May

May

இலங்கையில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் உதவும்

russia_s.pngஇலங் கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரஷ்யா தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சமகால நிலைவரங்கள் குறித்து இரு தலைவர்களும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியனார்கள். இக்கலந்துரையாடலின்போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, இலங்கையை ஒரு நீண்டநாள் நண்பனாகவே கருதுவதாகத் தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான சிறந்த நல்லுறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பப்போவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா வழங்கிய காத்திரமான உதவிகளுக்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு இவ்வுரையாடலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் பொதுமக்களை அவர்களிடமிருந்து விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு முயற்சிகளின்போது ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இத்தொலைபேசி உரையாடலின்போது உடன்பாடு காணப்பட்டது. 

சில அகதி முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை குழுவுக்கு அரசாங்கம் தடை

refugee_.jpgஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சில முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை சர்வதேசக் குழுவுக்கு, இலங்கை அரசுதடைவிதித்துள்ளது என்று குழுவின் தலைவர் ஜக் வூப் கெலன் பேகர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சில முகாம்களுக்கு மாத்திரம் செல்லவே எமக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன், மெனிக்பாம் முகாமின் சில பகுதிகளுக்குச் செல்லவும் அனுமதி தரப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசுஎங்களுக்கு எந்தளவிற்குப் பணியாற்ற அனுமதியளிக்கும் என்று தெரியவில்லை. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் போன்றன தேவைப்படுகின்றன”  என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

அம்பாறையில் இரு தரப்பும் மோதல் – புலிகளின் 11 சடலங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் நேற்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புத் தரப்பு கூறுகின்றது.

அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்புத் தகவல்களின்படி குறிப்பிட்ட 11 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அதேவேளை, படையினருக்கு எத்தகைய சேதங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் பின்பு ரி  56 ரகத் துப்பாக்கிகள்  05, கிளேமோர்க் குண்டுகள்  20, கைக்குண்டுகள்  02, மிதி வெடிகள்  02 மற்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.                                   

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி

uno.jpgஇலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளால் கிட்டத்தட்ட இலங்கை அரசாங்க கருத்துக்கு முரணான தீர்மானம் ஒன்று இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

இறுதியாக இந்த தீர்மானத்தில் இணக்கத்தை காணும் வகையில் சில மாற்றங்களுடன் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது.  அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்திய அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது: 59 புதிய அமைச்சர்கள் நியமனம்

pm-manmogan.jpgபிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்பட, 59 புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்க உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் காபினட் அமைச்சர்களாகவும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.

அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், ப. சிதம்பரம் ஏற்கெனவே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஜி.கே. வாசன் புதிய காபினட் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், வாசன், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு வகித்து வந்தார்.

மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். திமுகவின் சார்பில் மீண்டும் ஏழு பேர் அமைச்சர்களாக இடம் பெறும் நிலையில், காங்கிரஸின் சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை பதவியேற்கும் அமைச்சர்களுடன் சேர்த்து, மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலம் 79 ஆக இருக்கும். அதில், 9 பேர் பெண்கள். ஆனால், தமிழகத்திலிருந்து பெண்கள் யாரும் இல்லை.  புதுவையைச் சேர்ந்த வி. நாராயணசாமி, மீண்டும் இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

2008ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல்

north_.jpgயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்பட உள்ளதாக யாழ்., வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதன்படி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஓர் இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிட 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு 11 வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் மூலம் 23 உறுப்பனிர்கள் யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட 2008க்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு மே 30 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்த மாத முதல் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரினால் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. யாழ். மாநகர சபை மேயராக எஸ். கந்தையா பணிபுரிந்தார்.

வவுனியா நகர சபை

இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்படும் எனவும் வாக்களிக்க 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார். இத்தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

வவுனியா மாநகர சபைக்கு 2000ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், நகர சபை மேயராக பணிபுரிந்தார்.

இதேவேளை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 17 முதல் 24 வரை ஏற்கப்பட உள்ளதோடு தேர்தல் ஆணையாளர் இது தொடர்பான அறிவித்தலை ஜூன் 4ஆம் திகதி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட பல பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. அவை வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளன.

