March

March

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம் -செஞ்சிலுவைச்சங்கம்

trico.gifமோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

அமைச்சர் உடல்நிலை தேறி வருகிறார்

mahinda-wijayaratna.jpg அக்குரஸ்ஸ கொடபிட்டிய தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த தபால் தந்தித் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேசேகர உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்ஹ தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டொக்டர் மேலும் தெரிவித்தார். 

இலங்கை அரசையும், புலிகளையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது. – த ஹிந்து பத்திரிகை செய்தி

hindu_newspaper.jpg இலங்கையில் ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும் பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ. யினரையும் சம பங்காளிகளாகக் கருத முடியாது என இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அந்நாட்டின் முப்படையினரும் பல்வேறு உணர்ச்சித் தூண்டல்களுக்கு இடம்கொடுக்காது பொறுப்புடனும் அமைதியாகவும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்.ரீ.ரீ.ஈ. பிடியில் மனிதக் கேடயங்களாக சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ள இலங்கை அரசுக்கு இது ஒரு சோதணை மிகுந்த காலப் பகுதியாகும்.

எல்.ரீ.ரீ.ஈ.  யினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் இராணுவ நடவடிக்கைள் சற்று தாமதமாகியுள்ளன. மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பாரிய ஒரு முயற்சியாக இதனைக் கருத முடியும் என த ஹிந்து  பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மாணவி வர்ஷாவின் கொடூரக் கொலைக்கு கிழக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம்

varsa.jpg
திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரி தரம் 1 மாணவியான (6 வயது) வர்ஷா யூட் ரெஜினால்ட் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமல்ல எமது நாட்டின் எப்பாகத்திலும் இடம்பெறக்கூடாது என்பதே எமது சங்கத்தின் கோரிக்கையும் பிரார்த்தனையும் ‘ என்று சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெறோம், பொதுச் செயலாளர் கு.நளினகாந்தன் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் பாடசாலை மாணவ சமூகத்தில் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்யக் கடும் நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் போன்ற உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என எமது சங்கம் கோருகின்றது. 6 வயது மாணவி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உரப்பையில் வீதியில் போடப்பட்ட சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் மாணவியின் இழப்பால் துயருறும் பெற்றோர், குடும்பத்தினர், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவியர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது’  என்றும் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழருக்காக பா.ம.க. பிரமுகர் தீக்குளிப்பு: நேற்று இடம்பெற்ற சம்பவம்

elam-rajasekar.jpgஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் பாமக பிரமுகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ வீதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் இராஜசேகர். இவருக்கு வயது 30. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் படித்து, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துவகை இல்லாமையினால் சேவைகள் இடைநிறுத்தம்

medicine.jpgபோதியளவு மருந்துவகைகள் மற்றும் அடிப்படைவசதிகள் எதுவுமில்லாத நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையின் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையேற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி ரி.வரதராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; நேற்று அவசர நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பாளர்களென 425 பேரை கப்பல் மூலம் திருமலைக்கு நாம் அனுப்பியுள்ளோம். இதில் காயப்பட்டவர்களே அதிகமானவர்கள்.

வன்னியில் புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமேயுள்ளது. இங்கு காயத்துக்கான மருந்து உட்பட ஏனைய மருந்துகள் முடியும் தருவாயிலுள்ளது. இதனால் நாம் காயத்துக்கு மருந்துகளின்றி துணிகளையே கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம், பக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துகள் அனுப்பப்படாமையினால் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதிக்கு இன்று உணவுக் கப்பல்

ship.jpgமுல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கென 700 மெற்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எம்.வி. பின்டான் சரக்குக் கப்பல் இன்று திருகோணமலையிலிருந்து புதுமாத்தளன் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.

கடந்த வாரம் புதுமாத்தளன் பிரதேசத்தில் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதல்களுக்குப் பின்னர் பின்டான் சரக்குக் கப்பல் போதிய பாதுகாப்புடன் இன்று இரண்டாவது தடவையாக புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தஸநாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

புலிகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தி வந்தாலும் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கேற்ப அவ்வப்போது அனுப்பிவைக்க அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்கு விநியோகிக்கவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் வழங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கடந்த 7ம் திகதி ஏற்றிச் சென்ற பின்டான் சரக்குக் கப்பல் கடந்த 9ம் திகதி புதுமாத்தளன் கடற்பரப்பில் வைத்து பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர்.

500 மெற்றிக் தொன் பொருட்களில் சுமார் 142 மெற்றிக் தொன் பொருட்களை இறக்கிக் கொண்டிருக்கும்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலையடுத்து அக்கப்பல் பாதுகாப்பு நிமித்தம் உடனடியாக ஆழ்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் திருகோணமலை துறைமுகத்தை நோக்கித் திரும்பிய அக்கப்பல் கடந்த வெள்ளியன்று மீண்டும் புதுமாத்தளன் நோக்கிச் சென்று பொருட்களை இறக்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து திருமலை நோக்கி திரும்பிய அந்தக் கப்பல் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்த பின்டான் கப்பல் இன்று கடற்படையினரின் பாதுகாப்புடனும், வழித்துணையுடனும் திருகோணமலை துறைமுகத்திலிருந்து புதுமாத்தளன் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

