Multiple Page/Post

நீதி விசாரணைகள் அற்ற தமிழ்பேசும் அரசியற் கைதிகள்: சோதிலிங்கம் ரி

Prision photo

கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என கோரி இலங்கை சிறைச்சாலைகளுக்குள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடாத்துகின்றனர்

வன்னி யுத்த நடவடிக்கைகளுக்கு முன்னர் வட- கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அல்லது புலிகள் என சந்தேகிக்கப்படும் அரசியற் கைதிகள் அண்ணளவாக 1200 பேர் வரையில் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குறிப்பிடத்தக்கோர் பல வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் இன்றுவரை நீதி விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படாமலேயே (ரிமான்ட் கைதிகளாக) தடுத்து வைக்கப்பட்டுள்னர். இவர்கள் தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற தமது போராட்டங்களை தமது சார்பில் எடுத்துச் சொல்ல யாரும் அக்கறை அற்றவர்களாகவும் உள்ளனர் என்றும், இப்படி சிறைகளில் உள்ள பலர் தாம் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள் என்றும் தம்மீது குற்றங்கள் இருப்பின் நிரூபித்து தண்டனை வழங்கலாம் என்றும் அதைவிடுத்து தம்மை நீதி விசாரணைகள் இன்றி தடுப்புக்காவல் சிறையில் அடைத்திருப்பது இலங்கை அரசின் மனிதாபமற்ற செயல் என்றும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசு தம்மை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானமற்ற முறையில் நடாத்துவதாகவும் கருத்து கூறுகின்றனர்.

சிறைகளில் உள்ள போராளிகளில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர். இச்சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட 1200 பேர்வரையில் வன்னி யுத்தத்திற்கு முன்பு கைசெய்யப்பட்டவர்கள் இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இலங்கை இராணுவம் கைது சென்று விசாரணையின் பின்னர் கொன்றுவிட்டது இன்னும் சிலர் இவர்களில் பலர் சயனைட் உட்கொண்டு மடிந்து போயினர் என்று கருதப்படுபவர்கள் இலங்கை சிறைச்சாலையிலும் தடுப்பு முகாமிலும் இராணுவ பொலீஸ் முகாம்களிலுமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறு பகுதியினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்களுமாக சிறைச்சாலைகளிலும் உள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் J வாட்டில் 68 பேரும், G செல்லில் 75 பேரும், பெண்கள் பிரிவில் பெண்கள் 53 பேரும் CRP மகசீன் சிறையில் 159 பேருமாக உள்ளனர். G செல்லில் உள்ளவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளில் பலர் 10வருடங்கள், 12வருடங்கள், 15வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்துக் கொண்டும் உள்ளனர்

இதைவிட அநுராதபுரம் சிறைச்சாலைகளில் 200க்கு மேற்ப்பட்டோரும் யாழ்ப்பாண சிறையில் 250 க்கு அதிகமானோரும், அவர்களுடன் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தோருமாக 400 பேர்வரையிலும், பூசா தடுப்பு முகாமில் 330க்கு மேற்ப்பட்டோரும் உள்ளனர். இதைவிட சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாடல்லாத CID, DID, NIB போன்ற இராணுவ, பொலீஸ், உளவுப்பிரிவினரின் தடுப்பு முகாம்களிலும் என பரவலாக 1500 பேர்வரையிலான தமிழ் பேசும் அரசியற் கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

(புலிகளுடனான முள்ளி வாய்க்கால் வரையில் நடைபெற்ற வன்னி இறுதி யுத்தத்தில் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்களும், பின்னர் வன்னி அகதி முகாம்களில் தெரிவு செய்து கைது செய்ப்படுபவர்களும் ,இறுதி யத்தத்தின்போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களும், சரணடைந்தவர்களும் உட்பட IDP முகாம்களில் தம்மிடம் பதிவு செய்யும்படி கேட்டுவிட்டு புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இந்த கட்டுரையில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.)

