._._._._._.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற இப்போராட்ட முன்னெடுப்புக் கூட்டத்தில் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சர்வதேச இணைப்பாளராக சேனன் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். ஏப்ரல் 8ல் உலகின் பல்வேறு நகரங்களிலும் இலங்கை அரசின் படுகொலைக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்க இப்போராட்டக் குழு திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
._._._._._.
நாம் இங்கு ஒரு மிக முக்கியமான கூட்டத்தில் கூடி இருக்கிறோம். எல்லோருக்கும் தெரியும் இலங்கையில் வட-கிழக்குப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று. இப்பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் சாய்ந்ததின் பின்னர் அமெரிக்காவும் ஆளும் வர்க்கங்களும் தாம் எந்த வகையான கொலைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கிலும், அதே போல இதர அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் இப்படியான யுத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியே இலங்கையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஈராக்கில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம். இதற்குப் பிறகு இந்த ஆளும் வர்க்கம் தான் எதையும் செய்யலாம் என்ற போக்கில் இலங்கையில் இந்த யுத்தத்தை திறம்பட நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பரீட்சார்த்த களமாகவும், இலங்கை அரசக்கு தமிழ் பேசும் மக்கள் மீது தனது விருப்பத்திற்கேற்ப எதேட்சாதிகாரப் போககை நடாத்துவதற்கும் இடமளித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள், போர்த் தந்திரங்கள், போர் நடைமுறைகள், சர்வதேச உறவுகள், முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார உறவுகள், ஆளும்வர்க்கம் தனது வர்க்திற்கான உதவிகள் எல்லாமே இந்த யுத்தத்தில் மிகவும் கெட்டித்தனமாக பாவிக்கப்படுவதை பார்க்க்க கூடியதாக உள்ளது.
வடக்கு – கிழக்கு நிலைமைகள் எப்படி கையாளப்படுகிறது, அங்கே நடக்கும் கொலைகள், அங்குள்ள அரசியல்ப் பிரமுகர்கள் தேசிய மயமாக்கல் என்று அரசு உள்வாங்குதல், தெற்கில் பத்திரகையாளர்கள் கொல்லப்படுவது, வெள்ளைவான் கொலைகள், ஜனாதிபதியின் சகோதரர் பத்திரகைச் சுதந்திரத்துக்கு கொடுக்கும் விளக்கம் போன்ற விடயங்கள்; என்ன விடயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் சிந்திக்க வேண்டும்.
உலக வங்கி இலங்கையை red list பண்ணிய பிறகும், தெற்கில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரிசி மா. எண்னைக்கு படும்பாடுகள். ஆனால் அரசு இராணுவத் தேவைக்கு செலவிடும் தொகை மிக மிக அதிகம். ஆனால் இதை சர்வதேச சமூகமும் உலக நிதி நிறுவனங்களும் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இதில் தமது நலன்கள் பாதிக்கப்படவில்லை என்பதலேயேதான் இவர்கள் இப்படி பார்த்துக் கொண்டீருக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியம் தனது இலங்கைக்கான அலுவலகத்தை மூடியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன்களை கடன் கேட்டும் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழமைபோல தனது கட்டுப்பாடுகளை வைத்தே இந்த உதவியை செய்யும். இதனால் கஸ்டப்படப் போவது ஏழை மக்களும் தொழிலாளிகளுமே. இது 70 சதவிகித இராணுவச் செலவீனத்தை கொண்ட நாட்டில் மேலும் ஏழைகளின் தொழிலாளிகளின் வாழ்க்கையில் பதிப்புக்களையே வளர்க்கும.
மிகக் குறுகிய காலத்தில் 3000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது அண்ணளவான கணிப்பீடு. சர்வதேச அமைப்புக்களோ ஊடகவியலாளர்களோ இல்லாத இந்தப் பிரதேசத்தில் வேறு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளது.
ஜனவரி 2ம்திகதி கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு தமிழ் மக்கள் 250,000 பேரை ஒரு மூலைக்குள் ஒடுக்கி வைத்து உணவு, நீர் வசதிகள் இல்லாது விட்டுவிட்டு மட்டுமல்ல இவர்கள் மீது குண்டும் போடுகிறது இலங்கை அரசு. அந்தப் பகுதிக்கு எந்த ஊடகவியலாளர்களையோ, சர்வதேச உதவி நிறுவனங்களையோ அனுமதிக்காது எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டு இப்படி செய்வது உலகில் என்றுமே நடக்காத ஒருவிடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்த சர்வதேச சமூகம், என்றும் மனிதாபிமானம் உள்ள சமூகம் என்பவர்களும், இந்தியாவும் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.