புதுமாத்தளன் கடற்பரப்பை சென்றடைந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் அந்த 700 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களும் பாதுகாப்பான முறையில் இறக்கப்படும் என்று கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க தெரிவித்தார்.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றையே இந்தக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினர் பின்டான் கப்பல் மூலம் புலிகளின் பிடியிலுள்ள அப்பாவி மக்களுக்கு பொருட்களை அனுப்பிவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேசமயம், ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் கிரீன் ஓடின் கப்பல் மூலம் நோய்வாய்ப்பட்ட பொதுமக்களை இதுவரை பத்துத் தடவைகள் பாதுகாப்பான முறையில் கப்பல் மூலம் அழைத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். – அருண் கணநாதன் உடனான நேர்காணல் : த ஜெயபாலன்

Arun Gananathan ._._._._._.
அருண் கணநாதன் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் தஞ்ச சட்டவல்லுனர். பிரித்தானிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும் போக்கை கடுமையாக விமர்சிப்பவர். பிரித்தானிய அரசில் தஞ்ச நடைமுறைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ‘தேசம்’ ஏற்பாடு செய்த அரசியல் தஞ்சம் தொடர்பான நடவடிக்கைகளில் எப்போதும் தனது ஆதரவை வழங்குபவர். இன்று ஒரு புறம் இலங்கையில் மிக மோசமான மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் பிரித்தானியாவில் இருந்து அகதிகளைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இவை தொடர்பாக லண்டன் குரல் பத்திரிகைக்கு சட்ட வல்லுனர் கணநாதன் வழங்கிய நேர்காணலின் முழுமை இங்கு தரப்படுகிறது.
._._._._._.

ல.குரல்: பிரித்தானிய அரசியல் தஞ்ச நடைமுறைகள் அண்மைக்காலத்தில் எவ்வாறு உள்ளது?
கணநாதன்: சட்டரீதியாகவோ வழக்குகளின் அடிப்படையோ மாறவில்லை. ஆனால் உள்துறை அமைச்சினுடைய அணுகுமுறையில் கடும் போக்கு ஏற்பட்டு உள்ளது. அத்தோடு நீதி மன்றங்களும் பாராபட்சமாக தனிப்பட்ட வழக்ககளில் தலையிட்டு நீதி வழங்குகின்ற பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள். இப்படியான மாற்றங்கள் தான் ஏற்பட்டு இருக்கிறது. அகதிச் சட்டத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பப்ளிக் லோ (public law) என்று எடுத்தால் அதற்குள் தான் இமிகிரேசன் (immigration) வருகிறது. ப்ளட்கேற் (floodgate) என்று சொல்வார்கள். எத்தனை எத்தனை பேர் நாட்டுக்கு வருகிறார்கள் நாட்டின் நலன் என்ற அரசியல்கள் கட்டாயம் இருக்கும். அது தொடர்பான விசயங்களைக் கொண்டு தான் முடிவுகளை எடுப்பார்கள். தனிப்பட்ட அகதித் தஞ்ச வழக்கில் கொள்கை, ப்ளட்கேற்றை வைத்து முடிவெடுப்பது வந்து பக்க சார்பன தீர்ப்பாகிவிடும். அதனால் அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக அதைத்தான் செய்கிறார்கள்.

ல.குரல்: நீதித்துறையின் இந்த தட்டிக் கழிக்கும் போகை;கை சட்டப்டி எதிர்கொள்ள முடியாதா?
கணநாதன்: இன்றைக்கு இமிகிரேசன் ஜடஜ் ஆக இருக்கட்டும், அப்பீல் கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும், ஹைக்கோட் ஜட்ஜ் ஆக இருக்கட்டும் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்குவார் இந்த நீதிபதி வந்தால் அகதிக்கு சார்பாக நீதி வழங்குவார் என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியக் கூடிய வகையில் தீர்ப்பு வழங்கிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த நீதிபதி அகதிக்கு சார்பாக எப்போதும் நீதி வழங்காதவர் என்ற அடிப்படையில் வழக்கைத் தொடருவதற்கு பிரித்தானிய நீதித்துறையில் ஒரு செயன்முறையில்லை.

அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்றால் இந்த நீதிபதி தட்டிக்கழித்து நீதி வழங்காதவிடத்து வேறு சட்டக் காரணங்களின் அடிப்படையில் அவ்வழக்கு மேலே செல்லும் போது அந்த நீதிபதி அகதிக்கு சார்பாக தீர்ப்பளிப்தற்கான வாய்ப்பு ஏற்படும்.

அதில் இப்போது உள்ள பிரிச்சினை என்னவென்றால் வழக்கை மேலே கொண்டு செல்வதற்கான செலவீனம். இவ்வாறு அரசியல் தஞ்சத்தை இறுக்கமாக்கிய உள்துறை அமைச்சு சட்ட உதவி வழங்குவதையும் தொண்ணூறு வீதம் வரை குறைத்துவிட்டுள்ளது. அதனால் அகதிகளும் தொடர்ந்தும் பணத்தை இறைத்து இந்த வழக்குகளைத் தொடர முடியாத நிலையில் வழக்குகளைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ல.குரல்: பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் அறிந்தவற்றைக் கூற முடியுமா?
கணநாதன்: ஈராக் போன்ற நாடுகளுக்கு கனகாலமாக இப்படி செய்துகொண்டு இருக்கினம் ஆனா இலங்கையைப் பொறுத்தவரை charter flight புக் பண்ணி ஆட்களை திருப்பி அனுப்பினது இது தான் முதற்தடவை. இதை பிரித்தானிய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் பத்தியில் 150 பேர் அனுப்பப்பட்டதாக கதை உலாவுகிறது. ஆனால் நான் அறிந்த அளவில் 40 முதல் 50 பேர் வரையே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினை என்னென்று கேட்டால் வழமையாகவே 10 முதல் 30 பேர் வரை கிழமைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதை நாங்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டு இருந்துவிடுகிறோம்.

