March

March

இறக்குமதி சோளத்துக்கு 35 வீதம் செஸ் வரி

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் சோளத்திற்கும் 35 சதவீதப்படி செஸ்வரி விதிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.உள்ளூர் சோளச் செய்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த இந்த செஸ் வரி யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த செஸ் வரி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நெல்லுக்கு அடுத்த படியான உணவுத் தானியமாக சோளம் அரசாங்கத்தினால் கடந்த வருடம் விரிவான அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டது. இதன் பயனாக 2008 ஆம் ஆண்டில் 52 ஆயிரத்து 353 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டது. இவற்றின் மூலம் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 243 மெற்றிக் தொன் சோளம் அறுவடை செய்யப்பட்டது.

கடந்த வருடம் சோளச் செய்கை அதிகரித்ததுடன் அறுவடையும் அதிகரித்தது. இதனால் சோள இறக்குமதி பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. 2005 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 846 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட சோளம் 2008 ஆம் ஆண்டில் 82 ஆயிரத்து 490 மெற்றிக் தொன்னாக வீழ்ச்சி அடைந்தது. இதன் பலனாக அந்நிய செலாவணியும் மீதமாகியுள்ளது.

2008/2009 பெரும் போகத்தில் 65 ஆயிரத்து 850 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் இப்போதைக்கு 60 ஆயிரத்து 582 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து இருநூறு மெற்றிக் தொன் சோளம் அறுவடையாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் உலக சந்தையில் சோளத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சோள இறக்குமதிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகி ன்றன. இதனால் உள்ளூர் சோளச் செய்கையா ளர்கள் பாதிக்கப்பட இடமளிக்கக் கூடாது என் பதற்காகவே இந்த செஸ் வரி அறிமுகப்படுத் தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வர தீர் மானிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும்:- கயந்த கருணாதிலக்க

gayantha.jpgமேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

Exodus_1947Exodus 1947 :

1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.

Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.

1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.

திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.

ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.

இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.

இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.

Vanni_Mission வணங்கா மண் 2009 :

._._._._._.

“வணங்கா மண்”:  உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.

“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்

._._._._._. 

Operation Vananga-Man  Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid,  Tamils Health Organisation,  The Tamils Support Foundation,  Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது.  நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.

‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.

1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?

அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.

ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.

‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.

இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
 
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.

இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
 
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’

கலாநிதி குமார் ரூபசிங்க

இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேல் மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு ! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

ranjeth-gunasekara.jpgகடந்த ஐந்து வருடத்துக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி,ஞாயிறு (21,22,)  ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  மேலும் கூறியதாவது,

வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை. எனவே பொது மக்கள் எப்போதும் விழ்ப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கௌள வேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேறn;காண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரவித்தார். 

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு- படைத்தரப்பு

army-s-l.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.  இதில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கினறது

கச்சைதீவில் சமய வழிபாட்டுத்தலம்

kachchativu.gifகச்சைதீவு இலங்கைக்கே சொந்தமானதெனவும் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கச்சைதீவில் இப்போது சமய வழிபாட்டுத்தலமொன்று அமைக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பொது மக்களும் அங்கு தினமும் வந்து வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களையும் அப்பிரதேசத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

19-father.jpgநெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.  இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.

”பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார்.” அமைச்சர் முரளிதரன் லங்காதீபக்கு வழங்கிய செவ்வி.

karuna1.jpgகேள்வி : புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?

பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய விடயங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் எடுத்தியம்பி என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய ஒரே நோக்கு பயங்கரவாத தாக்குதல்களாகவே இருந்தது, அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலே போய்விட்டது, பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் ஈடுபாடற்ற தன்மையையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. மற்றது ஜெனீவா பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும் அதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்திருக்கவில்லை. இந்த நிலைமை காரணமாக எனக்கு எமது தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்படவே நான் அந்த அமைப்பிலிருந்து விலகினேன். தமிழ் மக்களின் விடிவிற்காய் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு குழம்பிப்போயிருந்த பிரபாகரனின் பாசிச போக்குத்தான் என்னை இந்த ஜனநாயக நீரோட்டத்தில் குதிக்க வைத்தது.

கேள்வி : நீங்கள் த.ம.வி.புலிகளிலிருந்து விலகி சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து உறுப்பினராவதற்கான காரணம் என்ன?

