March

March

சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் 10 படகுகள் படையினரால் நிர்மூலம்

முல்லைத்தீவு, சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் படகுகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பத்து படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. படையினரால் நிர்மூலமாக்கப்பட்ட படகுகளில் தற்கொலை படகுகள் நான்கும் அடங்குவதாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 3.30 மணி வரை இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த அவர் இந்த நடவடிக்கைகளுக்கு கடற்புலிகளின் தலைவர் சூசை தலைமை வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் வடக்கு பிரதேசத்தை இராணுவத்தின் 55வது படைப்பிரிவினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றினர்.  அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவும் பொருட்டு கடற்புலிகளின் சுமார் 40 படகுகள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வருவதை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சாலை தென்பகுதியில் கரையோரத்தை நோக்கி புலிகளின் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் வேகமாக வந்துள்ளன. படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  படையினரின் இந்த தாக்குதலில் 10 படகுகள் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. ஏனைய படகுகள் தப்பிச் சென்றுள்ளன.

இவற்றில் நான்கு தற்கொலை படகுகள் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன என்றும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.

பிராந்திய மட்டத்தில் “நாடுகடத்தும்’ உடன்படிக்கை குறித்து “சார்க்’ ஆராய்வு

Dr Kohonaகொழும்பில் நடைபெற்று முடிந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 31 ஆவது வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளல் மற்றும் நாடு கடத்தல் தொடர்பாக பிராந்திய ரீதியில் பிரத்தியேகமான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொள்வது பற்றி பேசப்பட்டுள்ளது.

“நாம் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினோம். கைதிகள் பரிமாற்றம், நாடு கடத்தல் என்பது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இருக்கின்றன. எனினும் ஒரு குழுமமாக இவ்விடயத்தில் பிராந்தியமொன்றுக்குள் முன்செல்வதையும் மேம்படுத்துவதையும் தடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார். எனினும், இதை எழுத்து மூலம் கொண்டு வரக் கூடிய வகையில், நிச்சயமான அடிப்படைக் கொள்கைகளின் உதவியும் பல சட்ட முறைமைகளின் ஒற்றுமையும் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்துடன், கடந்த 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் செய்து கொள்ளப்பட்டு நடைமுறையிலிருக்கும் பரஸ்பர உதவிகளுக்கான உடன்படிக்கையை சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் போகொல்லாகம, அதன் பல சரத்துக்களில் நாடுகள் ரீதியான பரிமாற்றங்களின்போது பயங்கரவாதத்துக்கு வழி வகுக்கும் குற்றச் செயல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக குறிப்ப்பிடிருக்கிறார். இதேநேரம், இது தொடர்பான இறுதி தீர்மானமொன்றுக்கு வரும் முன்னர் பல விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண தெரிவித்திருக்கிறார்.

பெல்மதுளை நீதிமன்றத்தில் தீ ; ஆவணங்கள் எரிந்து நாசம்

பெல்மதுளை மஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் அங்குள்ள கோவைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பராகியுள்ளன. இச்சம்பவம் நேற்றுக்காலை இடம் பெற்றிருக்கலாமென விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவத்தை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடமைகள் முடித்து காரியாலயம் அனைத்தும் முறையாக மூடப்பட்டு சென்று நேற்றுக் காலை கடமைக்கு திரும்பிய போது நீதிமன்றக் காரியாலயம் உடைக்கப்பட்டு அதிலுள்ள சில முக்கியமான ஆவணங்கள் கோவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் காவத்தை பொலிஸாருக்கு தெரிவித்தைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஸ்தலத்திற்கு சென்று மேற்கொண்டு வருகின்றனர்.

சில கோவைகள் களவாடப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் அங்குள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்.

