உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் 200,000க்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘த டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வவுனியா தடுப்பு முகாமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவருடன் சென்றிருந்த ‘த டைம்ஸி’ன் செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மனிக் பார்ம் முகாமை, முகாம் என்பதை விட சிறை அல்லது காட்சிக் கூடம் என்றே அழைக்க வேண்டும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் முட்கம்பிகளுக்கு இடையில் மக்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ தெரிவித்துள்ளார்.