சிறைக் கைதிகளில் 75 சதவிகிதத்தினர் 2003ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு எடுத்து வரப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களே. இவர்களில் மீதி 25 சதவிகிதத்தினர் 7வருடங்கள், 10வருடங்கள், 20வருடங்கள் 12 வருடங்களாக நீதிவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களேயாவர். இந்தக் கைதிகள் பலர் சித்திரவதைகளினால் ஏற்ப்பட்ட காயங்களுடனும் மனநோயாலும் பாதிப்படைந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் தாம் இந்த சிறைகளிலேயே வாழ்ந்து மடிந்து போயிடுவோம் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்த சிறைகளில் உள்ள பெண்கள் சிலர் கைதுசெய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தவர்கள். இவர்கள் சிறையில் இருக்கும் போதே குழந்தைகள் பிறந்தும் இக் குழந்தைகள் தற்போது 23 மாதம், 20 மாதம் மற்றும் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளாக உள்ளனர். இக்குழந்தைகள் தமது தாய்களுடன் நீதி மன்றத்திற்கு வரும் காட்சிகளை பலர பார்த்த்துள்ளனர். இந்த குழந்தைகள் ஏன் சிறைகளில் வாழவேண்டும் என்பதை பலரும் கவலையுடன் தெரிவித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சில கர்ப்பிணிப் பெண்கள் இவர்களின் கணவன்மார்களுடன் கைது செய்யப்பட்டவர்கள். கணவர்மார் சிறைச்சாலையின் ஆண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தம் குடும்பங்களுடன் சந்தித்து கலந்துரையாட ஒவ்வொரு கிழமையும் அனுதிக்கப்படுகின்றனர்.

இந்தக் குற்றமற்ற குழந்தைகள் சிறையில் அடைக்கபட்டுள்ளது சட்டவிரோதமானது தானே என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான நிஹால் ஜெயசிங்கேயிடம் கேட்டபோது ‘தாயே குழந்தையின் பாதுகாவலர் என்றும் குழந்தைகளை பிரித்தெடுத்து தனியே பராமரிக்கும் சட்டமுறைகளும், அதற்குரிய சமூக வசதிகளும் அரசிடம் இல்லை என்பதால் இந்தக் குழந்தைகள் தாயுடன் சிறையில் இருப்பது தவிர்க்க முடியாதது’ என்றும் பதிலளித்தார்.

சிறையிலுள்ள குடும்பங்களுக்கு அவர்களது உறவினர்கள் நண்பர்கள் உணவுப் பொருட்கள் பால்மாப் பொருட்கள் கொண்டுவந்து கொடுக்க சிறைச்சாலை அனுமதித்த போதிலும் யாரும் கொண்டுவந்து கொடுக்கத் துணிவதில்லை. காரணம் கொண்டுவந்து கொடுப்பவர்களும் புலிகளாக இனம் காணப்படுவர் அல்லது அவதானிக்கப்படுவர் அல்லது அவர்களும் காணாமல் போய்விடுவர் என்ற பயமேயாகும். இதற்கு உதாரணமாக சில உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் தேசம் நெற்றுக்கு தெரிவிக்கின்றனர்.

தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற அடிப்படையில் தற்போது போராட்டங்களை நடாத்தம் இந்த அரசியற் கைதிகள் முன்பும் பல தடவைகள் பல உண்ணாவிரத போராட்டங்கள் செய்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் எதுவித பலனும் அற்றுப்போயுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் பற்றி தமிழ்ச்சமூகம் குறிப்பாக புலம் பெயர் சமூகம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என்பதையும் இச்சிறைகளில் உள்ள பல முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இப் போரட்டங்களின் பின்னர் தம்மை ஜநா மனிதஉரிமைகள் குழு 2007 டிசம்பர் மாதம் 9ம் திகதி சிறைகளுக்கு வந்து பார்வையிட்டனர் எனினும் அவர்களை விசாரணை செய்ய அல்லது விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்வதாகவும் 3 மாத காலங்களுக்குள் பதில் தருவதாக உறுதி மொழியும் கொடுத்துச் சென்றனராயினும் இதுவரையில் ஜநா மனித உரிமைகள் குழுவிடமிருந்து எந்த பதிலும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்தனர்.