ஆனால் இந்த சாட்டர் ப்ளைட்டில் தொகையாக ஆட்கள் அனுப்பட்ட விடயம் தான் ஒரு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அது தான் அரசாங்கத்தின் நோக்கமும். இந்த அரசாங்கம் வந்து போடர்களை ரைற்ரின் பண்ணி இந்த நாட்டில் சட்ட விரோதமாக வந்து அகதி அந்தஸ்து கேட்கிற நிலையை சரியாகக் குறைத்து விட்டது. மற்றைய நாட்டவர்களை விட இலங்கையர்கள் தொடர்ந்து இவர்களது எல்லையை கட்டுப்பாடுகளை உடைத்து விசாக்களை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பயப்படுகிறது. இந்த நம்பிக்கையை உடைத்து திருப்பி அனுப்பப்படுவினம் என்ற திகிலை ஏற்படுத்தவதற்குத் தான் பிரித்தானிய அரசாங்கம் இந்த சாட்டர் ப்ளைற் என்ற நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் என்றது என்னுடைய கருத்து.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுபப்பப்படுவது தீவிரமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
கணநாதன்: இதற்கு முதல் ஒரு சமூகமாக வந்து கூடி இந்த திருப்பி அனுப்பப்படுவதை பேசியது வந்து 2007 யூனில். அப்போது எல்பி என்றவரின் வழக்கு முடிவு வரப்போகிறது. அந்த முடிவு வந்தால் அது அகதி வழக்குகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் அதற்கு முன்னர் உள்துறை அமைச்சு திருப்பி அனுப்புவதில் துரிதகதியில் செயற்பட்டது. அதற்குப் பின்னர் என்ஏ என்பவருடைய வழக்கு ஈரோப்பியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் திருப்பி அனுப்பப்படுவது ஓரளவு நிறுத்தப்பட்டது. தமிழர்கள் ஐரோப்பிய நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவுகளைப் பெற்று ஓரளவு இந்த நாடுகடத்தலை தவிர்த்துக் கொண்டு வந்தனர். அதற்குப் பிறகு ஈரோப்பியன் கோட் போன வருடம் 2008 ஏழாம் மாதம் தங்களுடைய தீர்ப்பினை வழங்கியது. அது சாதகமான தீர்ப்பாகத் தான் இருந்தது. ஆனால் தடை உத்தரவை வந்து வெறுமனே தமிழர் என்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. ஆனால் என்ஏ இன் வகைக்குள் வருபவர்களுக்கு அதுவும் யுகே நீதிமன்றங்கள் முழுமையாக நிராகரித்த பின்னர்தான் தாங்கள் தடையுத்தரவை வழங்குவோம் என்று ஈரோப்பியன் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

அதற்குப் பிறகும் தமிழர் என்ற அடிப்படையில் தருப்பி அனுப்புவதை நிறுத்தவதற்கான தடையுத்தரவைக் கேட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இப்ப ஒரு இரண்டு மூன்று மாதமாக திருப்பி அனுப்புவது தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு வருடமாக ஈரோப்பியன் கோர்ட்டின் தடையால் அனுப்ப முடியாமல் போன வெற்றிடத்தை துரித கதியில் அனுப்பி ஈடுசெய்ய உள்துறை அமைச்சு முற்பட்டு உள்ளது.

ல.குரல்: அண்மைக்காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் யாராவது மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்களா?
கணநாதன்: அண்மைக்காலத்தில் இல்லை. ஆனால் 2001ல் குமரகுருபரனுடைய வழக்கை கூறலாம். குமரகுருபரன் இந்த நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு விட்டார். அப்படியிருக்க அவரை திருப்பிக் கொண்டுவர வெண்டும் என்று கோரி நாங்கள் ஹைக் கோட்டுக்குப் போய் நிரூபித்து திருப்பிக் கொண்டு வந்து வதிவிட உரிமையையும் பெற்றுக் கொடுத்தோம்.

அதற்கு முன்னரும் 1987 – 88 காலப்பகுதியில் சிவகுமாரன் என்பவருடைய வழக்கு ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்றது. திருப்பி அனுப்பப்பட்டவர் மீண்டும் திருப்பி அழைக்கப்பட்டார்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் எத்தனை பேர் உள்ளனர் என்று மதிப்பிட முடியுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
கணநாதன்: என்னைப் பொறுத்தமட்டில் குறைந்தது நூற்றுக் கணக்கிலாவது இருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். பலபேர் 1990க்களில் வந்து நிராகரிக்கப்பட்டவர்கள். அதற்குப் பிறகு வழக்கு கைவிடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கிறார்கள். அதற்கப் பிறகு 2000 – 2004 ம் ஆண்டுக்கு இடையில் நடந்த வழக்குகளால் பல பேர் அப்படியே காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த திருப்பி அனுப்புதல் என்பது 2005, 2006க்குப் பின்னர்தான் தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னர் பெரிய அளவில் இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படவில்லை.

