இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுமென்றும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பற்றுறுதியுடன் இலங்கை அரசு செயற்படுமென்றும் இந்தியாவிற்கு நேற்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். இதன் போது அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்காக நன்றி தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சராகவிருந்த எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைச்சர் போகொல்லாகம கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் அண்மைய இலங்கை விஜயம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு இதன் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கிருஷ்ணாவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, சகல சமூகங்களும் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படும் என்பதையும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள செயலீடுபாட்டையும் வலியுறுத்திக் கூறினார். மேலும், வட பகுதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கியுள்ளார்.
அதே நேரம், இடைத்தங்கல் நிலையங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள 180 நாள் திட்டம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான பொது நலனை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவைக் கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் சார்க் அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சார்க்கின் நோக்கங்களை அடைவதற்காக இணைந்து செயற்படுவதெனவும் இருநாடுகளினதும் பிரச்சினைகளை நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.