உலக வெப்பநிலை அதிகரிப்பு; தெற்காசியா மோசமாக பாதிக்கப்படும் அபாயம்

saarc_flagss.jpgஉலக வெப்பநிலை அதிகரிப்பானது பருவகாலம் ஆரம்பமாவதை 515 நாட்கள் வரை தாமதப்படுத்தும் என்றும் தெற்காசியாவில் மழைவீழ்ச்சியை கணிசமான அளவுக்கு குறைத்து விடும் எனவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.  அடுத்த நூற்றாண்டுக்குள் இது இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புவிவெப்பநிலை அதிகரிப்பானது பருவகால சுழற்சியை கிழக்குநோக்கி நகர்த்தும் சாத்தியம் இருப்பதாகவும் இதனால் இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் பங்களாதேஷ், மியான்மாரிலும் அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும் என்றும் ஆனால், பாகிஸ்தான் ,இந்தியா, நேபாளத்தில் மழை வீழ்ச்சி குறைவாகி இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கு இந்தியாவின் கரையோரப்பகுதிகள் இலங்கை மியான்மாரில் மழைக்காலம் நீண்ட நாட்களுக்கு தாமதமாகுமெனவும் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், மழைவீழ்ச்சியில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயம், மனிதர்களின் சுகாதாரம் பிராந்தியத்தின் பொருளாதாரம் என்பவற்றில் பாரிய தாக்கம் ஏற்படும் என்று இந்த ஆய்வறிக்கையை தயாரித்த நொயா டிவன்யா எச்சரித்துள்ளார்.

“இந்த பருவகாலங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே உலகின் அரைவாசி மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். சாதாரண பருவகால முறைமையில் இலேசான மாற்றம் ஏற்பட்டாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று பேர்டியூ பல்கலைக்கழகத்தின் காலநிலைமாற்ற ஆய்வு நிலையத்தின் இடைக்காலப்பணிப்பாளரான நொயாடிவன்யா கூறியுள்ளார்.

பருவகால மழைவீழ்ச்சி தாமதமடைவது விவசாய உற்பத்தி, நீர்கிடைப்பனவு, நீர்மின்சக்தி உற்பத்தி என்பனவற்றை கணிசமான அளவுக்கு பாதிக்கச்செய்யும். அத்துடன் மழைவீழ்ச்சி குறைவாகவுள்ள பகுதிகளில் கடும் உஷ்ணமான நிலை காணப்படும் என்று பேர்டியூ பல்கலைக்கழக மாணவன் மோதாகிம் அஷ்பாக் கூறியுள்ளார்.

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். – தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரா

Thuparamaya_Dagobaமுப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள். ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார். அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொண்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.

இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது ”மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக” இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடியேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணிமேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்திருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட்டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்திருந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களவர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்பட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.

இயக்கர் – நாகர்:
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.

இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதியில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்ணணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது
 
பூகோளமாற்றம்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா- இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முழக்கமிடும் இராஜபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்?  புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இராஜபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிக்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எளிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும், கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டதிருத்தங்கள் என்ற குணங்குறிகளைக் காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழவிருக்கும் புதிய ஆயுதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.
 
தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசால் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வுகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்.

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.

ஏ9 தரைப்பாதை வழியாக அவசிய அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடல்

epdp.jpgசமூக சேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவு விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களும் ஏ9 தரைப்பாதை வழியாக அவசிய அத்தியாவசிய உள்ளுர் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். 

கிளிநொச்சிக்குப் போட்டி போட்டுப் பயணித்த இரு மலையகத் தலைவர்களும் இன்று அம்மக்கள் குறித்து பேசத் தயாரில்லை – திகாம்பரம் குற்றச்சாட்டு

up-cun.jpgயுத்த நிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சிக்குப் பயணித்த மலையகத்தின் இரு பிரதான கட்சித் தலைவர்களும் இன்று அம்மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாரில்லையென குற்றஞ்சாட்டிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், அப்பாவிமக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்கு சாதமாக்கிப் பேசுவது தவறெனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மற்றும் உதவி நிதிச் செயலர் உதயா ஆகியோருக்கு தலவாக்கலை நகர் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் 25 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல, 50 வருடகால , 25 வருடகால அரசியல் தலைமைகளும் மலையகத்தில் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் வெற்றிபெற்ற காலத்தில் எல்லாம் யுத்தம் பற்றிப் பேசாத தலைமைகள் இன்று தமது தோல்விக்கு யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்ட முயல்கின்றன. அப்பாவி மக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்குச் சாதகமாக்கிப் பேசுவது தவறு . யுத்தநிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் கிளிநொச்சி பயணித்ததை மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால்,இன்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்க இவர்கள் தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்திற்கு தனது ஆதரவையே தெரிவித்து வருகின்றது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