லிகசி கேஸஸ் (legacy case) என்ற அடிப்படையில் 2007ல் இருந்து பல குடும்பங்களுக்கு விசாக்கள் வழங்கி தஞ்ச வழக்கு முடிவுகள் தெரியாமல் இருந்தவர்களின் தொகையை சரியாகக் குறைத்துக் கொண்டார்கள். 2008லும் விசாக்கள் வழங்கப்படாமல் இழுபட்ட பல வழக்குகளுக்கு விசாக்களை வழங்கி அந்தத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். அவர்களுக்கு முடிவில்லாத சூழ்நிலை ஒன்று இருப்பதையும் பீதி ஒன்று நிலவுவதையும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது. திருப்பி அனுப்பப்டுவதற்கான அச்சமும் இருக்கிறது.

உள்துறை அமைச்சைப் பொறுத்தவரை லிகஸி கேஸ் அடிப்படையில் 2007 – 2008 நடுப்பகதி வரை விசாக் கொடுக்க வேண்டியவர்கள் எல்லோருக்கும் விசா கொடுத்தாகி விட்டது. இனி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் தான் என்ற மனநிலையுடன் செயற்படுவதாகவே நான் நினைக்கிறேன். இப்படியான பார்வையால் ஏற்படுகின்ற உளவியல் தாக்கம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது வழக்கையும் தட்டிக்கழிக்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதனால் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு ஆனால் விதிவிலக்குகளின் அடிப்படையில் (எக்செப்சனல் லிவ்ற்று ரிமெயின் – Exceptional Leave to Remain ELR) விசா வழங்கப்பட்டவர்களின் விசாக்கள் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
கணநாதன்: இப்ப எக்செப்சனல் லீவ்ற்று ரிமெயின் என்பதை நிப்பாட்டி டிஸ்கிரேசனல் லீவ்ற்று ரிமெயின் (Discretionary Leave to Remain) என்பதைத்தான் கொடுத்து வருகினம். அதற்கு உரிமைகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. முன்னர் வந்து 4 வருடம் ஒருவர் ஈஎல்ஆர் ல் இருந்தால் அவருக்கு ஐஎல்ஆர் வழங்கப்பட்டு வந்தது. இப்ப ஒருவர் ஆறுவருடம் டிஸ்கிரேசனல் லிவ்று ரிமெயினில் இருந்தால் தான் அவருக்கு ஐஎல்ஆர் கொடுக்கப்படலாம். ஆனால் ஐஎல்ஆர் (Indefinite Leave to Remain ILR) கொடுக்கிற தன்மை வந்து இப்ப குறைந்து வருகிறது.

அப்படி இருந்தாலும் கொடுத்ததை பறிக்கிற தன்மை என்பது அவர்கள் இந்த நாட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பொய்சொல்லி பிழையாக நடந்து இந்த விசாவைப் பெற்று இருந்தால் விசாவுக்கு கொடுத்த காரணங்கள் இல்லாமல் போனால் அதாவது திருமணம் முடிக்கும் போது அதற்காக மற்றவருக்கு வழங்கப்பட்ட விசா அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தால் மற்றவருடைய வீசா மீளப் பெறப்படலாம். எல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதற்காகத் தண்டணை பெற்றல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

Arun Gananathanல.குரல்: தஞ்சம் மறுக்கப்படுவதில் சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் அறிவீனங்கள் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கணநாதன்: சட்டத்தரணிகளின் கவலையீனங்கள் பற்றி நாங்கள் வருடாவருடம் கதைத்துக் கொண்டு வாறம். அது வந்து ஒரு புதிய ரொப்பிக் இல்லை. ஆனால் நான் அவர்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவரவில்லை. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பிரச்சினை தான். அது தமிழருக்க மாத்திரம் உரித்தானது இல்லை. மற்ற சமூகங்களுக்கும் உள்ள பிரச்சினைதான்.

ஆனால் என்னுடைய கருத்து வந்து இந்த நாட்டில் இந்த சட்டங்களின் தரம் குறைந்துவிட்டது. மற்றும்படி எல்லாத் துறைகளிலும் தங்கள் தொழில்சார்ந்த பொறுப்புகளை உணராதவர்கள் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அப்படி சட்டதுறையிலும் இருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு எங்களுடைய மக்கள் மத்தியில் நிறைய இருக்கிறது. அதனால் நல்ல சட்டத்தரணிகளுக்கும் சட்ட ஆலோசகர்களுக்கம் கூட சங்கடங்கள் உண்டு. ஏனென்று சொன்னால் அந்த நம்பகத் தன்மை வந்து சரியாக உடைக்கபட்டுவிட்டது. நல்ல சட்ட ஆலோசனைகளை வழங்கினாலும் அதனையும் சந்தேகத்துடன் பார்க்கின்ற போக்கு வந்தள்ளது.