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல வகையான சித்திரவதைக்குள்ளாவதாகவும் இன்றும் இவர்கள் விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இது பற்றி நிஹால் ஜெயசிங்கேயிடம் விசாரித்தபோது ‘ரிமான்ட்டில் உள்ளவர்களும் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளும் வெளியே எடுத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலங்கை சட்டவியலில் இடம் இல்லை என்றும் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது’ என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் அனுமதி வழங்காமல் சிறையிலிருந்து யாரையும் இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் எடுத்துச்செல்ல சிறைச்சாலை நிர்வாகம் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள கைதிகள் தமக்கு மூன்று வேளை உணவு தரப்படுவதாகவும், மூன்று வேளையும் சோறு தரப்படுவதாகவும் கூறினர். காலையில் சோறு சம்பல் சொதியுடனும், மதியத்திலும் இரவிலும் சோறு இரண்டு அல்லது மூன்று கறிகளுடன் தரப்படுவதாகவும், இதில் கிழமையில் ஒருநாள் கோழிக்கறியும் கிழமையில் ஒருநாள் மீன்கறியும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணியும் தரப்படுவதாயும் கூறினர்.

தமது போராட்டங்களில் என்றும் எதுவுமே சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்ய முடியாது என்றும் இப்படி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்தால் தமக்கு தரப்படும் உணவுகள் வசதிகள் குறைக்கப்பட்டு விடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாயும் கூறினர்.

அதேவேளை இந்த தமிழ் அரசியல்கைதிகள் கடந்த தமது சிறைக்கால வரலாற்றில் தைப்பொங்கல், புதுவருடம், மாவீரர் தினம், நத்தார் போன்ற தினங்களை கொண்டாடுவதாயும் தெரிவிக்கின்றனர். இதற்கான வசதிகளை சிறைச்சாலை நிர்வாகமே செய்து தருவதாயும் கூறிய இவர்கள் தாம் வாழும் போதே இப்படியான வாழ்க்கையை தவறவிடக் கூடாது என்பதிலும் தாம் இனிமேல் தமது சாதாரண வாழ்க்கை கிடைக்குமா, என்ற ஆதங்கத்துடன் தாம் வாழும் போதே வாழ்ந்து விடவேண்டும் என்ற மனத்துடன் இந்த சிறைகளில் வாழ்வதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சிறைச்சாலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் தமக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் தரப்படுவதாயும் அத்துடன் ரேடியோ தொலைக்காட்சி போன்ற உபகரணங்கள் தரப்பட்டுள்ளதாயும் தாம் IBC Tamil ன் தாயகம் உறவுப்பால நிகழ்ச்சியினை அரச ஒலிபரப்பு தடை இடையூறுகளுக்கு ஊடாகவும் கேட்கக் கூடியதாக இருந்ததாயும் தெரிவித்தனர்.

இந்த சிறையிலுள்ள இன்னும் சிலர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட முடியாத இயக்கம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கினாலும் ஒரு சிறிய பகுதியினரான புலிகளின் செயற்ப்பாட்டிலிருந்து அது மீண்டும் பரந்து வியாபித்து எழும் என்ற அதீத நம்பிக்கையுடன் வாழ்கின்றதையும் நான் உணர்ந்து கொண்டேன்.