மஸ்கெலியா டவுன்சைட் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாயம்; எச்சரிக்கை

மஸ்கெலியா, மோகினி நீர் வீழ்ச்சி பகுதியிலும், ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டப் பிரதேசத்திலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன நேற்று தெரிவித்தார்.

இதே நேரம் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மண் சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்ல தண்ணீர் மோகினி நீர் வீழ்ச்சி பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் நேற்று முன்தினம் விழுந்துள்ளன. இது பெரிய மண் சரிவுக்கான முன்னறி குறியாகக் கூட இருக்கலாம். அதனால் இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிவிப்பை இப்பிரதேசத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டத்தின் நிலப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் நீண்டநேரம் பேச்சு

krishna.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுமென்றும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பற்றுறுதியுடன் இலங்கை அரசு செயற்படுமென்றும் இந்தியாவிற்கு நேற்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். இதன் போது அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்காக நன்றி தெரிவித்தார்.

கர்நாடக முதலமைச்சராகவிருந்த எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைச்சர் போகொல்லாகம கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் அண்மைய இலங்கை விஜயம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு இதன் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கிருஷ்ணாவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, சகல சமூகங்களும் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படும் என்பதையும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள செயலீடுபாட்டையும் வலியுறுத்திக் கூறினார். மேலும், வட பகுதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கியுள்ளார்.

அதே நேரம், இடைத்தங்கல் நிலையங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள 180 நாள் திட்டம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான பொது நலனை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவைக் கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் சார்க் அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சார்க்கின் நோக்கங்களை அடைவதற்காக இணைந்து செயற்படுவதெனவும் இருநாடுகளினதும் பிரச்சினைகளை நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.

‘ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது’ டெஸ் பிரவுண் : தொகுப்பு த ஜெயபாலன்

Des_Brown_27May09‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் பேச்சுவார்த்தையூடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதியான டெஸ் பிரவுண் லண்டன் இல்போர்ட்டில் மே 27ல் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார். ‘ஆயுதப் போராட்டத்திற்கு நிதி வழங்கி அதனை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்து மக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை டெஸ்பிரவுண் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலை தெளிவுபடுத்திய டெஸ் பிரவுண் ‘புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் பற்றி ஆராய வேண்டும்’ எனத் தெரிவித்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்சினையை சுமத்தாமல் இப்பொழுதே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வட அயர்லாந்துப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிரவுண் 800 ஆண்டுகள் பழமையான இப்பிரச்சினையில் கடந்த 50 அண்டுகளில் முதற் தடவையாக வன்முறையற்ற சூழலுக்குள் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகின்றது’ எனத் தெரிவித்தார்.

‘நான் பக்கம் சார்ந்து செயற்பட முடியாது’ எனத் தெரிவித்த அவர் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மிக மோசமான யுத்தக் குற்றங்களைப் புரிந்து உள்ளனர்’ அதற்கு ‘தகுந்த ஆதாரங்கள் உண்டு’ எனக் கூறினார். ‘இரு தரப்பினரதும் பிரச்சாரங்கள் மோசமானது. பயங்கரமானது.’ என்பதை வலியுறுத்திய டெஸ் பிரவுண் ‘இது இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் தடையாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். ‘இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என் போன்றவர்களுக்கு இரு தரப்பிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதில்லை’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப என்னால் பேச முடியாது’ என்றும் ‘எது சாத்தியமானதோ அதனையே நான் பேச முடியும்’ என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இடம்பெயர்ந்த முகாம்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்கள் சுயாதீனமாக அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றது. என்பது போன்ற விடயங்களே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்க எதிராக எனது அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. ஆனால் நான் நியுயோர்க் சென்றிருந்த போது எமக்கு கோசங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எவ்வித கோசங்களும் காணப்படவில்லை’ என டெஸ் பிரவுண் தெரிவித்தார்.