தப்பி வரும் மக்கள் குறுக்கு விசாரணைகள் என்ற பெயரில் மேலும் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எப்படியான சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள் என்ற மனித நேயம் அற்று இவர்களிடம் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது. இந்த மக்கள் இராணுவம் மீது பயப் பீதியையே கடந்த 25 வருடங்களாக கொண்டுள்ளனர். இப்படியான மக்கள் மீது குறுக்கு விசாரணைகள் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்வது போன்றவை மனித உரிமைமீறல்களே!
இந்த மோசமான அரசக்கு எதிராக யார் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாது என்று உணர்கின்ற தமிழர்கள் தம்மை தாமே எரியூட்டிக் கொள்கிறார்கள். இது எதுவுமே செய்ய முடியாத நிலையிலிருந்தே வருகிறது. இப்படியான செயல்கள் சரியானத அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகக் கொடுமையான அரசு, மிக கொடுமையாக நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள், தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாவதும், தனது சொந்த உறவுகளுக்கு இப்படி நடப்பதை அவர்கள் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் யாரும் இந்த விடயங்களை தட்டிக் கேட்காத நிலையிலும்தான் இந்தக் தீக் குளிப்புக்கள் நடைபெறுகின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால்த் தான் நாம் இங்கே கூடியுள்ளோம். அத்துடன் நாம் என்ன செய்ய முடியும் எப்படி செய்ய முடியும் என்ற ஆய்வுகளை செய்து செயற்ப்பட வேண்டும். சிலர் சொல்லக் கூடும் – இந்தியா உதவலாம் சர்வதேசம் உதவலாம் என்று. நாம் இது பற்றியும் யோசிக்க வேண்டும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று.
இந்தியாவின் அண்மைக்கால இலங்கை பற்றிய நிலைப்பாடுகளைப் பார்ப்போமானால்; 2000 மார்ச்சில் இந்தியா இலங்கையுடன் ஒரு சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை செய்தது இதனால் இலங்கையின் இந்தியாவிற்கான வியாபாரத்தில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கையில் உற்ப்பத்தி செய்யப்படும் பொருட்களில் 95 சதவிகித பொருட்கள் வரி இல்லாமல் இந்தியாவிற்குள் வருகிறது. இது இந்தியாவின் அடுத்த மாநிலம் போன்றே செயற்ப்படுகிறது. இதே போல பாரிய மாற்றங்களுக்கு இந்திய – இலங்கை வர்த்தக நிலைமைகள் மாற்றமடைந்துள்ளது. 28வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 13வது இடத்திற்க்கு தனது திறந்த பொருளாதார மாற்றத்தை திறந்ததின் மூலம் பல்வேறு பல்தேசியக் கம்பனிகளை இலங்கை மக்களின் உழைப்பை சுரண்ட திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேற்க்கத்தய இந்திய கம்பனிகள் தற்போது இலங்கையில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இலங்கையில் 50 சதவிகித்திற்கு அதிகமான வங்கிகள் வெளிநாட்டுக் கம்பனிகளாகும் மேலும் பாரிய 4 இந்திய வங்கிகள் தற்போது வந்துள்ளது.
இலங்கையில் உள்ள பாரிய கம்பனிகளான எண்ணைக் கம்பனி, தேயிலைக் கம்பனி, பஸ் கம்பனி ஆகியன தற்போது இந்தியாவின் கைகளிலேயே உள்ளது இதிலிருந்தே இந்திய அரசியற் கொள்கைகள் இலங்கையுடன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் இது எதை சொல்கிறது என்றால் இந்தியா இலங்கையுடன் இனிமேல் பகைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதேயாகும்.
இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பாக்கிஸ்தான் சீனா இரு நாடுகள். ஆகவே இந்தியா இலங்கையை குழப்பாமல் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.