பலர் சித்திரவதைகளில் ஏற்ப்பட்ட வடுக்களினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் அமைப்புக்களோ சர்வதேச தமிழர் அமைப்புக்களோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்பதையும் இவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் தம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க அல்லது தம்மை விடுதலை செய்யவும் தம்மீது செய்யப்பட்ட சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் கவனம் எடுத்து தமக்கு புலம்பெயர் தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்றும் இந்த கைதிகள் கோருகின்றனர்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது நிலைபற்றியும் சர்வதேச அமைப்புக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் முதல் தடவையாக முன்வைக்கபபடும் இந்த பதிவை புலம் பெயர் சமூகம் கவனமெடுத்து செயற்ப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த சிறைச்சாலைகளில் உள்ள பல தமிழ் அரசியல்க்கைதிகள் பலர் தமக்கு தேவையான உடுபுடவைகள் துணிகள் போதாமையால் அவதியுறுவதாகவும் குறிப்பாக பெண்களுக்குரிய ஆடைகள் பற்றாக்குறை உள்ளதும் கவனத்தில் எடுத்து உதவிகள் அளிக்கப்பட வேண்டிய தேவையில் உள்ளனர்.

வட-கிழக்கிலுள்ள மக்களின் அன்றாட தேவைகளை இந்த யுத்தம் நாசம் செய்துள்ளதாலும் தமது சாதாரண வாழ்வையே வாழமுடியாது தவிப்பதாலும் மக்கள் வேறு விடயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே வாழ்கின்றனர். மேலும் மக்களின் பேச்சுச் சுதந்திரம் உட்பட பல சுதந்திரங்கள் விடுதலை இயக்கங்களாலும் அரசினாலும் கட்டுப் படுத்தப்பட்டிருந்தது இந்த உணர்விலிருந்து இன்று வரையில் தமிழ் மக்கள் விடுபடவில்லை அல்லது விடுபட முடியாது காரணிகள் தொடர்ந்தும் உள்ளன.

வட கிழக்கு மக்கள் புலிகளைப் பற்றி எது சரி பேசினாலே தான் புலிஎன அடையாளம் காணப்பட்டு கொல்லப்படுவேன் என எதிர்பார்க்கும் நிலை இருக்கையிலும் சிறையிலுள்ள தமது உடன் பிறப்புக்கள் உறவினர்கள் பற்றி அக்கறை காட்டினாலே தமது உயிருக்கு ஆபத்து என்ற நிலைப்பாட்டில்- அவர்கள் எப்படி சிறையிலுள்ள புலிகளுக்காக கருத்துக்களை முன்வைக்க அல்லது போராட முடியும்.

புலம் பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் முக்கியமாக நிதி சேகரிப்பு பிரச்சாரங்கள் ஆர்ப்பாட்டங்களில் காட்டும் அரசியல் அக்கறையை இக்கைது செய்யப்பட்ட புலிப்போராளிகளில் காட்டமுடியாமைக்கு புலிகளினால் உருவாக்கப்பட்ட கலாச்சாரமே முக்கிய காரணமாகும். அதாவது சிறை சென்றவர்கள் இயக்க விதிப்படி சயனைட் சாப்பிட்டு தன்னை மாய்த்துக் கொள்ளாத- எமது இரகசியங்களை அரசுக்கு கொடுத்தவர்கள் என்ற கருத்துக் கொண்ட கலாச்சாரமே.

சிறையிலுள்ள போராளிகள் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தாம் அக்கறையில்லாமல் கைவிடப் பட்டவர்களாகவும் தாம் என்றோ ஒருநாள் இலங்கை அரசினால் கொல்லப்படுவோம் என்ற உணர்வுடனும் வாழ்கின்றனர். இன்னும் சிலர் தாம் விடுதலை செய்யப்படின் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்குடனும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட விருப்பமும் கொண்டுள்ளனர். அதேசமயத்தில் மற்றைய தமது சக கைதிகளுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி பேச முடியாத நிலையிலும் உள்ளனர். தாம் துரோகிகள் என்றோ அல்லது கருணா ஆதரவாளர்கள் என்றோ பார்க்கப்படும் அல்லது பிரச்சினைகள் எழுந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.

