May

May

மக்களின் எதிர்ப்பார்ப்புகள் முட்கம்பிகளுக்குள் முடக்கம் : த டைம்ஸ்

kathir-camp.gifஉலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் 200,000க்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘த டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வவுனியா தடுப்பு முகாமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவருடன் சென்றிருந்த ‘த டைம்ஸி’ன் செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மனிக் பார்ம் முகாமை, முகாம் என்பதை விட சிறை அல்லது காட்சிக் கூடம் என்றே அழைக்க வேண்டும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் முட்கம்பிகளுக்கு இடையில் மக்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ தெரிவித்துள்ளார். 

பஞ்சாப்பில் வன்முறை – 2 பேர் பலி

punjab1.jpgஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சீக்கிய மதகுரு சந்த்ராம் நந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறைக்கு
இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவம் விரைந்துள்ளது. கொல்லப்பட்ட சந்த்ராம் நந்த் மற்றும் குருசந்த் நிரஞ்சன் தாஸ் என்ற மதகுருவும் இணைந்து குருத்வாராவில் ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் உள்ளே நுழைந்து கத்திகள், துப்பாக்கிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வியன்னாவில் நடந்த தாக்குதல் பஞ்சாபில் எதிரொலித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கலவரம் மூண்டுள்ளது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஜலந்தரில் பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வேன்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. அங்கு துணை ராணுவப்படை விரைந்துள்ளது. ராணுவமும் விரைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லம்ப்ரா கிராமத்தில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல ஜலந்தர் கன்டோன்மென்ட் பகுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பக்வாரா பகுதி வழியாக சென்ற கன்னியாகுமரி – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து போய் விட்டன.

ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

ranil-wickramasinghe.jpgஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ. தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.  நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10 நாள் விஜயத்தை கடந்த 14 ஆம் திகதி மேற்கொண்ட நிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயந்தின்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக எடுத்துரைத்துள்ளதுடன் நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் ஏற்படுத்துமாறு அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு

Gun 01மும்பை விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் இன்று காலை 3 ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளே நுழைந்து சரமாரியாக சுட்டது.இதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் காரில் வந்ததாக தெரிகிறது. யார் அவர்கள், எதற்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பெருமளவு ஆயுதம் மீட்பு

gun.jpg
திருகோணமலையில் வெவ்வேறு இடங்களிலிருந்து கடந்த சனிக்கிழமை பெருந்தொகை வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாரும் படையினரும் நேற்று தெரிவித்தனர்.

கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் எனும் பகுதியிலிருந்து 126- ரி 56 துப்பாக்கி ரவைகள் 01- மெக்சின், 01- சயனைற் குப்பி, 04- கிரனேற் கைக்குண்டுகள் ஆகியன கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை சனிக்கிழமை மாலை கிண்ணியாவிலிருந்து படையினரால் 01-ரி 56 துப்பாக்கி, 04-மெகசின்கள், 127- ரி 56 ரவைகள், 15 – டெட்டனேட்டர்கள், 02- டெட்டனேட்டர் கோட்கள், 02- கண்ணி வெடிகள், 05- அமுக்க வெடிகள், 02- ரிமோட்கள், 02- மின்கலங்கள், 02- சயனைற் குப்பிகள், 03- கிரனேற்றுகள், 02- கிளேமோர்கள் ஆகியன படையினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

பிரபாகரன் தலைமையில் போர் எழுச்சி பெறும் – திருமாவளவன்

Eelamவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சிங்கள வெறியர்களின் அடக்கு முறை, இன வெறி போன்ற காரணங்களால் தமிழ் ஈழப்போர் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும்.

தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன: நெடுமாறன்

Pirabakaran_V விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து செல்வராசா பத்மநாதன் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை மற்றும் செய்தி நம்பகத்தன்மையற்றது. அதை யாரும் நம்ப வேண்டாம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் பன்னாட்டு செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாபன் பெயரில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாபன் கடந்த 19.5.09 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன்நிலையை மாற்றிக்கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத் தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத்தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்படியான அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையில் சிங்கள போர்ப்படையின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள போர்ப்படை முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலை வெறித் தாக்குதலைச் சிங்கள போர்ப்படை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.பிரபாகரன் எந்த லட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும், தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு லட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும் என்று கூறியுள்ளார்.

வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்துவது பற்றி இன்று விசேட கலந்துரையாடல்

north_.jpgமுற்றாக விடுவிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  வட மாகாணத்தில் யாழ். மாநகர சபை உட்பட 32 உள்ளுராட்சி சபைகளுக்கு விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

bankeemoon.jpg இலங்கைக்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்: கனடா

kathir-camp.gifஇலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று கனடா குரல் கொடுத்துள்ளது.

கனேடிய வெளியுறவு அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், சுயவிருப்பத்தோடு தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் மக்கள் கூடிய விரைவில் திரும்ப இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதிகளுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கனேடிய அமைச்சர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.