April

April

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தி்னால் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் வவுனியா கிளைக்கு வழங்கப்பட்டுள்ளன.

slrc.jpgஇலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வவுனியா கிளைக்கு இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கிளையினர் தெரிவித்தனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா பிரதேசத்திற்கு வந்துள்ளவர்களின் பயன்பாட்டிற்காக 12.6 மில்லியன் ரூபா பெறுமதியான அம்புலன்ஸ் வண்டிகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைத் தலைவர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு வைபவத்தில் தாய்ச்சங்கத்தின் செயலாளர் எஸ்.எச்.நிமல்குமார் அவறிற்குரிய ஆவணங்களை வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளித்தார்.

கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள்- இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தகவல்

dammika_perera_.jpgஇலங் கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்ககைக்குக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுகாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலீட்டுச் சபைத் தலைவர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,

இலங்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அதனால் பெருந்தொகையானோர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.

கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் 93 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த வருடத்தில் 7000 பேருக்கு இத்தொழிச்சாலைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 10 ஆயிரம் பேருக்கான வெற்றிடம் உள்ளது. இதனை எமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

தீர்மானங்கள் எடுக்கும் போது தொழிலாளர் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் – உப குழுவின் பரிந்துரைக்கு இ.தொ.கா பதில்

பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.

அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.

சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேலிச்சித்திரம் : கிழக்கான் ஆதாம்

Cartoon_By_Kilakkan_Adamபல நூறு சொற்களில் வரையப்படும் அரசியல் பிரச்சினையை ஒரு கேலிச் சித்திரத்தினூடாக மிக எளிமையாக வெளிப்படுத்திவிட முடியும். தமிழ் பத்திரிகைச் சூழலிலும் இக்கேலிச் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளரவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாய் இருந்ததால் அத்துறை வளர்ச்சியடையவும் இல்லை.

இவற்றின் பின்னணியில் தேசம்நெற் வாசகர் கிழக்கான் ஆதாம் கேலிச் சித்திரம் வரையும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது முயற்சிக்கு தேசம்நெற் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அவரது கேலிச் சித்திரங்களை தேசம்நெற் இல் பிரசுரிக்கவும் உள்ளோம். தேசம்நெற் வாசகர்கள் அக்கேலிச் சித்திரங்கள் பேசும் அரசியலையும் அக் கேலிச் சித்திரங்கள் பற்றிய தமது கருத்துக்களையும் பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சிலருக்கே கை வரப்பெற்றுள்ள இக்கலைவடிவம் கிழக்கான் ஆதாமுக்கு அமையப்பெற்றுள்ளது. இதனை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள தேசம்நெற் வாசகர்களும் தங்கள் கருத்துப் பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

தேசம்நெற்.

Cartoon_by_Kilakkan_Adam

கிழக்கான் ஆதாம்  

வர்ஷா கொலை மேலுமோர் சந்தேக நபர் கைது. .

Regie_Varsaமூன்று
வாரங்களுக்கு முன்னர் மூன்று கோடி ரூபா கப்பம்கோரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளதுடன் வர்ஷாவின் உடலை தெருவில் உள்ள வாய்கால் ஒன்றினுள் கொண்டுவந்து வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட வானும் திருமலை துறைமுகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் உயிரிழப்பு

green-ocean.jpgமுல்லைத் தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இன்று ஏ-9 வீதியூடாக யாழ். குடாவுக்கு உணவுப் பொருட்கள்

lorry_item_food.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி ஏ-9 வீதியூடாக முதல் தடவையாக தனியார் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய 20 லொறிகள் இன்று  யாழ். குடாநாட்டுக்குப் புறப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ண தெரிவித்துள்ளார்.

ரஸாக் மலேசியா பிரதமராகிறார்

najib-razak.jpgகடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை முகம்மது அப்துல்லா படாவி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து துணைப் பிரதமர் நஜீப் ரஸாக் பிரதமராக பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி. அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.

1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama_.jpgபயங்கர வாதத்தைத் தோற்கடித்து பொதுமக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று காலை கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தேசிய சேவையைப் பூர்த்தி செய்யும்போது நாட்டின் இறைமை,  ஆட்புள ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரத்தைக் காட்டிக்கொடுக்க அரசாங்கம் தயாரில்லை. சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தும் அளவுக்கு அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்பட்டன.

இந்தியா,  சீனா, ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்காக நேரடியாகக் குரல் கொடுக்கின்றன. இலங்கையின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என அந்த நாடுகள் எப்போதும் கூறி வருகின்றன. இலங்கை அதன் நட்புறவு நாடுகளோடு மிகவும் ஒத்துழைப்புடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருதே இதற்குக் காரணமாகும். இதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் லிபியாவுக்குப் பயணமாகவுள்ளார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஐ.நாவால் தடுக்க முடியவில்லை : ஜோன் ஹோம்ஸ் மீது புலிகள் குற்றச்சாட்டு

nada-_jhon.jpgஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடான இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அதனை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் ‘’எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்கின்றது. உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்ற எமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். ஒவ்வொரு தடவையும் நாம் இதனைக்கூறுவதும் உங்களுக்கு தெரிந்ததே.

ஆனால், அரசு அதனை நிராகரித்து வருகின்றது. போர் நிறுத்தத்தை நிராகரிப்பதுடன் சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும், மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தடுத்தும் வருகின்றது. அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும் உலகம், அதே அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்குமாறு தன்னை ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாள் தோறும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும். சிறிலங்கா .நா. சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக .நா. அதிக கவனம் கொள்ளவில்லை. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாள்தோறும் இறப்பை சந்தித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முழுவதுமாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால், உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர். தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழித்தொழிப்பு போரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும், தமது வாழ்க்கையை வாழ்வதற்கும், பிள்ளைகளை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன், ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா? வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா? அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா?

.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம். மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.

.நா.வின் பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் கூட வவுனியாவில் மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று முயற்சிக்கவில்லை. முகாமுக்கு செல்லும் போது சுதந்திரமான மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது. ஆனால், அரசினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றி சிறிலங்கா அரசின் கடுமையான கண்காணிப்பு உள்ள போது அவர்கள் எவ்வாறு உண்மையை கூறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.