நிவாரணக் கிராமங்களுக்கு மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் நியமனம்!

nimalsiripaladasilva.jpgவடக்கு நிவாரணக் கிராமங்களில் பணியாற்ற மேலும் 100 வைத்தியர்களும் 200 தாதியர்களும் அடுத்த மாதம் 15 ஆம் திகதி அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

வடக்கு நிவாரணக் கிராமங்களில் விசேட வைத்தியர்கள் உட்பட 75 வைத்தியர்களும் 90 தாதியர்களும் தற்பொழுது கடமையாற்றி வருகின்றனர். இங்கு தங்கியுள்ள மக்களுக்கு இப்போது சிறந்த வைத்திய வசதிகள் வழங்கப்பட்டு வருவதானால் நிவாரணக் கிராமங்களில் மரண வீதம் குறைந்துள்ளது.

இத்தாலி மற்றும் ஜெர்மன் நாடுகளின் உதவியில் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் செட்டிக்குளம் தள வைத்தியசாலை அமைச்சரவை அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். 

தன்சானியாவில் ஷியாம்லால் கொலை செய்யப்பட்டுள்ளார்-ஐ.நா.வின் பேச்சாளர் தகவல்

தன்சானியாவின் அருஷா நகரில் அண்மையில் தமது வீட்டில் இறந்துகிடக்க காணப்பட்ட ஷியாம்லால் ராஜபக்ஷ, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் மிசேல் மொன்ராஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகனான ஷியாம்லால் இறக்கும் போது ருவாண்டாவுக்கான ஐக்கிய நாடுகள் சர்வதேச குற்றவியல் விசாரணை சபையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மரணம் குறித்து, தன்சானியா, இலங்கை ஆகிய இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று மொன்ராஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இன்னமும் அறிவிக்கப்படாததால் விசாரணை முடிவுகள் பற்றிய விபரங்களை தம்மால் வெளியிட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டுக்கு 21 கோடி – வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 21 கோடிக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜனரல் பீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். முதல்கட்டமாக யாழ் மாவட்டத்தில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படாத 19 பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய 9 கோடியே 85 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் யாழ் மாவட்ட கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 219.861.198 ரூபாவை ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்தின் வளங்களை அதிகரிக்க 43 மில்லியன் ரூபாவையும் சுகாதார மத்திய நிலையங்களை நவீனமயப்படுத்த 13 மில்லியன் ரூபாவையும் உள்ளக விiயாட்டரங்கொன்றை அமைக்க 12 மில்லியனையும் கைலாசபதி கேட்போர் கூடத்தை குளிரூட்டி வசதிகளுடன் நவீனமயப்படுத்த 10 மில்லியனையும் அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய 8 மில்லியனையும் ஒதுக்கியுள்ளதாக மேலம் தெரிவிக்கப்படுகிறது.

மீள்குயேற்றத்தின் பின்னரான தேர்தல்களே மக்கள் ஆணையை பெற்றவையாக அமையும்:ரவூப் ஹக்கீம்

எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பின் இத் தேர்தல்கள் இடம்பெறுமாயின் அது நீதியானதும், நேர்மையானதும் மக்கள் ஆணையைப் பெற்றதுமான தேர்தலாக அமையுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களை மிக விரைவாக சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என ஜனாதிபதியும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர். நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

யாழ் தீவகற்பத்திலிருந்து விடுதலை புலிகள் வெளியேறும் போது அவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விரைவாக மீள்குடியேற்றப்படின் இப்பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக ஒழுங்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும். எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே இடம்பெயர்ந்த இம்மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படின் அது நீதியான மக்கள் ஆணையைப் பெற்ற தேர்தலாக அமையும்.

