May

May

நாட்டில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை

mosquito_preventionss.jpgநாட்டின் பல பாகங்களிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதனால் பொது மக்கள் விழிப்புடன் இருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் இலங்கையில் 75 போர் மரணமாகியுள்ளதாகவும் 52000 பேருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கண்டி, கம்பளை, கேகாலை, குருநாகல், களுத்துறை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதுள்ள காலநிலை நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமாக உள்ளதால் பொது மக்கள் தமது சூழலை தூய்மையாக வைத்து நுளம்புப் பெருக்கத்தை தடுக்க உதவ வேண்டும் எனவும் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருமுறிகண்டி ஆலயம், ரயில் நிலையத்தை மீள் நிர்மாணிக்க விரிவான ஏற்பாடு

யுத்தத்தினால் சிதைவடைந்துள்ள யாழ். திருமுறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலையத்தை மீள நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளில் இளைஞர் விவகார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.

இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்போடு இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனையொட்டி நான்கு பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இப் பேரணிகள் ஊர்வலமாகச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளன.

மகரகம நகரிலிருந்து இரத்தினபுரி சமன் தேவாலயம் வரை ஒரு பேரணி ஊர்வலத்தை மேற்கொள்ளும். காலி, முன்னேஸ்வரம், குருநாகல் பகுதிகளிலும் இப் பேரணிகள் இடம்பெறுவதுடன் முறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலைய மறுசீரமைப்புக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் ஐம்பது இலட்சம் ரூபா நிதியினைத் திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் கொடி தினத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும் இந் நடவடிக்கைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்க்க ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் – கல்வி அமைச்சு தகவல்

students1.jpgஅரசாங்கப் பாடசாலைகளில் அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் ஜயவீர தெல்பகொட மேலும் குறிப்பிடுகையில், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் சிபாரிசுகளுக்கமைய திருத்தியமைக்கப்பட்டுள்ள இச்சுற்று நிருபத்தின்படி 6 வகையான தரங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் ஏனையோர் தாம் தெரிவு செய்த பாடசாலை அதிபர்களிடமும் உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நேர்முகப் பரீட்சை மூலம் 33 பிள்ளைகளும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் 7 பிள்ளைகளும் நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படாத 2 பிள்ளைகளுமாக மொத்தம் 42 பேர் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சரணடைந்த புலிகளுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக புனர்வாழ்வு அளிக்கப்படும் – அரசு அறிவிப்பு

sri-lanka.jpgபாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் கவனிப்பதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எஞ்சியுள்ள சந்தேக நபர்கள் பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்தினரிடமோ சரணடைவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாம்களிலோ சென்று சரணடையுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளை

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி வவுனியாவிலுள்ள இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள இலங்கை வங்கியின் பிரதான காரியாலயத்துடன் இணைந்ததாக இயங்கவுள்ள இவ்வங்கியை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் திறந்து வைத்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஏனைய நலன்புரி நிலையங்களில் 7 நடமாடும் வங்கிக் கிளைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வைபத்தில் அமைச்சர்களான விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கே.பி.யைக் கைது செய்ய நடவடிக்கை – சர்வதேச பொலிஸார் தீவிரம்

Selvarasa_Pathmanathan_LTTEகே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர்;.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும்  தாய்லாந்து. மலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன் விசாரணைகளை சர்வதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இலங்கை அரசும் இந்திய அரசும் விடுத்து கோரிக்கையையடுத்தே கே.பி.யைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் மீண்டும் அதே பதவியில் – அமைச்சர் ரிஷார்ட் நடவடிக்கை

rizad_baduradeen1.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களை மீண்டும் அதே பதவியில் நியமிப்பதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹாலிடீன் தெரிவித்தார்.

இவ்வாறு நியமனம் பெறும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடி நீர் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

இறப்பு பிறப்பு தொடர்பான விடயங்களைப் பதிவு செய்வதற்கு உதவும் அதேவேளை நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும் – அமைச்சர் சமரசிங்க நம்பிக்கை

mahinda_samarasinghe_.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் இலங்கை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அனர்த்;த முகாமைத்துவ மற்றும்  மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன் என அமைச்சர் ஜெனீவாவில் ஊடகங்களுக்குத்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும் என்றார் அமைச்சர். மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இந்திய எண்ணெய் நிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையம்

loc_logo.jpgவடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது  உள்ளன. மேலும் 300 நிலையங்களை புதிதாகத் திறப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா வீதம் இத்திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

லாஹூர் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் மீட்பு பணியாளர்களும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களிலும் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள்  இடம்பெற்றுவருவதன் காரணமாக பெருந்தொகையான சிவிலியன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.