எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட பின் இத் தேர்தல்கள் இடம்பெறுமாயின் அது நீதியானதும், நேர்மையானதும் மக்கள் ஆணையைப் பெற்றதுமான தேர்தலாக அமையுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களை மிக விரைவாக சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவோம் என ஜனாதிபதியும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர். நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
யாழ் தீவகற்பத்திலிருந்து விடுதலை புலிகள் வெளியேறும் போது அவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் விரைவாக மீள்குடியேற்றப்படின் இப்பிரச்சினைக்கு கட்டம் கட்டமாக ஒழுங்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும். எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே இடம்பெயர்ந்த இம்மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தேர்தல்கள் நடத்தப்படின் அது நீதியான மக்கள் ஆணையைப் பெற்ற தேர்தலாக அமையும்.
அதேவேளை சமாந்தரமாக ஏறத்தாழ 20 வருடங்களிற்கு முன் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றத்தில் ஆர்வமாக காணப்படுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கம் அசமந்தப் போக்கை காட்டுவதாக நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்ததன் பின்னணியில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் 14 பஸ்களில் 450 குடும்பங்களை அழைத்துச் சென்று முஸலி பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தொட்டம் தொட்டமாக மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இது உண்மையில் அப்பகுதியை பார்த்துவருவதற்கு சென்ற மக்களை கூடாரங்களை அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள முயற்சியானது அம்மக்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஸ் நடைமுறை அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை தருகிறது. அங்குள்ள பாதுகாப்பு தரப்பைச் சார்ந்த அதிகாரிகள் அம்மக்களை வெளி இடங்களிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப் பாஸ் நடைமுறை அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்ட தமிழ் மக்களிற்கு காணப்படுவதில்லை, தமக்கு மட்டுமே காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதை விட அவர்களுக்கு இருக்கின்ற வாழ்வாதார பிரச்சினை குறிப்பாக கடற்படையினர் மீனவர்களுக்கு கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை.தற்போ மீன் பிடிப்பதற்கு உகந்த காலமாதலால் சிலாவத்துறை , முஸலி பிரதேச மீனவர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.எனினும் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
வாழ்வாதாரத்திற்காக மீள்குடியேற்றத்தை விரும்பும் ஆண்களையாவது அங்கு சென்று விவசாயம், கடற்றொழில் செய்வதற்கான உரிமைகளையும், அனுமதியையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அம்மக்கள் ஊக்கத்துடன் காணப்படுவர்.வெறும் அரசியல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெறும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்கின்றனர்.எனவே அதிகாரிகள் மக்களுடனான தொடர்பாடலில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்க வேணுமென நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
அதேவேளை மிகப்பெரிய முகாம்கள்,பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மீளக்குடியேறப் போகின்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது தமது சொந்த வதிவிடங்களை தாம் இழக்க நேரிடும் என அச்சத்துடன் விசனம் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சிலாவத்துறையில் மக்கள் வாழ்ந்த இடங்களி சுற்றி வளைத்து கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவிற்கு அண்மையில் சென்ற பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மக்க்ளில் பூர்வீக இடங்களை எவ்வாறு விரைவாக கையளிப்பது என இடம்பெயர்ந்த மக்களிடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மேலும் திருகோணமலை பிரதேசம் வெருகல் பகுதியில் உப்பூறல் பகுதியில் அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் 70 முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் சென்றார். 5 நாட்களின் பின் ஈச்சிலாம்பற்று பிரதேச செயலாளர் அங்கு சென்று அம்மக்களிடம் மீள் குடியேறுவதற்காக அனுமதிக்கப்படவில்லை,இதில் பல பிரச்சினைகள் உள்ளது எனத் தெரிவித்து மீண்டும் அழைத்து வந்தார்.இது ஓர் அடிப்படை உரிமைப் பிரச்சினை.
எனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவைப் பேணுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஆக்க பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படுவதில் கூட பிரச்சினைகள் காணப்படுவதால் எதிர்காலம் முறித்த எதிர்பார்ப்புகளிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இனங்களுக்கிடையேயான உறவு சம்பந்தப்பட்ட விடயத்தில் மிகக் கவனமாகவும், தூரநோக்குடனும் செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்ப்டையில் இவ்விடயத்தில் நாம் தமிழ் தலைமைகள் உணர்வு பூர்வமாகவல்லாது நியாய பூர்வமாக சிந்தித்து சொற்பமான இம் முஸ்லிம் குடுமபங்களின் மீள் குடியேற்றத்தை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்தார்