அதேவேளை சமாந்தரமாக ஏறத்தாழ 20 வருடங்களிற்கு முன் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றத்தில் ஆர்வமாக காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கை காட்டுவதாக நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்ததன் பின்னணியில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் 14 பஸ்களில் 450 குடும்பங்களை அழைத்துச் சென்று முஸலி பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தொட்டம் தொட்டமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இது உண்மையில் அப்பகுதியை பார்த்துவருவதற்கு சென்ற மக்களை கூடாரங்களை அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள முயற்சியானது அம்மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருகிறது. அங்குள்ள பாதுகாப்பு தரப்பைச் சார்ந்த அதிகாரிகள் அம்மக்களை வெளி இடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப் பாஸ் நடைமுறை அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிற்கு காணப்படுவதில்லை, தமக்கு மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதை விட அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதார பிரச்சினை குறிப்பாக கடற்படையினர் மீனவர்களுக்கு கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை.தற்போ மீன் பிடிப்பதற்கு உகந்த காலமாதலால் சிலாவத்துறை , முஸலி பிரதேச மீனவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.எனினும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

வாழ்வாதாரத்திற்காக மீள்குடியேற்றத்தை விரும்பும் ஆண்களையாவது அங்கு சென்று விவசாயம், கடற்றொழில் செய்வதற்கான உரிமைகளையும், அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அம்மக்கள் ஊக்கத்துடன் காணப்படுவர்.வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெறும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்கின்றனர்.எனவே அதிகாரிகள் மக்களுடனான தொடர்பாடலில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்க வேணுமென நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

அதேவேளை மிகப்பெரிய முகாம்கள்,பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மீளக்குடியேறப் போகின்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது தமது சொந்த வதிவிடங்களை தாம் இழக்க நேரிடும் என அச்சத்துடன் விசனம் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிலாவத்துறையில் மக்கள் வாழ்ந்த இடங்களி சுற்றி வளைத்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவிற்கு அண்மையில் சென்ற பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்க்ளில் பூர்வீக இடங்களை எவ்வாறு விரைவாக கையளிப்பது என இடம்பெயர்ந்த மக்களிடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் திருகோணமலை பிரதேசம் வெருகல் பகுதியில் உப்பூறல் பகுதியில் அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் 70 முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் சென்றார். 5 நாட்களின் பின் ஈச்சிலாம்பற்று பிரதேச செயலாளர் அங்கு சென்று அம்மக்களிடம் மீள் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படவில்லை,இதில் பல பிரச்சினைகள் உள்ளது எனத் தெரிவித்து மீண்டும் அழைத்து வந்தார்.இது ஓர் அடிப்படை உரிமைப் பிரச்சினை.

எனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் கூட பிரச்சினைகள் காணப்படுவதால் எதிர்காலம் முறித்த எதிர்பார்ப்புகளிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இனங்களுக்கிடையேயான உறவு சம்பந்தப்பட்ட விடயத்தில் மிகக் கவனமாகவும், தூரநோக்குடனும் செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்ப்டையில் இவ்விடயத்தில் நாம் தமிழ் தலைமைகள் உணர்வு பூர்வமாகவல்லாது நியாய பூர்வமாக சிந்தித்து சொற்பமான இம் முஸ்லிம் குடுமபங்களின் மீள் குடியேற்றத்தை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

sri-lankan-students.jpgநடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 23 மாவட்டங்களில் 25 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இப்ணியில் சுமார் 10.000 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். கூடிய விரைவில் பரீட்சை பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன்

