறவேண்டுமாயின் கடும் மழை பெய்வது மிக முக்கியமாக உள்ளது. கடலிலிருந்து உஷ்ணக் காற்று வீசுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடலின் உஷ்ண நிலை சுமாராக 24 செல்ஷியஸ¤க்கு குறைவாகவே காணப்பட வேண்டும். எனினும் தற்போது கடலின் உஷ்ணநிலை 29 முதல் 31 வரையிலான ஷெல்சியஸில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா 10 மி.டொலர் உதவி

vavuniyatents.jpgவடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் அவுஸ்திரேலியா 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஐ.நா. முகவர்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நீர் சுகாதார இருப்பிடம் உணவு மற்றும் ஆரோக்கிய செயற்பாடுகளுக்கு இந்நிதி பயன்படுத்தப் படும் என அவர் கூறினார். கடந்த டிசம்பர் தொடக்கம் அவுஸ்திரேலிய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 23.5 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

army-crest.jpgஇலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தங்களின் தாக்குதல்களை தொடரும் என்று இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆறு சதுர கிலோமீட்டர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்த நிலை மாறி, தற்போது இரண்டரை சதுர கிலோமீட்டர் பகுதியாக இது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை இராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த அறிவிப்பு என்று விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறினார்.

இந்தியாவின் இரண்டாவது மருத்துவக் குழு இலங்கை வரும் : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

indo-lanka.jpgஇலங்கையின் வடக்கே மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள தனது இரண்டாவது மருத்துவ குழுவினரை அடுத்த வாரமளவில் இந்தியா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

புல்மோட்டை முகாம்களில் ஏற்கனவே 60 நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து வந்த இந்திய வைத்திய குழுக்களுக்குப் பதிலாக இவர்கள் அப்பணியை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல்துஷ்பிரயோகத்தின் பின் சிறுவன் கொலை – சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

gun00.jpgமொனராகல, கஹம்பான பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை மாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மொனராகல பொலிஸாரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். கஹம்பான காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.

சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இவர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளார்.  அத்துடன் சந்தேகநபர் இராணுவத்தைச் சேர்ந்தவரென்றும் மொனராகல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 493 பேர் புல்மோட்டை வருகை

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து “கிறீன் ஓசன்’கப்பல் மூலம் வியாழக்கிழமை இரவு, காயமடைந்த மற்றும் நோயாளர்களென 493 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் இரவு 8.35 மணியளவில் புல்மோட்டை கடற்பரப்பை வந்தடைந்தது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கீடு – அமைச்சர் நவரத்தினராஜா

era_thurairatnam.jpg கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கால்நடைப் பண்ணையாளர்கள் பல வருட காலமாக மேச்சல் நிலமற்ற நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதுடன் அவர்களது நாளாந்த வருமானமும் மிகக் குறைந்த நிலையிலே மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், பால் உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பண்ணையாளர்கள் மேச்சல் நிலம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அவர் அபிவிருத்தியமைச்சர் சி.பி. ரத்னாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பாற்பண்ணையாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் கூடிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு கால்நடை பண்ணையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பிரதேச செயலாளர், கால்நடை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வியட்நாம், காஸாவில் படுகொலை புரிந்தோர் இன்று இலங்கைக்கு உபதேசம் – திஸ்ஸ கரலியத்த

parliament-of-sri-lanka.jpgவியட்நாம், காஸா பகுதிகளில் படுகொலைகளை புரிந்தவர்கள் இன்று இலங்கைக்கு உபதேசம் செய்ய முற்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள கனிய வளங்களை அபகரிக்கவே இன்று பல வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட போட்டி போடுகின்றன. அதற்காகவே இலங்கையை இரண்டாக்க முயற்சிக்கின்றனர்.

வியட்நாம், காஸா போன்ற இடங்களில் படுகொலைகளை புரிந்தவர்கள் கூட இன்று எமது நாட்டுக்கு உபதேசம் செய்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கே ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் தமது சுயநலத்துக்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனரே தவிர இங்குள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.

நாம் எம்மை, எமது நாட்டை நேசிக்கும் தொண்டர் அமைப்புகளுக்கு மட்டுமே இங்கே சேவையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கு வழங்க நாம் தயாராயில்லை.

அகதி முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க ஜனாதிபதி விரைவில் அனுமதி வழங்குவார்.

பன்றி இறைச்சி பயன்படுத்தத் தடை

mexican.jpgபன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு எச்சரித்திருப்பதால் தென் பகுதிகளில் உள்ள உல்லாசப் பயணிகள் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி உணவுக்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் இங்கு காட்டுப் பன்றி வேட்டையும் நிறுத்தப்பட்டு வருகிறது.

பன்றி இறைச்சி இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள ஹோட்டல்களுக்கு பன்றி இறைச்சியை விரும்பி அதிகம் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல வீதிகளில் விற்கப்படும் பண்ணை வளர்ப்பு பன்றி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.