அரசாங்கப் பாடசாலைகளில் அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் ஜயவீர தெல்பகொட மேலும் குறிப்பிடுகையில், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் சிபாரிசுகளுக்கமைய திருத்தியமைக்கப்பட்டுள்ள இச்சுற்று நிருபத்தின்படி 6 வகையான தரங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் ஏனையோர் தாம் தெரிவு செய்த பாடசாலை அதிபர்களிடமும் உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலையிலும் நேர்முகப் பரீட்சை மூலம் 33 பிள்ளைகளும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் 7 பிள்ளைகளும் நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படாத 2 பிள்ளைகளுமாக மொத்தம் 42 பேர் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.