மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வியலுவலகங்களும், பொலிஸாரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய நான்கு வலயக் கல்வியலுவலகங்களின் மேற்பார்வையுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையுடன் இப்பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுடன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.
பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுவில் பாடசாலை அதிபர், பெற்றோர், பொலிஸார் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒரு சிலர் அங்கம் வகிக்கவுள்ளனர். இப்பாதுகாப்புக் குழுக்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயற்படுவதுடன் பாடசாலை நேரங்களிலும் பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலையை விட்டு வீடு திரும்பும் போதும் கூடிய கவனம் செலுத்தவுள்ளனர்.
மாயா
நல்ல விடயம். இனி இன்னொரு பிஞ்சு கருகி சாக விடாமல் காத்தால் அதுவே போதும்.
Rohan
அது சரி வேலி பயிரை மேயாதிருந்தால் அதுவே போதும் என்று திருமலை மக்களும் மட்டு மக்களும் செய்திருந்த பிரர்த்தனை எல்லாம் பொய்யாய்ப் போயிற்று. புதிதாய் இது என்ன பம்மாத்து?