சட்டத்தரணிகள் கவலையீனமாக இருந்தாலும் அதனை கவனித்தக் கொள்ள பல வழிகள் இருக்கின்றது. முக்கியமாக நாங்கள் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பத்திரங்களைப் பார்த்து என்ன நடந்து இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தது முக்கியமாக பைலை வைத்திருக்க வேண்டும். அதுக்கு முக்கியமாக சட்டத்தரணிகளோ சட்ட ஆலோசகரோ தான் பிழையென்று சொல்ல முடியாது. 10 – 12 வருடங்கள் இருப்பார்கள். ஆனால் இரண்டு துண்டு பேப்பர் மட்டும்தான் அவர்களிடம் இருக்கும். தங்களுடைய பத்திரங்களின் கொப்பிகளை கவனமாக எடுத்து வைக்கிறதில்லை. அதைத் தவறவிட்டு இருந்தால் கூட உள்துறை அமைச்சிற்கு 10 பவுண்களைச் செலுத்தி அதற்கான பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி நாடுகடத்தப்படுகின்ற அபாயமான சூழல் உள்ள இந்தக் காலப்பகுதியில் ஒவ்வொருத்தரும் 10 பவுணைக் கட்டி தங்கள் பைலை முழுமையாக எடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பதான் நாடு கடத்துவதற்கு பிடித்தவுடன் அதைத் தடுப்பதற்கான முதலாவது ஜீடிசல் ரிவியூவை (judicial review)செம்மையாகப் போட்டு நாடுகடத்தல் அபாயத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ல.குரல்: பிரித்தானியா உட்பட சர்வதேச அளவில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
கணநாதன்: ஓம். தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியென்று கேட்டால் சட்ட ரீதியாக சட்டங்கள் எதனையும் உட்புகுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு வந்து அகதிகளை மிகவும் பிழிந்து மிகவும் கஸ்டமான நிலையில் தான் இந்த அரசாங்கம் தள்ளி வைத்திருக்கிறது. பொதுவாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட குற்றச்செயல்கள் அதிகரிக்கும். அதில் இந்த அகதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது. அது கொள்கை ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதைவிட இன்னொரு காரணம் என்னவென்றால் உள்துறை அமைச்சில் பொலிசி என்றொன்று இருக்கிறது. மற்றது அதனை நடைமுறைப்படுத்துவது. அலுவர்கள் மட்டத்தில் நடைமுறைப்படுத்துபவர்கள் தங்களுடைய வேலைக்கு தங்களுடைய குடும்பத்தினரின் வேலைக்கு ஆபத்து வருமா என்ற கலக்கத்துடன் விண்ணப்பங்களை பரசீலிக்கும் போது அவர்கள் பெருந்தன்மையாக நடக்கக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போகிறது. அது அவர்களையும் கடும்போக்கு உடையவர்களாக்குகிறது.

உதாரணமாக அண்மைக்காலமாக வேர்க் பெர்மிசன் (work permision) வந்து பல பேருக்கு நிப்பாட்டி வந்தார்கள். ஒரே ஒரு குழுமத்தைத் தான் விட்டு வைத்தார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு மேல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக முடிவெடுக்கப்படாதவராக இருந்தால் வேர்க் பெர்மிசன் கொடுக்க வேணும் என்று இமிகிரேசன் லோவில் இருக்கிறது. அந்த வகைப்பட்டவர்களுக்கு வேர்க் பெர்மிசன் கொடுத்து இருந்தார்கள். அதைவிட முன்னர் வேர்க் பெர்மிசன் வழங்கி அவர்களுடைய வழக்கு முடிவுக்கு வராமல் இருந்தாலும் வேர்க் பெர்மிசனை கொடுத்து வந்தார்கள். அண்மைக் காலத்தில் திடீரென்று ஐடி கார்ட்டில் வேர்க் பெர்மிசன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அப்படி இருக்கும் போது கடந்த 3 – 4 மாதங்களுக்குள் ஐடி காட் புதுப்பிக்க வேண்டும் என்று கூப்பிட்டுப் விட்டு வேர்க் புரொகிபிற்றற் (work prohibited) என்று புது ஐடி காட்டை அடித்து கொடுக்கிறார்கள். இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார வீழ்ச்சி அகதி விண்ணப்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதையே காட்டுகிறது.

ல.குரல்: இலங்கையில் இன்று இராணுவச் சமநிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் அரசியல் தஞசம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
கணநாதன்: உண்மையாக ஒரு மாற்றத்தையும் கொண்டு வரக்கூடாது. ஏனென்று கேட்டால் யுத்தம் என்றது சிவில் வோர். சிவில் வோர் ரிப்பியூஜிஸ் 1951 கொன்வென்சனுக்குக் (Civil War Refugees – 1951 Convention) கீழ் அடங்க மாட்டார்கள். அதனால் தான் எங்களுக்கு யுத்த காரணங்களுக்காக அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் பிரித்தானிய தூதரகம் அதனையும் ஒரு காரணமாகக் காட்டி உள்ளது. அதாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த கொண்டிருக்கிறது அதனால் தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறோம் என்று.

அவர்களுக்கு உள்ள பயம் என்னென்று கேட்டால் வடக்கில் நடக்கிற கொன்வென்சனல் வோர் வந்து பிரச்சினைக்கு உள்ளானால் தென்பகுதியில் வந்து கொரில்லா முறையிலான யுத்தம் பரவும் என்று பயப்படுகின்றார்கள். இந்த நாட்டில் அகதிகளின் வழக்குகள் வந்து கொழும்பில் என்ன நிலைமைகள் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சுக்கு உள்ள பீதி என்னென்றால் யுத்தம் கொழும்புக்கு பரவுகிற நிலை ஏற்பட்டால் அது அகதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் தங்களால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாமல் போவதுடன் அகதி அந்தஸ்து வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்பது.