எனவே, மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு காரணங்களைக் கூறி சமாளிப்பதை விடுத்து மக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்று செயல்படவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். அடையாள அட்டை இன்மையால் தமக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு அடையாள அட்டை இல்லை என்பது இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்ததா? அடையாள அட்டை உள்ளவர்களே இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. அடையாள அட்டை இல்லாதவர்களின் வாக்குகளைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்’ என்றார்.

வெற்றி பெற்ற மற்றைய வேட்பாளரான உதயகுமார் பேசும்போது; “இன்று பள்ளிவாசலில் எமக்கு வரவேற்பளிப்பது ஒரு முன்னுதாரண நிகழ்வாகும். நாம் கட்சி இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம். மலையகத்துக்கான அரசியல் மாற்றத்தைக் கோரினோம். அதற்குக் கிடைத்த வெற்றியே எமது வெற்றி. இது மக்களின் வெற்றி. இதனை திரிபுபடுத்தி அலட்சியம் செய்பவர்கள் மக்களால் எதிர்வரும் தேர்தல்களில் மேலும் புறக்கணிக்கப்படுவார்கள்.

வருமானக் குறைவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மலையக மக்களுக்கு எப்போதுமே பாரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இம்முறை கூட்டொப்பந்தத்தையும் தாமே முன்னெடுப்பதாக பிரதான தொழிற்சங்கம் ஒன்று அறிக்கை விடுத்துள்ளது. எமக்கு யார் முன்னெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை. என்ன விடயம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே முக்கியம். மக்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தால் மக்களும் ஆதரிப்பர். நாமும் ஆதரிப்போம். மாறாக நியாயமற்ற சம்பளம் முன்வைக்கப்படுமானால் மக்கள் போராட்டத்தை நாமே முன்னெடுப்போம்’ என்றார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது : சம்பிக்க ரணவக்க

champika.jpgவிடு தலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்

ஏ 9 வழியாக இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு…

a9-road.jpg
அநுராதபுரத்தில் இருந்து ஏ 9 வீதியூடாக முதற்தடவையாக 600 இராணுவத்தினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1984 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக இன்று 20 பஸ்களில் 600 இராணுவத்தினர் சீருடையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல்வாதிகளுக்கும் புலிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் அம்பலம் – பாதுகாப்பு அமைச்சு

tamil_ltte_media-01.pngபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் கைப்பற்றிய புலிகளின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் தேடுதல் நடத்திய படையினர் புலிகளுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்னி பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உள்ள நேரடித் தொடர்புகளை இந்தப் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  திராவிட மறுமலாச்சிக் கழகத் தலைவர் வைகோ புலிகளின் சீருடையில் பிரபாகரனுடன் கைத்துப்பாக்கி  சுடும் நிலையில் படங்களில் காணப்படுகிறார்.

பழ. நெடுமாறன் உட்பட மற்றும் தமிழக அரசியல் முக்கியஸ்தர்களின் படங்களையும் படையினர் இங்கு கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் புலிகள் தோற்கடிப்பதைதத் தடுக்க வைக்கோ பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவருவது தமிழ் மக்களைப் பாதுகாக்கவல்ல, வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழ் ஈழத்துக்கான தேசிய தொலைக் காட்சி சேவையொன்றை நடத்துவதற்கான  வீடியோ பதிவுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தமது ஒளிபரப்பை மூன்று மொழிகளிலும் செய்மதியூடாக மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil_ltte_media2.png

tamil_ltte_media4.png