கோவை மாவட்டம், காரமடை, மருதூரை சேர்ந்த அமர்நாத் செல்வம், பரமானந்தம் ஆகிய இருவரும் இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைத்தனர். தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து, இதை நிறைவேற்ற முடிவு செய்தனர். இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன் வந்தது. கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை உறுப்பினர்கள் இவர்களது பயணத்தை செஞ்சிலுவை சங்கம் முன் துவக்கி வைத்தனர்.
மணிக்கு 20 கி.மீ., வேகத்தில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பயணம் செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி, கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்கின்றனர். ஏப்., 30ல், கன்னியாகுமரியிலிருந்து, திருச்செந்தூர் வழியாக, தூத்துக்குடி செல்கின்றனர்.
மே 1ல், தூத்துக்குடி, மதுரை வழியாக, திருச்சி செல்கின்றனர். அடுத்த நாள், திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். மே 3ல், நாகையிலிருந்து புதுச்சேரிக்கும், மே 4ல், அங்கிருந்து சென்னைக்கும் செல்கின்றனர்.
மே 5ல், சென்னையிலிருந்து வேலூர் சென்று, அடுத்த நாள், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக, சேலம் செல்கின்றனர். மே7ல், சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், அவினாசி, மேட்டுப்பாளையம், காரமடை வழியாக, கோவை செஞ்சிலுவை சங்கம் வரை வந்து 2009 கி.மீ., பயணத்தை முடிக்கின்றனர்.