ல.குரல்: இலங்கை யுத்தத்தின் இராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பலர் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களுடைய விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கணநாதன்: விடுதலைப் புலிகள் மாத்திரம் என்றல்ல பொதுவாக வேரர்க் க்ரைம் (war crime) என்று 1951 அகதிச் சட்டத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. அதாவது தனிப்பட்ட முறையில் அகதித் தஞ்சம் கோருபவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது பெரிய அளவில் மனித உரிமை மீறும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருந்தால் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று என்று எக்ஸ்குளுசன் குளோஸ் (exclusion clause)என்ற தன்மையும் தமிழர்களுடைய வழக்குகளை நிராகரிக்கின்ற தன்மை 2006ல் இருந்து காணப்பட்டு வருகிறது.
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளை மாத்திரமல்ல எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா? அந்த அமைப்புகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனவா? என்று பார்த்து அதற்கு சிறு ஆதாரமாவது இருந்தால் அதனைக் காரணமாகக் காட்டிக் கூட அவர்களது வழக்குகளை நிராகரித்து வருகிறார்கள். அப்படி நிராகரித்தாலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஏனெனில் அகதி அஸ்தஸ்து கிடைக்காவிட்டாலும் மனித உரிமை சாசனத்தின் ஆட்டிக்கிள் 3 இன் கீழ் அவர்களை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பாமல் பாதுகாப்புத் தேடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

இந்த அடிப்படையில் வழக்குள் நிராகரிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வாதாடப்பட்டு தொடர்ந்தும் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சில வழக்குகள் இந்த எக்ஸ்குளுசன் குளோசில் சேர்க்கப்பட்டு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஆட்டிக்கிஸ் 3 இன் கீழ் திருப்பி அனுப்பப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெற்றும் இருக்கிறார்கள்.

ல.குரல்: அண்மைக்காலத்தில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளதா? எவ்வாறான விண்ணப்பங்கள் தஞ்சம் கோரியவருக்கு சாதகமாகப் பரிசிலிக்கப்பட்டு உள்ளது?
கணநாதன்: இது புதிதாக வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான கேள்வி என்று பார்க்கிறேன். அப்படி பார்க்கும் போது ஓம்! இந்த நியூ அசைலம் மொடல் ஏப்ரல் 2007ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்குக் கீழ் வந்த வழக்குகள் சாதகமான முடிவுகளைப் பெற்றது. அதுவும் இப்ப 2008 கடைசிப் பகுதியில் இருந்து மோசமான நிலைக்கு போய்விட்டது. பழைய ஹோம் ஒபிஸ் மாதிரி எதையும் நிராகரிக்கிற நிலைக்குப் போய்விட்டது. இது இலங்கை அகதிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படியான நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

ல.குரல்: வழமையாக வழங்கப்படும் ஐஎல்ஆர் முறை நீக்கப்பட்டு தற்போது எல்எல்ஆர் Limited leave to remain (LLR) வழங்கப்படுவது பற்றி சற்று விளக்கவும்?
கணநாதன்: இந்த நடைமுறை வந்து 2005லேயே வந்துவிட்டது. அகதி அஸ்தஸ்து கிடைத்தாலும் ஐஎல்ஆர் வழங்கப்படுவதில்லை. எல்எல்ஆர் 5 வருடங்களுக்கு வழங்குகிறார்கள். அதுக்குப் பிறகு அவர்கள் இந்த நாட்டில் எந்தவித குற்றங்களும் புரியாமல் இருந்தால் அவர்களுடைய நாட்டின் சூழ்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் காணாத இடத்தில் அவர்களுக்கு அந்த 5 வருடங்களின் பிறகு ஐஎல்ஆர் வழங்குவது என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. அதில் ஒரு விடயம் முக்கியமாக வருகிறது. என்னவென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் அல்லது இந்தியாவில் இருந்தால் (அவர்கள் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னரேயே திருமணமாகி இருந்தால் பெரிய மாற்றம் இல்லை.) அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூப்பிடக் கூடியதாக இருக்கிறது. இல்லாமல் தனி இளைஞராக வந்து அவரது அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்பட்டால் அவர் மற்ற நாட்டுக்குச் சென்று திருமணம் முடித்து ஸ்பொன்சர் செய்யும் போது சில சிக்கல்கள் ஏற்படும்.