தான் இலங்கை சென்றிருந்தபோது கண்டவை உலகின் ஏனைய எப்பாகத்திலும் கண்டிராத கொடுமைகள் என விபரித்தார். ‘ஒரு சிறிய துண்டு நிலப்பரப்பில் 100 000 முதல் 150 000 மக்களை வைத்துக் கொண்டு ஒரு மிக மோசமான யுத்தம் நடத்தப்பட்டு இருக்கின்றது’ எனத் தெரிவித டெஸ் பிரவுண் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தவர்களைச் சந்தித்து அங்கு அவர்கள் புலிகளின் பிடியில் அனுபவித்தவை பற்றியும் அறிந்தள்ளதாகத் தெரிவித்தார். மனிக்பாம் முகாமைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது சபையில் இருந்த ஒருவர் அது அரசு சர்வதேச நாடுகளுக்கு காட்டுவதாக வைத்துள்ள முகாம் என்றார் இன்னுமொருவர் தானும் அம்மகாம்களில் உள்ளவர்கள் பலருடன் பேசியதாகவும் அவர்களுடைய அனுபவம் வேறாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு முகாமிற்கு சென்று ஒரு சிலருடைய வாக்கு மூலத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது என்று இன்னுமொருவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நான் ஒரு முட்டாள் அல்ல. எனக்கு என்ன செய்கின்றேன் சொல்கின்றேன் என்பது தெளிவாகவே தெரியும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைச் சொல்ல என்னால் முடியாது. நான் கண்டதைக் கேட்டதை இங்கு சொல்கிறேன். இதனை வைத்துக்கொண்டு நான் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னதை நான் மற்றவர்களுக்கும் சொல்கிறேன். அதனை யாரும் தடுக்க முடியாது’ என்று நறுக்காகத் தெரிவித்தார்.

மற்றுமொருவர் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசே கூடுதலான யுத்தக் குற்றங்களை புரிந்தள்ளது என்று குறிப்பிட்ட போது ‘இங்கு யார் கூடுதலாக மனித உரிமை மீறினார்கள் என்று போட்டி வைக்கவில்லை’ எனப் பதிலளித்தார் டெஸ் பிரவுண்.

எவ்வாறான ஒரு தீர்வை நீங்கள் முன் மொழிகிறீர்கள் என ஒருவர் கேட்கப்பட்ட போது ‘நான் தமிழர்களினதோ சிங்களவர்களினதோ பிரதிநிதியல்ல. இலங்கையில் ஒரு சமாதானம் வரவேண்டுமானால் அதற்கு நீங்கள் சமாதானம் வேண்டும் என்பதை விரும்ப வேண்டும். தீர்வும் இலங்கையர்களிடம் இருந்துதான் வரவேண்டும். நாங்கள் தீர்வு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதனை நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டிர்கள் அவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் நீங்கள் பேசுவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்தித் தருவோம்’ என்றார் டெஸ் பிரவுண். அப்போது அதில் குறிக்கிட்ட ஒருவர் இலங்கை அரசு இனவாத அரசு அதனுடன் பேச முடியாது என்றார். அதற்குப் பதிலளித்த டெஸ் பிரவுண் ‘நாங்கள் யாரும் நண்பர்களுடன் சமாதானத்தைக் கோருவதில்லை. எதிரியுடனேயே சமாதானத்தைக் கோர வேண்டும்’ என்று கூறிய அவர் ‘அரசுடன் பேச முடியாவிட்டால் யாருடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

‘நான் சொல்லவில்லை. எல்ரிரியின் அறிக்கையே சொல்கிறது ஆயுதங்களைக் கைவிட்டு அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தையினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று’ என்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண் அதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படையான விவாதங்களுடாக ஒன்றாக முடிவு செய்ய வேண்டும்’ என்றவர் ‘அது எதிர்மறையானதாக அமையாமல் (ஏகபிரதிநிதித்துவம் ஆயுதப் போராட்டம் தமிழீழம்) சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டதற்கு ‘என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட அவர் எல்ரிரிஈ இன் தற்போதைய நிலைப்பாடு மதிக்கத்தக்கது எனத் தெரிவித்தார். மேலும் ‘புலம்பெயர்ந்தவர்கள் வழங்கும் ஒவ்வொரு பெனியும் பொருளாதார நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் எல்ரிரிஈ இன் யுத்த நோக்கங்களுக்குச் சென்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய அவர் ‘அமெரிக்க ஐரிஸ் பிரஜைகளின் நிதி ஐஆர்ஏ க்கு வழங்கப்பட்டது தடைப்பட்டதும் வட அயர்லாந்தில் சமாதானச் சூழல் தோன்றுவதற்கு ஒரு காரணம்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘இலங்கை மக்களைப் பலப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக தேசம்நெற் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டெஸ் பிறவுண் பிரித்தானிய மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவதன் மூலமே மனித உரிமையை மீறுபவர்களை தண்டிக்க வாய்ப்பு அதிகமாகும் எனத் தெரிவித்தார்.