ExtraJudicialKillingsஓகஸ்ட் 25ல் இலங்கை அரசுக்கு எதிரான மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சர்வதேசதளத்தில் விவாதத்திற்கு வந்தள்ளது. ஓகஸ்ட் 25ல் பிரித்தானியாவைச் சேர்ந்த செனல் – 4 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய வீடியோப் பதிவு ( http://link.brightcove.com/services/player/bcpid1529573111 ) இலங்கை அரசுக்கு புதிய அழுத்தங்களைக் கொடுத்தள்ளது. சிஙகளம் பேசுகின்ற சீருடையில் உள்ளவர்கள் பத்துப் பேர் வரை அவர்களின் கண்களைக் கட்டி நிர்வாணமாக்கி சுட்டுக் கொள்வது இந்த வீடியோகிளிப்பில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வீடியோப் பதிவு Journalists for Democracy in Sri Lanka என்ற ஊடக அமைப்பினரால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அப்பதிவு நம்பகமானது என்றும் அதில் சீருடையில் வந்தவர்கள் இலங்கை அரச படையினர் என்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மனித உரிமைவாதி ஒருவர் உறுதிப்படுத்தியும் உள்ளதாக சனல் 4 தெரிவித்த உள்ளது.

ஆனால் இலங்கைப் படைவீரர்கள் தொடர்பான இந்த வீடியோக் காட்சி உண்மைக்குப் புறம்பானதென்றும் போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. ‘சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கின்றது’ என்றும் ஜனாதிபதிச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வன்னியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பல உண்மைக்குப் புறம்பான ஒளிநாடாக்களை தயார்செய்து ஒளிபரப்பிய பிரித்தானியாவை தலைமையாகக்கொண்ட செனல் – 4 என்னும் தொலைக்காட்சியாளர்கள் இலங்கையைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் இலங்கை அரசுக்கு எதிரான பொய்யான பல தகவல்களையும், செய்திகளையும் அவர்கள் தொடர்ந்தும் வெளியிடுவதனை நிறுத்தவில்லை. இதன் ஒரு அங்கமாகவே உண்மைக்குப் புறம்பான வீடியோவொன்றை செனல்-4 வெளியிட்டுள்ளது.”  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அரச படைகள் சட்டத்திற்குப் பிறம்பான திட்டமிட்ட படுகொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது இது முதற்தடவையல்ல. திருகோணமலையில் இடம்பெற்ற மாணவர்களின் படுகொலை, மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் உதவி நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவை அண்மைய சில வருடங்களுக்குள் இடம்பெற்ற படுகொலைகள். இப்படுகொலைகள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது பெரும்பாலும் மனித உரிமை நிறுவனங்களால் நம்பப்பட்ட சம்பவங்கள்.

1970ற்குப் பின் இரு தடவை சிங்கள இளைஞர்களின் (ஜேவிபி) கிளர்ச்சிகள், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பன இடம்பெற்றது. இவற்றில் 200 000ற்கும் அதிகமான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பெரும் உயிரிழப்பிற்கு இலங்கை அரச படைகளும் முக்கிய காரணமாக இருந்தனர் என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் 200 000 பேர்வரை கொல்லப்பட்டிருந்த போதும் அக்கொலைகளில் தொடர்புபட்டிருந்த அரச படையைச் சேர்ந்த எவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் உயர்நிலையைப் பெற்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலப்பகுதியில் 1991ல் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸாரை படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தற்போது இலங்கை அரசில் அமைச்சராக உள்ளார். பத்திரிகையாளர் லசந்த விக்கிரமசிங்கவை படுகொலை செய்யப்படதை நியாயப்படுத்தும் இன்னுமொருவர் மேர்வின் சில்வா துப்பாக்கியுடன் ஊடகங்களுக்குள் புகுந்து ரவுடித்தனம் செய்பவர் இன்னமும் அமைச்சராக உள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈபிடிபி சட்டத்தை தங்கள் கையில் எடுத்து படுகொலைகளில் ஈடுபட்டதை சர்வதேச உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. ரீஆர்ஓ படுகொலைகளுடன் தொர்புபட்டவர் கிழக்கின் முதலமைச்சராக உள்ளார். இவர்களையே சட்டத்தை உருவாக்க அந்த நாட்டின் அரசியல் தலைமை தேர்தெடுக்கிறது. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்குபவர்களின் தகமை இப்படி இருக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அமையும்?