Asylum_Cartoonல.குரல்: அரசியல் தஞ்சம் கோரி உலகின் பல பாகங்களிலும் பலர் தங்கள் பயணத்திற்காகக் காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்க முடியும்?
கணநாதன்: சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது சரியான நடவடிக்கை இல்லை. பொதுவாக ஒரு அரசியல் என்று கதைத்தால் அது அவர்களுடைய முடிவு. இன்றைக்கு இலங்கையின் மனித உரிமைநிலைமை மிகவும் மோசமானதாக இருக்கிறது. அரசியலில் சம்பந்தப்படாத ஒரு தமிழரும் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று அங்கிருக்கிறது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எங்களுக்கு விளங்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்று சொல்கிற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் என்ன சொல்லலாம் என்றால் இங்கு வந்தவுடன் ஏதோ அள்ளிக் கொடுக்கினம் இங்க வந்தவுடன் அகதி அந்தஸ்து கிடைக்கிறது என்ன மாயையை வந்து நாங்கள் கொடுக்கக்கூடாது. இந்த நாட்டின் போக்கு வந்து ஒவ்வொருநாளும் இறுக்கமாகவும் கடும் போக்கிலும் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒருவருக்கு உயிராபத்து இருக்கிறது என்று சொன்னால் அவர் இந்த நாட்டுக்கு வரத்தான் வேணும். அதுக்கான சட்டத்தை இந்த நாடு வைத்திருக்கிறது. அதற்குக் கீழ் அரசியல் தஞ்சம் கேட்க வேணும் என்றால் கேக்கத்தான் வேணும். சரியான வழியில் சரியான சட்ட ஆலோசணைகளைப் பெற்று முதற்தடவையே சரியான முறையில் வழக்கை நடத்தி முடிவைக் காண வேண்டும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தாம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?
கணநாதன்: ஓம். இதுவும் ஒரு தட்டிக்கழிக்கின்ற கடும் போக்குத்தான். இங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் போதே எப்படி அனுப்பகிறார்கள் என்றால் யூடிசியல் ரிவியூ போட்டு முதலாவது படியில் தோற்றாலும் அவர்கள் மேலும் போகக் கூடிய உரிமை சட்டத்தில் இருக்கிறது. மேற் கொண்டு செல்லும் போதும் முதலாவது படியில் நிராகரிக்கும் போது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் உங்களை நிராகரிக்கிறது மாத்திரமல்ல உங்களை நாடுகடத்துவதற்கும் எதிராக உங்கள் விண்ணப்பத்தை மேற்கொண்டு சென்றாலும் நாடுகடத்துவதை நிறுத்தமாட்டோம் என்று முதலாவது படியில் வழங்குகிற தீர்ப்பிலேயே சொல்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும் யூடிசியல் ரிவியூவை அவர் நாடு கடத்தப்பட்ட பிறகும் தொடரலாம். முதலாவது படியில் நீதிபதி மறுத்திருந்தாலும் நான் இந்த வழக்கைத் தொடர விரும்புகிறன் என்று இங்கு தன்னுடைய சட்டத்தரணியூடாக தொடர வேண்டும். என்னை திருப்பி அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை ஆதாரபூர்வமாகக் காட்டி தன்னை திருப்பி பிரித்தானியாவுக்க அழைக்க வேண்டும் என்று ஹைக்கோட்டிடம் முறையிடலாம். ஹைக்கோட் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் அவர் இந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தவரப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதைவிட பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம். ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் பொது அமைப்புகளின் செயற்பாடுகள் எப்படி உள்ளது? அவர்கள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
கணநாதன்: அகதிகளுக்காக ஒரு அமைப்பு மட்டும் தான் இயங்குகிறது. என்று நினைக்கிறன். மற்றும்படி எந்த ஒரு தமிழ் அமைப்பும் அகதிகளுக்காக இயங்கவில்லை.

ல.குரல்: நீங்கள் ருவானைக் குறிப்பிடுகிறீர்களா?
கணநாதன்: ஓம். வேறு ஒரு அமைப்பும் அகதிகள் சம்பந்தமாக இயங்குவதாக எனக்கு தெரியவில்லை. வடிவாகப் பார்த்தால் ஹோம் ஒபிஸ் வந்து அந்த நிலையை ஒரு சிஸ்ரமற்றிகாககத்தான் உருவாக்கியது. முன்னர் நிதிகளைக் கொடுத்து சமூகத்தை பலப்படுத்தி வந்தார்கள். ஆனால் பிறகு இதையெல்லாம் குறைத்து அத்தோடு எங்களுக்குள்ள போட்டிகள் பிரச்சினைகளுக்காகவும் எல்லாம் சேர்ந்து குறைத்துக் கொள்ளப்பட்டது. இப்ப அந்த அமைப்புகள் எதுவும் அகதிகள் பிரச்சினையைத் தொடுவதே இல்லை. ருவானும் பொலிசி வேர்க் என்றில்லாமல் கேஸ் வேர்க்குகள் செய்துதான் தனிப்பட்ட முறையில் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ல.குரல்: இந்த விடயத்தில் தமிழ் பொது அமைப்புகள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
கணநாதன்: இந்தக் க்ளைமற்றில அவர்கள் பங்களிக்கிறதுக்கு இல்லை. அவர்கள் திருப்பியும் பிழையான நம்பிக்கைகளைக் கொடுக்காமல் அவர்கள் அப்படியே இயங்காமல் போறது நல்லது. அப்படி இருக்கும் போது அகதிக்காவது நான் என்னுடைய அலுவலைப் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்படும். அவை இருக்கினம் இந்த அமைப்பு இருக்கு அவை கம்பைன் பண்ணுறார் என்று பார்த்து அது எந்த பலனையும் தாற சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அப்படியான நிலையில இந்த அமைப்புகள் நச்சுரல் டெத்தை சந்தித்தது என்னைப் பொறுத்தவரை நல்லது. அந்த அமைப்புகள் இனி உருவாக்கப்பட்டாலும் அதன் பங்களிப்பு மிகக் கடினமாகத்தான் இருக்கும்.