ஐனவரி மாதம் 27ம் திகதி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அன்று 46 தமிழர்கள் வன்னியில் கொல்லப்படுகினறனர். 178 தமிழர்கள் அங்கவீனர்களாகி உள்ளனர். யுத்தம் பற்றி இந்த மக்கள் பற்றி ஒரு வசனம் பேசாமல் போகிறார் என்றால் இந்தியா இலங்கைக்கு என்ன சொல்லுகிறது? இந்தியா இலங்கைக்கு எதுவரை? போய் உதவி செய்கிறது என்பதை பார்க்க வேண்டும் இதேவேளை இலங்கை இந்தியாவிற்கு எதை காட்டடியுள்ளது என்றால் நாம் “தமிழர்களைக் கொல்லுவோம்” என்று தெட்டத் தெளிவாக கூறியுள்ளது என்பதேயாகும். இதை இலங்கை அரசு இந்திய ஆளும் கட்சியுடன் கைகோர்த்த படியேதான் இதை சொல்லியுள்ளது.
65 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் மக்கள் தீக்குளிக்கிறார்கள் ஆளும் வர்க்கத்தை தமிழ் நாட்டிலும் சரி மத்திய அரசிலும் சரி நம்ப முடியாது மக்கள் கோசமிடுகிறார்கள். இந்த கோசமிடும் மக்களை எப்படியாவது அடக்கிவிடுகிறார்கள். எல்லா கட்சிகளுமே தமது தேர்தல் கூட்டணிக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறார்கள். சர்வதேச தமிழர் பாதுகாப்பாளர் வை. கோ கூட இதைத்தான் செய்கிறார்.
பிரிட்டன், அமெரிக்கா எத்தனையோ தரம் யத்தத்தை நிறுத்தும்படி கேட்டும் இலங்கை மறுத்து விட்டது. இவர்கள் ஏற்கனவே ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமது இரத்தம் தோய்ந்த கைகளுடன் இருப்பவர்கள் எப்படி இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த முடியும் இவர்களிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.
பிரிட்டனின் அமைச்சரவையில் புலிகளின் அழிப்பின் பின்னர் தான் நிரந்தர சமாதானம் வரும் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இது எல்லாமே தமது அடுத்த வர்த்தக நோக்கங்களை அடிப்டையாக வைத்தே பேசப்பட்டதே அன்றி தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் அல்ல.
இப்படித்தான் தான் இந்தியாவின், சர்வதேசத்தின் அக்கறையும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 250,000 மக்கள் பட்டினியாலும் குண்டுகளாலும் கொல்லப்படும போது எமக்கு அந்த மக்களில் அக்கறையுண்டு என்று சொல்வதில் மட்டுமே அக்கறை. தமிழ் மக்களில் அல்ல என்பது தெட்டத் தெளிவானதேயாகும். இது மட்டுமல்ல Obama for tamils – Tamil for Obama ம் எப்படியான பேய்க்காட்டல்கள் என்பதும் எப்படியாக ஒப்பேற்றப்பட்டு தமது தேர்தல் மற்றும் ஆளும் வர்க் நலன்கள் பேணப்படுகிறது என்பதும் எமக்கு தெட்டத் தெளிவாகிவிட்ட தொன்றாகும்.
இந்த யுத்தத்தை யாரும் நிறுத்தப் போவதில்லை. யார் எது என்ன சொன்னாலும் தமிழர்கள் தான் போராட வேண்டும். இங்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள்தான் போராட வேண்டும் அதைத்தான் அந்த தமிழர்கள் செய்கிறார்கள். பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் போராட்டத்திற்குத்தான் அரசுகள் பயப்படுகிறது. ஆகவே போராட்டம் தான் ஒரே வழி அதைத்தான் தொடரந்தும் செய்ய வேண்டும். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இந்திய அரசம் இலங்கை அரசம் எவ்வாறு பயந்து போயிருந்தன என்பதும் அதன் வெளிப்பாடுகளுமே சாட்சியமாக உள்ளது.
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்.
நாங்கள் சென்னையில் முன்னணி இடது சாரிகளையும் எழுத்தாளர்களையும் அரசியல் வாதிகளையும் அழைத்து இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். United Socialist Party சிறீதுங்க ஜெய சூரிய இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஒரு சிங்கள மகன் தனது நாட்டின் மற்ற சகோதர தமிழ் மக்களுக்காக இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அங்கு ஒரு கமிட்டியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கமிட்டியே மத்திய கமிட்டியாக செயற்ப்படும் என்றும் அன்று ஏப்ரல் 8ம் திகதியை ஒரு சர்வதேச பிரச்சார தினமாகவும் தெரிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே இன்று ஒரு கமிட்டியை தெரிவு செய்ய உள்ளோம் இது ஜரோப்பிய அமெரிக்க நாடுகளின் பிரச்சாரத்தை முன்னின்று நடாத்தும். அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.