சர்வதேச நாடுகள் என்று வர்ணிக்கின்ற அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் இரட்டைத் தன்மையான சட்ட நடைமுறையையே கைக்கொள்கின்றன. பிரித்தானியாவில் ஜேன் சார்ள்ஸ் டி மென்ஸிஸ் யூலை 22 2005ல் தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானிய அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. மெனஸிஸின் கொலையை மூடிமறைக்க முயற்சித்த மெற்றோபொலிடன் பொலிஸ் தலைமை அதிகாரி சேர் இயன் பிளேயர் பின்னாளில் தனது பதவியை ராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் பல ஆயிரம் கொலைகளுக்கும் பல நூறு சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்த எத்தனை இராணுவ வீரர்கள் அதிகாரிகள் தண்டனை பெற்றனர் என்பது கேள்விக்குறியே. அரச படைகள் அல்லாத தனியார் படைகள் கூட கொலைகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்டு இருந்தனர்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் உயிர்கள் உணர்வுகள் உரிமைகள் அந்த நாடுகளின் ஆளும் அரசுகளால் மட்டுமல்ல சர்வதேசம் என்று சொல்லப்படும் அரசுகளின் ஆளும் அரசுகளாலும் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் கடந்து இந்த அரசுகளை அம்பலப்படுத்துகின்ற சாட்சியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவருவது மக்களுக்கு யதார்தத்தை உணர்த்த வழிகோலும். இன்று முடியாவிட்டாலும் குற்றவாளிகள் என்றாவது ஒருநாள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். அது காலம் கடந்தது என்றாலும் அது பலருக்கும் படிப்பினையாக அமையும். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பீனசே தனது குற்றங்களுக்கான தண்டனையை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் பெற்றார். இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என யூலை 28 2009ல் கொன்வே ஹோலில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசியப் பொறுப்பாளார் பிரட் அடம்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.

பொய்களை உண்மையாக்குவதம் உண்மைகளைப் பொய்யாக்குவதும் அவர்களுடைய அரசியல் தேவைகளைப் பொறுத்தது. இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றப்பட்டது அதனாலேயே.

ஆகவே அப்பாவி மக்களின் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று உண்மைகளை அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று களத்தில்

2nd-test.jpgஇலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டை வெற்றிபெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ தொடரை கைப்பற்றிவிடும்.

எனினும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும். மாறாக இலங்கை இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ இலங்கை அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதோடு இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே, இலங்கை அணி இரண்டாவது டெஸ்டிலும் நியூஸிலாந்தை வீழ்த்த போராடும்.

மறுபுறத்தில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றிபெறவேண்டிய இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து களமிறங்குகிறது. எனினும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று வெற்றியீட்டுவது கடினமான காரியமாகும். கடைசியாக இங்கு 2004 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியே டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நியூஸிலாந்து அணித்தலைவர் டானியல் விட்டோரி 11 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடவுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடிய விட்டோரி அப்போது தனது 50 ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார். இன்று 300 டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார்.

இலங்கை – முதலாவது இன்னிங்ஸ் 
 
பரனவிதான  (பிடி)டயலோர் (பந்து) விட்டோரி  19  
தில்ஷன்  (பிடி) (பந்து)  IE O’Brien  29  
சங்கக்கார (பிடி)  ஓரம் பெளல்ட் (பந்து) விட்டோரி  50 
மகேல  (ஆட்டம் இழக்காது) 79 
சமரவீர  (ஆட்டம் இழக்காது)  78  

நியூசிலாந்து பந்து வீச்சு
 
மார்ட்டின்  14  – 2  –  45 –  0  
IE O’Brien    16 – 3 – 52 – 1  
விட்டோரி  30 – 11 – 65 – 2 
ஓரம்  18 – 6  -45-  0  
படேல்  9  -1  -32-  0  
ர்யதேர்  3 – 1 – 17 – 0 

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 77வது பலி

10092009.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.

இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன

செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்!

edward-kennedy-democrat.jpgஅமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008  ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.

இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.