ல.குரல்: திருப்பி அனுப்பப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் தமிழ் அமைப்புகள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
கணநாதன்: இந்த திருப்பி அனுப்பபடுகிற விசயத்தை நாங்கள் சமூகமாக விழிப்புணர்ச்சியோடு பார்க்கிறம். ஆனால் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டதும் நாஙகளும் திருப்பி அனுப்பப்டவரும் அதை அப்படியே விட்டுவிடுறம். ஹோம் ஒபிஸ் என்ன சொல்லப் பார்க்கிறது என்றால் இத்தனை பேரை திருப்பி அனுப்பின நாங்கள். அவை அங்கு போய் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் திருப்பி அனுப்பிறது சரி என்று. அதனால் தாங்கள் அகதிகளைத் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டுதான் இருப்பம் என்று. அப்ப திருப்பி அனுப்பப்பட்ட ஆட்களுக்கு என்ன நடந்தது என்ற ஆதாரங்கள் சேகரிக்க முடியும் என்றால் அது இங்குள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும் பார்க்க திருப்பி அனுப்புகிறவர்களுக்கான அட்வைஸ் லைன் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கான உதவிகளை வழங்க முடியும் என்றால் அது பெரிய உதவியாக இருக்கும்.

ல.குரல்: அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவதற்கு ஏதாவது வழிகள் உண்டா?
கணநாதன்: இன்றைக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தச் சொல்வதையும் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோருவதையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறன். இன்றைக்கு நாங்கள் லொபி பண்ணி யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லுவாராக இருந்தால் நிச்சயமாக அகதியை அனுப்புவதையும் நிறுத்தலாம். அரசியலில் அடிபட்ட ஒருவருக்குத் தெரியும் இரண்டுமே சரியான கஸ்டம். கொள்கை முடிவுகள் எங்கெங்கோ எடுக்கினம் அதுக்கு ஜனநாயக மூலாமைப் பூசி வைக்கினம். அதில மக்களோ லொபி குறூப்போ வந்து இம்பக்றை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ஒரு நிலை. முன்னர் ஒரு அகதியைத் திருப்பி அனுப்பினால் அகதி அமைப்புகள் குரல் கொடுக்கும், பிசப் குரல் கொடுப்பார் எத்தினையோ என்ஜிஓ எல்லாம் போர்க்கொடி எழுப்பும்.

ஆனால் இப்ப சட்ட ரீதியாக வாதாடக் கூடிய அடிப்படை உரிமைகளையே கொடுக்காமல் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் உயிராபத்தில் உள்ளவர்களே கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவத்திற்கு அரசாங்கத்தின் போக்கு கடுமையாக இருக்கிறது. அதனை எதிர்கொண்டு தடுக்கிறது மிகவும் கஸ்டமாக இருக்கிறது.

அரசியல் ரீதியாகவோ லொபி செய்தோ அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

தனிப்பட்ட வழக்குகளில் சட்டரீதியாகச் சென்று முதலில் இருந்தே சரியான முறையில் வாதிட்டு முதற்தடவையே சரியான முறையில் வழக்கு கையாளப்பட்டால் இந்த சூழலிலும் சாதகமாக தஞ்ச விண்ணப்பத்தை பரிசிலிக்கச் செய்ய முடியும். அப்படி இல்லாமல் நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலைத் தடுப்பதற்கு முதல் முறையாகப் போடுகிற ஜீடிசறி ரிவியூவை செம்மையாகப் போட்டு இருந்தாலும் உச்ச நிதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிப்பாட்டக் கூடிய சூழல் இருக்கிறது. அதில் நிராகரிக்கப்பட்டால் கூட ஐரோப்பிய நீதிமன்றம் வரை சென்று நாடுகடத்தலை நிறுத்த முடியும்.

யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை உணர்ந்து அதனை உடன் அமுல்படுத்த வேண்டும் – கலாநிதி விக்கிரமபாகு

wikkirama-bhahu.jpgஇலங்கையில் யுத்தநிறுத்தம் அவசியம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலையும் பிரச்சினைக்குத் தீர்வு அதிகாரப்பரவலே என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் உணர்ந்து அதனை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம் என்பது புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது மாத்திரம் அல்ல. யுத்தத்தை ஆரம்பித்த அரசாங்கமே ஆயுத நடவடிக்கைகளை முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார். யுத்தத்தை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றமை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே விக்ரமபாகு கருணாரட்ண இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது. இது இந்தியாவின் போலித் தனத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வருகின்ற அதிகாரப் பரவலானது இங்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப்பரவலே தீர்வு என்று கூறுகின்ற இந்தியா, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மையான விடயம்.

இருப்பினும், இன்றைய நிலையில் அதிகாரப்பரவலை கோரியிருக்கின்ற இந்திய மத்திய அரசு, ஆயுத வழங்கலை நிறுத்திக்கொள்வதே அத்தியாவசியமானது. ஏனெனில், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும். மறுபுரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இங்கு யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரியிருக்கின்றமை வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் கோரிய மேற்படி ஒன்றியமானது புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இந்த நாட்டின் குடிமக்கள் அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தலையும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் உடனடியாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்றார்.