பெரும்பாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்த 200க்கும் அதிகமான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு டெஸ் பிரவுண் பதிலளித்தார். அவருடைய பதில்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது என்பதை மிகவும் தெளிவாகவே அறிந்து வைத்திருந்ததை அவரின் பதில்களில் காணக் கூடியதாக இருந்தது. அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பதிலளிக்கவும் அவர் முற்படவில்லை. ஸ்கொட்லன்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு இல்போர்ட் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவருடை பதில்கள் எவ்வித பூசி மெழுகலும் இன்றி வெளிப்படையானதாக அமைந்திருந்தது.

ஐ நா மனித உரிமைக் குழுவின் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு மற்றுமொரு அரசியல் வெற்றி:

இலங்கை அரச படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மேற்கு நாடுகளின் கூட்டினால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் இலங்கை அரசின் இராணுவ வெற்றியை வரவேற்கும் வகையில் அமைந்தது. இலங்கை அரச படைகளின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட இருந்த தீர்மானம் புஸ்வாணமாகியது. மாறாக புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்ததை பாராட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானத்திற்கு சாதகமாக 29 நாடுகள் வாக்களித்தன. எதிராக 12 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித உரிமைக் கவுன்சிலில் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: 29 நாடுகள் – Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.

தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள்: 12 நாடுகள் – Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள்: 6 நாடுகள் – Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.

மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிந்த கையோடு இல்போர்டில் இடம்பெற்ற சந்திப்பில் ‘இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதராகக் குரல் கொடுக்கும் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை’ என இலங்கைக்கான பிரித்தானிய அரச பிரதிநிதி டெஸ் பிறவுண் தெரிவித்தார். மே 27 மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே அவரிடம் இருந்து இக்கருத்து வெளிப்பட்டது.

குறைந்தபட்சம் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இடப்பெயர்வு முகாம்களுக்கு சுயாதீனமாகச் செல்லக் கூடிய அனுமதியைக் கூட அத்தீர்மானத்தினுள் கொண்டுவர முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறியுள்ளதை இத்தீர்மானத்தின் வாக்களிப்பு வெளிப்படுத்தி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடாகப் பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்காவும் அரசுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தது புலிகளின் ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் பொருளாதார நலன்கள் இந்தியாவில் தங்கி உள்ளதால் தென் ஆபிரிக்கா இலங்கை – இந்திய அரசுகளுக்கு ஒத்து வாக்களித்து இருப்பதாக கொள்ளப்படுகிது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அண்மைய இரு விடயங்கள் அங்கத்துவ நாடுகளிடையே பாரிய விரிசல் ஏற்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரலில் ஈரானிய அதிபர் அஹமதிநிஜா உரையாற்றிக் கொண்டிருக்கையில் பெரும்பாலான மேற்கு நாட்டு ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்ப்புத் தெரிவித்து மண்டபத்தைவிட்டு வெளியேறினர். அதே போன்று மே 27 இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்திலும் மேற்கு நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்க வளர்ச்சி அடைந்துவரும் நாட்டுகள் இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களித்து உள்ளன.

இந்த அரசியல் முரண்பாடுகளிடையே மனித உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து வாக்களித்த பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸரேலும் மனித உரிமைக் காவலர்கள் அல்லர் என்பதும் உண்மையே. மனித உரிமைகள் என்பதும் அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு விடயமாகவே உள்ளது.

நிவாரணக் கிராமங்களில் ஒசுசல மருந்தகங்கள்

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஐந்து அரசாங்க ஒசுசல மருந்தகங்கள் உடனடியாக நலன்புரி நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சுகாதார பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் நலன்புரி நிலையங்கள் அமையப் பெற்றிருக்கும் ஐந்து வலயங்களில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் ஸ்தாபிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவருக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

அதேநேரம் அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஐந்து, ஒசுசல மருந்தகங்களை அமைப்பதற்குப் பொருத்த மான இடங்களைப் பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை செட்டிக்குளம் பிரதேசத்தில் மருந்துப் பொருள் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவர் ரன்ஜித் மலிகஸ்பே ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை அமைச்சரிடம் நேற்று கையளித்தார்.