பதில் : த.ம.வி.புலிகள் அமைப்பு ஒரு எதிர்காலம் இல்லாத அமைப்பு. தற்பொழுது அக்கட்சியில் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர். பிள்ளையான், பத்மினி, பிரதீப் ஆகியோரே உள்ளனர். எதிர்காலம் இல்லாத அக்கட்சியிலிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அதனால்தான் என்னுடன் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பலரும் சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு நீங்கள் பகீரத பிரயாத்தனம் செய்திருந்தீர்களல்லவா?

பதில் : ஆம், அது முற்றிலும் உண்மை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிக்கு புலிகள் என்ற பதம் பொருத்தமான தொன்றல்ல,  இந்நாட்டின் சகல மக்களுக்கும் புலி என்ற பெயரில் அதிகபட்ஷ விருப்பமின்மையையே காணக்கூடியதாக இருக்கிறது. அதே போல் இந்நாட்டு மக்களுக்கு புலிகளால் பாரிய பொருளாதார இழப்புக்களும்,  அதே போல் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு,  அவர்களுடைய வீடு வாசல்,  அசையும் அசையா சொத்துக்கள் அழிந்திருப்பது மட்டுமில்லாது,  பல உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்,  அதிலும் பலர் அங்கவீனமடைந்துமுள்ளனர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அழிந்து போயிருக்கிறது,  இப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய புலிகள் என்ற பெயரை த.ம.வி.புலிகள் அமைப்பின் பெயரிலிருந்த நீக்குவதற்கு முயற்சித்தேன்,  அத்தோடு புலி என்ற பெயரிலிருக்கும் அமைப்பினால் (தற்கால கட்டத்தில்) தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு,  அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முடியாது என்ற யதார்த்த நிலமையை உணர்ந்த பின்புதான் நான் அந்த முடிவினை எடுத்திருந்தேன்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தை அகற்றுவதற்கு பிள்ளையான் விரும்பவில்லை. நீங்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் மூல காரணமா?

பதில் : எதிர்காலமே இருண்டு போயிருக்கும் அக்கட்சியிலிருந்து கொண்டு முன்னேற்றப் பாதையில் எமது மக்களுடன் பயணிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன், முன்நோக்கிச் செல்லும் பயணம். த.ம.வி.புலிகள் கட்சிக்கு எதிர்காலமே இல்லாத காரணத்தினால் நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.

கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கோபமாக இருக்கிறீர்களா?

பதில் : இல்லை, அப்படியொரு கோபமுமில்லை,  எங்கள் இருவரினதும் எதிர்பார்ப்பு மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களுடைய ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்வதுமேயாகும். மக்களின் எதிர்காலம் பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. த.ம.வி.புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்க பிள்ளையான் விரும்பவில்லை, ஆனால் நான் விரும்பினேன். கட்சிகளுக்குள் தலைமைத்துவ பிரச்சனை என்பது பொதுவானது. இன்றுகூட ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவைகள் சாதாரணமானவைகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில்,  மக்களின் சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டுமே தவிர,  தனிப்பட்ட வைராக்கியங்களுடன் கூடிய அரசியலுக்கு இடமில்லை.. யார் தன்னலமற்ற மக்கள் சேவகன் என்பதை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்கின்ற எஜமான்கள். பெயரிலுள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு பிள்ளையானக்கு விருப்பமில்லை, அவ்வளவுதான் இதில் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு வாய்ப்பில்லை.

கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் உங்களுடன் சேர்த்து யார் யாரெல்லாம் இணைந்து கொண்டார்கள் என்று கூற முடியுமா?

பதில் : ஆம்,  என்னுடன் த.ம.வி.புலிகளுடன் தொடர்புபட்ட சுமார் 2000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்கள்.

கேள்வி : நீங்கள் என்ன எதிர்பார்ப்புடன், நோக்கத்துடன் சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்?

பதில் : எனது அரசியல் பிரவேசத்துடன் கிழக்கில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்த்தேன், அது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அதனால்தான் த.ம.வி.புலிகளிடமிருந்து வெளியேறினேன். நாட்டின் அனேக மக்களின் ஆசிர்வாதத்தின் மத்தியில்,  கிழக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தி,  அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் முதற்கொண்டு பாகுபாடற்ற சேவையினை எதிர்காலத்தில் வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்த ஒரு நிலமை ஏற்பட்டு எமது மக்கள் கௌரவத்துடனும், போஷாக்குடனும்,  பொருளாதார கல்வி வளர்ச்சியுடனும் ஏனைய சமூகங்களுக்குக் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் அவர்களுக்குக்கிடைத்து,  ஏனைய சமூகங்கள் போல் அசுர வேகத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதற்காகவுமே சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.

கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தற்பொழுது அவற்றுக்கு என்ன நடந்தது?

பதில் : குறிப்பாக எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்களைப் பாவிப்பது பயங்கரவாத அமைப்பாகும். நாங்கள் பயங்கரவாத அமைப்பல்ல. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடமிருந்த ஆயுதங்களை கையளித்து விட்டோம். என்னுடன் இருப்பவர்கள் ஜனநாயக வழிக்குத்திரும்பி விட்டார்கள்,  தற்பொழுது எம்மிடம் ஆயுதங்களில்லை.

கேள்வி : அப்படியானால் உங்களுடைய பாதுகாப்பு?

பதில் : ஏனைய அமைச்சர்களைப் போன்று எனக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : நீங்கள் புலிப் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இரக்கிறதா?

பதில் : இலேசான புன்னகையுடன் பதில் : நான் அப்பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்பொழுது வெளியேறினேனோ, அன்றிலிருந்து நான் அவ்வமைப்பின் முதலாவது இலக்காகத்தான் இருந்து வருகிறேன்.

கேள்வி : தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பானது,  தங்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா?

பதில் : ஆம்,  திருப்தியானதாக இருக்கின்றது.

கேள்வி : வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு, நாட்டிற்கு சிறந்ததொரு சேவையை செய்யமுடியுமென்று கருதுகிறீர்களா?

பதில் : ஏன் முடியாது? எனக்கு கிடைத்திருக்கும் அமைச்சு நாட்டின் முக்கியமானதொரு பொறுப்புவாய்ந்த அமைச்சாகும். இன்று நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும், ஒற்றுமையின்மையும்தான். மீண்டும் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலர வேண்டுமாகில் அனைத்து இனங்களும் விட்டுக் கொடப்புக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், இது பேச்சளவில் இல்லாமல் அதற்கான களம் அமைத்துக் கொடக்கப்பட வேண்டும். அந்த நிலமையை ஏற்படுத்தவதற்கு எனது இந்த அமைச்சினூடாக பல வேலைத்திட்டங்களை செய்யலாம் என்று கருதுகிறேன். நான் அமைச்சர் டீயூ குணசேகர அவர்களுடன் இணைந்து சேவை செய்ய கிடைத்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் முதர்ச்சியுள்ள, அனுபவம் மிக்க சிறந்த அரசியல்வாதி கௌரவ டீயூ குணசேகர அவர்கள்,  அவர் எனக்கு எல்லா வழிகளிலும் பக்க பலமாக, உதவியாக இருக்கின்றார்.

கேள்வி : நீங்கள் இந்த நிலையை அடைவதற்காகவே, ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தினீர்கள் என்று யாராவது சொன்னால்………

பதில் : பலரும் பத்தையும் கதைப்பார்கள். காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம் பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக்கூடாது. ஜனநாயகத்திற்கு வந்துவிட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். மேன்மை தங்கிய ஜனாதிபதின் சகோதரர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களிடமிருந்து எனக்கு விசேடமாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. நான் அமைச்சுப் பதவிக்காக காத்திருந்தவனுமல்ல,  நான் அதைக்கேட்டதுமில்லை,  எனக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தவர் ஜனாதிபதி அவர்கள். அவருடைய வேண்டுகோளிற்கு இணங்கினேன். இதில் எந்தவிதமான குறைபாடுகளும் எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : யுத்தம் தொடர்பான கேள்வி ஒன்று, பிரபாகரனின் இன்றைய நிலை என்ன?

பதில் : இக்கேள்வி தொடர்பான நல்லதொரு விரிவான பதிலினை இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். பிரபாகரன் தற்பொழுது அவருடைய படைகளில் மிஞ்சிய நன்கு பயிற்றப்பட்டவர்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார். இதற்காகத்தான் அப்பாவி மக்களை தனது கவசமாக வைத்திருக்கிறார்.

TMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சபையாக மாற்றம்

slfp-tmvp.jpgTMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று (மார். 18) முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ். பாக்கியராசா, உப தவிசாளருடன் மேலும் மூன்று ரி. எம். வி. பி. உறுப் பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்களில் 6 பேர் ரி. எம். வி. பி. கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக் கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே, ஓட்டமாவடி பிரதேச சபை இக்கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

55வது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் பட்டிக்கரை பிரதேசம்.

safe_zone.jpgசாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது